Monday, July 7, 2014

இணையம் வெல்வோம் - 18

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது.  2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.
2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் திகில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.
எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.
கை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.
கண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப்பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.
இத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI  மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள்  மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.
தி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது  போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ஹாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.
 அனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை  மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.
மக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில்  தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங்.  33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் ?

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

6 comments:

ஜோதிஜி said...

ரொம்ப அழகாக எளிமையாக வந்துள்ளது கட்டுரை. பாராட்டுகிறேன்.

Katz said...

good work sir

சுடுதண்ணி said...

நன்றியும், மகிழ்ச்சியும் :) @ ஜோதிஜி

ஊக்கத்துக்கு மிக்க நன்றி @ Katz

Thomas Ruban said...

மிக அருமை வாழ்த்துக்கள்..

srinivasan said...

இணைய போராளிகள் தன் மன அமைதிக்காக கொடுத்த விலை பெரிது .அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன் ,தொடர்கிறேன் .

அமுதா கிருஷ்ணா said...

படிக்க படிக்க இனம் புரியாத பயம் வருகிறது. உலகத்தில் எவ்ளோ நடக்குது.