Wednesday, November 25, 2009

யு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி?


இணையப் பயன்பாட்டில் காணொளிகள் பயன்படுத்தப்படும் இடமெல்லாம் பெரும்பாலும் யு-டியூப் பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. யு-டியூப் போலவே வேறு சில இணையத் தளங்கள் இருந்தாலும் பயனாளர் எண்ணிக்கையில் யு-டியூப் ஒரு கடல். அதனால் காணொளி முத்துக் குளிக்க ஏற்ற இடமாகிவிட்டது யு-டியூப். யு-டியூப்பில் காணொளியை வலையேற்றி விட்டால் அதை நம் இணையப் பக்கங்களில் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும் (embedding) என்பது கூடுதல் சிறப்பு.



பிட்டுப் படங்கள் முதல் புட்டு செய்வது வரை, சுவற்றில் ஆணியடிப்பது எப்படி என்பது முதல் ஐ-போனை எப்படி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுவது என்பது வரை யு-டியூப்பில் காணொளியின் வகைகள் ஏராளம் ஏராளம். எப்போதும் யு-டியூப்பில் இருக்கும் காணொளிகளைக் கண்டு ரசிக்கும் நமக்கு சில நேரங்களில் நம்மிடம் இருக்கும் காணொளிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சூழ்நிலைகளும் நேரலாம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி வலையேற்றுவது என்பதை இப்பதிவில் காண்போம்.

முதலில் யு-டியூப் பயனாளர் கணக்கு வேண்டும். கூகுள் பெற்றுப்போட்ட அல்லது தத்தெடுக்கப்பட்ட வதவத குட்டிகளில் யு-டியூப்பும் ஒன்றென்பதால் கூகுள் பயனாளர் கணக்கு இருந்தால் யு-டியூப்புக்கு அது செல்லுபடியாகும். அப்படி கூகுள் கணக்கு இல்லாதவர்கள் www.youtube.com சென்று புதிய பயனாளர் கணக்கு ஒன்றை துவக்கிக் கொள்ள வேண்டியது. அடுத்து வலையேற்றம் செய்ய வேண்டிய காணொளி கோப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யு-டியூப் சில வரைமுறைகளை வைத்துள்ளது. அவற்றிற்கு ஏற்றாற் போல் நம் காணொளிக் கோப்பு வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும். அதன்பின் நாம் வலையேற்றம் செய்யும் கோப்பினை யு-டியூப் FLV கோப்பு வடிவத்திற்கு மாற்றி நம் பயன்பாட்டுக்கு வழங்கும்.

சரி, அந்த வரைமுறைகள் என்னென்ன?. காணொளிக் கோப்பு avi, mp4, wmv, mov போன்றவற்றுள் ஏதேனும் ஒரு கோப்பு வடிவத்தில் இருக்க வேண்டும். காணொளியின் நீளம் பத்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். காணோளியின் ஒளித்தரம் (resolution) 1280 x 720 வரை இருக்கலாம். இவற்றுள் avi அல்லது mp4 கோப்பு வடிவங்களும், ஒளித்தரம் 320 x 240ம், நீளம் 10 நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்குமாறு காணொளியினை வழங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் காணொளியின் கோப்பு அளவு (file size) கட்டுக்குள் இருக்கும், அதனால் வலையேற்றம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காமல் எளிதாக இருக்கும். இவற்றை எவ்வாறு செய்வது?. இருக்கவே இருக்கிறது இலவச மென்பொருட்கள்.



Any video Converter (avc) என்ற மென்பொருள் இலவசமாக கீழ்காணும் சுட்டியில் கிடைக்கிறது. இதுபோல் இன்னும் பல மென்பொருட்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. கூகுளாடி விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின் ADD VIDEO என்ற பொத்தானை சொடுக்கி உங்கள் கணினியிலோ அலல்து குறிந்தகட்டிலோ இருக்கும் காணொளிக் கோப்பினை உள்ளிடுங்கள். பின்னர் காணொளியின் எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்பதை நேரத்தினாலோ அல்லது scroll bar உதவியுடனோ தெரிவிக்க வேண்டும். அதன்பின் எந்த வடிவத்திற்கு கோப்பினை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உள்ளிடுங்கள். இங்கு உதாரணத்திற்கு mp4 வடிவத்திற்கு எவ்வாறு avc மென்பொருளில் உள்ளீடுகள் இருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டுள்ளது (பார்க்க படம் - க்ளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்).

தரவிறக்கச் சுட்டி:


மாற்றியமைக்கப்பட்ட காணொளிக் கோப்பு இயல்பாக My documents-AnyVideoConverter-mp4 என்ற இடத்தில் இருக்கும். அல்லது மென்பொருளில் நீங்கள் எந்த இடத்தில் சேமிக்கச் சொல்லி உள்ளிடுகின்றீர்களோ அங்கு சேமிக்கப் படும். அவ்வளவு தான், உங்கள் காணொளி வலையேற்றத்திற்கு தயார். யு-டியூப் வலைத்தளத்திற்கு சென்று மேலே வலதுபுற மூலையில் இருக்கும் upload என்ற பொத்தானை அமுக்கி உங்கள் காணொளிக் கோப்பை வலையேற்றம் செய்ய வேண்டியது தான்.

உங்கள் இனிய யு-டியூப் அனுபவத்திற்கு சுடுதண்ணியின் வாழ்த்துக்கள் !

Tuesday, November 24, 2009

மெமரி டிஸ்க் அபாயங்கள் - 2 (முற்றும்)

அழிக்கப்பட்டக் கோப்புக்களை மீட்டெடுக்க மெமரி டிஸ்க்கின் கோப்பு அட்டவணையை மாற்றியெழுதினால் போதும் என்று அறிந்து கொண்டோம். அதைச் செய்வதற்கு ஏராளமான இலவச மென்பொருட்கள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. கூகுளில் வலை வீசி உங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அவற்றுள் Recuva வும் ஒன்று. கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிக்கு சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி பின் நிரலை இயக்கி, என்ன வகையான கோப்புகளை மீட்டெடுக்க வேண்டும், எந்த இடத்தில் தேட வேண்டும் போன்ற தகவல்களை உள்ளிட்டு விட்டு இசையருவியில் ஒரு பாடல் கேட்டுவிட்டு வந்தால் உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கப்பட்டு உங்களுக்காகக் காத்திருக்கும்.


தரவிறக்கச் சுட்டி:


Recuva போன்ற ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் வகை வகையாக கொட்டிக் கிடைப்பதால் யார் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம். இது ஒரு வகையில் வசதியாக இருந்தாலும் அதுவே தான் கோப்புகள் கைமாறும் அபாயத்தை அதிகப்படுத்துகிறது. குறைந்த பட்சம் ஒரு 15 நிமிடத்தில் உங்கள் மெமரி டிஸ்க்கில் இருப்பதை லவட்டி விடலாம். எனவே வேறொருவரிடம் உங்கள் மெமரி டிஸ்க்கினைக் கையளித்தால் உச்சா கூடப் போகாமல் கூடவே இருந்து வேலை முடிந்து திரும்பப் பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப் படுகிறது.


இதலிருந்து தப்பிக்க மாற்றுவழியே இல்லையா?. உண்டு, உங்கள் கோப்புகளை வெறும் கோப்பு அட்டவணையில் அழிக்கப்பட்டதாக பதியாமல் உண்மையிலேயே உங்கள் மெமரி டிஸ்க்கிலிருந்து அழிப்பது தான் ஒரே வழி. அதை எப்படி செய்வது? அதற்கும் பல இலவச மென்பொருட்கள் உள்ளன உ.தா. Disk Redactor. இந்த மென்பொருட்கள் முழுமையாக உங்கள் கோப்புக்களை நீக்கி விடும். இயற்கையாகவே கோப்புகள் முழுமையாக நீங்கவும் வாய்ப்பு உண்டு. உங்கள் மெமரி டிஸ்க் கோப்புகளால் முழுமையாக நிறைக்கப்படும்போது அல்லது Disk Defragment செய்யும் போதும் சில/பல கோப்புக்கள் முழுமையாக நீங்க வாய்ப்புள்ளது.


