Wednesday, February 27, 2013

இணையம் வெல்வோம் -2



வலையமைப்பின் பாதுகாப்புக்கென சராசரியாகத் தனியார் நிறுவனங்களே மூன்று முதல் நான்கு மில்லியன் டாலர்கள் செலவு செய்யும் போது, கொம்பு முளைத்த அரசாங்கங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இவ்வளவுப் பணத்தை வைத்து எப்படி செலவழிப்பது, கண்ணுக்குத் தெரியாத எதிரியிடமிருந்து எப்படிக் கணிணி வலையமைப்பைப் பாதுகாப்பது போன்ற கேள்விகள் உங்கள் காதுகளுக்குள் ரீங்காரமிடலாம்.


பிறந்தநாள், மஞ்சள் நீராட்டு, திருமணம் மற்றும் முதலிரவு போன்ற விழாக்களுக்கு ப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பதில் வையகத்தின் முன்னோடிகளான நாம், எப்படி அவற்றிற்கு வாழ்த்து வசனங்கள் எழுத 12 பேர் கொண்ட குழு வைத்து ஒரு அமைப்பாகத் திறம்பட செயல்படுகிறோமோ, அதைப் போலவே ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வலையமைப்பின் வடிவமைப்போர், அவற்றை வடிவமைப்புத் திட்டத்தின்படி நிறுவுவோர், செயல்பாட்டின் போது சிக்கல்கள் ஏற்பட்டால் சரி செய்வோர், பாதுகாப்பு வல்லுநர்கள் போன்ற பல அணிகள் சேர்ந்து தான் ஒரு வலையமைப்பின் தரத்தினை நிர்ணயிக்கிறார்கள்.

மேற்சொன்ன அணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம், மற்றும் வலையமைப்பு உபகரணங்கள், குறிப்பாக வலையமைப்பின் பாதுகாப்புக்கென பிரத்யேகமான உபகரணங்கள் ஆகியவை தான்  நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கு கடும் சேதாரம் விளைவிக்கும் காரணிகள். இவற்றை வெறுமனே வாங்கி வைத்து விட்டால் மட்டும் பாதுகாப்புக்கு உத்தரவாதமா?, இல்லவே இல்லை. வலையமைப்பின் பாதுகாப்பென்பது இருமனம் இணையும் திருமணம் போல,  இருக்கும் காலம் வரை பராமரித்துக் கொண்டே இருப்பதும்,  ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடும் தேவைகளுக்கேற்ப பாதுகாப்பு உபகரணங்களின் கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்வதும் அவசியம்.

 இவ்வளவு சிரமப்பட்டு வலையமைப்பினை ஏன் பாதுகாக்க வேண்டும், உண்மையாகவே ஆபத்துகள் அதிகமா இல்லை எல்லாம் மனப்பிராந்தியா போன்ற எண்ணங்கள் நமக்கு அலைமோதுவது இயல்பான விஷயம். பொதுவாக இணையத்திற்கு செல்ல வழியில்லாத வலையமைப்புகளுக்கு ஆபத்துக் குறைவு. எனவே தான் இராணுவங்களின் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினி வலையமைப்புகள் திறந்தவெளி இணையத்தில் மேய்வதற்கு விடப்படுவதில்லை. இணைய இணைப்பில் இருக்கும் ஒவ்வொரு கணிணியும், லட்சுமண ரேகைக்குப் பின்னிருக்கும் சீதையினைப் போலத்தான், திக்குதெரியாத காடான இணையத்தில், எட்டுத் திக்கிலும் மாயவலை விரிக்கப்பட்டிருக்கும்.   இங்கு வில்லன்கள் வைரஸ், ட்ரோஜன், மால்வெர், ஸ்பைவெர் மற்றும் சில்லறை ஏமாற்று வேலைகளாகக் கூட இருக்கலாம்.


