Monday, November 10, 2014

இணையம் வெல்வோம் - 21

மாற்று ஊடகத்திற்கு என்றுமே மக்கள் ஆதரவளிக்கவும், போற்றவும் தயங்கியதேயில்லை. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்துத் தரிசாகிக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகம் சன் டிவியின் தமிழ் மாலைக்கும், அவர்களின் செய்திகள் பிரிவு ஆரம்பித்த புதிதிலும் கொடுத்த வரவேற்பே அதற்கு சாட்சி சொல்லும்.
ஊடகங்களில் தனியார் நிறுவனங்கள் கோலோச்ச ஆரம்பித்தப் புதிதில் அதிலிருக்கும் சூட்சுமங்கள் புரியாமல் மதிமயங்கிய நாம் இன்னும் அதன் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. திண்ணைப்பழக்கம் முற்றாக ஒழிந்து வெளியில் மழை பெய்கிறது என்று ஊடகங்களில் சொன்ன பிறகே வெளியில் எட்டிப்பார்த்து உறுதி செய்து கொள்ளும் அளவுக்கு மக்கள் மகுடிப் பாம்பாய் வீட்டுக்குள் முடங்கத் தொடங்கியதும, அதனால் ஏற்பட்ட விபரீதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் என்று எவ்வொரு ஊடக நிறுவனத்தின் வேர்களும் ஏதாவதொரு அரசியல் புதைகுழியில் ஜனித்திருப்பது பெரும்பாலோனோர்க்குத் தெரிந்திருப்பதில்லை. சினிமாத் திரைகளில் தங்கள் தலைவர்களைத் தேடிய சமூகத்தினை காட்சி ஊடகங்கள் மூலம் சுத்துமாத்து செய்து குழம்பிப் போகச் செய்வதில் ஊடகங்களுக்கு பெரிய சிரமமிருக்கவில்லை.
இப்படி இராஜபாட்டையில் பயணித்துக் கொண்டிருந்த ஊடங்களனைத்திற்கும் இன்னல் தரும் இடியாய் இறங்கியது தான் இணையம். ஆரம்பத்தில் கணிணிக் கல்வி சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கப்பட்ட இணையத்தின் விஸ்வரூபம் இன்று ஊடகங்களையும், அவற்றை கட்டிமேய்க்கும் பண முதலைகளையும் தடுமாற வைத்திருக்கிறது. இணையம் ஒவ்வொரு தனிமனிதனையும் ஒரு ஊடகக்கருவியாக்கி ஒரு புதுயுகத்தினை நம் தலைமுறைக்கு அளித்திருக்கிறது. இணையத்தின் பயன்பாடு மென்மேலும் பரவலாகும் பொழுது அரசியல் லாபத்திற்காக அதிகார வர்க்கத்திற்குக் குடைபிடிக்கும் வெகுஜன ஊடகங்கள் தானாகவே பலமிழந்து போய்விடும். இப்படி ஒரு அசுரபலத்தை சர்வசாதாரணமாக கணிணியிலோ அல்லது கைபேசியிலோ வைத்திருக்கும் நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம், புற்றீசல் போல தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு நித்தம் புதுப்புது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி வந்தாலும் இன்றும் காலியாக இருக்கும் உண்மையான மாற்று ஊடகத்திற்கான இடத்தினை நாம் நிரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் உங்கள் மண்டையைக் குடைந்தால் நன்று.
இணையம் ஒரு கட்டற்ற களம். இங்கு எந்த விதிமுறைகளும் இல்லை. ஒரு தனிநபரை, நீ இப்படித்தான் இணையத்தில் எழுத வேண்டும், குத்துவிளக்குப் புகைப்படங்கள் மட்டுமே வலையேற்ற வேண்டும் என்று இங்கு யாரையும், யாரும் கட்டுப்படுத்தவோ, அறிவுரை சொல்வதற்கோ இடமேயில்லை. அப்படி ஒரு கட்டற்ற சுதந்திரம் தான் இணையத்தின் பலம். நம்மில் இணையத்தினைப் பாவிப்பவர்களில் எத்தனை பேர் அடுத்தவர்களுக்கு இணையப்பயன்பாடு குறித்து அறிவுரை சொல்லாமல் ஒரு நாளைக் கடக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் நாம் செய்யும் தவறுகள் புரியும். தங்கள் கொள்கைகளை அடுத்தவர் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் அல்லது சர்வாதிகாரிகளுக்கும், இணையத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆத்திச்சூடி படிப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இணையம் எப்படி செயல்படுகிறது, அதன் வீச்சு என்ன, சாதக,பாதகங்கள் என்ன என்பதைத்தான் அடுத்த தலைமுறைக்கும், அடுத்தவர்களுக்கும் புரியவைக்க