Wednesday, May 26, 2010

இந்திய விமான நிலையங்கள் குறித்து மங்களூர் சொல்லும் செய்தி ? - 2 (முற்றும்)

பயணிகள் தங்கள் பங்குக்கு பாதுகாப்புக்காக என்னென்ன செய்யலாம்?. பொழுதுபோகாமல் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விமானிகள் அனைவருக்கும் போதை மருந்து சோதனையைக் கட்டாயமாக்கச் சொல்லி தெரு முக்கில் கூட்டமாகக் கோஷம் போடலாம். மற்றவர்கள் விமானப் பயணத்திற்கான பயணச்சீட்டைப் பெற்றதும் எந்த வகை விமானத்தில் பயணிக்கிறோம், அதன் அதிக பட்ச எடை கொள்ளளவு என்ன, தேவைப்படும் ஓடுதளத்தின் நீளம், பயணத்தின் போது எந்தெந்த விமான நிலையங்களில் தரையிறங்கி, மேலெழும்பப்போகிறோம், அந்த விமான நிலையங்களின் தொழில்நுட்ப தரம் என்ன, ஒடுதளத்தின் விவரங்கள், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் ரேடார் வசதிகள் ஆகிய தகவல்களை முடிந்தவரை திரட்டி வைத்து உங்கள் பயணத்தின் பாதுகாப்பினை எடை போட முயற்சிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

முதலில் விமானத்தில் பயணம் செய்யும் அன்பர்கள் ஒரு சுவை, மணம், திடம் என்ற மூன்று நற்குணங்களும் நிறைந்த ஒரு விமான நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்ற விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது நன்று. காரணம் பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் பேரரசுவிடம் கொடுத்து படம் எடுக்கச் சொல்வதை ஒத்த விளைவுகளை, போதிய வசதிகளற்ற விமான நிலையமும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையமும் ஒரு தரமான விமானத்திற்கும், அனுபவமிக்க விமானிக்கு ஏற்படுத்த முடியும்.


வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் செயல்படும் விதத்தினைத் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். ஒரு முழுமையான வசதிகளை உடைய விமான நிலையம் அமைப்பதற்கு பணப்பை கனமாக இருத்தல் முதல் தகுதி. ஓடுதளங்கள் தரமாக, சுத்தமாக போதிய இடைவெளியில் தவறாமல் பராமரிக்கப்பட வேண்டும். விமானங்கள் அசுர வேகத்தில் பல டன் எடையுடன் தரையிறங்கும் நொடிகளில், விமானத்தில் சக்கரங்கள் சுற்றாது. அப்படியே ஓடுதளத்தில் உராய்ந்து காதுக்கிதமாக ஒலியெழுப்பி, சில நொடிகளுக்குப் பின்னரே சுற்றத் தொடங்கும் (spin-up time). அந்த உராய்வுகள் மூலமாக ஒடுதளத்தில் சக்கரங்களின் ரப்பர், படிமங்களாக படிய ஆரம்பிக்கும்.


அப்படிமங்களை அப்படியே விட்டுவைத்தால் சில மாதங்களுக்குப் பிறகு தரையிறங்கும் விமானங்களின் சக்கரங்களைப் போதியக் கட்டுப்பாடின்றி தறிகெட்டு ஓடச் செய்ய வைக்கும் திறன் கொண்டது. எனவே போதிய இடைவெளியில் ஒடுதளத்தினை விளக்குமாறு வைத்துக் கூட்டாமல், தகுந்த உபகரணங்களையும், தொழில்நுட்பத்தினையும் பயன்படுத்திச் சுத்தப்படுத்த வேண்டும்.



