Monday, December 28, 2009

இணையத்தில் புகைப்படங்கள் வெளியிடும் முன் - 1


மேலே இருக்கும் படத்தின் மூலம் நீவீர் அறியும் செய்தி என்ன?, அப்படின்னு யாராச்சும் கேட்டா, சாம் மாமாக்கள் ஆறு பேரு சேர்ந்து கேக் வெட்றாங்கன்னு சொல்லும் அனைவருக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

ஆனால் இணையத்தில் வெளியிடப்படும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் தான் என்பதற்குச் சிறிதும் உத்தரவாதமில்லை. சில வில்லங்கமான ஆசாமிகள் இப்படத்தைப் பார்த்தால் இந்தப் படம் நிக்கான் D300 புகைப்படக் கருவி மூலம் 11-06-2009 தேதியில் இரவு 12 மணி 10 வது வினாடியில், ஜே.டி. லெப்பெட் என்பவரால் எடுக்கப்பட்டது, எடுக்கும் போது புகைப்படக்கருவியில் ப்ளாஷ் அடித்திருக்கிறது. மறுநாள், அதாவது 12-06-2009 அன்று மாலை 4 மணி, 9 நிமிடம், 55வது வினாடியில் புகைப்படக்கருவியில் இருந்து தன்னோட கணினிக்கு தரவிறக்கம் செய்திருக்கிறார். முதல் நாள் கொண்டாட்டத்தில் சரக்கடிக்கும் பாக்கியம் பெற்றிருந்து, ஹாங் ஓவரால் பாதிக்கப்பட்டு இந்தத் தாமதம் நிகழ்ந்திருக்க அதிக சாத்தியம் இருக்கிறதென்று சொல்வார்கள். வெறும் படத்திலிருந்து எப்படி இவர்களால் இவ்வளவு தகவல்களைத் தர முடிகிறது?

நிற்க.

மேலே இருப்பவர் அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம், பெயர் கேதரின். இவருக்கும் நம்மைப் போலவே வீட்டில் கணினியும், இணைய இணைப்பும் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு தாங்கொனாத் துயரமடைந்து பதிவுகள் எழுத ஆரம்பித்தார். பிரபலம் என்பதால் பெரும்பாலும் தன்னைப் பற்றியப் பதிவுகளாகவே இருக்கும், கூட்டமும் களை கட்டும். இப்படி இன்பமயமாக இணைய அனுபவம் போய்க் கொண்டிருக்கையில், நானும் ரவுடிதான், எனக்கும் தம்மடிக்கத் தெரியும் என்று கீழே இருக்கும் சிகரெட் புடிக்கும் புகைப்படத்தைத் தனது பதிவில் வெளியிட்டார்.

பாவம், கேதரினுக்குப் புகைப்படம் எடுத்த இடத்தில் நல்ல காற்றோட்ட வசிதியில்லாத காரணத்தால் மேலாடை இல்லாமலே எடுத்தவர், கழுத்து வரைக்கும் புகைப்படத்தை வெட்டி, ஒரு நள்ளிரவில் தனது பதிவில் வெளியிட்டு விட்டு, தூங்கிப்போனார். ஆனால் இணையத்தில் அப்புகைப்படத்தைப் பார்த்தவர்கள் யாருமே அன்றிரவு சரியாகத் தூங்கவில்லை. காரணம், அவர் வெளியிட்ட புகைப்படத்தை தங்கள் கணினியில் தரவிறக்கம் செய்தவர்கள் அனைவருக்கும் அப்படத்தை thumbnail ஆக பார்க்கும் போது கேதரினின் காற்றோட்டமான படத்தைக் கண்டு காற்றுப்போன பலூன் ஆனார்கள் (இங்கே வெளியிடப்பட்டுள்ள படத்தில் அவ்வசதி இல்லை :D). கேதரின் இது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையென்றாலும் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இச்சம்பவத்திற்குப் பின் கொஞ்சம் உஷாரானார்கள்.

கேதரின் படத்தினை வெட்டி வெளியிட்டாலும், அப்படத்தின் thumbnail மாறவில்லை. ஏன்?

