Thursday, July 18, 2013

இணையம் வெல்வோம் - 10

எந்தவொரு மனிதனின் வெற்றியும், தோல்வியும் நெருக்கடியான தருணங்களில் அவன் எப்படி எதிர்வினை புரிகிறான் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
துரதிர்ஷடவசமாக அந்தோணிக்கு பதட்டத்தில் வார்த்தைகள் தறிகெட்டு ஓடி அவரது ஒட்டு மொத்த அரசியல் வாழ்க்கைக்கே கரும்புள்ளியாகிப்போனது. அடுத்து வந்த நாட்களில் இது போல இணையத்தில் படங்களை வெளியிட்டு பல்பு வாங்கும் அன்பர்களுக்கானக் குறிச்சொல்லாக மாறிப் போனார் அந்தோணி.
டிவிட்டரில் வெளியிட்ட படங்கள் ஊடகங்களில் கல்லா கட்ட ஆரம்பித்ததும் முதலில் அந்தோணி உதிர்த்த முத்து தனது டிவிட்டர் கணக்கினை யாரோ ஹேக் செய்து அப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள், அது தனது படங்களே இல்லை என்பது தான். பின்னர் படங்கள் தன்னுடையதாக இருக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார். இது குறித்து ஏன் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு இது கேலிக்காக யாரோ செய்திருக்கிறார்கள், அவர்கள் மேல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை ஆயினும் அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளும் பொருட்டு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் விசாரித்து வருவதாகக் கூறினார்.
மேலே அந்தோணி சொன்ன அனைத்து வசனங்களும் அவருக்கே ஆப்பாக அமைந்தது. முதலில் அந்தோணி போன்ற பிரபலங்களின் இணையக் கணக்குகள் ஹேக் செய்யப்படுதென்பது இணைய பாதுகாப்பு வல்லுநர்களால் கூர்ந்து நோக்கப்படும். காரணம் எந்த யுக்தியினைப் பயன்படுத்தி சம்பந்தபட்டவர்களின் கணக்கு களவாடப்பட்டது என்பது முதல், எந்த இடத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைப்பாட்டினால் இது நிகழ்ந்தது வரையிலான அனைத்து சமாச்சாரங்களையும் அலசி காயப்போட்டு, அதனைப் பாடமாக வருங்கால சந்ததியினருக்கு கல்வெட்டில் எழுதி வைப்பது வழக்கம். அதிலும் அந்தோணி குறிப்பிட்டது இன்று அனைத்து அரசு, தனியார், பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கி அதிபர், பிரதமர், வார்டு கவுன்சிலர் வரை டிவிட்டரில் டிவிட்டித் தள்ளுவது சகஜமாகி விட்ட காலகட்டத்தில் ஒரு டிவிட்டர் கணக்குத் திருடு போனது இணைய உலகில் சலசலப்பினை உண்டாக்கியது. செய்தி வெளியாகியதும் பீதியில் அமெரிக்க அரசியல்வாதிகள் சில பேர் தங்கள் கடவுச்சொற்களை மாற்றியதும் நடந்தது.
அந்தோணி செய்த தவறு, இது குறித்து கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்காமல் போகிற போக்கில் நினைத்தையெல்லாம் ஊடகங்களில் பேசியது தான். முதலில் செல்பேசி, புகைப்படக் கருவிகள் முதலான மின்னணு உபகரணங்கள் மற்றும் கணிணியில் உருவாக்கப்படும் அனைத்துக் கோப்புகளுக்கும் Header meta data என்னும் தலைப்பகுதி ஒன்று இருக்கும். அதில் கோப்பு முதன்முதலில் உருவாக்கப்பட்ட இடம், நேரம், உபகரணம், ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது குறித்த தகவல்கள் அனைத்தும் இருக்கும். உதாரணத்திற்கு உங்கள் செல்பேசியில் எடுக்கப்பட்ட படத்தினை நீங்கள் இணையத்தில் பகிர்ந்தால் நீங்கள் வைத்திருக்கும் செல்பேசியின் வகை. தயாரிப்பு நிறுவனத்தின் தகவல், GPS வசதியிருந்தால் எடுத்த இடம், நேரம், தேதி மற்றும் ஒளி வெளிச்சம் குறித்து அனைத்து தகவல்களும் அந்த புகைப்படகோப்பின் தலைப்பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடியும். எனவே அந்தோணியின் படம் அவருடைய செல்பேசியில் இருந்து தான் எடுக்கப்பட்டதென்பதை மறைக்க வாய்ப்பேயில்லை.
அதே போல உங்கள் செல்பேசி அல்லது கணிணி மூலம் இணையத்தில் எங்கு சென்றாலும் உங்கள் வருகை அந்தந்த தளங்களின் வழங்கிகளில் பதிவு செய்யப்படும். உங்கள் இடம், வலையமைப்பு எண், தளத்தில் நுழைந்த நேரம், செலவிட்ட நேரம், வெளியேறிய நேரம், படித்த பக்கங்கள், புகைப்படங்களையோ அல்லது கருத்துக்களையோ பதிவேற்றினால் அது குறீத்த விவரங்கள் ஆகிய ஒவ்வொன்றும் அங்கு கிடைக்கும். வலையமைப்பு எண்ணின் மூலம் உங்களுக்கு இணைய வசதி தரும் நிறுவனத்தினைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் மூலம் அவர்களை அணுகினால் உங்கள் ஒட்டுமொத்த இணைய நடவடிக்கைகளும் பந்தி வைக்கப்படும்.
இணையத்தளங்களை நடத்தும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனவே அந்தோணி தனது புகைப்படங்களை டிவிட்டர் தளத்தினில் இருந்து நீக்கினாலும் முன்பு பதிவேற்றிய புகைப்படங்கள் அதற்கு பயன்படுத்தப்பட்ட இணைய இணைப்பு ஆகியவை அந்தோணியினை நோக்கிக் கைகாட்டும் என்பதை அவர் உணராததன் விளைவே இத்தனை சங்கடங்களும். இதையெல்லாம் உணர்வதற்குள் அந்தோணியின் மதிப்பும் மரியாதையும் அவர் படங்களைப்போலவே ஊடகங்களால் நிர்வாணமாகக் காட்சியளித்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி இப்படி புகைப்படக் கலை வித்வானாக நேரங்கழித்ததும், நேர்மையின்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதும் அந்தோணியின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் தாக்கியது. உடனடியாக ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த அந்தோணி தான் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு ஜகதலப்பிரதாபன் என்பதையும், தன் மனைவிக்கும், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் உண்மையை மறைத்த பாவி என்பதையும் இரு கன்னங்களிலும் கண்ணீர் பிழிந்து வழிய ஒப்புக் கொண்டார். தனது ட்விட்டர் கணக்கினை மூடியதோடு பதவியினையும் ராஜினாமா செய்தார்.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய அந்தோணி, நேரே நெடுஞ்சான் கிடையாக சென்று விழுந்தது மனைவி ஹூமாவின் கால்களில் தான். மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையின் படி கண்கள் பனித்து, இதயம் இனித்து ஹூமா அந்தோணியை ஏற்றுக் கொண்டார். இது போன்ற அஜால்குஜால் வேலைகளில் கழக முன்னோடியான, திருமணத்தினை நடத்தி வைத்த பில் கிளிண்டனிடமும் தனியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது தனிக் கிளைக்கதை. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தன் டிவிட்டர் கடையினை அகலத்திறந்த அந்தோணி தான் தீவிர அரசியலுக்குத் திரும்புவதாகவும், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்த போது ஊடகங்கள் வெளியிட்ட செய்தித்தலைப்பு சகல தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. பார்க்க படம்
அந்தோணியின் அனுபவம் நித்திரை கொள்ளும் வரை இணையத்திலேயே உழன்று கொண்டு எதையாவது வலையேற்றியே தீர்வது என்று கொலைவெறி பிடித்த அன்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். மேலும் இது போன்ற இணையம் மற்றும் கணிணி குறித்தான விழிப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகள் தான் இணையக்குற்றங்களுக்கான சட்டங்களை நிறைவேற்ற பக்கோடா தின்று கொண்டோ அல்லது தங்கள் செல்பேசியில் ஆபாசப்படங்களை பார்த்துக் கொண்டே வாக்களித்து நிறைவேற்றும் அபாயத்தினை நாம் உணர்ந்து கொள்ளவும் சரியான உதாரணம்.
மரத்தடி டீக்கடையில் அரசியல், சினிமா மற்றும் ஊர்வம்பு பேசி, டீ சூடு ஆறுவதற்குள் காஷ்மீர், பாலஸ்தீனம், கச்சத்தீவு, ஈழம், அணு உலை போன்ற விவாதங்களுக்குத் தீர்ப்புச் சொல்லி பெருமிதம் கொள்ளும் கலாச்சாரத்தில் ஊறிப்போனத் தமிழ்ச்சமூகம் அதனை அப்படியே இணையத்தில் வலையேற்றியிருக்கும் இக்காலத்தில் இணையம் குறித்தான சட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
அரசுகளின் பார்வையில் இணையம் என்பது தேசியச் சொத்து, தகவல்களை வலையேற்றும் ஒவ்வொரு தனி நபரும் ஒரு ஊடகக்கருவி என்பதனை நினைவில் கொள்ளவும். நண்பர்களிடம் அரட்டையடித்த பழக்கத்தில் இணையத்தில் எந்தவொரு தனிநபரைப் பற்றியும் ஆதாரமில்லாமல் அவதூறு கூறுவது குற்றம். பேச்சு சுதந்திரம், தனி மனித உரிமை வெங்காயங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை. நம்மூரில் இன்னும் எவரும் தங்களை பற்றி இணையத்தில் யார் என்ன பதிவு செய்திருக்கிறார்கள் என்பதனைப் பற்றி பொருட்படுத்துவதில்லை, அப்படியொரு நிலை வெகு சீக்கிரத்தில் வரும்.
வெட்டியரட்டையில் பேசுவது போல இணையத்தில் வேடிக்கைக்காக பேசினாலும், சம்பந்தப்பட்ட நபர் நினைத்தால் உங்களை பராசக்தி சிவாஜி போல கோர்ட்டில் பிளிற வைக்க முடியும். இதற்கு தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஒருவரின் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் ஒரு உதாரணம். அதே போல வட இந்தியத் தொழிலாளர்கள் வதந்தியால் தென்னகத்திலிருந்து தங்கள் ஊருக்குக் கிளம்பிய நேரத்தில் இந்திய அரசு செல்பேசி குறுந்தகவல்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசால் தகவல் தொழில்நுட்பத்தினை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியுமென்பதற்கு அது ஒரு சின்ன உதாரணம்.
சமீப வருடங்களில் எந்த நாட்டில் மக்கள் போராட்டத்திற்கு கிளர்ந்தெழுந்தாலும், அதனை வலுவிழக்கச் செய்யும் முதல் வேலை ஒட்டு மொத்த இணையத்தையும் நாடு முழுவதும் செயலிழக்கச் செய்வது தான். இதில் கொடுங்கோல் சர்வாதிகார நாடுகள் முதல் காந்தி தேசங்கள் வரை விதிவிலக்கில்லை. அதற்கான அதிகாரத்தினை அரசின் முதன்மைப் பதவி விகிப்பவர்களுக்கு வழங்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதனை நினைவில் கொள்ளவும்.
இவ்வளவு கடுமையான சட்டங்களை எந்த நாடும் தனித்தனியாக சொந்த அறிவில் யோசித்து செய்யவில்லை. அனைத்து நாடுகளின் இணையம் குறித்தான சட்டங்களும் கிட்டத்தட்ட ஈயடிச்சான் காப்பி என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதனை அரசுகள் பயன்படுத்தும் சூழ்நிலை வரும் போது தான் அதன் வீரியத்தினை நாம் உணர முடியும். இணையத்தினைப் பயன்படுத்தும் ஒரு சாமனியனின் பார்வையில் இது தனி மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அரசின் பார்வையில் நாட்டின் பாதுகாப்புக்கான அத்தியாவசியம்.
இந்த சட்டங்களெல்லாம் எங்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றி விட்டார்கள், இது மிகப்பெரும் அநீதி, அக்கிரமம், அடக்குமுறை என்று சேகுவரா சட்டைகள் அணிந்து கொண்டு பொங்கும் அன்பர்களுக்கும், டொரண்டில் ஒரு திரைப்படத்தினைத் தரவிறக்கம் செய்வதெல்லாம் ஒரு குற்றமா, இதையெல்லாம் தட்டிக் கேட்க இங்கு ஆளே இல்லையா என்று கதறும் அப்பாவிகளுக்குமான பிரத்யேக காயகல்ப லேகியமாக அவதரித்தவர்கள் தான் “அனானிமஸ்.”
தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Wednesday, July 17, 2013