அதற்கடுத்த விஷயம் 'hydraplaning'. நவம்பர் மாத மழை நாட்களில், தாவணிகளையோ அல்லது சுடிதார்களையோ மடக்க, தங்கள் மோட்டார் சைக்கிள்களை மடக்கி, வழுக்கி விழுந்தவர்களுக்குப் புரியும் hydroplaning எவ்வளவு அபாயமானதென்று. அனுபவமிக்கவர்கள் பின்னூட்டத்தில் குமுறவும். மோட்டார் சைக்கிளுக்கே இந்த நிலைமையென்றால் சுமார் 85 டன் எடையுடன் அதிவேகத்தில் தரையிறங்கும் விமானத்திற்கு என்னாவாகும் என்று சொல்லத்தேவையில்லை. அதிக மழை நீர் தேங்கிய அல்லது ஈரப்பதம் அதிகமான ஓடுதளங்கள் உபயோகத்திற்கு தகுதியற்றவை. மழை நீர் வடியத் தகுந்தவாறு ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உலக அளவில் அதிகமாக மழை பெய்யும் பகுதியில் இருக்கும் விமான நிலையங்களில் ஓடுதளங்களில் விமானச் சக்கரங்களுக்கு அதிக உராய்வுத் தன்மை அளிப்பதற்காக grooving என்ற முறை பின்பற்றப் படுகிறது. பார்க்கப் படம்.


இவற்றுக்கெல்லாம் மேலே, மிக மிக முக்கியமானது ரேடார்கள். பெரும்பாலும் இரண்டு வகையான ரேடார்கள் விமான நிலையங்களில் பயன்படுத்தப் படுகின்றன. ஒன்று surveillance radar எனப்படும் தொலைதூர கண்காணிப்பு ரேடார்கள் (சுமார் 250 முதல் 300 கி.மீ). , மற்றது precision approach radar என்னும் குறைந்த தூரக் கண்காணிப்பு ரேடார்கள் (சுமார் 20முதல் 50 கி.மீ.). நூறு சதவிகித பாதுகாப்புக்கு இவ்விரண்டு ரேடார்களுமே இருப்பது மிகமிக முக்கியம், அவசியம், அத்தியவாசியம் மற்றும் பிற. சரி, இந்திய விமான நிலையங்கள் அனைத்திலும் இவ்வசதிகள் இருக்கின்றதா என்று பிரபுல் படேலுக்கே தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை.


இதில் இரண்டாம் வகையான precision approach radar மூலம் விமானம் மிகச் சரியாக ஓடுதளத்தில் எந்த பகுதியில் தரையிறங்குகிறது என்பதைக் கண்காணிக்கவும், தவறுகள் இருந்தால் முன்கூட்டியே விமானியை எச்சரிக்கவும் முடியும் என்பது உபரித்தகவல். ஒரு விமானம் தரையிறாங்கவோ அல்லது மேலெழும்பவோ, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளின் படி இவ்விரண்டு வகை ரேடார்க்ளில் ஏதெனும் ஒன்று இருந்தாலே போதுமானது, என்ற வாதத்தினை இறைவேதமாகக் கொண்டு தான் இந்திய விமான நிலையங்கள் கட்டமைக்கப் படுகின்றன என்பது வருத்தமான உண்மை.

நடிகர் அஜீத் தவிர்த்த நாட்டின் முக்கியத் "தலை"கள் :D (பிரதமர், ஜனாதிபதி மற்றும் சிலர்), சில குறிப்பிட்ட இடங்களுக்கு விமானத்திலும், மற்ற இடங்களுக்கு ஹெலிகாப்டரிலும் செல்வதைக் கூர்ந்து கவனித்திருந்தால் இதில் பொதிந்திருக்கும் உண்மை புரிந்திருக்கும். இனிமேல் இது போன்ற செய்திகளை கூர்ந்து கவனிக்க வாழ்த்துக்கள். விமான நிலையங்களின் தொழில்நுட்பத் தரத்தினையும், பிற வசதிகளையும் முழுமையாகப் பொதுமக்களுக்குச் சேரும் வகையில் தெரிவிக்காத வரையில் மக்கள் தங்களுக்குத் தெரியாமலேயே அபாயகரமான விமானப் பயணங்களில் தலையைக் கொடுப்பதைத் தடுப்பது கடினம். பொதுப் பயன்பாட்டிலுள்ள விமான நிலையங்களின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் அரசைப் பகிரங்கப் படுத்தச் சொல்லி வாசகர் கடிதமோ அல்லது இது உங்கள் இடத்திற்கோ எழுதாமல், யாரேனும் பொதுநல வழக்குத் தொடர்ந்தால் நாளைய வரலாற்றில் இடம்பெறலாம்.