நீங்கள் சிவனே என்று சினிமா கிசுகிசு படித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று உங்கள் கணிணிக்கு கல்லீரலில் வீக்கமென்றும் எங்கள் மருந்து மூலம் சரிசெய்து வேகமாய் செயல்பட வையுங்கள் என்றும் திரையில் தகவல் தோன்றலாம் அல்லது கடும் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் கணிணியினைக் காப்பாற்ற உடனே இங்கு க்ளிக்கவும் என்று உங்களைக் கலவரப்படுத்தலாம். இவற்றைக் கண்ட உடனே காஷ்மீர் வில்லன்களை அழிக்க மதுரையிலிருந்து லாரியில் கிளம்பும் விஜயகாந்தைப் போல் அவசரப் பட்டு விடக் கூடாது. உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, சட்டென  பாடுபவர் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ‘அழகேசண்ணே இவ்வளோ பக்கத்துல உக்காந்து டிவி பார்க்காதீங்கண்ணே, கண்ணு கெட்டுப் போயிரும்’ என்று சொன்னால் எந்த அளவிற்கு நம்புவீர்களோ அந்தளவுக்குத் தான் நம்ப வேண்டும்.

இது தவிர வாங்காத லாட்டரியில் கிடைத்த பல கோடிப் பரிசுப்பணத்தினை அனுப்பி வைக்க கொரியர் செலவுக்கு 500 ரூபாய் கேட்கும் அன்பர்கள், ஏதோ ஒரு நாட்டில் இராணுவப் புரட்சியின் போது பெரும் பணம் சுருட்டிய பின் மரணமடைந்த இராணுவத் தளபதிகள் அல்லது அரசியல்வாதிகளின் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட, உங்களிடம் சகலத்தையும் ஒப்படைக்கத் தயாராக இருக்கும் கல்யாணமாகாத அழகு மகள்கள், ஒரு மணி நேரத்திற்கு முன் உங்களுடன் ரோட்டுக் கடையில் பஜ்ஜி தின்ற அதே நண்பர் லண்டன் மாநகரில் கடவுச்சீட்டு, பணம், செல்பேசி  என அனைத்தையும் தொலைத்து விட்டு நடுரோட்டில் அபலையாய் உங்கள் பணத்தை எதிர்பார்த்துத் திரிவதாய் சொல்லும் மின்னஞ்சல்கள், என இணையத்தில் நமக்காக விரிக்கப்பட்டிருக்கும் வலைகளின் பட்டியல் மிக நீளம். இவற்றில் இரண்டு வகை உண்டு. உங்கள் பணத்தினையோ அல்லது உங்கள் கணிணியில் இருக்கும் தகவல்களையோ குறி வைப்பவை ஒரு வகை, நம்மை முட்டாளாக்குவதோடு மட்டுமே திருப்தியடைந்து சரக்கடித்து திருப்தியடைவது இரண்டாம் வகை, உதாரணத்திற்கு இது திருப்பதி பெருமாளின் அபூர்வ புகைப்படம் உடனே முகப்புத்தகத்தில் 100 பேருடன் பகிர்ந்து கொள்ளவும் அல்லது உங்கள் முகப்புத்தகக் கணக்கு முடக்கமாகி விடும் என மிரட்டுவதும், உடனே கடமையே  கண்ணாயினாராக அப்படியே அதனைச் செய்வதும் இணையத்தின் அன்றாட நிகழ்வுகள். பேருந்து நிலையங்களில் அம்பாளின் திருவிளையாடல் குறித்துச் சொல்லி, உடனேயே அதனை அஞ்சலில் 50 பேருக்கு அனுப்பச் சொல்லி மிரட்டும் துண்டுப்பிரசுரங்களின் பல நவீன அவதாரங்களில் இதுவும் ஒன்று.