தரவிறக்கச்சுட்டி: http://www.cezeo.com/downloads/disk-redactor.exe

உங்கள் கோப்புக்களை பத்திரமாக வைத்துக் கொள்ள மெமரி டிஸ்க்கினை யாரிடமும் பகிர்ந்து கொள்வதோ, கோப்புக்களை முழுமையாக அழிக்காமல் மெமரி டிஸ்க்குகளை மற்றவருக்கு விற்பதோ, செல்பேசிகளை மெமரியுடன் பழுது பார்க்க கொடுப்பதையோ தவிர்த்தல் நலம் . அவ்வாறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் Disk Redactor போன்ற மென்பொருள் துணை கொண்டு முழுமையாகக் கோப்புகளை நீக்கிய பின்பே கொடுக்கவும். வந்த பின் நொந்து கொள்வதை விட மிகவும் அந்தரங்கமான கோப்புகளைக் கவனமாகக் கையாள்வதே புத்திசாலித்தனம் என்ற கருத்தினைக் கூறி இத்தொடர் முற்றுப் பெறுகிறது.


Monday, November 23, 2009

மெமரி டிஸ்க் அபாயங்கள் - 1

இங்கு மெமரி டிஸ்க் என்று குறிப்பிடுவது உங்கள் செல்பேசியின் மெமரி, கணினியின் ஹார்ட் டிஸ்க், மினி, மைக்ரோ மெமரிக் கார்டுகள், பென் டிரைவ் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாம் உருவாக்கும் அல்லது பரிமாறிக் கொள்ளும் தகவல்களை இலகுவாக சேமித்து வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் உபயோகப்படுத்தி கொள்ள ஏதுவாக இருக்கும் இந்த அற்புதப் பொருளில் சில அபாயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன, எப்படி சாத்தியம், செய்முறை மற்றும் தவிர்க்கும் முறைகள் குறித்து இத்தொடரில் காண்போம்.

மெமரி டிஸ்க்குகளில் சேமித்து வைக்கும் தகவல்களில் கிளுகிளுப்பான விஷயங்கள், வேலை சம்பந்தப்பட்ட ரகசியங்கள், உங்கள் பிரத்யேக தகவல்கள், படங்கள், வீடியோக்கள் இப்படி பயன்படுத்துபவரின் வயதிற்கேற்ப மாறுபடும். இவற்றில் சில தகவல்கள் நீங்கள் எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாததாக இருக்கும். உங்கள் மெமரி டிஸ்க்குகள் விற்பனை மூலமோ, அவசரத்திற்கு ஓசி கொடுக்கும் போதோ அல்லது பழுதுபார்க்கவோ கைமாறும் போது அழிக்கப்பட்டக் கோப்புகளும் சேர்ந்து கைமாற அதிக வாய்ப்பிருக்கிறது. சமீபத்தில் "கருவறையில் பஜனை " என்ற படம் மொபைல் போன் பழுதுபார்க்கப் போய் அதிலுள்ள மெமரி கார்டில் இருந்து சுடப்பட்டு அனைத்து ஊடகங்களிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரபல விரல் நடிகரின் துபாய் கும்மிகள் சில காலம் முன்பு இணையத்தில் சக்கைப் போடு போட்டதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். இவையெல்லாம் எப்படி நடக்கிறது?.

அதைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் கோப்புகள் மெமரி டிஸ்க்குகளில் எப்படி சேமிக்கப் படுகிறது, அவற்றை நாம் அழிக்கும் போது நம் கண்களுக்கு அழிக்கப்பட்டதாகத் தோன்றினாலும் அழிக்கப் பட்ட தகவல்களின் உண்மை நிலை என்ன.. போன்ற விஷயங்களை அறிந்து கொள்வோம். மெமரி டிஸ்க்குகள் அவற்றின் சேமிப்பு அளவிற்கேற்ப சில,பல பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன (memory blocks). ஓவ்வொரு பகுதிக்கும் ஒரு குறியீட்டு பெயர் இருக்கும்.

தகவல்களை சேமிக்கும் போது முதலில் உங்கள் கோப்பின் அளவு கணக்கிடப்படும். பின்னர் அந்த அளவினை சேமிக்குமளவிற்கு இடமுள்ள ஒரு பகுதியிலோ அல்லது பல பகுதிகளிலோ சேமிக்கப் படும். இவ்வாறு பல நூறு கோப்புகள் சேமிக்கப்படும் பொழுது மீண்டும் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் போது எவ்வாறு கோப்புகள் கண்டுபிடிக்கப் படுகின்றன?. ஓவ்வொரு மெமரி டிஸ்க்கில் கோப்பு அட்டவணை ஒன்று இருக்கும். ஓவ்வொரு கோப்பும் எந்தெந்த பகுதிகளில்சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் அந்த அட்டவணையில் இருக்கும். அவற்றைப் பயன்படுத்தியே கோப்புகள் மீளவும் உபயோகத்திற்கு கண்டுபிடித்துத் தரப்படுகின்றன.

கோப்புகளை அழிக்கும் போது என்ன நடக்கும்?. கோப்புகளை அழிக்கும் போது அந்த கோப்புகள் அழிக்கப்படுவதில்லை, மாறாக மெமரி டிஸ்க்கின் கோப்பு அட்டவணையில் அந்த கோப்பு அழிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படும். அதனால் கோப்புகள் உங்கள் பார்வைக்கு காட்டப்படாது. சரி எப்பொழுது உண்மையாகவே கோப்புகள் அழிக்கப்படுகின்றன. மெமரி டிஸ்க்கில் மேலும் சேமிக்க இடம் இல்லாத போது அழிக்கப்பட்டதாக கோப்பு அட்டவணையில் பதியப்பட்டுள்ள் பகுதிகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும், அப்பொழுது தான் கோப்புகள் முழுமையாக அழிக்கப்படும்.

எனவே மெமரி டிஸ்க்கின் அளவை நாம் பயன்படுத்தும் தன்மைக்கேற்ப அழிக்கப் பட்ட கோப்புகள் உங்கள் மெமரி டிஸ்க்கிலேயே இருக்கும். அவற்றை எப்படி திரும்ப பெறுவது?. கோப்பு அட்டவணையில் அழிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட தகவலை, உபயோகத்தில் இருப்பதாக மாற்றியெழுதினால் கோப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறும். இதை செய்வதற்கு ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. அவற்றின் மூலம் அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் பெறலாம்.

அந்த மென்பொருட்களைப் பயன்படுத்தி எப்படி அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் பெறுவது, மீண்டும் பெற முடியாத அளவுக்கு எப்படி கோப்புகளை அழிப்பது, மெமரி டிஸ்க்குகள் கைமாறும் போது தவறாமல் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் என்னென்ன.. இவை குறித்து அடுத்த பகுதியில்.

Tuesday, November 17, 2009

ஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா ?


எல்லாவற்றுக்கும் ஓர் அற்புத நிவாரணம் தான் ஆட்டுக்கால் சூப். மூட்டு வலி இருக்கும் மூத்த பதிவர்களுக்கும், எலும்புகள் வளரும் பருவத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் கூட மிக அருமையான உணவு.

ஆட்டுக்கால் சூப் எப்படி வைப்பது, என்னென்ன தேவை.. நல்ல மழை அல்லது குளிர் நாளாக இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில் சூடான ஆட்டுக்கால் சூப்பை ஜன்னலோரமோ அல்லது பால்கனியிலோ நின்று க்ளென்ஃபெடிச் விஸ்கியுடன் சோடா சேர்த்து அருந்துவதைப் போல் சிறிது சிறிதாக அருந்தினால் மனம் ஒருநிலைப்பட்ட தவநிலையை அடையலாம் :D.



நாலு ஆட்டுக்கால், ரெண்டு பெரிய வெங்காயம், ரெண்டு தக்காளி, கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு மற்றும் சீரகத்தூள் இதெல்லாம் இருந்தால் நீங்கள் சூப் வைக்க ஆரம்பிக்கலாம். முதலில் ஆட்டுக்காலை சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டி, நன்கு சுத்தப்படுத்திவிட்டு, நன்கு வேகவைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் முறையே போட்டு வதக்கவும்.