இணையம் வெல்வோம் - 9

ஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.
இணையம் இல்லா காலகட்டத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்தவர்கள் தங்களுடைய வரலாற்றைச் சிறிதும் சேதாரமில்லாமல் பதிவு செய்து கொள்வதையும் அல்லது மக்களுக்கு அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளை மட்டுமே கொண்டு சேர்ப்பதையும் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் செய்வதைப் போல எந்த சிரமும் இல்லாமல் சீரோடும் சிறப்போடும் செய்து வந்தனர். அதையும் மீறி உண்மை உழைப்பு, நீதி, புரட்சி, ஈயம், பித்தளை என்று முக்கியவர்கள் அனைவரும் கச்சிதமாக நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் பரிசுத்தமாகக் கிருமிநாசினி ஊற்றிக் கழுவப்படுவது தொன்று தொட்ட வழக்கமாகவே இருந்து வந்தது,

இணையம் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில். அதன் வீச்சும், வீரியமும் அதிகார வர்க்கத்திற்கும், அவர்களின் மந்திராலோசனை வட்டத்தில் வறுத்த முந்திரி சாப்பிட்டுக்கொண்டு ‘நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்து கொண்டே இருக்கிறது மன்னா’ என்று தங்கள் கருத்துக் கூடாரத்திலிருந்து ஆட்சியாளர்கள் வெளிவராமல் பத்திரமாகப் பார்த்து கொண்ட அதிமேதாவிகளுக்கும் இம்மியளவும் புரியவில்லை. ‘பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு பார்க்க இனிமேல் மாலை முரசுக்குத் தொங்க வேண்டாமாம், இன்டெர்நெட்லேயே வந்துருமாம்’ என்கிற அளவிலேயே இணையம் தொடர்பான பார்வை உலக நாடுகளுக்கு இருந்து வந்தது. அதுநாள் வரை பொதுமக்களுக்குத் தடையாயிருந்த தகவல் தொடர்பு என்ற ஒற்றை விஷயத்தின் அத்தனை கதவுகளையும் ஒரே நேரத்தில் தகர்த்தெறிந்த பெருமை இணையத்திற்கு உண்டு. ஒரு கணிணியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும், வேறேந்த தகவல் தொடர்பு சாதனமும் தேவையில்லை என்ற நிலை உருவானது.

இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க உலக நாடுகள் அதற்கு எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்தார்கள் என்பதனை பார்த்தாலே இணையத்தைப் பற்றி அவர்களின் புரிதல் சிரிப்பாய்ச் சிரிக்கும். இணையத்தின் மூலம் சல்லிசாய் அல்லது இலவசமாய் எந்த நாட்டுக்கும் தொலைபேசும் மென்பொருட்கள் வந்ததும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை, ஏதாவது ஒரு வலைப்பக்கத்தில் அவர்களுக்குப் பிடிக்காத சங்கதிகள் இருந்த்தால் அந்த இணையத்தளத்திற்குத் தடை என்று உலக நாடுகளின் கைங்கர்யத்தில் அரங்கேறிய நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம்.

இணையம் ஒரு கட்டற்ற காட்டாறு, யாரும் அதனைக் கட்டி வைக்கவோ, எவரும், எவரையும் கட்டுப்படுத்தவோ முடியாது, அதே நேரத்தில் ஒவ்வொருவரின் அசைவும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும். அதுவரை அமைதியாக இருந்து விட்டு, மனைவி ஊருக்குப் போனதும் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்று கும்மாளமிடும் ரங்கமணிக்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம்.



ஒரு நாட்டின் அடித்தளமே ஊடகங்கள் தான், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று, பேனா கத்தியை விடக் கூர்மையானது போன்றவற்றைக் கேட்டு வளரும் குழந்தைகள் பாவம். ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை ஊடக அதிபர்களையும் வலைக்குள் விழ வைப்பதுதான் சம்பிரதாய வழக்கம். தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவும், பணத்திற்காகவும் ஊடகங்களும், அரசுகளும் போட்ட பேயாட்டத்தில் வரலாற்றில் புதைக்கப்பட்ட உண்மைகள் எண்ணிலடங்காதவை. இன்றும் ‘எம்.ஆர்.இராதா ஏண்ணே எம்.ஜி.ஆர சுட்டாறு’ என்றும், ‘சுபாஷ் சந்திர போஸை எப்ப வந்தாலும் பிடிச்சுக் கொடுப்போம்னு சொல்லித்தான் சுதந்திரம் கிடைச்சுச்சாமே’ டீக்கடையில் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அப்பிராணி குடிமக்களே அதற்கு சாட்சி. சாமாளிப்புச் செலவு அளவிற்கு மீறிய கட்டத்தில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளே ஊடகங்களை நடத்த ஆரம்பித்த கொடுமைகளும் அனேக நாடுகளில் நடந்தன.


இணையம் வந்த பிறகு இதற்கெல்லாம் வேலையில்லாமல் போய்விட்டது. சாலை விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கோ, திருட்டில் நகையைப் பறிகொடுத்து ஒருவருக்கோ ‘யாருமே உதவிக்கு வரல, கலி முத்திருச்சி’ என்று,  தான் உதவி செய்கிறோமோ இல்லையோ, சம்பவத்தை முனைப்பாக புகைப்படத்துடன் டிவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ அல்லது வலைபதிவிலோ பதிந்து ஜனநாயகக் கடமையாற்றுவது இன்று சர்வசாதரணமாகி விட்டது. அதிகாரவர்க்கங்கள் பொது இடங்களில் நடக்கும் எந்த விஷயத்தினையும் ஊடகங்கள் வாயிலாக மக்களிடமிருந்து மறைத்துக் விடலாம் என்பது காலாவதியாகிப் போன (கு)யுக்தியாக மாறிப்போனது. உலகின் மற்ற மூலைகளில் இணையத்தின் கட்டற்ற தகவல்தொடர்பால் ஒவ்வொரு தினமும் எத்தனையோ சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறார்கள், மக்களுக்கான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாம் என்ன செய்திருக்கிறோம், சினிமா விமர்சனப்பதிவுகள் மூலம் இணையப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு சினிமா தானே முக்கியம்.

இணையத்தின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகக்கருவியாய் மாறிப்போனதில் மிகவும் தடுமாறிப் போனது அரசாங்கங்கள் தான். இணையத்தினைக் கட்டுப்படுத்த கன்னாபின்னாவெனெ இணையக் குற்றங்களுக்கான சட்டங்கள் தாறுமாறாக வரையப்பட்டன. நீங்கள் நினைப்பது போல அச்சட்டங்கள் சுலபமானவை அல்ல மிக விபரீதமானது, ஒரு நாட்டின் அத்தனை இணைய இணைப்பினையும் துண்டிக்கவோ, உளவு பார்க்கவோ அனுமதிக்கும் சர்வாதிகாரத்தினை அரசாங்ககளுக்கு வழங்கும் தன்மையுடையது. அதனை வரைவு செய்யும் அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ, பயன்படுத்தும் சட்டத்தரணிகளோ அத்தொழில்நுட்பத்தில் புலமை வாய்ந்தவர்களா இல்லையா என்பதை நீங்களே தூக்கத்திலிருந்து விழித்து முடிவு செய்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ப்ளாக்கர் வலைப்பதிவினைத் தடைசெய்வதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக அனைத்து வலைப்பதிவுகளையும் (*.blogspot.com) தடைசெய்த கொடுமையெல்லாம் இந்தியாவில் நடந்து, உலகமே வாயால் சிரித்து வைத்த சம்பவங்களெல்லாம் கூட உண்டு.