மிகச்சமீபத்திய உதாரணமாக LinkedIn நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய மார்க்கெட்டிங் உத்திக்குப் பலியானவர்களைச் சொல்லலாம். நந்தன வருடம், தைத் திங்கள், மூகூர்த்தம் நிறைந்த ஒரு சுபயோக சுபதினத்தில் LinkedIn நிறுவனம் தங்களது பயனாளர்களாகிய ஏறத்தாழ 20 மில்லியன் பேருக்கு ‘எங்கள் தளத்தில் கணக்கு வைத்திருப்பர்களிலேயே நீங்கள் தான் பவர் ஸ்டார், உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்ற பொருள் படும் விதத்தில் கண்ணைக் கவரும் வடிவமைப்பில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. அந்த மின்னஞ்சலின் அடிப்பகுதியில் அத்தகவலை முகப்புத்தகம், டிவிட்டர் மற்றும் இன்னபிற சமூக வலைத்தளங்களுக்கு பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது, கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இதற்கு பலியான ஆடுகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரே கல்லில் உலக அளவில் பல மாங்காய்களைச் சராமாரியாகப் போட்டுத்தள்ளியது LinkedIn நிறுவனம். இதன் மூலம் அவர்கள் அடைந்த பயன், சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களில் ஆடுகளின் மூலமாக LinkedIn நிறுவனத்திற்குக் கிடைத்த இலவச விளம்பரம், மற்றும் சில உணர்ச்சிவசப்பட்ட பணக்கார ஆடுகள் தங்களது LinkedIn கணக்கினை கட்டணச் சேவைக்கு மாற்றியது மூலம் கிடைத்த வருமானம். அதாவது நாம் இவ்வளவு பிரபலமாகிற அளவுக்கு கூட்டம் கூட்டமாக யாரெல்லாம் தங்களது விவரங்களை LinkedIn தளத்தில் பார்வையிடுகிறார்கள் என்பதனை அறியும் அவாவின் விளைவாக LinkedIn நிறுவனத்திற்கு கிடைத்த அல்வா எக்கச்சக்கம். எங்கோ, எப்போதோ கைதவறி LinkedIn தளத்தில் கணக்கைத் தொடங்கி விட்டு, அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்காத பல பேருக்கும் இம்மின்னஞ்சல் கிடைக்கும் பாக்கியம் பெற்றது குறிப்படத்தக்க அம்சம்.

மேற்கூறிய அனைத்து உதாரணங்களிலுமே பலியாவதா வேண்டாமா என்பதனை நம் செயல்களே தீர்மானிக்கின்றன. மிகச்சாதரணமாக ஏதாவது ஏடாகூடமான தளத்தில் பார்க்கக் கூடாததைப் பார்த்தக் காய்ச்சலில் எதிலாவது கைதவறி ஒரு முறை க்ளிக்கினால் கூட உங்கள் கணிணி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. வேகமாக செயல்படுவதுதான் மேதமை என்று நினைத்து கண்டபடி தட்டச்சிக் கொண்டே இருப்பது,  மற்றும் மவுஸ் மூலம் படபடவென க்ளிக்குவது போன்ற வியாதியஸ்தர்கள் இதற்குப் பலியாவது உறுதி.

எளிதாகத் தோன்றும் சில சமாச்சாரங்கள் இணையத்தொழில்நுட்பத்தில் விளைவிக்கும் சேதம் கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு இருக்கும். இது போன்ற மிகச் சாதரணமாகத் தோன்றும் பொறிக்கு சில சமயம் அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் உலகத்தின் மிகப்பெரிய இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான லக்ஹீட் மார்ட்டின் போன்ற முதலைகளும் சிக்கியிருக்கின்றன. வெள்ளை மாளிகையிலும், லக்ஹீட் மார்டின் நிறுவனத்திலும் வலையமைப்பின் பாதுகாப்புக்கு அள்ளி இறைத்திருப்பார்கள் என்பதையும், அங்கு பணிபுரிபவர்களுக்கு வலையமைப்பின் பாதுகாப்புக் குறித்து பயிற்சியளித்திருப்பார்கள் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களை வீழ்த்துவதற்கு ஹேக்கர்கள் பயன்படுத்திய ஆயுதம் Spear Phishing Attack.


அப்படி அத்தாக்குதலில் என்ன விசேஷம்?

அதனைத் தெரிந்து கொள்ளச் சற்றுப் பொறுத்திருங்கள்.



www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து...