வேகவைத்த ஆட்டுக்காலை அப்படியே அந்த பாத்திரத்தில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை தங்கள் நாக்கின் நீளத்திற்கேற்ப போட்டு நன்கு கிளறி விடவும். அதன் பின் 5 குவளை தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் ஆட்டுக்கால் சூப் ரெடி. உப்பு சேர்க்கும் போது கவனமாக சேர்க்கவும். உப்பு கூடினால் தண்ணீரும், தண்ணீர் கூடினால் உப்பையும் மாற்றி மாற்றி சேர்த்து சமன்படுத்திக் கொள்ளலாம். இடையிடையே கரண்டியில் கொஞ்சம் எடுத்து சுவையைச் சரி பார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது.

தொடர்ந்து கணினியில் இருப்பவர்களுக்கு மணிக்கட்டிலும், கால் மூட்டிலும் வலியிருந்தால் வாரம் ஒருமுறை ஆட்டுக்கால் சூப் குடித்து நிவாரணம் பெறலாம். வார இறுதியில் விருந்துகளுக்கு செல்பவர்கள், செல்லுமுன் சூப் தயார் செய்து வைத்து விட்டுப்போனால் மறுநாள் காலையில் சுடவைத்து இரண்டு லார்ஜுகள் சூப் குடித்தால் ஹாங்க் ஓவரிலிருந்து உடனடி விடுதலைக்கு உத்தரவாதம்.

வாழ்க ஆட்டுக்கால் சூப்புடன்!!!

பி.கு: படங்கள் சுடுதண்ணியின் பிரத்யேக தயாரிப்பு :)

Thursday, November 12, 2009

இணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 2 (முற்றும்)



ஒரு சுபயோக சுபதினத்தில் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. 'வாலிப வயோதிக ஜிமெயில் வாடிக்கையாளர்களே, எங்கள் சேவையைப் பயன்படுத்துவதற்கு மேலான நன்றிகள். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நமக்கு நாமே விருது கெடுக்கும் :D திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஒரு விருது கிடைச்சிருக்கு. உடனே கீழ்காணும் சுட்டியை சொடுக்கிப் பெற்றுக் கொள்ளவும்.


நன்றி வணக்கம்' அப்படின்னு. பார்த்த உடனே சுட்டியைத் தொடர்ந்து போனீங்கன்னா உங்களோட பயனாளர் பெயரையும், கடவுச்சொல்லையும் உள்ளிடச் சொல்வார்கள். நீங்கள் அப்படிச் செய்ததும் உங்களின் உள்ளீடுகள் பிஷ்ஷிங் செய்பவர்கள் வசமாகிவிடும். உங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்களுக்குத் தெரியாமலே மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படலாம். உங்கள் வசதிக்காக வங்கிக்கணக்கு விவரங்கள், கடன் அட்டை விவரங்கள் அல்லது வேறேதேனும் அந்தரங்கத் தகவல்களை உங்கள் மின்னஞ்சலில் சேமித்து வைத்திருந்தால் அவை கபளீகரம் செய்யப்படலாம். அல்லது மொத்தமாக கடவுச்சொல் மாற்றப்பட்டு, அடுத்த முறை நீங்கள் உங்கள் மின்னஞ்சலுக்குள் நுழைய முற்படும் போது "The username or password you entered is incorrect" என்று சங்கு முழக்கப்படலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் (http://www.gmail.com) அப்படி என்ன சூட்சுமம் இருக்கிறது. அந்த இணைய முகவரி சரிதானே என்று உங்களுக்குத் தோன்றும். அப்படிச் சுட்டியினைச் சொடுக்கினால் தோன்றும் வலைப்பக்கம் கூட நீங்கள் வழக்கமாகக் காணும் பக்கத்தைப் போலவே இருக்கும் (சுட்டியைச் சொடுக்கி பாருங்கள்). உங்களுக்கு இணைய முகவரியாய்த் தெரிவது வெறும் எழுத்துக்களே, அவற்றுக்குள் வேறு தளத்தின் உரல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. (உ.தா < href ="">http://sites.google.com/site/suduthanni/phish"> http://www.gmail.com < / a > ). இதை எப்படி இனங்கண்டு கொள்வது?. நீங்கள் இணையத்தில் வலம் வரும்போது நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது நீங்கள் காணும் வலைப்பக்கத்தின் தகவல்களில் கிடையாது. அது உங்களின் உலாவியின் முகவரிப்பட்டையில் இருக்கும் உரலில் தான் இருக்கிறது (URL displayed at the address box of the browser). வலைப்பக்கத்தில் இருக்கும் தகவல்கள் ICICI வங்கியின் இணைய தளத்தின் தகவல்களை ஒத்திருந்தாலும் நீங்கள் இருக்கும் தளம் பிஷ்ஷிங் செய்பவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம்.

எனவே பிரத்யேக விவரங்கள், அல்லது வங்கிக்கணக்குகளுக்காக இணையத்தை பயன்படுத்தும் போது, விவரங்களை உள்ளிடும் முன்பு உங்கள் முகவரிப் பட்டையிலிருக்கும் உரலை ஒருமுறை சரிபார்ப்பது சாலச் சிறந்தது. பெரும்பாலும் மின்னஞ்சல்களிலோ அல்லது உடன் தகவல் சேவைப் மென்பொருட்கள் மூலமாகவோ (messengers) உரல்கள்/சுட்டிகளைப் பின்பற்றி இணைய தளங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் நலம். அப்படிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டாலும் எந்தத் பிரத்யேகத் தகவல்களையும் வழங்காதீர்கள்.

இதைத் தடுப்பதற்கு என்னனென்ன வழிகள் உள்ளன. Anti Phishing Filters இருக்கின்றன, இவை நீங்கள் காணும் உரல்களையெல்லாம் சலித்துச் சரிபார்த்துக் கொடுக்கும். எப்படி சரி பார்க்கிறது?.

< href =" ">http://sites.google.com/site/suduthanni/phish"> http://www.gmail.com < / a >

மேலே உள்ளது HTML மூலம் உரல்களை வழங்கப் பின்பற்றப்படும் ஒரு முறை. மேலே உள்ளதை நீங்கள் உலாவியின் வழியாகப் பார்க்கும் போது "http://www.gmail.com" என்பது மட்டுமே பார்வைக்குப் புலப்படும். அதைச் சொடுக்கினால் நீங்கள் அழைத்து செல்லப்படும் இடம் "href = "http://sites.google.com/site/suduthanni/phish". நீங்கள் பதிவுகள் போடும் போது சுட்டிகள் கொடுக்கும் வழக்கம் இருந்தால், பதிவிட்ட பின் "edit html' சென்று பார்த்தால் உங்களுக்கு விளங்கும். இந்த Anti Phishing filterகள் உலாவியில் நீங்கள் காணும் உரலும், அதன் பின்னுள்ள உரலும் ஒத்துப் போகின்றதா, அப்படி இல்லையெனில் அது அழைத்துச் செல்லப் போகும் வலைப்பக்கத்தின் பின்ணனியில் ஏதேனும் வில்லங்கமான நிரல்கள் இருக்கிறதா என்றெல்லாம் சோதித்துப் பார்த்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.

பிஷ்ஷிங் தூண்டில்கள் இப்பொழுது குறுந்தகவல்கள் மற்றும் தொலைபேசி மூலம் கூட வீசப்படுகின்றன. குறுந்தகவல்களில் உரல்களோ அல்லது உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு உடனே தொடர்பு கொள்ளும்படியோ தகவல் வரும். உங்களுக்கு உங்கள் வங்கியின் சேவை மையத் தொலைபேசி எண் முன்பே தெரிந்திருந்தால் சரிபார்த்து, ஒரே எண்ணாக இருந்தால் மட்டுமே தொடர்பு கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. இல்லையேல் உள்ளூர் எண்ணைப்போல் தோன்றும் அந்த எண்களுக்கு தொடர்பு கொண்டால் call divert செய்யப்பட்டு நீங்கள் பிஷ்ஷிங் செய்பவர்களுடன் கடலை போட்டுக் கொண்டிருக்கும் நிலை வரலாம். தேன் குரலில் உங்கள் வங்கிக் கணக்கின் கடவுச்சொற்களையோ அல்லது கடன் அட்டை விவரங்களையோ உருவிட வாய்ப்புகள் அதிகமுள்ளது.