சட்டங்களை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு மக்கள் மன்றத்தில் வாக்களிக்கும் அரசியல்வியாதிகளின் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி பற்றி சொல்லவே தேவையில்லை. அதற்கு அருமையான, கிளுகிளுப்பான உதாரணம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் காங்கிரஸ் உறுப்பினர் அந்தோணி வினர் (Anthony Weiner). இளம் வயது, கவர்ச்சித் தோற்றம், அரசியலில் அசுர வளர்ச்சி என்று நியூயார்க் மாநகரத்தில் உள்ள அனைத்து  சொப்பன சுந்தரிகளின் கனவுக் கண்ணன். அண்ணனும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் கோலடிக்கும் திறன்மிக்க கால்பந்து வீரரைப்போல எழில்மிகுப் பாவையர்களை வாசிப்பதில் கில்லாடி. இப்படி மைனர் குஞ்சாக வலம் வந்து கொண்டிருந்த அந்தோணியின் மனதில் ஆழமாக கொக்கியைப் போட்டு மோதிரம் மாட்டியவர் இந்தியா-பாகிஸ்தானின் கூட்டுத்தயாரிப்பான ஹுமா (Huma Abedin). இவர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய உதவியாளர் என்பதும் பில் கிளிண்டன் தலைமையில் திருமணம் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது. மணமானாலும், ஆடிய காலும், பாடிய வாயும் வேண்டுமானால் சும்மா இருக்கலாம், அந்தோணியால் முடியவில்லை. ஒரே நேரத்தில் பல இடங்களில் பல தளங்களில் களமாடிக்கொண்டிருந்த அந்தோணிக்கு விதி இணையத்தில் வீதி உலா வந்தது.

தனிமையில் இனிமை காணும் பொருட்டு அந்தோணி சில கிளுகிளுப்பான படங்களை ஒரு கிளியிடம் யதார்த்தமாக டிவிட்டரில் பகிரப்போக, ஒரு சிறிய தவறால் அது அந்த கிளிக்கு மட்டும் செல்லாமல்  அந்தோணியை டிவிட்டரில் தொடரும் அத்தனை பேருக்கும் பதார்த்தமாக பல்லைக்காட்டியது. போதை இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் தவறை உணர்ந்த அந்தோணி படங்களை டிவிட்டரில் இருந்து நீக்கி விட்டு, போர்வையை இறுக்கிப் போர்த்திக் கொண்டுத் தூங்கி விட்டார். அந்த சில நிமிட இடைவெளியில் இணையத்தில் அந்த புகைப்படப்பதிவுகளை நகலெடுத்த ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்து, அவர்களின் இணையத்தளத்தில் சுடச்சுட வெளிவந்தும் விட்டது.

அந்த புகைப்படத்தை பார்த்து அத்தனை பேருக்கும், அந்தோணி உள்பட குளிர்க்காய்ச்சலே வந்து விட்டது. மறுநாள் அந்தோணி எங்கும் நடமாட முடியவில்லை. எங்கு போனாலும் ஒரே கேள்வி ‘அது உங்களோடதா?’. அனைத்து தொலைக்காட்சிகளும் ஊரிலுள்ள கருத்துக் கந்தசாமிகளனைவரையும் ஒரு அரைவட்ட மேஜையில் அமரவைத்து அப்படத்தினை உத்து, உத்துப் பார்த்து உருக்குலைந்து போனார்கள். உள்ளாடை எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அளவு என்ன,  அந்தோணி அதனை எந்தக் கடையில் வாங்கினார் என்பது வரைக்கும் ஆராய்ச்சி நீண்டு கொண்டே இருந்தது.


நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அந்தோணி, அதனைச் சமாளிக்க அள்ளிவிட்ட சரடுகள் மேலும் அவரை அதளபாதாளத்திற்குத் தள்ளியது

தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Wednesday, June 5, 2013

இணையம் வெல்வோம் - 8


ஒரு வலையமைப்பை வேவு பார்த்து அதிலிருக்கும் வலையமைப்பு எண்கள், வெளித்தொடர்புக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வலைத்தொடர்பு புள்ளிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஹேக்கர்கள் மேற்கொள்ளும் Reconnaissance Scan முடிந்த பின் கிடைத்தத் தகவல்களுக்கேற்ப தங்கள் தாக்குதல் குறித்து திட்டமிடுவார்கள். இந்த தாக்குதல் எந்த ரூபத்தில் வருமென்று யாராலும் கணிக்க முடியாதபடி வித்தியாசமாக யோசிக்கும் கில்லாடி ஹேக்கர்களும், அவற்றை எதிர்கொள்ளும் போது தாக்குதலில் விதத்தை வைத்தே அவர்களின் இடம், வயது, உபயோகப்படுத்தும் மென்பொருட்கள் முதற்கொண்டு அவர்கள் வயதுக்கு வந்த நேரம் வரை புட்டுப்புட்டு வைக்கும் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களும் வாழும் ஒரே அதிசய உலகம் தான் இணையம்.

ஒரு வலையமைப்பின் வாஸ்து விவரங்கள் அனைத்தையும் வேவு பார்த்து முடித்த பின் (Reconnaisance Scan), கிடைத்த விவரங்களிற்கு ஏற்றவாறு வலைத்தாக்குலை முன்னெடுப்பதுதான் அடுத்த கட்டம். இந்த கட்டத்தில் தான் ஒரு வலையமைப்பில் தொடர்பு கொள்ளக்கூடிய உபகரணத்தின் அல்லது கணினியின் இயங்குதளம் என்ன, எந்தவிதமான பயன்பாட்டிற்கு அது பயன்படுத்தப்படுகிறது, என்னென்ன மென்பொருட்கள் இருக்கின்றன, சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியதா இல்லை ரத்னா ஸ்டொர்ஸிலா போன்ற விவரங்கள் வரை சகலமும் திரட்டப்படும்.

உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும், உயிர்களுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அது புகழ்ச்சி, மது, மாது, சூதும் உணவு, பணம், பேஸ்புக் லைக்குகள், அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இடுகை, மதம், சாதி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கிட்டத்தட்ட இதே தத்துவ விஞ்ஞானம் வலையமைப்புகளுக்கும், கணிணிகளுக்கும் கூட செல்லுபடியாகும்.  இயங்குதளங்கள் (OS), அனைத்து வலையமைப்பு உபகரணங்கள் (Network Appliances), தகவல்தளங்கள் (Databases) மற்றும் இந்த உலகத்தையே இணையத்தில் மேய விடும் உலாவிகள் இப்படி சகலமும் அடிப்படையில் ஏதோ ஒரு கணிணி மொழியில் எழுதப்பட்ட மென்பொருட்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

இரவும், பகலும் வீட்டுக்குக் காய்கறி கூட வாங்காமல் உழைக்கும் மென்பொருள் வல்லுநர்களின் மிகப்பெரிய சவால், அவர்கள் தயாரித்த மென்பொருட்கள் பொதுப்பயன்பாட்டுக்கென்று சந்தையில் விற்பனைக்குச் சென்றபின், அதில் இது நொட்டை, அது நொள்ளை என்று குறை சொல்லும் வாடிக்கையாளர்கள் தான். இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு சீதையைப்போன்று தீக்குளிக்கத் தோன்றினாலும், அது மிகவும் சுடும்  என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதுநாள் வரை தெரிவிக்கப்பட்டக் குறைகளை நிவர்த்தி செய்து புத்தம் புதிய ஈஸ்ட்மென் கலரில் பதிப்புருக்கள் (versions) வெளியிடுவது வழக்கம்.

இது போன்ற குறைபாடுகளைத் தவிர்க்கத்தான் அனைத்து மென்பொருள் நிறுவனங்களும், தயாரித்த மென்பொருட்களை சோதனை செய்து பார்க்க, குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் சோதனையாளர்கள் (testers)) குழுவினை உருவாக்கியது. இவர்கள் செய்யும் சோதனை பெரும்பாலும் குறிப்பிட்ட மென்பொருளின் பயன்பாட்டைச் சார்ந்ததாகவே இருக்கும்.

இன்றைய இணைய உலகில் பொதுப்பயன்பாட்டுக்கென எழுதப்படும் நிரல்கள்/மென்பொருட்களின் பாதுகாப்புத் திறன் குறித்து விரிவான அலசலோ அல்லது சோதனையோ செய்வது மிகமிக அரிது. காரணம் ஒரு மென்பொருளில் அல்லது நிரலின் எந்த விதமான குறைபாடுகளை (Vulnerabilities) ஹேக்கர்கள் பயன்படுத்துவார்கள் என்பதையும், அதன் மூலம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் எல்லோரலும் கணித்து விட முடியாது. பாதுகாப்பு வல்லுநர்களோ அல்லது ஹேக்கர்களோ தாங்களே முன்வந்து சொல்லும் வரை யாருக்கும் தெரியப்ப்போவதில்லை.

நிறுவனங்கள்/மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மென்பொருட்களில் கூட சில சமயங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் கடந்த காலங்களில் கண்டறியப்பட்டு வலையமைப்பு நிலவரம் கலவரம் ஆன வரலாறுகள் பல உண்டு. அதற்காக கூடலூரில் முருகேசன் அந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் கூட பெரும் ஆபத்து, அந்த மாவட்டமெங்கும் விஷவாயுக் கசிவு ஏற்படும் போன்ற பீதிகளைக் கெளப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஒரு வேளை அதி தூரம் பயணிக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தளமோ, ஈரானுக்காக யுரேனியத்தினை பதப்படுத்தும் உலையோ உங்கள் வீட்டு கணிணி மூலம் செயல்படுத்தப் பட்டால் கவலைப்படுவதில் நியாயம் உண்டு.


உதாரணத்திற்கு உலகமெங்கும் உள்ள அனைத்து வீடுகளில் சீனப்பொருட்களுக்கு இணையாக இடம்பிடித்த ஒரே அமெரிக்கத் தயாரிப்பான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தினை எடுத்துக் கொள்வோம். பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கணிணி உலகம் சம்பள நாளாக இல்லாத பட்சத்தில் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் விண்டோஸ் இயங்குதளத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி செய்வதற்கான நிரல்திட்டுகள் (patches). கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த காலகட்டத்தில் பயன்பாட்ட்டுள் இயங்குதள பதிப்பிற்கான இந்த மாதாந்திர வெளியீடு நடந்து கொண்டே தான் இருக்கிறது, அடுத்த நாளே அடுத்த வெளியீட்டிற்கான குறைபாடுகள் கண்டுபிடித்து வெளியிடுவதற்கான பணிகள் ஆரம்பமாகி விடும்.

குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அன்றே அதனைப் பயன்படுத்தி தாக்குதலை தொடுத்து அனைவரையும் திணறடிக்கும் அதிரடி ஹேக்கர்களைக் கையாள்வது தான் இருப்பதிலேயே கடினமான பணி (Zero Day Attack).  கன்னித்தீவு கதை போல் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. இதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகளை முழுமையாக சரிசெய்து எவ்வளவு கடினம் என்பதை அறிந்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் போன்ற திமிங்கலங்களையேத் திணறடிக்கும் இப்பிரச்சினை சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு சவாலாக இருக்குமென்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.

ஒரு மிகப்பெரிய நிறுவனம் தன் இணையத்தளங்களை ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் வழங்கியின் மூலம் இணையத்தள சேவையினை வழங்கி வருகிறது. அதனை ஹேக்கர்கள் தாக்க முற்படும் பொழுது அதன் இயங்குதளம் மற்றும் அதன் பதிப்புரு (OS Version) ஆகியவற்றினை அறிந்ததும் செய்யும் முதன் வேலை அதன் பாதுகாப்புக் குறைப்பாடுகள் என்னென்ன அதில் எவற்றைப் பயன்படுத்தினால் என்ன மாதிரியான பயன்கள் கிடைக்கும் போன்ற தகவல்களைத் திரட்டி, தேவைக்கேற்ப செயல்படுத்துவார்கள். அந்நிறுவனத்தின் வழங்கியினைப் பராமரிக்கும் நபர் பிரதி மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் பாதுகாப்பு நிரல்திட்டுகளை (security patches) நிறுவாமல் இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் இணையத்தளம் சந்தி சிரிக்கவும், வழங்கியின் முழுக் கட்டுப்பாடும் ஹேக்கர்களின் கைக்கு செல்லவும் வாய்ப்புகள் பிரகாசம்.

எனவே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்களின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் வெளியானால் அவற்றை விரல்நுனியில் வைத்திருப்பதும், அவற்றை சரி செய்வதற்கான திட்டங்களை வரைவு செய்து செயல்படுத்துவதும் பாதுகாப்பு வல்லுநர்களின் பணிகளில் ஒன்று. பாதுகாப்புக் குறைபாடுகளைப் பற்றியோ அவற்றை உபயோகித்து வலையமைப்புகளை கட்டுடைத்து உள்நுழையும் விதம் குறித்தோ அனைத்து ஹேக்கர்களும் தாங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதில்லை. இணையத்தில் அது குறித்த தகவல்கள் ஏராளமாகக் கிடைக்குமென்பதால் அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை,

பாதுகாப்பு நிரல்திட்டுகளை நிறுவுவதென்பது நீச்சலடிப்பதைத்  தரையில் இருந்து பார்ப்பதைப் போன்று தோன்றினாலும், ஆயிரக்கணக்கில் உலகில் பல்வேறு மூலைகளில் பரந்து விரிந்துள்ள நிறுவனங்களின் கணிணிகளைப் பராமரிப்பதென்பது மனைவியைச் சமாளிப்பதினும் கடிது. அவற்றை நிறுவுவதால் வேறேதெனும் மென்பொருள் செயல்பாட்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா, மீள் இயக்கம் (reboot) செய்ய வேண்டுமா அப்படியென்றால் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா போன்ற பல விஷயங்களை பரிசோதித்து செயலில் இறங்க வேண்டும். பெரும்பாலும் இந்த வேலையை பெரும் நிறுவனங்களில் செய்யும் அன்பர்கள் ராக்கோழிகளாக இருப்பதைக் காண முடியும். மற்றவர்கள் அனைவரும் பணி முடிந்து சென்று மறுநாள் திரும்பி வரும் போது ஒவ்வொருவரின் கணிணியும் புதிய நிரல்திட்டுகளோடு பாதுகாப்பாக இருப்பதினை உறுதி செய்யும் பணியே இவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பல.

முழு இரவும் ஒவ்வொரு கணிணிக்கும் சென்று வேலை செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் தோன்றுபவர்களுக்கு, இதற்கென்றே பிரத்யேக மென்பொருட்கள் இருக்கின்றன (endpoint management). ஒரு கணிணியில் இருந்து கொண்டே அந்த வலையமைப்பில் இருக்கும் அனைத்து கணிணிகளிலும் என்னென்ன மென்பொருட்களை/நிரல்களை நிறுவலாம், நீக்கலாம் என்பதனைக்கூடத் தீர்மானிக்க முடியும்.

இப்படி ஹேக்கர்களுக்கும், பாதுகாப்பு வல்லுநர்களுக்கும் இடையேயான போலீஸ்-திருடன் விளையாட்டின் வாயிலாக எத்தனை சுவராஸ்யமான அத்தியாயங்களை உலகம் கண்டிருக்கிறது.

தொடர்வோம்.
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, May 6, 2013

இணையம் வெல்வோம் - 7


ஹேக்கிங் என்பது ஒரு பெண்ணின் மனதை போல மிக ஆழமானது. எப்படி எப்பொழுதுமே ஒரே மாதிரியான உத்தியினைப் பயன்படுத்தி எல்லாப் பெண்களையும் கவர முடியாதோ அதே போல, இப்படித்தான் ஹேக்கிங் செய்ய வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்லும் நேரடி வழிமுறைகளோ, செயல்முறை விளக்கங்களோ கிடையாது. உலகில் உள்ள வலையமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அவற்றுக்குத் தகுந்தவாறு தாக்குதல் உத்தியினைச் சமயோசிதமாக மாற்றியமைத்து வெற்றி பெறுபவர்களே ‘புத்திமான் பலவான்’ விருதினைப் பெறும் தகுதியினைப் பெறுகிறார்கள்.
பிறகு எப்படித்தான் இதனைக் கற்றுக் கொள்வது?. மணிமேகலைப் பிரசுரத்தின் ‘30 நாட்களில் தொப்பையைக் குறைப்பது எப்படி?’ வகையிலானப் புத்தகம் ஒன்றினை வாங்கி, 31வது நாளில் ‘நானும் ஒரு ஹேக்கர் தெரியும்ல’ ஒரு மீசை முறுக்க வாய்ப்பேயில்லை. வலையமைப்புகளின் அரிச்சுவடி தலைகீழ் மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுதலும், பொதுவாக வலைப் பாதுகாப்புக்கெனப் பின்பற்றப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் சகலமும் அறிந்திருத்தல் சிறப்பு. வயல்காட்டில் கட்டவிழ்த்தக் காளையைப் போல் தறிகெட்டு ஓடி, கையும் களவுமாக மாட்டும் போது சட்ட நடவடிக்கைகளால் உங்கள் பொன்னான எதிர்காலம் புண்ணாகிப் போகும் வாய்ப்புகள் பற்றி அறிந்திருத்தல் அதனினும் சிறப்பு. ஆக மொத்தம் வெற்றிகரமான ஹேக்கர் ஆவதற்குத் தேவையான முக்கிய தகுதிகள் குறித்து ஒரு பக்க அளவில் விவரி என்று யாராவது கேட்டால் வலையமைப்புகளில் தன் அடையாளம் மறைத்து களமாடும் அளவிற்கு ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இணையக் குற்றத்திற்கான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, நிறைய பொறுமை, சமயோசிதமாக தாக்குதல்களை வலையமைப்பிற்கேற்ப மாற்றியமைக்கும் திறன் ஆகியவை என்று பதில் சொல்லி முழு மதிப்பெண்கள் வாங்கிக் கொள்ளவும். சுருக்கமாக சொன்னால் நல்ல அறிவார்ந்த களவாணித்தனம் வேண்டும்.

எதற்குக் கையேந்தினாலும் இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளலான இணையத்தில் ஏன் ஹேக்கிங் பற்றி நேரடியானத் தகவல்கள் எளிதில் கிடைப்பதில்லை, அப்படிக் கிடைத்தாலும் சித்தர்கள் பாடல் மாதிரி எதைச் சொன்னாலும் அதைப் பொடி வைத்துச் சொல்லியே தலைவலிக்க வைக்கிறார்களே என்று கவலையுறும் அன்பர்கள் கவனத்திற்கு, அப்படி ஏதாவது இணையத்தில் சொல்லி வைத்து அதைப்படித்து ஆர்வக்கோளாரான நண்பர்கள், ‘அதைப்பார்த்துத் தான் ஹேக்கிங் பழகலாமுன்னு உங்க வலைப்பக்கமா வந்தேன்’ என்று எங்காவது வில்லங்கமான இடத்தில் தலையை சொறியும் பட்சத்தில் ஆப்பு இரண்டு பேருக்குமே உண்டு என்பதே காரணம்.

ஹேக்கிங் என்பதனை ஒரு வீட்டில் திருடச் செல்வதோடு ஒப்பிடலாம். முதலில் எந்த வீட்டில் திருட போகிறோம் என்பதனை முடிவு செய்ய வேண்டும், பிறகு அங்கு மாட்டிக்கொண்டால் எந்தெந்த இடத்திலெல்லாம் இரத்தம் கட்டும் அளவுக்கு உள்காயமாக அடிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் எத்தனை நுழைவுப்பாதைகள் உள்ளன,  தேவையானவற்றை ஆட்டையைப் போட்ட பிறகு தப்பிக்க எத்தனை வழிகள் உள்ளன, எத்தனை சன்னல்கள், எத்தனைக் கதவுகள், எத்தனைப் பூட்டுகள், பாதுகாப்புக்கு நாய் இருக்கிறதா, அப்படி இருந்தால் அதற்குப் போட ரொட்டித் துண்டுகள், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நாம் நுழையும் நேரத்தில் யாரும் முழித்திருப்பார்களா, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் ஆகியவற்றை வேவுப் பார்த்து தெரிந்து வைத்துக் கொண்டு பிறகு செயலில் இறங்குவதைப் போலவே தான் ஹேக்கிங்கும்.