Wednesday, February 20, 2013

இணையம் வெல்வோம் - 1


ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர்.
இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14. தன் ஆழ்ந்த அறிவாற்றல் மூலம் ஏதெனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி கைகொள்ளாமல் சம்பளம் வாங்கி, விடுமுறையில் பட்டாம்பூச்சிகளோடு விண்ணைத்தாண்டும் வாய்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தினை மாற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆரொன், இன்று வாசகர்களே செய்திகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும் செய்தித்தளமாக புகழ்பெற்று விளங்கும் www.reddit.com தளத்தின் நிறுவனர்களில் ஒருவர்.
ஆரொன் ஸ்வார்ட்ஸ்
இணையத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் உலகத்திலுள்ள அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று போராடும் Open Access Movement எனும் குழுவின் கதாநாயகன், அதற்கு எதிராக அமெரிக்க அரசு கொண்டு வந்த SOPA (Stop Online Piracy Act) எனும் சட்டத்தினை எதிர்த்து Demand Progress எனும் இயக்கத்தினை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டவர். கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் முக்கிய ஆர்வலர்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் சமூகவியல் படித்து விட்டு அங்கு அறிவுப்பூர்வமான சூழல் இல்லை என்று காரணம் கூறி விலகி கல்வியாளர்களை வியர்க்க வைத்தவர். பின்பு ஹார்வர்டில் ஒழுக்கவியல் குறித்தான ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். தமிழ் சினிமாவில் காதலர்களுக்கே யோசனை சொல்லும் குழந்தைகளுக்கு இணையாக கணிணித் தொழில்நுட்பத்தில் சிறு வயதிலேயே கோலோச்சிய ஆரொனின் சிந்தனையெல்லாம் இணையத்தில் தகவல்களை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதிலேயே இருந்தது. தன் 21வது வயதில் அமெரிக்க நீதிமன்றங்களின் வழக்கு விசாரணை ஆவணங்களை இணையத்தில் கட்டணச்சேவை மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்திருந்த PACER (Public Access to Court Electronic Records) என்னும் தளத்தின் வழங்கியில் தன் சொந்த செலவில் ஏறக்குறைய அனைத்து ஆவணங்களையும் தரவிறக்கம் செய்து இணையத்தில் இலவசமாக உலவ விட்டு உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர். இதுகுறித்து உள்ளூர் போலீஸ் முதல் FBI வரை விசாரணை செய்தும் முடிவில் குற்றம் சாட்ட சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டவர்.

இப்படி இணைய உலகின் அசகாயசூரனாக அனைவராலும் பார்க்கப்பட்ட ஆரொன், கடந்த ஜனவரி 11, 2013 அன்று புரூக்ளினில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, ஆரொன் குறித்து அறிந்தவர்களனைவருக்கும் பேரதிர்ச்சியையும், தாங்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது. கோபத்திற்குக் காரணம் தற்கொலைக்கு முன்பான 24 மாதங்களில் ஆரொனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆவணக் களஞ்சியமான JSTOR (Journal Storage) எனும் இணையத்தளத்தின் வழங்கியில் இருந்து எக்கச்சக்கமான ஆவணங்களைத் தரவிறக்கம் செய்தார் ஆரோன். இத்தளத்திலிருந்து எல்லோராலும் தரவிறக்கம் செய்து விட முடியாது. ஆனால் ஹார்வர்டின் ஆராய்ச்சி மாணவர் என்ற வகையில் ஆரொனுக்கு JSTOR தளத்தினைப் பார்வையிடவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் உரிமை இருந்தது. இது தவிர MIT (Massachusetts Institute of Technology) வளாகத்தினுள் இருக்கும் வலையமைப்பில் உங்களை விருந்தினராகப் பதிவு செய்து கொண்டாலும் JSTOR தளத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை யாரும் பதிவு செய்து கொள்ள முடியும்.


ஆரொன் MIT வளாகத்தினுள் ஒரு மடிக்கணிணியினை வைத்து விருந்தினராக அவர்களின் வலையமைப்பில் பதிவு செய்து, தான் எழுதிய ஒரு நிரல் மூலம் கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களையும் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட கணிணி மட்டும் ஏகப்பட்ட ஆவணங்களைத் தொடர்ந்து மேய்வதைக் கண்ட கண்காணிப்பாளர்கள் அந்த கணிணியின் MAC (Media Access Control) முகவரியினைத் தடை செய்தனர். வலையமைப்பின் பாதுகாப்பு சூட்சுமங்களை அறிந்த அன்பர்களுக்கு MAC முகவரியினை மாற்றுவதன்பது நம்மூரில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குப் போடுவதை விட எளிதானது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஆரொன் ஆவன செய்து தனது தரவிறக்க வேட்டையினைத் தொடர்ந்தார். JSTOR வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் இம்சை தொடர்வது கண்டு, இம்முறை எத்தடையினையும் உருவாக்காமல், அதன் மூலத்தை நோக்கி தங்கள் தேடல் குதிரையை முடுக்கி விட்டனர், அது சென்று சேர்ந்த இடம் ஆரொன். கையும், கணிணியுமாக மாட்டிக் கொண்ட ஆரொன், ஆவணங்களனைத்தையும் திரும்ப ஒப்படைத்து JSTOR உடனான பஞ்சாயத்தினை முடித்து கொண்டார். MIT இது குறித்து வாயே திறக்கவில்லை.