வேண்டும். இங்கு பெரும்பாலோனோர்க்கு இணையம், வலைப்பாதுகாப்பு மற்றும் இணையத்தின் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட சட்டங்கள் குறித்தான எந்த அடிப்படை புரிதலும் இருப்பதில்லை. விக்கிப்பீடீயா தளத்தில் இருப்பதெல்லாம் உண்மையென்றும், திருப்பதி பெருமாள் படத்தினை அடுத்த 5 நிமிடங்களில் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தால் குபேரன் தங்கள் வீட்டில் குப்புறப் படுப்பார் என்று நம்புபவர்களும், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் கேண்டி கிரஷ் விளையாடவும் தெரியாமல், அப்படியே தொந்திரவு படுத்தினாலும் அதுபோன்ற இம்சைகளை மட்டுறுத்தும் நுட்பங்களையும் அறியாமல் புலம்பிக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லக் கிளம்புபவர்களுக்கும், ஸ்வாகா சொல்வதற்கு மட்டுமே பூஜைக்கு செல்லும் இது நம்ம ஆளு பாக்யராஜுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இணையத்தினை மாற்று ஊடகமாகப் பாவிப்பதற்கு மேலே சொன்ன தொழில்நுட்பப் புரிதல்கள் மட்டுமின்றி உண்மைத்தகவல்களைத் திரட்டும் திறனோ அல்லது அதற்கான தொடர்புகளோ இருக்க வேண்டும். இன்றையத் தேதிக்கும் உண்மைத்தகவல்கள் சம்பவ இடத்தில் இருந்து நம்பகமானத் தொடர்புகள் மூலம் கிடைத்தால் மட்டுமே சாத்தியம். ஊடகங்கள் மூலம் அல்லது அரசியல் அல்லது கொள்கைச்சார்புள்ளவர்கள் மூலம் கிடைத்தால் தகவல்களைத் தங்கள் நோக்கம் போல் திரித்துக் கொளுத்தி விட வாய்ப்புகள் அதிகம். முதலில் தொழில்நுட்பம் குறித்த புரிதல்கள் குறித்துப் பார்ப்போம். கணிணி வலையமைப்புகளும், இணையமும் இன்று சகல இடங்களிலும் வியாபித்த பிறகு அனைத்துத் துறையினரும் சந்திக்கும் முக்கிய சவால்களுல் ஒன்று கணிணி மற்றும் இணையம் குறித்தான் தொழில்நுட்பப் புரிதல். ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தினை முடக்க முடியாமல் திணறும் நீதித்துறை, ஒரு இணையத்தளத்தினை தனிநபர் அடையாளமின்றி எப்படி நடத்துவெதென்பதறியாமல் சிரமப்படும் மாற்று ஊடக முயற்சியாளர்கள், இணையம் அல்லது கணிணி குறித்தான செய்திச் சந்திப்புகளில் சரியான கேள்விகள் கேட்க முடியாமல் திணறும் செய்தியாளர்கள், ஒபாமாவைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் சூடுபோட்டுக் கொண்ட அரசியல் தலைகள், சுஜாதாவின் இடத்தினைப் பிடிக்க நினைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்து உளறிக் குளறிப் போடும் எலக்கியவியாதிகள் என்று தொழில்நுட்பப் புரிதலின்றி திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம். இதில் அதிகம் குளிர் காய்வது ஸ்வாகா பாக்யராஜ்கள் மட்டுமே. அவர்களில், தங்களின் கட்டுப்பாட்டில் அனைத்து சமூக வலைத்தளங்களும் இருப்பதாக நம்ப வைத்து, ஏமாற்றி தங்கள் தலைவர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயம் தேடும் தொண்டர்கள், விக்கிபிடியாவை மொழிபெயர்த்து புத்தகம் எழுதி மூத்தவர்களை அசத்தும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள், நாளைக்கு நாற்பது நிலைத்தகவல் இடுவதால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் குறித்தான தொழிநுட்ப விவாதங்களில் கலந்து கொள்ளும் அறிவுசார் புரட்சிப்பொங்கல்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