வீடுகளில் சுவரேறித் திருடுபவர்களிலும், ஹேக்கர்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று வெற்றிகரமாக உள்நுழைந்ததும் உள்ளிருக்கும் அத்தனைப் பொருட்களையும் அள்ளியெறிந்து பரபரப்பாக சுருட்டிக் கொண்டு அந்த இடத்தையே ரணகளமாக்கிச் செல்பவர்கள், நகையோ அல்லது பாத்திரமோ போன்ற குறிப்பிட்ட பொருளை மட்டுமே குறி வைத்து நுழைந்து அதனை மட்டும் கவர்ந்து வந்த தடமின்றி வெளியேறிச் செல்பவர்கள். இந்த இரண்டாவது வகை தான் ஆபத்தானவர்கள், காரணம் இவர்களை கண்டுபிடிப்பது கடினம்.

இப்படியெல்லாம் சிரமப்படாமல் பட்டப்பகலிலேயே சேலையோ, வாசனைத்திரவியமோ அல்லது பித்தளைப்பாத்திரம், வெள்ளி, தங்க நகைக்களுக்கு மெருகேற்றுவதற்கோ என்று சொல்லு அழகாக பேசி வீட்டுக்குள் நுழைந்து சுருட்டும் வல்லவர்களும் உண்டு. ஹேக்கிங்கில் இதற்குப் பெயர் ‘Social Engineering’. உங்களிடம் நெருங்கிப் பழகி கடவுச்சொற்களைத் தட்டச்சும் பொழுது எட்டிப்பார்ப்பதும், உங்கள் பிறந்தநாள், குடும்பத்தினர்களில் பெயர்கள், படித்தப் பள்ளிக்கூடம் இப்படி அனைத்து தகவல்களையும் திரட்டி உங்களைப்போன்றே வலையமைப்பினுள் நுழைவது (Identity Theft), தொலைபேசியில் திடீரென அழைத்து உங்கள் வங்கியிலிருந்து பேசுவதைப்போலவோ அல்லது மேலதிகாரியைப் போலவோ அல்லது உங்கள் நிறுவனத்தின் கணிணித்துறையில் பணிபுரிபவரைப் போலவோப் பேசி நேரடியாகக் கடவுச்சொற்களை வாங்குவது ஆகியவை இதில் அடக்கம்.

மேற்சொன்னவாறு வேவுபார்த்து வலையமைப்பின் கட்டமைப்பினை ஆராய்வதற்குப் பெயர் ‘Reconnaissance Scan’. அதாவது உங்கள் வலையமைப்பில் என்னென்ன உபகரணங்கள் உள்ளன, அவற்றின் வலையமைப்பு எண்கள், உள்நுழைவதற்கு ஏதுவாக இருக்கும் வலைத்தொடர்புப் புள்ளிகள், கணிணிகள், இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், அவற்றின் வெளியீட்டு எண்கள் (Versions) ஆகியவற்றைத் திரட்டுவது தான் ஹேக்கிங்கின் முதல் படி. இதனைச் செய்வதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன, அவற்றில் பல நமக்கு மிகவும் பிடித்த விஷயமான “இலவச’ மென்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிரல்கள் எழுதும் வரம் பெற்றவர்கள் கொஞ்சம் முயன்றால் தாங்களே எழுதிக்கொள்ளலாம்.

Reconnaissance குறித்து இன்னும் விரிவாகத் தொடர்வதற்கு முன்னால் வலையமைப்பு எண்கள் குறித்து ஒரு முக்கிய விஷயத்தினைத் தெரிந்து கொள்ள வேண்டும். வலையமைப்பு எண்கள் எல்லாம் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றுக்குள்ளும் வர்க்க பேதம் உண்டு. உள்வலையமைப்பிற்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எண்களும் (non-routable Private IP Addresses), இணைய வெளியில் உல்லாச உலா வர அனுமதிக்கப்பட்ட உயர்வகை எண்களும் இருக்கின்றன (routable public IP Addresses).

உதாரணத்திற்கு உங்கள் வீட்டிலுள்ள கணிணியின் உள் வலையமைப்பு எண் (192.168.x.x) வழியாகத் தகவல்கள் வெளியே இணையத்திற்குப் பயணிக்கும் போது உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனத்தின் உபகரணமான Modem/Router இன்  வெளி வலையமைப்பு எண் மூலமாக தான் தொடர்பு கொள்ளும். உங்கள் வலையமைப்பிற்கு வெளியே இருந்து எந்தத் தகவல் போக்குவரத்தும் நேரடியாக உங்கள் கணிணியின் வலையமப்பு எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாது. அவையனைத்தும் உங்களின் வெளிவலையமைப்பு எண் மூலமாகத் தான் உங்களை வந்தடைகிறது. உங்கள் வெளி வலையமைப்பு எண்ணைத் தெரிந்து கொள்ள நிறைய இணையத்தளங்கள் இருக்கின்றன. உதா: http://www.myipaddress.com

உங்கள் வீட்டிலிருக்கும் modem/router உபகரணத்தினை ஒவ்வொரு முறை நீங்கள் மின்னிணைப்பினைத் துண்டித்து இயக்கும் பொழுதும் உங்களுக்கு உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனம் புதிய வலையமைப்பு எண்ணையோ அல்லது அதே எண்ணையோ வழங்கும். பெரும் நிறுவனங்கள் இது போன்ற மாற்றத்தினை தாங்க முடியாது, வலையமைப்பின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தங்களுக்கென வெளி வலையமைப்பு எண்களைப் பணம் செலுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். எந்த ஒரு வெளி வலையமைப்பு எண்ணையும் யார் பெயரில் இருக்கிறது என்று உலகத்தில் எங்கிருந்தாலும் இணையத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் (WHOIS search)..


Reconnaissance செயல்பாட்டின் முதல் கட்டம் தாக்கப்போக்கும் வலையமைப்பில் உள்ள வெளி வலையமைப்பு எண்கள் என்னென்ன என்று கண்டுபிடித்து அந்த எண்ணுடன் செயல்படும் உபகரணத்தில் எந்த வலைத்தொடர்புப் புள்ளிகளெல்லாம் தொடர்புக்கெனத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை கண்டறிவது தான் (Host Sweep and Port Scan).

தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...

Thursday, March 28, 2013

இணையம் வெல்வோம் - 6


கடந்து செல்லும் தாவணிகளின் எண்ணிக்கை நூறானாலும் அல்லது ஆயிரமாயேனாலும் எப்படி ஒரு வயசுப் பையனின் கண்களும், மூளையும் பரபரத்துக், கடகடவென அத்தனையையும் அலசி, ஒன்றே ஒன்றைத் தேர்ந்தெடுத்து நிலை குத்தி நிற்கிறதோ, கிட்டத்தட்ட அதே வேகத்தோடும், விவேகத்தோடும், வந்து குவியும் வலையமைப்பின் அத்தனை செயற்பதிவுகளையும் ஆராய்ந்து முக்கியமான தகவல்களை மட்டும் பாதுகாப்பு வல்லுநர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் தான் Security Incident and Event Management (SIEM).
SIEM தொழில்நுட்பம் களிமண் போன்றது. குரங்கும் பிடிக்கலாம், பிள்ளையாரும் பிடிக்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. ஒரு வலையமைப்பில் எந்தெந்த உபகரணங்கள், கணிணிகள், வழங்கிகளின் செயற்பதிவுகள் தேவை, அவற்றினை SIEM தொழில்நுட்ப உபகரணங்களுக்கு தங்கள் செயற்பதிவுகளை அனுப்பி வைக்கத் தேவையான நிரல்கள்/உத்தரவுகளை வழங்குதல் ஆகியவை பாதுகாப்பு வல்லுநர்களின் பொறுப்பு. மேலும் இப்படித் திரட்டும் செயற்பதிவுகளை வைத்து SIEM தொழில்நுட்பம் என்ன செய்ய வேண்டும் என்பதை நிரல்கள் மூலம் செயல்பட வைப்பதும் அவர்களின் வேலை. அப்படி என்னவெல்லாம் இதன் மூலம் செய்ய முடியும்?.

உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்திற்குப் பல நகரங்களில் கிளை நிறுவனங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தினசரி டெல்லிக் கிளையிலிருந்து வலையமைப்பில் உள்நுழையும் சிதம்பரம் என்ற ஊழியர், அனைவரும் அலறும் வண்ணம் தீடீரென ஒருநாள் சிவகங்கையில் இருந்து வலையமைப்பில் உள்நுழைந்தால் SIEM தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம். சமயங்களில் நீங்கள் முக்கிய வேலையாக வெளியூர் சென்று முகப்புத்தகம் பார்க்காமல் முகம் வியர்த்து, கை நடுங்கி அவசர, அவசரமாக நீங்கள் உங்கள் பயனாளர் கணக்கினுள் உள்நுழைந்தால், நீங்கள் வழக்கமாக வரும் இணைய இணைப்பின் மூலம் உள்நுழையவில்லை என்று எச்சரிக்கக் கண்டிருப்பீர்கள். அதெல்லாம் கிட்டத்தட்ட SIEM வகை எச்சரிக்கைகள்.


வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு SIEM மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம், தாங்கள் நினைத்த வண்ணம், குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் மட்டும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அளித்து மில்லியன்/பில்லியன் எண்ணிக்கையிலான செயற்பதிவுகளை பின்னாளில் விசாரணக்குத் தோதாக சேமித்து வைக்கும் உற்ற தோழன்.

ஆதிகாலத்தில் ஹேக்கர்கள் சரவெடி போன்று தாக்குதல் நடத்துவது தான் வழக்கம். ஒரு இணையத்தளத்தில் பயனாளர் பெயர், கடவுச்சொல் உள்ளிடும் உள்நுழையும் பக்கம் (login page) இருந்தால் அதற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான உள்நுழையும் முயற்சிகளை நிரல்கள் மூலம் மேற்கொள்வது வழக்கம். ஒரு கடவுச்சொல்லை வைத்து பல பயனாளர்களின் பெயர்களை முயற்சி செய்வது, ஒரு பயனாளர் பெயரை வைத்து பலக் கடவுச்சொற்களை முயற்சி செய்வது, ஒவ்வொரு வலையமைப்பு உபகரணங்களுக்கு அதனைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பிரத்யேக பயனாளர் பெயர்/கடவுச்சொல் இருக்கும் (factory default admin account),  அவற்றை முயற்சி செய்வது இப்படி பலவகைத் தாக்குதல் சகட்டு மேனிக்கு நடக்கும்.