ஆனால் ஆரொனைத் தொடர்ந்து கண்காணித்து வந்த அமெரிக்க அரசாங்கம் இப்பிரச்சினையை விடுவதாக இல்லை. MAC முகவரியினை மாற்றியது, நிரல் மூலம் விதிமுறைக்குப் புறம்பாக ஆவணங்களைத் தரவிறக்கம் செய்தது, மற்றும் பலப்பல காரணங்களைக் கூறி ஆரொன் மேல் வழக்குத் தொடர்ந்தது. இன்று பிறந்த குழந்தையை, இது வளர்ந்து 25 வயதில் திருடுவதற்குத் தான் இது பிறந்திருக்கிறது என்று கூறி கைது செய்வது போல, தரவிறக்கம் செய்த ஆவணங்களை, மாட்டியிருக்காவிட்டால் அவற்றை இணையத்தில் உலவ விட்டிருப்பார் ஆரொன் என்பதும் அமெரிக்க அரசின் முக்கியக் குற்றச்சாட்டு.

MAC முகவரியினை மாற்றுவதென்பது அனேக இணைய வல்லுநர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று, ஆனால் சட்டப்படி அது ஆள்மாறாட்டம், தவறாக அடையாளப்படுத்தி ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்கு ஒப்பாகும் என்று ஒப்பாரி வைத்ததின் விளைவாக ஆரொனுக்கு சுமாராக 35 வருடங்கள் சிறையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமிருப்பதாக நீதிமன்றம் கூறியது, அதுவரை குற்றத்தினை ஒத்துக் கொள்ளாத ஆரொன், ஒப்புக் கொண்டால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தது. விசாரணை, வாய்தா என்று இவ்வளவும் நடந்து முடிய இரண்டு வருடங்கள் ஆனது, இதனால் தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலும், குற்றத்தினை ஒப்புக் கொள்ளாவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனை குறித்தான பயமும் ஆரொனை தூக்கில் தஞ்சமடைய வைத்து விட்டது.

மேலே ஆரொனின் மேல் சாட்டப்பட்டுள்ள அனைத்தும் கணிணி வலையமைப்புக் குறித்து அறிந்த, உணர்ச்சி வசப்படும் நபர்கள் அனைவரும் அவ்வப்போது செய்யும் செயல்கள். ஆனால் சட்டத்தின் படி உங்கள் வலையமைப்பில் உங்கள் அடையாளத்தினை வலையமைப்பு எண் மூலமாகவோ அல்லது MAC முகவரி மூலமாகவோ விதிமுறைகளை மீறி தரவிறக்கம் செய்வதை எந்த நாட்டிலும், எவரையும் ஆதாரமிருந்தால் தண்டிக்க முடியும். தினம், தினம் ராமசாமியும், கந்தசாமியும் இவற்றைச் செய்யும் பொழுது ஏன் ஆரொனை நோக்கி இப்படி கழுகெனப் பாய்ந்தது அமெரிக்க அரசு?. காரணம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ்.

ஜூலியன் அசான்ஞ்
Collateral Murder காணொளியினை விக்கிலீக்ஸ் தளத்திற்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் பிராட்லி மேனிங் விசாரணையின் போதும், சிறையிலும் நடத்தப்படும் விதம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார் ஆரொன். மேலும் இணையத்தில் கட்டற்ற தகவல் முறையினைத் தடுக்கும் சட்டமான SOPA வினை எதிர்த்து வெற்றி காண்பதில் ஆரொனுக்கு உறுதுணையாக இருந்தது அனானிமஸ் எனும் இணையப் போராளிகள் இயக்கம். இது இரண்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் ரேடார் பார்வையில் ஆரொனைக் கொண்டு வந்து நிறுத்தியது.