பிஷ்ஷிங் தொல்லைகள் அதிகமான பிறகு அனேக வங்கிகள் இப்பொழுதெல்லாம் எந்த வழியிலும் வாடிக்கையாளர்களுக்கு உரல்களை அனுப்புவதை நிறுத்தி விட்டன. தேவையிருப்பின் உங்கள் உலாவியில் தங்கள் இணைய முகவரியை உங்கள் கையாலேயே உள்ளிடச் சொல்லியே வரச்சொல்கின்றன. சில திரட்டிகளில் கூட (உ.தா: தமிழ்மணம்) பதிவுகளுக்கு முதன்முறை வாக்களிக்கும் போது உங்களின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதப்படுத்த உங்களின் open idயின் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை வழங்கச் சொல்கிறார்கள். வாக்களிக்கும் பொத்தானில் தவறான உரலிட்டு, உங்களை வேறுஇடத்திற்கு அழைத்துச் சென்று உங்கள் open id கணக்கைச் சுருட்டக் கூட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அது போன்ற சந்தர்ப்பங்களில் உலாவியின் முகவரிப்பட்டையை ஒருமுறை சரிபார்த்துக்கொள்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. இந்த தருணத்தில் 'சுடுதண்ணி மீன்பிடிப்பதில்லை,, எனவே தயங்காமல் வாக்களிக்கலாம்' என்ற பிட்டைப் போட்டுக்கொள்வதில் கம்பெனி பெருமகிழ்ச்சி கொள்கிறது :).

இப்பதிவின் மூலம் அறியப்படும் இன்றைய தத்துவம் என்னன்னா, நாமெல்லாம் இணையம் என்கிற தூண்டிகள் நிறைந்த கடலில் பயணிக்கும் மீன்கள். கவனமாக நீந்தவும்.

Wednesday, November 11, 2009

இணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 1


இணையத்திலும் மீனவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இவர்கள் தமிழக மீனவர்கள் போல் யாராலும் தாக்கப்படுவதில்லை. இவர்கள் தான் மற்றவர்களைத் தாக்குகிறார்கள், பிஷ்ஷிங் (Phishing not pissing :D) மூல்மாக. இப்பதிவுல பிஷ்ஷிங்னா என்ன, ஏன், எதற்கு, எப்படி எல்லாத்தையும் பார்க்கப் போறோம்.

பிஷ்ஷிங் - கிட்டத்தட்ட மீன் பிடிக்கிற மாதிரி தான். உதாரணத்துக்கு 'கல்லூரி சாலை' திரைப்படத்துல வடிவேலு சில்லறைக் காசுகளைத் தூவி விட்டு, அதைக் குனிந்து எடுக்க வரும் பெண்களின் அந்தரங்கத்தை அளவெடுப்பாரே, அது தான் பிஷ்ஷிங். அதுல அந்த சில்லறைக் காசுகள் தான் நீங்கள் இணையத்திலோ, மின்னஞ்சலிலோ, உடன் தகவல் சேவை மென்பொருட்களிலோ (Instant messaging sevice - messgengers) கடந்து செல்லும் சுட்டிகள் அல்லது உரல்கள் (hyperlinks or urls). அதை இணையத்தில் குனிந்து எடுக்கும் மக்களெல்லாம் அழகான பெண்கள் (wow). அந்த உரல்களை உங்களுக்கு அனுப்புபவர்கள் அளவெடுக்கும் அந்தரங்கத் தகவல்கள், உங்களின் பயனாளர் பெயர் (username), கடவுச்சொல், கடன் அட்டைத் தகவல்கள் இப்படி ஏராளம் ஏராளம். அவற்றை எப்படி உபயோகிப்பார்கள் என்பது அவற்றைக் கையாளப்போகும் மீனவர்கள்/வடிவேல்களைப் பொருத்தது.

சரி, இது எப்படி ஆரம்பித்தது, இதன் வரலாறு என்ன?. கணினிகளை வலையமைத்துப் பயன்படுத்த காலத்திலேயே பிஷ்ஷிங் தொடங்கிவிட்டது. ஆனால் பெயரில்லாத ஒரு விஷயமாக இருந்தது. உதாரணத்துக்கு ஒரு கல்லூரியில் கணிப்பொறியியல் துறை மாணவர்களை ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்புக் கொடுத்து வகுப்பில் உரையாற்றச் சொன்னார்கள் (seminars). ஒரு மாணவனுக்கு வலையமைப்பில் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களும் அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகளும் அப்படின்னு தலைப்புக் கொடுத்தாங்க. ஒவ்வொருத்தரா தாங்கள் தலைப்பில் உரையாற்றினார்கள். நம்ம மாணவரோட முறை வந்தது. "எல்லாரும் அடிக்கடி கடவுச்சொல்லை மாற்றுங்க, கடவுச்சொல்லாக உங்களைப்பற்றி மற்றவருக்குத் தெரிந்த தகவல்களை வைக்காதீங்க (உ.தா சொந்த ஊர், பிறந்த நாள், தாய் தந்தை பெயர்..), கடவுச்சொல்லை எழுத்துக்களும் எண்களும் கொண்ட கலவையா வைங்க. இதெல்லாம் பின்பற்றுனா எல்லாம் பத்திரமா இருக்கும்னு நினைப்பீங்க. நம்ம கல்லூரில எல்லாருமே இதைப் பின்பற்றி வர்றோம், இருந்தாலும் பாதுகாப்புக் கிடையாது" அப்படின்னு மாணவர் சொன்னதும் எல்லாரும் எப்படி பாதுகாப்பில்லைன்னு சொல்றீங்கன்னு கேட்டாங்க. அதுக்கு அந்த மாணவர் வகுப்பிலிருந்த எல்லாருடைய பெயரையும் அகர வரிசையில எழுதி அவங்க கல்லூரிக் கணினி வலையமைப்பில் உள்ள அவங்களோட கடவுச்சொல்லையும் எழுத ஆரம்பித்ததும், வகுப்பே திகைப்பில் ஆழ்ந்தது.

பின்னர் இரண்டு நாள் விசாரணைக்குப்பின் அம்மாணவர் கல்லூரியிலிருந்து ஒரு வாரத்திற்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் எப்படி கடவுச்சொற்கள் கிடைத்தன? என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் தான் இப்போது பிரபலமாக இருக்கும் 'பிஷ்ஷிங்'. எப்படி?..ஒவ்வொரு மாணவரும் ஆய்வகத்தில் தங்கள் கல்லூரிக் கணினி வலையமைப்பில் நுழைவதற்கென்று ஒரு வலைப்பக்கம் இருக்கும். அதே போன்ற பக்கத்தை ஒரு நிரலைக் கொண்டு அச்சுஅசலாக இந்த மாணவரும் வடிவமைத்து நிறைய கணினிகளில் நிரலை இயக்கி விட்டுச் சென்று விடுவது வழக்கம். பின்னர் வரும் மாணவர்கள் கணினிகளில் அமரும் போது அது வழக்கமான நுழைவுப் பக்கம் என்று எண்ணி அவற்றில் உள்ளிடும் தகவல்களை சேமித்துக் கொண்டிருந்திருக்கிறார், ஆனால் அது தான் பிஷ்ஷிங் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

இப்படியும் பண்ண முடியும் என்பது இருபது வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்டிருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாகத்தான் பிஷ்ஷிங் மூலமாக இணையத்தில் கடுமையாக அறுவடை செய்யப்பட்டிடுக்கிறது. இவர்கள் பெரும்பாலும் குறிவைப்பது வங்கிக்கணக்குகளைத் தான்.

பிஷ்ஷிங்குகளை எப்படி இனம் காணுவது, அவற்றை எப்படி உருவாக்குகிறார்கள், அவற்றிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை அடுத்த பதிவில்....



Tuesday, November 10, 2009

நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள் -2 (முற்றும்)


ஒவ்வொரு விமானத்திற்கும் தனக்கென பிரத்யேகமாக அழைப்புக் குறியீடு (Call Sign - உ.தா. BAW10H) இருக்கும். இந்த அழைப்புக் குறியீடு, தான் தரையிறங்க வேண்டிய இடம், அவசர கால குறியீட்டு எண்கள் போன்றவற்றை வானலைகள் மூலம் ஒலிபரப்பி விமான நிலையத்தின் ரேடாருக்கு அனுப்பும் வேலையைச் செய்வது ACARS Aeronautic Communications and Reporting System. இதன் மூலம் தான் ஒரே விமானத்தை ஒவ்வொரு சுற்றிலும் மீண்டும் மீண்டும் பார்க்கும் போது ரேடார் அடையாளம் கண்டுகொள்கிறது.