மங்களூரில் ஓடுபாதையின் தொடக்கப் பகுதியில் (runway threshold) இறங்காமல், சிறிது தூரம் தாண்டித் தரையிறங்கிய காரணத்தால், ஒடுதளத்தின் நீளமான 2.45 கிலோமீட்டரை முழுமையாகப் பயன்படுத்த முடியாமல், ஒடுதளத்தின் தடுப்புச் சுவற்றினை இடித்துத் தாண்டிச் சென்று வெடித்துச் சிதறிய விமானத்தில் இறந்த அனைத்து உயிர்களுக்கும் மற்றும் மங்களூர் விமான நிலையத்தில், table top ஓடுதளங்களுக்கு மிகமுக்கியமான precision approch radar வசதி இல்லையென்றாலும், குத்துமதிப்பாகவே பலமுறைச் சரியாக தரையிறங்கி, ஒருமுறை தவறாகத் தரையிறங்கிய விமானியே மங்களூர் விபத்துக்குக் காரணம் என்று கூறப்போகும் விசாரணக்குழுவிற்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

மேலும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுள், சென்னை தவிர்த்து மற்றெந்த விமான நிலையத்திலும் இரண்டு வகை ரேடார் வசதிகளும் இல்லை என்பதும், கடந்த பத்து வருடத்தில் சுமார் பத்து மடங்கு விமானப் போக்குவரத்து அதிகரித்து விட்ட இந்திய வான்வெளியைக் கட்டி மேய்க்கும் இந்திய வான் போக்குவரத்துத் துறை நவீனமயமாகாமல் பத்து வருடங்களுக்குப் பிந்திய கால கட்டத்திலேயே தொங்கிக் கொண்டிருப்பதும் கவலையளிக்கக் கூடிய மற்றும் வெறுப்பேத்தும் விஷயங்கள். ஜனநாயகத்தின் பலவீனங்களின் சந்துகளில் உறங்கியே கொழுத்துப் போன அரசு இயந்திரங்கள் ஒழுங்காகச் செயல்படும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் தடுக்கப்படப்போவதில்லை.

ஒரு பயணியாக, விமானப்பயணத்தின் பாதுகாப்பு குறித்து ஒரு மாறுபட்ட பார்வையினை உங்களிடம் இப்பதிவு ஏற்படுத்தியிருந்தால் மிக்க மகிழ்ச்சியடையப்படும் என்று தெரிவித்துக் கொண்டு, எதிர்காலத்தில் விமானிகளுக்குக் கட்டாய போதை மருந்து சோதனை, விமான நிலையங்களின் அனைத்து விவரங்களையும் மக்களின் பார்வைக்கு வைப்பது, மற்றும் விமானிகள் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பில் இருக்கும் போது பேசுவதைப் பயணிகளும் கேட்கும் வகை செய்வது போன்றவை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இத்தொடரை நிறைவு செய்து சுடுதண்ணி விடைபெறுகிறது.

29 comments:

அகல்விளக்கு said...

Nalla vilippuranvu pathivu thala...

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு நன்றி நண்பா @ அகல்விளக்கு :)

கண்மணி/kanmani said...