இணையத்தின் எதிர்காலத்தை ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவாலும், சமூகப் பார்வையாலும் நிர்ணயிக்கப்போகும் சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப் பட்ட ஆரொனின் மரணத்திற்குப் பிறகு, ஆரொன் எங்கள் நீண்ட கால நண்பர் என்றும், தாங்கள் வெளியிட்ட சில தகவல்களை அனுப்பியவர்கள் யார் என்பதற்கான ஆதாரமில்லையென்றாலும் ஆரொன் கொடுத்திருக்கலாம் என்று சேதாரமில்லாமல் தங்கள் தொடர்பினைத் தெரிவித்து விக்கிலீக்ஸ் அஞ்சலி தெரிவித்தது, 2010-2011 காலகட்டத்தில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசான்ஞ் உடன் நேரடித் தொடர்பில் ஆரொன் இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் தங்கள் நட்பினைக் கூறி அஞ்சலி செலுத்த, அதிரடி ஆட்டக்காரர்களான அனானிமஸ் குழு அஞ்சலி செய்த விதம் அமெரிக்க அரசை அலற விட்டது. சட்டத்தினையும், அதன் விளைவானத் தண்டனைகளையும் காட்டி, நெருக்கடியில் தள்ளி ஆரொனை தற்கொலைக்குத் தூண்டியதாக அமெரிக்க நீதித்துறையினை நேரடியாகக் குற்றம் சாட்டிய அனானிமஸ், அவர்களின் இணையத்தளங்களுள் ஒன்றான www.ussc.gov தளத்தினை ஹேக் செய்து, அதில் ஆரொனுக்கு அஞ்சலி செலுத்தும் வாசகங்களை  வலையேற்றினர். அதிர்ந்து போன அமெரிக்க அரசு, உடனே வலைத்தளத்தினை சரி செய்தது. அடுத்த சில நாட்களில் அதே தளத்தினை மீண்டும் ஹேக் செய்து தங்கள் வலிமையை உணர்த்திய அனானிமஸ், தளத்திற்கு வருபவர்கள் இன்புறும் வண்ணம் கணிணியில் குழந்தைகள் விளையாடும் ஒரு விளையாட்டினையும் வலையேற்றி அமெரிக்க அரசிற்கு வெறியேற்றியது. மேலும் வழங்கியில் இருந்த அனைத்து குறியீடாக்கப்பட்ட ஆவணங்களனைத்தையும் (encrypted files) இணையத்தில் விநியோகித்தது. ஆரொனின் தற்கொலைக்குக் காரணமான இணையக் குற்றங்களுக்கானக் கடும் சட்டங்களை மாற்றியமைக்கா விட்டால் விநியோகிக்கப்பட்ட ஆவணங்களை அனைவரும் படிக்கும் வண்ணம் அவற்றுக்கான குறியீட்டுச் சொற்களை வெளியிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

அமெரிக்காவின் போர்முறைகளில் ஒன்றாக இணைய யுத்தம் (Cyber warfare) மாறி பலகாலமாகிவிட்ட சமயத்தில், உலக நாடுகளில் தங்கள் வலையமைப்பின் பாதுகாப்புக்காக அதிகம் செலவு செய்யும் நாடான அமெரிக்காவிற்கு அனானிமஸின் வலைத்தளத் தாக்குதல் வரலாற்றில் மறைக்க முடியாத வடு. இச்சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 2500க்கும் மேலான வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக அறிவித்திருப்பதின் மூலம் இச்சம்பவத்தின் ஆழத்தினை புரிந்து கொள்ளலாம். அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் கணிசமான அளவினை முழுங்கும் அளவிற்கு வலையமைப்பின் பாதுகாப்பிற்கு எப்படி செலவு செய்கிறார்கள், அப்படி என்ன தான் ஒன்றுக்கு பத்தாய் பூட்டுகள் போட்டாலும் அதனை போகிற போக்கில் போட்டுத்தள்ளும் இந்த அனானிமஸ் குழுவினரின் வலிமையின் ரகசியம் என்ன, அவர்கள் யார், அவர்களின் வீரதீர சாகசங்கள், சத்தமில்லாமல் திரைமறைவில் நடக்கும் இணைய யுத்தங்களின் கருப்புப் பக்கங்கள், அவற்றுக்கு பலியான ஆரொன் போன்றவர்கள், இவற்றின் மூலம் இணையமென்னும் ரத்த பூமியில், பஞ்சு மிட்டாயும், குருவி ரொட்டியும் தேடி மனம் போன போக்கில் பின் விளைவுகள் குறித்து அறியாமல் அலைந்து திரியும் சாமனியர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன...?.. அடுத்த பகுதியில்..


www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து....