இவற்றைத் தவிர விமானத்தில் அவசர காலத் தொடர்பிற்கு செய்மதி தொலைபேசி SATCOM (Satellite communications to a land based telephone system) , அருகிலிருக்கும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தைத் தொடர்பு கொள்ள மிக உயர்நிலை வானொலித் தகவல் தொடர்பு சாதனங்கள் (VHF Radios), வானில் சக விமானங்களோடு மோதிக் கொள்ளாமல் தவிர்க்க Traffic alert and Collision Avoidance System (TCAS) எனப்படும் சிறிய ரேடார் ஒன்றும் செயல்பாட்டில் இருக்கும்.

விமானிகள் விமானத்திலுள்ள ரேடியோ கருவிகள் மூலம் அருகாமையிலுள்ள விமானங்களுக்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்துக்கும் தொடர்பு கொண்டு பேச முடியும். இந்த உரையாடல்கள் அனைத்தும் மற்றும், விமானத்தின் உயரம், அகலாங்கு, நெட்டாங்கு, தட்பவெட்ப நிலை, அனைத்துக் கருவிகளின் இயங்குநிலை ஆகியவை cockpit voice recorder மற்றும் flight data recorder (famously referred as blackboxes which are either red or yellow in color) ஆகியவற்றில் பதிவாகிக் கொண்டே இருக்கும். அதேபோல ஒவ்வொரு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்திலும் அனைத்து அதிகாரிகளின் உரையாடல்களும் 24 மணி நேரமும் பதிவாகிக் கொண்டே இருக்கும், பணியில் தவறு செய்பவர்கள் தப்புவதற்கு வாய்ப்பே இல்லை.

Operational Control Program எனப்படும் மென்பொருளை உபயோகிக்கும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தாங்கள் விரும்பும் விமானங்களை தேர்வு செய்து கொண்டு வழிநடத்துவார்கள். ஒரு அதிகாரி தேர்வு செய்ததும், மற்றவர்களுக்கு அந்த விமானத்தை தேர்வு செய்த விபரம் கணினியில் தெரிவிக்கப்படும். ஒரு விமானத்தை ஒரே நேரத்தில் இருவர் தேர்வு செய்ய முடியாது. இவர்களுக்கு ஆங்கிலப் புலமை அத்தியாவசியம். விமானிகள் நமிதாவின் தமிழ் போன்ற ஆங்கிலத்தில் பேசினால் கூட புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர விமான நிலையம் இருக்கும் இடத்தின் பூர்வீக மொழி விமானி மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி இருவருக்கும் தெரிந்திருந்தால் பேச அனுமதியுண்டு.

கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் விமானிகளின் வேலைக்குத் தேவையான வசதிகளுக்கோ அல்லது கவனத்திற்கோ சிறு பாதிப்பு வந்தாலும் விளைவு, நூற்றுக்கணக்கான உயிர்கள். உதாரணத்திற்கு 1996ல் தில்லி விமான நிலையம் அருகே சவுதி அரேபியாவின் விமானமும், கசகசஸ்தான் விமானமும் நேருக்கு நேர் மோதி 300க்கும் மேற்பட்ட பயணிகள்,விமானிகள் என அனைவரும் மரணமடைந்தனர். பெரும்பாலும் விமானப் போக்குவரத்து ஒரளவுக்கு அதிகம் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்குவதற்கும், மேலெழும்புவதற்கு தனித்தனி வான்பகுதியை உபயோகப்படுத்துவர். இப்போதும் கூட சில சமயங்களில் விமானம் நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு எதிர் திசையில் மேலேழும்பி, குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் அப்படியே விமானம் திரும்பி பறப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் அப்பொதைய கால்கட்டத்தில் தில்லி விமான நிலையம் ஒரே ஒரு வான் பகுதியை தரையிறங்கவும், மேலெழும்பவும் பயன்படுத்தி வந்தது, காரணம் பெரும்பான்மையான வான்பகுதி விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் காரணத்தால் மேலெழும்பிய சவுதி அரேபிய விமானமும், தரையிறங்க வந்த கசகசஸ்தான் விமானமும் ஒரே வான் பகுதியில் சந்தித்து கொண்டன.

கட்டுப்பாட்டு அதிகாரிகள் இரண்டு விமானங்களும் 14 மைல்கள் தொலைவில் இருக்கும் போதே நிலைமையை உணர்ந்து இரண்டு விமானிகளுக்கும் தெரியப்படுத்தினார்கள். இதில் ச்வுதி அரேபிய விமானி எச்சரிக்கப்பட்டவுடன் தனது பறக்கும் உயரத்தைக் குறைத்தார், இருந்தாலும் ஆங்கிலம் புரியாத காரணத்தால் கசகச்ஸ்தான் விமானியும் உயரத்தைக் குறைக்க, கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குக் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போனது போல் தெரிந்தும் விபத்தைத் தடுக்க முடியாமல் போனது. எல்லாம் நடந்து முடிந்த பின்னர் இந்தியா வழக்கம் போல விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்து தில்லி விமான நிலையத்தை விரிவு படுத்தி ரேடார்களை நவீனப்படுத்தியது. ரேடார்களை நவீனப் படுத்தியதற்குக் காரணம் பொதுவாக ரேடாரில் Primary & Secondary என்னும் இரு ரேடார் கருவிகள் இருக்கும். இதில் secondary radar தான் விமானங்களின் உயரத்தை துல்லியமாகக் கணிக்கும். விபத்து நடந்த காலம் வரைக்கும் நம்து தில்லி விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வெறும் primary radar மட்டுமே வைத்துக் கொண்டு, எதிரே பெரிய லாரி வரும் போது "என்ன மஞ்சள் கலரு கொடியே புடிச்சிக்கிட்டு ஒரே கூட்டம் கூட்டமா போறாய்ங்கெ"ன்னு ஒரு குத்துமதிப்பாகவே தங்கள் வேலையைச் செய்தது விசாரணையில் அம்பலமாகி விபத்துக்கு அதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.



கடந்த இரண்டு பதிவுகளில் ஓரளவுக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் விடுபடாமல் சொல்லியிருக்கிறேன் என நம்புகிறேன். எனவே அடுத்த முறை விமானப்பயண்ம் போகும் போது என்ன விமானத்தில் பறக்க போகிறீர்கள், அந்த விமானத்தில என்னென்ன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன, ஏறும் மற்றும் இறங்கும் விமான நிலையங்களின் ரேடார் விபரங்கள், எத்தனை வான்பகுதிகள், ஓடுபாதைகள் உபயோக்கின்றார்கள் இப்படி பலதரப்பட்ட விவரங்களைத் திரட்டிக் கொண்டு மனதளவில் தயாராகப் பயணிக்கவும்.

தங்கள் எதிர்கால விமானப்பயணங்கள் அனைத்தும் இனிமையாக அமைய கம்பெனியின் வாழ்த்துக்கள்.


முற்றும்.



நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள் - 1


நீங்கள் ஓவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும், உங்கள் பயணத்தின் பாதுகாப்புக்காக தரையில் பல நூறு பேர் அதீத கவனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அன்றாட பணியில் ஒவ்வொரு நிமிடமும் கவனம் தப்பினால் மரணம் தான், இங்கு மரணம் என்பது பிரயாணிகளுக்கு. ஒவ்வொரு விமானத்தின் பாதுகாப்பான மேலெழும்புதலுக்கும், தரையிறங்குதலுக்கும் பின்னணியில் இவர்களின் உழைப்பிருக்கிறது. யார் அவர்கள், எப்படி இயங்குகிறார்கள், என்னென்ன கருவிகளை உபயோகிக்கிறார்கள், அவற்றின் தொழில்நுட்பம் முதலியவை குறித்து ஒரு பார்வை தான் இப்பதிவு.