இதனைத் தவிர்க்கத் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தனர். ஒவ்வொரு வலையமைப்பு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் பயனாளர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவது, மூன்று முறைக்கு மேல் தவறான கடவுச்சொல் அளிக்கும் பயனாளர் கணக்கினை செயலிழக்கச் செய்வது, ஒரே வலையமைப்பு எண்ணில்/கணினியில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்நுழையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், குறிப்பிட்ட கால அளவிற்கு அந்த வலையமைப்பு எண்ணைத் தடை செய்வது, CAPTCHA தொழில்நுட்பம் மூலம் தானியங்கி நிரல்கள் மூலம் தொடுக்கப்படும் முயற்சிகளைத் தவிர்ப்பது ஆகியவை அவற்றுள் சில.



ஊரே உலையில் விழுந்தாலும் எப்படி நாம் அன்று திரைப்படம் வெளியானால் அதற்கு திரைவிமர்சனம் எழுதி குதூகலிப்பதை நிறுத்துவதில்லையோ, அதைப் போல ஹேக்கர்களுக்கு தன் முயற்சிதனைக் கைவிடுதலும், தளர்ந்து போதலும் பழக்கமன்று. தாக்கப்போகும் வலையமைப்புகளை, இப்படிக் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்து, பிராண்டினால் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள், அதனால் ஒரு பலனும் இல்லை என்று உணர்ந்த ஹேக்கர்கள், கொண்டு வந்த மறுமலர்ச்சித் திட்டம் தான் APT எனப்படும் Advanced Persistence Threat. ‘இதயம்’ திரைப்பட முரளியைப் போன்று ஒரே இடத்தை பொறுமையாகக் குறி வைத்து அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்ப நிதானமாக மாதக்கணக்கில் நேரம் எடுத்து தாக்குதல் நடத்தி வெற்றி பெறும் போர் முறை தான் APT. இத்தகையத் தாக்குதல் நடத்துவதற்கு எந்த அளவு தேர்ந்த மதியும், நுட்பமும், நிதானமும் தேவையோ, அதனைவிட அதிகம் தேவை இவற்றைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கு.

ஒரு பயனாளரின் பெயர் மட்டும் உங்களுக்குத் தெரிகிறது, கடவுச்சொல் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். பயனாளர் கணக்கினை உடைத்து உள்நுழையும் முயற்சிகளுக்கு என்றே கடவுச்சொல் பட்டியல்கள் உண்டு. அது கிட்டத்தட்ட அகராதியில் உள்ள அத்தனை வார்த்தைகளையும், கணிணியின் விசைப்பலகையின் மூலம் உள்ளிடக்கூடிய அத்தனை எழுத்துக்கள்/எண்கள் அனைத்தையும் விதவிதமாகக் கூட்டமைத்தும் இருக்கும். இவையனைத்தும் எழுத்தின் எண்ணிக்கையின் படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகத் தான் கடவுச்சொற்களின் நீளம் இத்தனை எழுத்துக்கள் இருக்க வேண்டும், அனைத்து வகை எழுத்துக்கள், எண்கள் இவற்றின் கலவையாக இருக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்றன, அப்படி செய்வது மூலம் உங்கள் கணக்குப் பாதுகாப்பான ஒன்று நினைத்து விடக் கூடாது, திங்கள் கிழமை போக வேண்டிய மானம் சனிக்கிழமை போகும், அவ்வளவே. ஆனால் இதன் மூலம் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இது போன்ற தாக்குதலை கண்டுபிடிப்பதற்குப் போதிய கால அவகாசம் கிடைக்குமென்பதே முக்கியக் காரணம்.

அளவுக்கு மேல் பெருத்துக் கொழுத்த நிறுவனங்கள் தங்களின் இணையத்தளத்தின் வழங்கிகள் (Web Servers), உலகமெங்கும் பரவியிருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கோப்புப் பறிமாற்றத்திற்கான வழங்கிகள் (FTP servers), எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தின் மூலம் நிறுவனத்தில் உள்வலையமைப்பிற்குள் பாதுகாப்பாக நுழைவதற்கான  VPN (Virtual Private Network) போன்றவற்றை இணையத்தின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற நிறுவனங்கள் இணையப் பாவனையில் இருக்கும் தங்களின் வழங்கிகளின் பாதுகாப்பினை உறுதியாக வைத்திருப்பது அவசியம், இல்லையேல் ஹேக்கர்கள் இணையத்தள வழங்கியில் உள்நுழைந்து உங்களின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் ‘இன்னும் 15 நாள்ல கரண்ட் வந்துரும்’ என்று பாண்டிச்சேரி நாரயணசாமியை பேசவைக்க முடியும்.

ஹேக்கர்களிலும் பல விதமானவர்கள் உண்டு. ஒரு வலையமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வெற்றியடைந்து உள்நுழைந்த உடன் அலறி அடித்து, கோப்புகளை அள்ளிச் சுருட்டி, செயற்பதிவுகளை அழித்து, “அசந்தா அடிக்கிறாது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது என் பாலிசி’ என்பது போன்ற முத்திரை வசனங்களை இணையத்தளங்களில் வலையேற்றி, சில நிமிடங்களில் அந்த இடத்தையே ரணகளமாக்கிச் செல்பவர்களும் உண்டு. உள்நுழைந்த சுவடே தெரியாமல் அப்படியே அமைதியாக மாதக்கணக்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி ஆணிவேர் வரை ஒட்டு மொத்தத் தகவல்களையும் மொத்தமாக, நிதானமாக உருவும் வித்தைக்காரக்ளும் உண்டு.


மேற்சொன்ன அத்தனை சூழ்நிலைகளையும் ஒரு தேர்ந்த வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர் SIEM தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துத் தடுக்க முடியும். SIEM தொழில்நுட்பத்தினை ஒரு வலையமைப்பில் நிறுவி, நிர்வகிப்பதும், ஷங்கர் படத்தைத் தயாரிப்பதும் ஒன்று, எவ்வளவு பணம் போட்டாலும் முழுங்கும் வல்லமை வாய்ந்தது.



HP, IBM, McAfee, RSA போன்ற நிறுவனங்களின் SIEM தயாரிப்புகளே இன்றைய தேதிக்கு முண்ணனியில் இருப்பவை. இவற்றை வாங்கி நிறுவவதற்கும், அதனைத் திறம்பட நிர்வகித்து அவற்றின் முழுத்திறனையும், பயனையும் பெற்றிடத் திறமையுள்ள பாதுகாப்பு வல்லுநர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதற்கும் நல்ல கனமான பணப்பை முக்கியம். இப்படி விதவிதமான தொழில்நுட்பங்கள் மூலம் தங்கள் வலையமைப்பிற்கு அரண் அமைக்கும் அளவிற்கு இவர்களை மிரட்டும் ஹேக்கர்களின் பிரபலமான தாக்குதல் வகைகள் என்ன, அவற்றை எதிர்கொள்ளும் உத்திகள் என்ன?...

தொடர்வோம்..

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...

Wednesday, March 20, 2013

இணையம் வெல்வோம் - 5


வலையமைப்புப் பாதுகாப்பின் அச்சாணியாக விளங்குவது செயற்பதிவு (event log) என்னும் சமாச்சாரம் தான். அதில் அப்படி என்ன விசேஷம் என்றால், எந்த ஒரு கணிணி, வலையமைப்பு உபகரணங்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் இவையனைத்தும் வெளிப்பார்வைக்கு நாம் சொல்வதெல்லாம் செய்யும் விளையாட்டுப் பொருளாகத் தெரிந்தாலும், பயனாளராகிய நாம் என்னெவெல்லாம் செய்யச் சொல்கிறோம், அதனைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கணிணி, கோப்புகள் மற்றும் உங்கள் வலையமைப்பில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் செயற்பதிவுகள் மூலம் சேமிக்கப்படுகின்றன.

‘இன்னைக்கி எங்க வீட்ல தோசை சுட்டோம்’ என்று சொன்னால் கூட, எங்கள் ஆட்சிக்காலத்தில் தான் அதற்கு மாவாட்டிக் கொடுத்தோம் என்று பெருமை பாராட்டும் சட்டமன்றத்தில் எப்படி நம் அரசியல்வியாதிகள் தங்கள் திருவாய் மலர்ந்தருளும் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றதோ கிட்டத்தட்ட அதைப்போலவே உங்கள் மென்பொருள், வலையமைப்புப் போக்குவரத்து அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒரு கோப்பினில் சேமித்து வைக்கப்படும். ஒரு வித்தியாசம், செயற்பதிவுகளில் இருந்து எதையும் சபைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதைப்போல அழித்து விட முடியாது. உடனே செயற்பதிவுகள் எப்படி இருக்கும் என்று பார்த்து விடத் ‘துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்’ என்று திமிறும் அன்பர்கள் உங்கள் கணிணி Windows இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்தால் Control Panel -> Event Viewer சென்று சுற்றிவரவும்.

கேட்பதற்கு எளிமையாக இருக்கும் இந்த செயற்பதிவுகள் தரும் தகவல்களின் ஆழம் மிகமிக அதிகம். செயற்பதிவுகள் மூலம் உங்கள் கணிணியோ அல்லது வலையமைப்பு உபகரணமோ எத்தனை மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது, நிறுத்தப்படுகிறது என்பது முதல், யாரெல்லாம் உள்நுழைகிறார்கள், அவர்கள் என்னென்ன மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், எந்தெந்த கோப்புகளை பயன்படுத்துகிறார்கள், எவற்றைப் படிக்கிறார்கள், எவற்றில் மாற்றம் செய்கிறார்கள், கணிணியின் வெப்பமதிகமாகி காய்ச்சலடிக்கிறதா, செயலி (processor) அதிக வேலைப்பளுவால் மூச்சுத்திணறுகிறதா, உபகரணத்தினுள் வெப்பத்தினை வெளியேற்ற வைத்திருக்கும் காற்றாடி சுற்றுகிறதா என்பது வரை அனைத்தும் வருடம், மாதம், தேதி, மணி, நிமிடம், நொடி என்று அத்தனை விவரங்களையும் ஒரு கணிணியிலோ/வலையமைப்பு உபகரணத்திலேயோ கண்டுபிடிக்க முடியும்.