எல்லாம் சரி ஆனால் கூடுதல் வேலைப் பளுவினால் பைலட்டுகளுக்கு ஏற்படும் அயர்ச்சி உடல் நலிவு இவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.மைக்ரோ ஸ்லீப் எனப்படும் நொடிப் பொழுது கண்ணயர்வு கூட கவனச் சிதைவை ஏற்படுத்துமாம்.
இதையும் தாண்டி சீழ்நிலை ஆபத்து உணர்ந்து வண்டியை மீண்டும் மேலே பற்ற விட நினைத்தால் அவர்களின் சர்வீஸில் பிளாக் மார்க்காம்.
மொத்தத்தில் மிகவும் ரிஸ்க்கான இந்த சேவையில் ஓடுதளம்,டெக்னிகல் மெயிண்டனன்ஸ் மட்டுமின்றி பைலட்டுகளின் மன உடல்நிலை யாவும் கவனத்தில் கொள்ளப் பட வேண்டும்.
விபத்துக்கு அடுத்த நாளே மங்களூரில் அடுத்த பிளைட்டுக்கு கூட்டம் அலை மோதியதாம்.
மக்கள் மனிதர்களை விட விதியை நம்புகிறவர்கள்

சுடுதண்ணி said...

உண்மை தான் கண்மணி. உலகில் மிக அதிக மன அழுத்தத்துடன் பணிபுரிபவர்களில் விமானிகள் முக்கியமானவர்கள். அருமையானக் கருத்துப் பகிர்வுக்கு மகிழ்ச்சியும், நன்றியும் :).

யாழிபாபா said...

excellent post

துளசி கோபால் said...

அருமையான பதிவு. தகவல்களுக்கு நன்றி.

கண்மணி சொன்னதேதான். விதிமேல் பாரத்தைப்போடுன்னு வாழும் சனம்.

அவசியமான விஷயங்களை மேம்படுத்த நிதி இல்லைன்னு கைவிரிக்கும் அரசுகள் இருக்கும்வரை மனித உயிர்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை:(

எதுக்கு வம்புன்னு ஒரு அஞ்சு கிலோமீட்டர் நீளத்துக்கு ஓடுதளம் வைக்கணுமுன்னு ஒரு சட்டம் போடலாமா?

திங்கறவன் தின்னாலும் ஒரு மூணு மீட்டர் தேறாது?

துளசி கோபால் said...

ஐ மீன் ஒரு மூணு கிலோ மீட்டர்!

ராஜ நடராஜன் said...

//பொழுதுபோகாமல் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விமானிகள் அனைவருக்கும் போதை மருந்து சோதனையைக் கட்டாயமாக்கச் சொல்லி தெரு முக்கில் கூட்டமாகக் கோஷம் போடலாம். //

எங்கேயிருந்து ஆரம்பிக்கிறது?டெல்லி,மும்பாய்ல துவங்கினா அடிச்சு பிடிச்சு தொலைக்காட்சி ஊடகங்கள் துணைக்கு வரும்.

தொடர்ந்த வரிகளை தரைவழி கார்,பஸ் பயணத்திற்கும் கூட பயன்படுத்தலாம்.

ராஜ நடராஜன் said...

//எதுக்கு வம்புன்னு ஒரு அஞ்சு கிலோமீட்டர் நீளத்துக்கு ஓடுதளம் வைக்கணுமுன்னு ஒரு சட்டம் போடலாமா?

திங்கறவன் தின்னாலும் ஒரு மூணு மீட்டர் தேறாது? //

5க்கு 3 னா? பேரம்,ஊழல் கணக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்க டீச்சர்:)

siva said...

ஹா ஹா ஹ ஹா கடைசி பதிவு சிரிப்பாக இருந்தது

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

மிகவும் அதிக செய்திகளை உள்ளடக்கியுள்ள பதிவு ...வாழ்த்துக்கள்

சுடுதண்ணி said...

நன்றி யாழிபாபா :)

//எதுக்கு வம்புன்னு ஒரு அஞ்சு கிலோமீட்டர் நீளத்துக்கு ஓடுதளம் வைக்கணுமுன்னு ஒரு சட்டம் போடலாமா?