முதலில் ரேடார் ( RADAR, Radio Detection And Ranging) தொழில்நுட்ப வல்லுநர்கள். வான் போக்குவரத்து நிலைமை மற்றும் மேககூட்டங்களின் அடர்த்தி குறித்து ரேடார் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள் உதவியுடன் நொடிக்கு நொடி ஒரு படம் போல் தருவித்து கொடுப்பவர்கள்.



அடுத்து அப்படத்தின் உதவியுடன் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள் வான்பரப்பில் எத்தனை விமானங்கள் ப்றந்து கொண்டிருக்கின்றன, எவையெல்லாம் தங்கள் வான்பரப்பைக் கடந்து வேறு இலக்குக்குப் பயணிக்கப் போகின்றன, எவையெல்லாம் தரையிறங்கப் போகின்றன, அவ்வாறு தரையிறங்கப் போகும் விமானங்களுக்கு ஓடுபாதையை ஒழுங்குபடுத்தி கொடுப்பது மற்றும் விமான நிலையத்தில் இருந்து வெளிக்கிளம்பும் விமானங்களுக்கு மேலெழும்பும் வண்ணம் அவர்களுக்கு ஓடுபாதை வழங்குவது என அனைத்து வேலைகளையும், நேரம் கடத்தாமல் செய்து முடிப்பவர்கள் 'வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்' (Air Traffic Control- ATC officers ).

விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறையாலோ, விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாலோ அல்லது சமீபத்தில் வாசிம் அக்ரமின் மனைவிக்கு விமானத்தில் பறக்கும் போது உடல்நிலைக் குறைவால் அவசர சிகிச்சைத் தேவைப்பட்டது போன்ற சூழ்நிலைகளிலோ விமானிகள் முதலில் தொடர்பு கொள்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தான். இது போன்ற அவசர கால சூழ்நிலைகளைத் தெரிவிப்பதற்கென்றே குறியீட்டு எண்கள் உள்ளன (emergency squawk code) விமானிகள் முதலில் இந்த குறியீட்டு எண்களைத் தெரிவித்ததுமே கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளைக் கையாள்வார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்கும் நிலப்பரப்பில் எல்லைகள் இருப்பது போல வான்பரப்பிலும் எல்லைகள் உண்டு. அவற்றுக்கு வரைபடங்களும் உண்டு, அதில் நிலவரைபடத்தில் உள்ளது போல ஓவ்வொரு இடங்களுக்கு பெயர்கள் உண்டு. பெரும்பாலும் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும் (Navigation Points), அந்த இடங்களை இணைக்கும் கோடுகள் தான் வான் வழிகள் (air routes). இந்த Navigation pointகளின் பெயர்களுக்கு நிலப்பரப்பில் இருக்கும் பெயர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இல்லாதிருக்கும், அவற்றைக் கடக்கும் விமானங்கள் இந்த கோடுகளிலேயே பயணிக்கும். உலக அளவில் இவற்றைக் கண்காணித்து நெறிப்படுத்தும் பணியினை மேற்கொள்ள International Air Transport Association (IATA) என்ற அமைப்பு உள்ளது. ஓவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள விமான நிலையங்களின் விபரங்கள் அவற்றின் குறியீட்டுப் பெயர்கள் (உ.தா. chennai - MAA) ம்ற்றும் தங்கள் வான்பரப்பின் வரைபடங்களை Navigation points & Air routes விபரங்களோடு IATA விடம் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியோடு அந்தந்த நாடுகளில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும்.


மேற்கூறிய அனைத்து விபரங்களையும் ஒன்றுபடுத்தி வான் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அடிப்படை ரேடார் மற்றும் வானில் உள்ள போக்குவரத்து நிலைகளைக் காட்சிப்படுத்தி தரும் சிறப்பு மென்பொருட்களைக் கொண்ட கணினிகளும் தான்.



சராசரியாக இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும். இவை விமான நிலையத்திற்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு கோபுரத்திற்கும் வெகு அருகில் நிறுவப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (வானூர்திகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது விமானங்களின் இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இத்தகவல்களனைத்தையும் ஒருங்கிணைத்துப் படமாகத் தருவது Operational Control Program எனப்படும் மென்பொருள். இந்த மென்பொருளில் குறிப்பிட்ட விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வான்பரப்பின் வரைபடம் (navigation points & air routes) , ஒடுபாதைகள், இடங்களின் பெயர்கள் ஆகியவை உள்ளிடப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தில் ரேடார் தரும் தகவல்களின் படி விமானங்கள் அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கில் பறந்து கொண்டிருப்பது போன்ற காட்சியினை அளிக்கும். இவற்றை மொத்தமாக பார்க்கும் காட்சி தான் மேலே உள்ள படம் (படத்தைக் க்ளிக்கி பெரிது படுத்திப் பார்த்தால் விமானங்களின் நகர்வுகளைக் காணலாம்).

ரேடார்கள் ஒவ்வொரு சுற்றிலும் எப்படி விமானங்களை ஏற்கனவே பார்த்த ஒன்றா இல்லை புதிதானதா என்று கண்டுகொள்கிறது, எப்படி விமானத்தின் அழைப்புக் குறியீடு போன்ற தகவல்களை அறிந்து கொள்கிறது?. கட்டுப்பாடு இல்லாத வான்பகுதியில் எப்படி விமானங்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றன? வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் , விமானிகளும் எவ்வாறு ஒரு புரிதலோடு தகவல் தகவல்தொடர்பு கொள்கிறார்கள் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Monday, November 9, 2009

குறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செய்வது எப்படி ?



ங்களிடம் இரண்டு கணினிகள் இருக்கின்றதா? கோப்பு பறிமாற்றத்திற்கு சிரமப்படுகிறீர்களா? உங்களுக்கான தீர்வைக் குறைந்த செலவில் எப்படி அடைவது என்று காண்போம்.

இரண்டு கணினிகளும் மடிக்கணினிகளாகவோ அல்லது மேசைக்கணினிகளாகவோ அல்லது ஒன்று இதுவும், மற்றது அதுவுமாகவோ இருக்கலாம். ஆனால் எண்ணிக்கை இரண்டு மட்டுமே இத்தீர்வில் சாத்தியம். switch/hub போன்ற உபகரணங்கள் தேவையில்லை, எனவே வீண் செலவின்றி இரண்டு கணினிகளுக்கு இடையே வலையமைப்பு செய்யலாம்.

தேவையான பொருட்கள் :



குறுக்கிணைக்கப்பட்ட CAT5 வடம் (நீளம் தேவைக்கேற்ப), Windows XP நிறுவப்பட்ட இரண்டு கணினிகள் (available with Network Card) :D.

குறுக்கிணைக்கப்பட்ட CAT5 வடம் (crosswired cat5 cable with rj45 Jack) என்று கேட்டு தேவைக்கேற்ற நீளத்தில் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். ரொம்ப பொழுதுபோகாமல் இருந்தால் சொந்தமாக நாமே கூட தயார் செய்து கொள்ளலாம். தெரிந்து கொள்ள விரும்புவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தனிப்பதிவாக வ்ழங்கப்படும்.




முதல் கணினியில் control panel -> network connections என்ற இடத்திற்கு செல்லவும். அங்கு Local Area Connection என்ற நிரலை வலது பக்கமாக சொடுக்கி, properties என்ற வசதியைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்துத் தோன்றும் படிவத்தில் 'Internet Protocol (TCP/IP)' என்பதனை தேர்வு செய்து விட்டு 'Properties' என்ற பொத்தானை அமுக்கவும்.



பின் IP Address :192.168.1.2, Subnet mask: 255.255.255.0, Default Gateway : 192.168.1.1 என உள்ளிடுகளை வழங்கவும். மேலும் விபரங்களுக்குப் படங்களை சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.

அதே செயல்களை அடுத்த கணினியிலும் அச்சுப் பிசகாமல் செய்யவும், கடைசியில் கொடுக்கும் உள்ளிடுகளைத் தவிர. இரண்டாவது கணினியில் IP Address :192.168.1.3, Subnet mask: 255.255.255.0, Default Gateway : 192.168.1.1 என்று வழங்கவும்.

பின்னர் தயாராக இருக்கும் CAT5 வடத்தை உபயோகித்து இரண்டு கணினிகளின் 'Network Card' மூலம் இணைக்கவும்.