இந்த செயற்பதிவுகள் தான் இணையக் குற்றங்களுக்கு சட்டரீதியான ஆதாரம். எந்த ஒரு முறையான வலையமைப்பிலும் செயற்பதிவுகளை மாற்றம் செய்வதோ, பார்வையிடுவதோ பொதுப்பயனாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும். அதை மீறி ஏதாவது குறுக்கு வழியில் அதனை அழிப்பதோ, மாற்றம் செய்வதோ கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இவை சட்டரீதியான விசாரணைகளுக்கு முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றங்களால் எடுத்துக் கொள்ளப்படுமென்பதை அவ்வளவு எளிதாகப் படித்து விட்டுக் கடந்து சென்றுவிட முடியாது. செயற்பதிவுகளுக்கு உண்மையிலேயே அது பதிவு செய்யும் செயல்களுக்கான ஆணைகளைத் தரும் மனிதர் யார் என்பது தெரியாது, அதனைப் பொருத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பயனாளர் பெயர் தான் காரணம். குறிப்பிட்ட ஒரு செயல்பாடு நடக்கும் பொழுது அந்தக் கணிணியிலொ அல்லது வலையமைப்பு உபகரணத்திலோ எந்த பயனாளர் உள்நுழைந்திருக்கிறாரோ அவர் பெயர் தான் பதிவு செய்யப்படும்.

அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது பட்சி கூப்பிடுகிறதென்று சலனப்பட்டு உங்கள் கணிணியினை பூட்டாமல் காபி குடிக்கப் போனாலோ அல்லது உங்கள் கடவுச்சொல் அடிக்கடி மறந்துபோய் இம்சிக்கிறதென்று கணிணித்திரையின் மேலேயே ஒரு காகிதத்தில் கோவில் மின்விளக்கிற்கு உபயம் எழுதும் அளவுக்கு பெரிதாக அதனை எழுதி வைத்தாலோ உங்களை நிமிடத்தில், மறுநாள் காலை அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் ‘இவர் இப்பத்தான் இப்படியா இல்ல சின்ன வயசிலேர்ந்தே ஒரு மாதிரி தானா?’ என்று உங்கள் வீட்டுத் தெருவில் விசாரிக்கும் அளவுக்கு பிரபலமான குற்றவாளியாக்க முடியும். ஏனெனில் உங்கள் கணிணியின் மூலமாகவோ அல்லது உங்களின் வடமில்லா வலையமைப்பு மூலமாகவோ உள்நுழைந்து இணைய இணைப்பினைப் பயன்படுத்தி யாராவது வழக்குப் போடும் அளவிற்கு மானமிருக்கும் பிரபலங்களை மானக்கேடாகத் திட்டி மின்னஞ்சலாம், டிவிட்டலாம், உங்கள் உலாவியில் பயன்படுத்தும் மின்னஞ்சல், முகப்புத்தகம் ஆகியவற்றின் கடவுச்சொற்களை உங்கள் வசதிக்காக உலாவியிலேயே (remember password feature) சேமித்து வைக்கும் ஆசாமியாக நீங்கள் இருந்து விட்டால் மிகச் சிறப்பு, இப்படி செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தும் போது, முக்கிய ஆட்டக்காரராக ஆடப்போவது செயற்பதிவுகள் மட்டுமே. செயற்பதிவுகள் பயனாளர் பெயரை மட்டுமே சொல்லும், அதனைப் பயன்படுத்திய மனிதர் யாரென்பது குறித்து சட்டமும், செயற்பதிவும் கொஞ்சம்  கூட அலட்டிக் கொள்ளப்போவதில்லை.


பிறகு இது குறித்து யார் தான் கவலைப்படுவது?. நாம் தான். இதனை மனதில் வைத்துத்தான் ஒவ்வொரு பயனாளரும் தங்கள் கடவுச்சொற்களை இறுக்கி முடிந்து வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் வடமில்லா வலையமைப்பு இருந்தால் அதனைக் கடுமையானக் கடவுச்சொல் மூலம் பூட்டி வையுங்கள் என்று வன்மையாக வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். ‘நாங்களும் காசு கொடுத்து வாங்கிட்டோம்ல’ என்று வடமில்லா வலையமைப்பு உபகரணங்களை வாங்கி வைத்து விட்டு மார்தட்டும் மைனர் குஞ்சுகள் தயவு செய்து அது எந்த அளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதனை, அதனை நிறுவ வரும் வல்லுநரிடம் நறுக்கென்று கேட்டு, அதனை செயல்படுத்தவும் சொல்லவும். இதனை இங்கு அழுத்திச் சொல்லக் காரணம் எந்தப் பொருள் வாங்கினாலும், எப்பொழுதும் நாம் படிக்காமலேயேக் கையெழுத்திடும் காகிதங்களின் நிபந்தனைகள் பட்டியலில் பாதுகாப்புப் பாலெல்லாம் அழும் குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்கவும் என்று தான் இருக்கும். எனவே மறக்காமல் அழுது வைக்கவும். இப்படி நிபந்தனை விதிப்பது, வாரத்திற்கு இருமுறை ‘அக்கா… மறந்து போச்சு.. கொஞ்சம் மாத்திக் கொடுங்களேன்’ என்று வாடிக்கையாளர்கள் சேவைக்கு வரும் கடவுச்சொல் மறந்து போனவர்களின் அன்புத்தொல்லைகளைத் தவிர்க்கவும், அதற்குத் தேவைப்படும் தொழில்நுட்ப வல்லுநரின் கூடுதல் மணித்துளிகளுக்கான ஊதியமும் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படி நம் கணிணிகளிலும், சாதாரண வலையமைப்பு உபகரணங்களிலுமே இவ்வளவு தகவல்கள் கிடைத்தால், வலையமைப்பின் பாதுகாப்புக்கென பயன்படுத்தப்படும் சிறப்பு உபகரணங்கள் சொல்லும் கதைகள் இன்னும் சுவாரசியம். காலை அலுவலகத்திற்குச் சென்றதும் சூடான காபி சுவைத்துக் கொண்டே நாளெடுகளின் செய்திகளை நிதானமாக வலைமேய்ந்த பின் வேலை பார்க்க ஆரம்பிக்கும் பழக்கமுள்ள தனிநபர் அந்த நேரத்தில் மட்டுமே சில நூறு செயற்பதிவுகளை உருவாக்க முடியும் என்றால், நூற்றுக்கணக்கான பயனாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் வலையமைப்பின் வேலைநேரத்தில் உண்டாகும் வலையமைப்புக் போக்குவரத்துகள், கணிணி, இணையம்/மின்னஞ்சல் தொடர்பான செயல்பாடுகள் மொத்தமாக உருவாக்கும் செயல்பதிவுகள் மில்லியன்/பில்லியன் எண்ணிக்கையில் இருக்கும்.

ஒரு வலையமைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை செயற்பதிவுகள் மூலமே பாதுகாப்பு வல்லுநர்கள் கண்காணிக்கிறார்கள். அதிலும் வெளிவலைப்போக்குவரத்து உள்நுழையும் இடத்திலும், உள்வலைப்போக்குவரத்து வெளியேறிச் செல்லும் இடத்திலும் உள்ள வலையமைப்பு உபகரணங்களின் செயற்பதிவுகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு வலைத்தடுப்பு உபகரணத்தின் (firewall) செயற்பதிவுகளை நேரடியாக பார்வையிட்டால் கணிணித் திரையில் செயற்பதிவுகள் மும்மாரி பொழியும், நயாகரா நீர்வீழ்ச்சிக்கடியில் குடை பிடித்து நுழைந்த அனுபவம் கிடைக்கும். இவற்றை ஒவ்வொரு பக்கமாக எச்சில் தொட்டுப் புரட்டிப் படித்து முடிப்பதற்குள் அடித் தொண்டை வரண்டு, கண்கள் இருட்டி, மயக்கமே வந்து விடும், நடைமுறைக்கும் ஒத்துவராது. ஒவ்வொரு செயற்பதிவினையும் நூறு அல்லது ஆயிரக்கணக்கான கணிணிகள், வலையமைப்பு உபகரணங்கள், பயனாளர்கள் உள்ள ஒரு வலையமைப்பில் சோதித்துப் பார்ப்பதென்பது ‘தமிழகத்தில் தடையில்லா மின்சாரம்’ என்பதை விடவும் கடினம், நிச்சயம் சாத்தியமில்லை.

ஒரு வலையமைப்பில் வெளியிலிருந்தோ அல்லது உள்ளிருந்தோ நடத்தப்படும் வலைத்தாக்குதல்களை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விருது வாங்குவதில் வல்லவர்களான பாதுகாப்பு வல்லுநர்கள், மலைக்கும் அளவு எண்ணிக்கையில் இருக்கும் செயற்பதிவுகளை எப்படி கட்டி மேய்க்கிறார்கள்?, எத்தகையத் தாக்குதல்களை ஹேக்கர்களிடமிருந்து இவர்கள் எதிர்கொள்கிறார்கள், எல்லோராலும் ஹேக்கிங் செய்ய முடியுமா?, இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் ஏன் ஹேக்கர்களின் தாக்குதலை எல்லா நேரங்களிலும் தடுக்க முடிவதில்லை?....

தொடர்வோம்..

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...