தமிழ் இணையத்தில் மாற்று ஊடகங்களுக்கான முயற்சியில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது திரைப்பட விமர்சனங்கள். ஒரு கட்டத்தில் இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் கூட நடத்த ஆரம்பிக்கும் அளவுக்கு அதன் வீச்சு அதிகமாகியிருந்தது. திரைப்பட விமர்சனங்கள் வெற்றியடையக் காரணம், எழுதும் ஒவ்வொருவரும் தாங்களே நேரடி அனுபவத்தில் ஒரு திரைப்படம் குறித்தான அலசல்களைத் தங்கள் ரசனைக்கேற்ப முன்வைத்ததும், அதன் மூலம் அவர்களுக்கு எந்த ஆதாயமோ அல்லது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் எந்த பயமும், எதிர்பார்ப்பும் இன்றியும் இருந்தது தான். அரசியல், சமூகம் குறித்தான செய்திகள் என்று இதே போன்று அந்த சுயலாப நோக்கில் இல்லாமல், தனிமனித மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இணையத்தில் பகிரப்படுகிறதோ அன்று தான் மாற்று ஊடகத்திற்கானக் கதவுகள் முழுமையாகத் திறக்கும்.
இன்றைய சூழ்நிலையில் மக்கள் பார்வையில் இருக்கும் அனேக ஊடகங்களும், அவற்றின் முகங்களாகத் திகழும் ஊடகவியலாளர்களும் ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளவர்களாகவும், அவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பாதிப்பின்றி சுதந்திரமாக இணையத்தில் செயல்பட வாய்ப்புக் கிடைத்தாலும் ‘என் தலைவன் தங்கம்டா’ என்றே காலம் பூராவும் பேசி இம்சிக்கிறவர்களே அதிகம், அதிலும் ஏகப்பட்ட வெற்றிகொண்டான்களும், தீப்பொறி ஆறுமுகங்களும் இருக்கிறார்கள். பிரதமர் முதல் இணையத்தில் தனக்குப் பிடிக்காத வண்ணம் எதிர்பதிவு போடும் சாமனியன் வரை அனைவரையும் மானாவாரியாக, பச்சைப்பச்சையாக எழுதுவது இவர்களின் இணையச் சாணக்கியத்தனம், அதாவது இணையத்தில் தாக்குகிறார்களாமாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிலபல வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும். முன்பே கூறியது போல் மற்ற குற்றங்களை விட இணையக் குற்றங்களை நிரூபிப்பது மிக எளிது அதே சமயம் அது வழக்கறிஞர்கள், காவல்துறை நண்பர்கள், நீதிமன்றங்கள் ஆகியோரின் தொழில்நுட்பபுரிதலும் அவசியம் என்பதையும் மறந்து விடக்கூடாது.
மின்சாரம் தடைபட்டால் தெருமுனைப் பெட்டிக்கடைக்குப் போகப் பயப்படும் பிள்ளைப்பூச்சிகள் கூட, சீறும் சிறுத்தைகளாக இணையத்தில் சீறிப்பாயக் காரணம், தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது அல்லது எத்தனையோ கோடிக்கணக்கான நபர்கள் எழுதித்தள்ளும் டிவிட்டர், பேஸ்புக் தளங்களில் தான் ஒருவன் எழுதுவதை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பார்கள் என்ற தைரியத்தில், ஒற்றை ஆளாய் யாரெனும் முக்கியப் புள்ளியினை மானக்கேடாய் வறுத்தெடுத்து அதில் இன்பம் காண்பது தான். அப்படி நினைப்பவர்கள் நீங்களும் ஒருவராக இருந்தால் இன்றோடு அந்த எண்ணத்தினை மாற்றிக் கொள்ளுங்கள். டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், உங்கள் பெயரைக் குறிப்பிட்டு யார், என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூடச் சுடச்சுடக் கண்டறிய முடியும். எப்படி?
தொடர்வோம்……

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

5 comments:

எம்.ஞானசேகரன் said...

மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரை. முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.

Jafar ali said...

ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்பார்த்தவனாக��

srinivasan said...

திரைப்பட நிழலை உண்மை என்று நம்புகிறவர்களுக்கு பரிதாபடத்தான் முடியும்.வழக்கமான நகைசுவை பாணியில் அருமையாக வந்திருகிறது .tor உலவியை பயன்படுத்தினாலும் வலை இணைப்பு எண்கள் மாறினாலும் கூட கண்டறிய முடியுமா !

Anonymous said...

Nice...as usual.

சுடுதண்ணி said...

வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ கவிப்ரியன், ஜாபர்,ஏலியன் :).

அது பயனாளியின் சாமர்த்தியத்தைப் பொருத்து :) - ஸ்ரீனிவாசன்...