எல்லாம் தயார். இனி எந்த ஒரு கணினியிலும் தேவையான தொகுப்பை (directory) வலதுபுறம் சொடுக்கினால் பகிர்ந்து அளிக்கும் வசதி உள்ளது (sharing). அதனைப் ப்யன்படுத்தி கோப்புக்களைப் பறிமாற்றம் செய்து கொள்ளலாம்.

முற்றும்.

Sunday, November 8, 2009

இணையத்தில் ரகசியத் தகவல் / ஸ்டெகனோக்ராபி - ஓர் அறிமுகம் - 2 (முற்றும்)





தேவையான பொருட்கள்:

ஸ்டெகனோக்ராபி மென்பொருள், உங்கள் ரகசியத் தகவலை நோட்பேட் (notepad) நிரலைப் பயன்படுத்தி ஒரு TXT கோப்பில் சேமித்து வைத்துக் கொள்ளவும் (உ.தா: msg.txt). அடுத்து மேலே உள்ள நமிதா படத்தை உங்கள் கணினியில் சேமித்து, பின் பெயிண்ட் மென்பொருளில் திற்க்கவும். பின் File->Save as சென்று BMP அமைப்பில் சேமித்து கொள்ளவும் (உ.தா. namitha.bmp).





நீங்கள் மேலே உள்ள சுட்டியில் இருக்கும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்தால் zip வடிவில் கிடைக்கும் கோப்பை winzip/winrar மென்பொருள் மூலம் தொகுப்பில் சேமிக்கவும் (extract). பின் அத்தொகுப்பில் winhip_cs_nogif.exe என்ற கோப்பை சொடுக்கவும். தோன்றும் படிவத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளபடி namitha.bmp மற்றும் msg.txt ஆகிய கோப்புகளை உள்ளிட்டு, பின்னர் கடவுச்சொல்லையும் வழங்கவும். இவ்வாறு செய்ததும் உங்கள் தகவல்கள் புகைப்படத்தில் விதைக்கப் பட்டிருக்கும்.




அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட படத்தை வேறு பெயரில் சேமித்து தகவலை அனுப்ப வேண்டிய நபருக்கு மின்னஞ்சல் அலலது உங்கள் வலைப்பதிவிலே கூட பதிவேற்றம் செய்து விடுங்கள்.





இந்த தகவல் சேர வேண்டிய நபரிடத்திலும் இதே மென்பொருள் இருத்தல் அவசியம், மேலும் நீங்கள் உபயோகப்படுத்திய கடவுச்சொல்லும் அறிந்திருக்க வேண்டும். மீண்டும் இந்த மாற்றம் செய்யப்பட்ட படம் ஸ்டெகனோக்ராபி மென்பொருள் மூலம் திறக்கப்படும் போது கடவுச்சொல்லை அளித்து விட்டு, ரகசியத் தகவலை உங்கள் கணினியில் எங்கு சேமிக்க வேண்டும் என்றும் தெரிவித்து விட்டால் தகவல் உங்கள் பார்வைக்குத் தயார்.

மென்பொருள் ஆங்கிலத்தில் இல்லை, ஆகையால் படங்கள் விளக்கமாக வழங்கப் பட்டிருக்கிறது. ப்டங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்த்து பயன்பெறவும்.

மேலே உள்ள படத்தில் ரகசியத் தகவல் விதைக்கப் பட்டிருக்கிறது. ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?. மிகவும் உற்றுக் கவனித்தால் ஆங்காங்கே pixelகளின் வண்ண வேறுபாடுகள் புள்ளிகளாகத் தெரியும். நீங்கள் விதைக்கும் ரகசியத் தகவலின் அள்வுக்கேற்ப வண்ண வேறுபாடுகள் கூடவோ குறையவோ செய்யும். தகவலைச் சுருங்கச் சொன்னால் வண்ண வேறுபாடு எளிதாகக் கண்களுக்கு புலப்படாது.

இதே முறையில் தேவையான மென்பொருட்கள் மூலம் ஒலி-ஒளி கோப்புகளிலும் தகவல்களை அனுப்பலாம். ஒலி-ஒளி கோப்புகளில் சிறு இரைச்சலோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் வண்ண வேறுபாடுகள் ஏற்படும். இப்பதிவுகள் மூலம் ஓரளவு ஸ்ட்கனோக்ராபி (steganography) குறித்து அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இதனைப் பயன்படுத்துபவர்கள் தேர்ந்தெடுக்கும் புகைப்படங்கள் பெரும்பாலும் குழும இணையத்தளங்களில் (forums) ப்யன்படுத்தப்படும் 'avatar' எனப்ப்டும் சிறு அடையாளப் படங்கள் என்பது உபரித்தகவல் :). எனவே அடுத்த முறை இணையத்தில் புகைப்படங்களை எடுத்து உபயோகப்படுத்தும் போது கவனமாக இருங்கள், யாருக்குத் தெரியும் அதில் ஏதெனும் வில்லங்கமான ரகசியம் அடங்கியிருக்கலாம்.



மேலே உள்ள சுட்டியில் இருக்கும் நமிதாவின் புகைப்படத்தை தரவிறக்கம் செய்து கொள்ளவும், அதில் ஒரு தகவல் மறைக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் அந்தத் தகவலைக் கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் :). (கடவுச்சொல்: suduthanni)

நன்றி.

ரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் தீவிரவாதிகள் - ஸ்டெகனோக்ராபி ஒர் அறிமுகம் - 1



சராசரியாக ஒரு நாளில் நாம் வலையில் உலாவும் போது எண்ணிலடங்காப் புகைப்படங்களைக் காண்கிறோம். நடிகைகளின் கவர்ச்சிப்படங்கள், வால்பேப்பர்கள், ஓவியங்கள், செய்திப்புகைப்படங்கள் இப்படி எத்தனையோ. அவற்றுள் எதேனும் ஒரு படம் தன்னுள் "நவம்பர் 26, மும்பை, தாக்கு" என்பது போன்ற ரகசியச் செய்தியை மறைத்து வைத்திருக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஸ்டெகனோக்ராபி பற்றித் தெரிந்திருந்தால் உங்களுக்கு இது சாத்தியமே என்று புரியும்.

ஸ்டெகனோக்ராபின்னா என்னம்மா?? ஹமாமா?? இல்லை. ஒரு தகவலுக்குள் இன்னொரு தகவலை மறைத்து வைக்கும் கலைக்குப் பெயர் தான் ஸ்டெக்னோக்ராபி. சுருக்கமாகச் சொன்னால் எழுத்துக்களை புகைப்படத்திலோ, ஒலி-ஒளி கோப்புகளிலோ மறைத்து வைக்கும் முறை. அனேகம் பேருக்கு 'ரோஜா' திரைப்படத்தில் அரவிந்த்சுவாமி எதற்கு காஷ்மீர் செல்வார் என்று தெரிந்திருக்கும். தீவரவாதிகளின் சங்கேதக் குறியீட்டுத் தகவல் (encrypted message) ஒன்றிலிருந்து தகவலைப் பிரித்தறிந்து சொல்வதற்காகச் செல்வார். இப்படி நம்ம் மணிரத்னம் படம் எடுக்குற அளவுக்கு அந்த முறை ஊருக்கு அம்பலமான, ஹைதர் காலத்துத் தொழில்நுட்பம். சம்பந்தமே இல்லாமல் இருவர் 'இன்னைக்கு அமாவாசை', 'எனக்கு நிலா தெரியுது' அப்படின்னு பேசுவதைக் கேட்டால் சின்னப்பிள்ளை கூட் ஏதோ வில்லங்கமான சமாச்சாரம் நடக்கிறது என்பதை ஊகித்துவிடும். திருடன் போலீஸ் விளையாட்டில் எப்போதுமே முன்னோக்கி சிந்திப்பது திருடன் தானே, அப்படி அவர்கள் பயன்படுத்தத் தேர்ந்தெடுத்த முறை தான் ஸ்டெகனோக்ராபி.