Wednesday, March 13, 2013

இணையம் வெல்வோம் - 4


வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இரு பெரும் பொறுப்புகள் உண்டு. ஒன்று தாங்கள் கண்காணிக்கும் வலையமைப்பினை எந்தவித தாக்குதலுக்கும் பலியாகாமல் வருமுன் காப்பது,அது முடியாதபட்சத்தில் அதனைக் கண்டுபிடித்து சீராக்குவது. படிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், மிகவும் சிரமமான, தகவல் தொழில்நுட்ப வேலைகளில் முதலிடம் இதற்குத் தான். தாங்கள் பாதுகாக்க வேண்டிய வலையமைப்பின் கட்டமைப்பு, பயன்பாட்டுக்கு உள்ள பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், அணுதினமும் மாறிவரும் பாதுகாப்புச் சூழலை கிரகித்து வருதல், தங்கள் வலையமைப்பின் பயன்பாடு குறித்தான தகவல்களை விரல் நுனியில் வைத்திருத்தல், நடு ராத்திரி தூக்கத்தில் எழுப்பினாலும் முனகல் சத்தம் கூட போடாமல் வேலை பார்க்கத் தயாரயிருத்தல் ஆகியவை இவர்களின் அத்தியாவசியமான அம்சங்கள். இவர்களுக்குள்ளும் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் சிறப்பு வல்லுநர்கள், கணினித் தடயவியல் நிபுணர்கள், வலைக் கட்டமைப்புக் ஆலோசகர்கள் என பலவகைக் குழுக்கள் உண்டு. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில பணி நேரத்தில் வேலை பார்க்காமல் அளவு கடந்து வலை மேய்பவர்கள், சக ஊழியர்களிடம் சாட்டில் வரம்பு மீறி சதா ஜொள்ளித் திரிபவர்கள், போட்டியாளர்களிடமோ அல்லது எதிரிகளிடமோ முக்கிய, ரகசியத் தகவல்களை வலை மூலம் கருணா வேலை செய்பவர்கள் என்று கணிணித் திரைக்குப்பின் முகம் மறைந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் சகலரையும் கையும், கணிணியுமாகப் பிடித்து பீதியூட்டுவது இவர்களின் அன்றாட பணிகளில் சாதாரணம். இதன் பின்விளைவுகளாக குற்றம் செய்பவரின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மிகக்கடுமையாக இருக்கும். சிறை, வேலை இழப்பு, விவாகரத்து, சமயங்களில் தற்கொலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், பொதுவாக இது போன்ற பின் விளைவுகள் குறித்து பாதுகாப்பு வல்லுநர்களுக்கு எதுவும் தெரியாதவாறு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும். அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலும், குற்றவுணர்ச்சியும் அடுத்த முறை ஒரு வலைக்குற்றத்தினைப் பற்றி விசாரணை செய்யும் பொழுது பாதிக்க வாய்ப்பிருப்பதே காரணம்.
எல்லோரையும் போல சாதரணமாக நேர்முகத்தேர்வு, குற்றவியல் பின்னணி குறித்தான விசாரணை போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து பணியில் சேரும் சாதா வல்லுநர்களும் உண்டு, ஜீன்ஸ்-டீஷர்ட் அணிந்து வரவேற்பறையில் இருக்கும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவிழ்த்து வலையமைப்பினை ஹேக் செய்து தங்களின் சகல திறமைகளையும் நிரூபித்து அசத்தலாக நுழையும் சூப்பர் வல்லுநர்களும் உண்டு, இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்யும் முதல் வேலை வலையமைப்பின் கட்டமைப்பினை அலசித் துவைத்துக் காயப்போடுவது தான். காரணம் ‘ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழைய முடியும்’ என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே நம்மூர் வக்கீல்கள் கற்பழிப்பு வழக்குகளுக்கென சிறப்பாகக் கண்டுபிடித்த அதே தத்துவம் தான்.
வலையமைப்பு என்பது உங்கள் வீட்டைப் போன்றது. எந்தெந்த இடத்தில் ஜன்னல், நிலைக்கதவு, வாசல் வைக்க வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறதோ அதே போன்று வலையமைப்பிலும் இருக்கிறது. வீட்டுக்கு வெளியில் இருந்து உள்ளே நுழைய ஏதுவாயிருக்கும் முன்வாசல், பின் வாசல், ஜன்னல் கதவுகளை எப்படி சிறப்புக் கவனத்துடன் கனத்த இரும்புக் கம்பிகளைக் கொண்டும், பெரிய அளவு பூட்டுக்களையும் போட்டு அலங்கரித்து அழகு பார்க்கிறோமோ அதைப் போலவே வலையமைப்பினிலும் வடிவமைப்பிற்கான சாஸ்திர, சம்பிரதாயங்கள் உண்டு. ஒவ்வொரு வலையமப்பிலும் இரண்டு புள்ளிகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. ஒன்று உள் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்துக்குச் செல்லும் வழி (Egress Point) மற்றது இணையத்தில் இருந்து வரும் வலைப்போக்குவரத்து உங்கள் நிறுவனத்தின் உள்வலையமைப்பிற்குள் நுழையும் வழி (ingress Point). உங்கள் வீட்டில் உங்களுக்கு இணைய வசதியினை தரும் நிறுவனத்தின் வலைத்தொடர்பு சாதனமே உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்லுவதற்குமானத் தொடர்புப் புள்ளியாக விளங்குகிறது என்பதனை நினைவில் கொள்ளவும்.
உதாரணத்திற்கு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு இணையத்தளத்தின் முகவரியினை உங்கள் உலாவியில் உள்ளிடும் பொழுது உங்களின் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்திற்குச் சென்று (egress point) நீங்கள் கேட்கும் தகவல்களை அத்தளத்தின் வழங்கியிடம் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக வழங்கி தரும் தகவல்களை இணையத்திலிருந்து உங்கள் நிறுவனத்தின் வலையமப்பிற்குள் (ingress point) கொண்டு வந்து சேர்க்கும். ஒரு வலையமைப்பின் பாதுகாப்பு அரண் இந்த இரண்டு புள்ளிகளிளும் தான். வலையமைப்பில் இருந்து வெளியே செல்லும் தகவல்கள் அனைத்தும் அனுமத்திக்க பட்ட இடத்திற்கு மட்டும் செல்வதையும், அவை எந்தவித வில்லங்கம் இல்லாத தகவல் பறிமாற்றம் என்பதையும் உறுதி செய்வது பாதுகாப்பு வல்லுநர்களுடைய பணி. சிலநேரம் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்குப்பிள்ளை திடீரென ’30 நாட்களுக்குள் ஹேக்கராவது எப்படி?’ படித்து விட்டு வந்து நிறுவனத்தின் வலையமைப்புக்குள் இருந்து கொண்டு நாசாவின் இணையத்தளத்திற்குள் ராக்கெட் விட்டு உங்களுக்கு காய்ச்சல் வரவைக்க வாய்ப்பிருப்பதால் தாங்கள் நிர்வகிக்கும் வலையமைப்பின் பயனாளர்கள் யார், அவர்கள் வலையமைப்பிற்கு வெளியே இணையத்திற்கு எதற்கெல்லாம் செல்கிறார்கள், எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாதுகாப்பு வல்லுநர்கள் பணிகளில் ஒன்று.
அதே போன்று இணையத்தில் இருந்து உங்கள் உள்வலையமைப்பிற்குள் வரும் தகவல்களான மின்னஞ்சல்கள், பயனாளர்கள் உலாவியின் வழியாகக் கேட்டுப்பெறும் அனைத்து வகையான இணையத்தளங்கள் என அனைத்தையும் கட்டுப்பாடோடும், கண்காணிப்பிலும் வைத்திருப்பது அவசியம். இவையனைத்தையும் கண்காணிப்பதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் அவ்வளவு எளிதல்ல. இவ்வளவுத் தகவல்களும் திரைக்காட்சிகளாகத் துல்லியமாக திரையில் தோன்றப்போவதில்லை, இவையனைத்தும் வலையமைப்பு எண்களாகவும் (IP Address), வலைத்தொடர்பு எண்களாகவுமே காணக்கிடைக்கும் (Port numbers), இப்படி எங்கேங்கே காணினும் எண்களாக காட்சி தரும் தகவல்களை எப்படி இனங்கண்டு கொள்வது?. வலையமைப்பினில் உள்ள ஒவ்வொரு உபகரணத்திற்கும், உங்கள் கணிணி உட்பட உள்ள முகவரி மற்றும் அடையாளம் தான் வலையமைப்பு எண். உங்கள் வலைதொடர்பின் முறையினைப் பொறுத்து (protocol)) பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண் மாறுபடும். உலாவியில் நாம் பொதுவாக பயன்படுத்தும் இணையத்தள மேய்தலுக்கு (http) 80, கோப்புகள் பகிரப் பயன்படுத்தபடும் FTPக்கு (File Transfer Protocol) 21, பாதுகாப்பான இணையத்தளத் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் குறீயீட்டு முறைப்படுத்தப்பட்ட வலைப்போக்குவரத்துக்கு 443 இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இது போல நாம் கணிணியில் செயல்படுத்தும் ஓவ்வொரு நிரலுக்கும் அல்லது மென்பொருளுக்கு என்று தனிக்குணங்களில் அவைப் பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண்களும் உண்டு.
இப்படி, வலையமைப்பினுள் இருக்கும் ஒவ்வொரு சாதனத்தின் வலையமைப்பு எண்களையும் அவர் பயன்படுத்தும் அனைத்து வகையான வலைத்தொடர்பு எண்களையும் பார்த்துப் பார்த்துக் கண்கள் சிவந்த பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இவையனைத்தும் தலைகீழ் மனப்பாடம். இவர்களின் விவாதங்களின் போது மென்பொருட்களின் பெயர்களைத் தனியே உச்சரிப்பது அரிது அப்படியே உச்சரித்தாலும் கூடவே வலைத்தொடர்பு எண்களைக் குறிப்பிட மறக்க மாட்டார்கள். அத்தனைத் தகவல்களையும் அறிந்து வைத்திருந்தாலும் 24 மணி நேரமும் வலையமைப்பின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகக் கடினம். பாதுகாப்பு வல்லுநர்களின் வேலையை எளிதாக்க மின்னஞ்சல் (Email Security gateway), இணையதளப் பயனளார்களின் போக்குவரத்து (Web Gateway/URL Filtering), இணையத் தள வழங்கிகளுக்கு (Web Application Firewall), பொதுவான வலைப்போக்குவரத்து (Network Security – IPS/IDS), தகவல் இழப்பினைத் தடுத்தல் (Data Loss Prevention) என பலவிதமான தொழில்நுட்பங்கள் உண்டு.
இப்படி ஆயிரம் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அசகாய சூரர்களான பாதுகாப்பு வல்லுநர்கள் இருந்தாலும், இணைய உலகின் வலைப்பாதுகாப்புக்கான அச்சாணியாக விளங்கும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. அது இன்றி வலையுலகில் அணுவும் அசைவதில்லை. ஒரு வலையமைப்பினை கட்டுடைத்து உள்நுழைவதை விடவும் இதனை அழித்தலோ அல்லது மாற்றியமைத்தலோ மிகப்பெரியக் குற்றமாகக் கருதப்படும். அது என்ன?
தொடரும்…

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...