அனேகமாக இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் படங்கள் jpg வகை புகைப்படங்களே. இப்புகைப்படங்கள் டிஜிட்டல் புகைப்படக்கருவிகள் மூலமாகவோ அல்லது செல்பேசிகள் மூலமாக எடுக்கப்படும் போது மேலே சொல்லப்பட்டத் தகவல்கள் மற்றும் thumbnail சமாச்சாரங்கள் அனைத்தும் jpg கோப்பின் தலைப்பகுதியில் (jpg file header) இருக்கும் exif meta data என்ற பகுதியில் சேமிக்கப்படும். இவ்வாறு மறைமுகத் தகவல்கள் அடங்கிய புகைப்படத்தினை நாம் இணையத்தில் பகிரும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த exif meta data மூலம் புகைப்படக் கருவியின் தகவல்கள், படம் எடுக்கப்பட்ட நேரம், என்ன resolutionல் எடுக்கப்பட்டது, ப்ளாஷ் ஒளி அடித்ததா, இல்லையா, focal length எவ்வளவு, இன்னும் பல நுணுக்கமானத் தகவல்கள் அனைத்தயும் அறியலாம். தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் எளிதில் பகிர்ந்து கொள்ளாத புகைப்படம் குறித்தான தொழில்நுட்பத் தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும். சரி exif meta data பகுதியினை நாம் எப்படிக் காண்பது? இணையத்தில் புகைப்படங்களை வெளியிடும் முன் இந்தத் தகவல்களை எப்படி நீக்குவது? போன்ற கேள்விகளுக்கான விடைகள் அடுத்த பகுதியில்...


18 comments:

  1. romba naal wait panna vachuteenga
    adutha padhivu late pannaadheenga

    ReplyDelete
  2. அட... இம்புட்டு மேட்டர் இருக்குதா. படிக்கையிலேயே கிர்ரடிக்குது தல.. அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டீஸ்..

    ReplyDelete
  3. சுவாரஸ்யாமான தகவல். நன்றி

    இருந்தாலும் அந்த காற்றோட்டமான thumbnail ஐ வெளிவிடாம இருக்கறதுனால நன்றியை வாபஸ் வாங்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்

    ReplyDelete
  4. ennennamo solreenga, idhelam engerndhu yosikireenga? namaku indha madhiri blog ku comment podathan theriyum...

    ReplyDelete
  5. ரேவதி சீனிவாசன் சொல்வதை வழிமொழிந்து விட்டு கூடுதலாக அதை தேவைக்கேற்ப உபயோகப் படுத்தவும் தெரியும்...எண்டு சொல்லிக் கொள்ள ஆசைப் பட நினைக்கிறேன்...

    ReplyDelete
  6. தாமதத்திற்கு மன்னிக்கவும். அடுத்தடுது விரைவில் எழுத முயற்சிக்கிறேன். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி நண்பா @ ஸ்ரீநி :)

    நன்றி தல @ சென்ஷி :D

    கண்ணா... லட்டு சாப்பிட ஆசையா..... ;)

    மிக்க நன்றி ரேவதி.. அதுவா வருது :).. எல்லாம் அனுபவம் தான்... தொடர்ந்து வாருங்கள்.

    மிக்க நன்றி ஸ்ரீராம். தொடர்ந்து வாருங்கள் :)/

    ReplyDelete
  7. நன்றி அண்ணாமலை.. தொடர்ந்து வாருங்கள் :)

    ReplyDelete
  8. :) அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  9. ஊக்கத்துக்கு மிக்க நன்றி நண்பா @ அறிவிலி :)

    ReplyDelete
  10. சூப்பர்.

    ReplyDelete
  11. வன்மையாக கண்டிக்கிறேன்....

    நீங்க எப்படி அந்த காற்றோட்டமான படத்தை போடாம விடலாம் ??

    :-)))

    ReplyDelete
  12. ஊக்கத்துக்கு நன்றி புகழினி :)

    தப்புத்தான் :D.. குளிர்காலம்ன்றதால தவிர்க்க வேண்டியதாயிருச்சு :( ;) @ அகல்விளக்கு

    ReplyDelete
  13. நல்ல தகவல்.. பகிர்வு.. தொடரவும்.

    ReplyDelete
  14. அந்த குறிப்பிட்ட படத்தை போடாததற்கு வெளிநடப்பு

    ReplyDelete
  15. மிக்க நன்றி ppattian :)

    உண்மைய சொல்லணும்னா, அந்த படம் கிடைக்கல... எப்பக் கிடைச்சாலும் கண்டிப்பா வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது :p

    ReplyDelete
  16. அன்பின் சுடு தண்ணி

    இவ்ளோ விஷயம் இருக்கா இதுல - தெரியாமப் போச்செ - இனி கவனமா இருக்கலாம் - இன்னும் கொஞ்சம் கத்துக்கணும் - செய்வோம்

    நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  17. தங்கள் வருகை குறித்து மிக பெருமிதமாக இருக்கிறது @ சீனா. தொடர்ந்து வாங்க :)

    ReplyDelete