ஸ்டெகனோக்ராபி என்பது ஆதிகாலந் தொட்டே இருந்தி வந்திருக்கிறது. ஐரோப்பிய மன்னன் ஒருவன் மிக நம்பிக்கைக்குரிய தன் அடிமைக்கு மொட்டை அடித்து அதில் ரகசியத்தகவலை பச்சை குத்தி, முடி வளரும் வரைக் காத்திருந்து பின் தகவல் சேர வேண்டிய இடத்திற்கு அவனை அனுப்பியது தான் கிட்டத்தட்ட முதல் நிலை ஸ்டெகனோக்ராபி. அப்புறம் அவனுக்கு மறுபடி மொட்டை அடித்துத் தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். இதில் கால விரயம் அதிகம் இருந்தாலும் பாதுகாப்பு அதைவிட அதிகம். பின்னாளில் ஒவ்வொரு படியாக முன்னேறி புகைப்படங்களில் மைக்ரோ அளவில் புள்ளிகள் வைத்து இரண்டாம் உலகப் போரின் போது உளவாளிகளால் ரகசியத்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. காலம் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணத்துக்கு பயணித்த போது கணினியும், இணையமும் வந்தது. ஸ்டெகனோக்ராபியும் வளர்ந்தது.

இணையத்தில் உலாவும் புகைப்படங்கள், ஒலி-ஒளி கோப்புகள் அனைத்திலும் ரகசியத் தகவல்கள் மறைத்து அனுப்பி வைக்க ஸ்டெகனோக்ராபி மென்பொருட்கள் கணக்கில்லாமல் கிடைக்கின்றன. இருந்தாலும் புகைப்படங்களே அதிகமாக உபயோகப்படுத்தப் படுகின்றன, காரணம் புகைப்படக் கோப்புகள் அளவில் சிறிது, வலையேற்றம்/தரவிறக்கம் எளிது. மேலும் புகைப்படங்களின் எண்ணிக்கை இணையத்தில் ஒலி-ஒளி கோப்புகளை விட அநியாயத்துக்கு அதிகம். எவ்வளவோ நுணுக்கமான சங்கேதத் தகவல்களையெல்லாம் எல்லாம் கண்டுபிடித்து விடுகிறார்கள், இதைக் கண்டுபிடிக்க முடியாதா? ஸ்டெகனோக்ராபி அப்ப்டி என்ன உசத்தி?. இதன் சூட்சுமம் இவர்கள் உபயோகப்படுத்தும் சங்கேத மொழிக்கான தொழில்நுட்பத்தில் (encrypting algorithm) இல்லை. உபயோகப்படுத்தும் களத்தில் தான் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தை எடுத்து இதில் ஒரு தகவல் மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறினால் நிபுணர்கள் நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்து விட்டு காபி சாப்பிடச் சென்று விடுவார்கள். 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'ன்ற மாதிரி இத்தனை கோடி இணையத்தளங்களில் எத்தனை கோடிப் புகைப்படங்கள், ஒலி-ஒளி கோப்புகள். இவற்றில் எதை விடுவது, எதைத் தொடுவது என்று யோசிக்கும் அந்த கணத்தில் தான் ரகசியங்கள் பத்திரமாகப் பயணமாகிக் கொண்டு இருக்கின்றன.



இந்தத் தொழில்நுட்பம் எப்படி செயல்முறைப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம். முதலில் ஊடகக் கோப்புகள் எனப்படும் புகைப்படங்கள்,ஒலி-ஒளிக் கோப்புகள் வெவ்வேறு முறையில் கட்டமைக்கப் படுகின்றன. உதாரணத்துக்கு புகைப்படங்கள் BMP,JPEG போன்ற முறைகளிலும், ஒலி-ஒளிக் கோப்புகள் WAV,MP3, mpeg,avi இப்படி பல வகைகளில் வெவ்வேறு வடிவமைப்பில் சேமிக்கப்படிகின்றது. முதலில் எந்த வகை கோப்புகளை உபயோகிக்கப் போகிறோம் என்று தேர்வு செய்ய வேண்டும், பின் அந்த வகைக் கோப்புகளின் உள் கட்டமைப்பைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு விளக்கத்துக்கு BMP கோப்புகளை எடுத்துக் கொள்வோம். BMP கோப்புகள் File header, Bitmap Information, color palette மற்றும் pixel data போன்ற பகுதிகளை உள்ளடக்கி இருக்கும். இதனை ஒவ்வொரு பைட் (byte) ஆக ஒரு நிரல் கொண்டு வாசித்துக் கோப்பின் தன்மைகள் குறித்து அறிந்து கொண்டு, பின் pixel data பகுதியில் ஒவ்வொரு pixel இன் வண்ண மூலங்கள் சிவப்பு, பச்சை, ஊதா நிறக்கூட்டில் எண்களாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த எண்களைத் தான் ரகசியத் தகவல்களின் எழுத்துக்களுக்கு ஏற்ப மாற்றப் போகிறோம்.

தொடர்ந்து பல pixelகளை மாற்றினால், இறுதியில் புகைப்படத்தில் அந்த இடம் மட்டும் கண்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்து சந்தேகம் வரலாம் என்பதால் ஆங்காங்கே பரவலாக எழுத்துக்கள் விதைக்கப்படும். ஆகையால் இறுதியில் மொத்தமாக ரகசியச் செய்தி தாங்கியிருக்கும் அந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது கண்களுக்கு ஆங்காங்கே மாறியிருக்கும் pixel வண்ணங்கள் சட்டென புலப்படாது.

ஓரளவுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இப்பொழுது படத்திலிருந்து திருப்பி செய்தியை மீட்டெடுக்க எந்தெந்த pixelகளில் நீங்கள் எழுத்துக்களை விதைத்து இருக்கிறீர்கள் என்பதை அந்த மென்பொருளில் இருக்கும் நிரல் தீர்மானம் செய்யும். உதாரணத்திற்கு நீங்கள் எந்த செய்தி அனுப்பினாலும், மென்பொருள் புகைப்படத்தில் முதல் pixelலில் ஒரு எண்ணைப் பதிவு செய்யும், 16 என்று வைத்துக் கொள்வோம். இதில் 16 என்பது ஓவ்வொரு 16வது pixelல்லிலும் ஒரு எழுத்து விதைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் குறிக்கும். உங்களிடம் இருக்கும் அதே மென்பொருள் செய்தி சேரும் இடத்திலும் இருக்க வேண்டும். அந்த மென்பொருள் மூலம் படத்தை திறக்கும் போது ஒவ்வொரு 16வது pixelலில் இருக்கு எழுத்தையும் பிரித்தெடுத்து இணைத்து செய்தியாக வழங்கி விடும்.

மேற்கூறிய முறை ஒரு உதாரணம் மட்டுமே. இந்த எழுத்து விதைக்கும் விதம் (algorithm) ஒவ்வொரு மென்பொருளுக்கும் மாறுபடும். கொஞ்சம் நிரல் எழுதத் தெரிந்தால் நாமே தேவைக்கேற்ப மென்பொருள் தயார் செய்து கொள்ளக் கூட முடியும் :D. இருந்தாலும் இணையத்தில் ஏகப்பட்ட ஸ்டெகனோக்ராபி மென்பொருட்கள் கிடைக்கின்றன.



பெரும்பாலும் இது தீவிரவாதச் செயல்களுக்கும், இராணுவ தொடர்புகளுக்கும் பயன்படுத்தப் படுவதாக ஊடகங்களில் பலமுறை சொல்லப்பட்டு வந்தாலும், அல்-குவைதாவின் விருப்ப முறை தகவல் தொடர்பு இது தான் என்று அமெரிக்கா பாதுகாப்புத்துறை செப்டெம்பர் 11 தாக்குதல் நடந்த பிறகு தெரிவித்த போது ஸ்டெக்னோக்ராபி கூடுதல் கவனம் பெற்றது. நாம் கூட நண்பிகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ புகைப்படத்தின் மூலம் ரக்சியமாய்ப் பேசலாம். பின்னாளில் அப்படங்கள் வேறு யார் பார்வைக்குச் சென்றாலும் அவர்கள் மறைந்திருக்கும் செய்தியை அறிந்து கொள்வது மிக அரிது ;). அவ்வாறு இணையத்தில் கிடைக்கும் மென்பொருள் ஒன்றின் மூலம் மேலே இருக்கும் நமீதாவின் படத்தைப் பயன்படுத்தி எப்படி ரகசிய தகவலைப் பறிமாறிக் கொள்ளலாம் என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.