திங்கறவன் தின்னாலும் ஒரு மூணு கி.மீட்டர் தேறாது?//

:))) அப்படியே 3 கி.மீ தேறினாலும், அகலத்துல ஒத்தையடிப்பாதையா இருக்க வாய்ப்பிருக்கு :D..

கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி ராஜ நடராஜன், மகிழ்ச்சி :)

ஹோ..ஹோ.ஹோ..வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ சிவா :D

மிக்க நன்றி நண்டு. தொடர்ந்து வாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி சுடுதண்ணி..

seik mohamed said...

useful post thanks

வடுவூர் குமார் said...

விளக்கமாரு வைத்து சுத்தப்படுத்தக்கூடாது.... :-))))
இறங்கும் போது சக்கரம் சுத்தாதா? இதுவரை கேள்விப்படாத தகவல்!ஏன் அப்படி இருக்கு.

உங்கள் துறை அதன் புலம்பல் நன்றாக தெரிகிறது அதே மாதிரி என்னுடைய புலம்பலை குஜராத் பூகம்பத்தில் பார்க்கவும்.அரசு அலுவலகங்களை மேம்படுத்துவதில் ஏன் இவ்வளவு மெத்தனம் காட்டுகிறது என்று புரியவில்லை,நிதி பற்றாக்குறையாக இருக்குமோ! இல்லை பழைய கணினியை எப்படி தூக்கிப்போடுவது என்று தெரியாமல் முழிக்கிறார்களா?

THE UFO said...

மிகச்சிறப்பான இடுகை...suduthanni...! இரண்டு பாகமும்.

நீங்கள் சொல்வதுபோல எவ்வளவுதான் விமான நிலையங்களை தொழில்நுட்பவசதி பெற்றதாக ஆக்கினாலும், விமானிகள் போதையின்றி தெளிவாக இருந்தால்தான் தொழில்நுட்பவசதிகள் அர்த்தம் உள்ளதாக அமையும்.

மங்களூர் பல டேபிள்டாப் ரன்வேக்கள் உலகில் உள்ளன. விமான நிலையத்தை மட்டும் குற்றம் சொல்வது போதாது...

சில ஆண்டுகளுக்கு முன், 'சென்னை சர்வதேச விமான நிலையம்' என்று தவறாக நினைத்து(?!) பக்கத்தில் உள்ள மிலிட்டரி ஏர் பேசில்(?) மிக மிக சிறியதூர மற்றும் குறுகிய ரன்வேயில் கச்சிதமாக, இதைவிட பெரிய 2x5x2 இருக்கை வசதி கொண்ட சவூதி ஏர்லைன்சை தரை இறக்கவில்லையா? (அதற்காக அவ்விமானிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டது வேறு விஷயம்...) "விழிப்புடன்" / "சுய உணர்வுடன்" இருந்தால் எவ்வளவு குறுகலான/நீளம் குட்டையான ரன்வேயிலும் தரை இறக்க முடியும் என்பதே கவனிக்கப்பட வேண்டிய அம்சம் இங்கே! இந்தியாவிலேயே...சென்னை விமான நிலையத்தில்தான் அந்த இரண்டுவகை ரெடாரும் உள்ளதா? அட..! மேய்யாலுமேவா?

ஏர் இந்தியா பற்றி அதை உபயோகிக்கும் அனைவருக்குமே தெரியும். இதுவரை அது சரியான நேரத்தில் கிளம்பியதும், வந்தடைந்ததும் மிக மிக அரிது. சரியான நேரத்தில் கிளம்பினாலும் சரியான நேரத்தில் சேர்வது மிக அரிது. பலமுறை "ஒரு நாள் தாமதமெல்லாம்" அதற்கு சர்வசாதாரணம். திடீரென்று ரூட் மாத்தி விடுவது,திடீர் ரத்து(விமானக்கோளாறு அல்லது மினிஸ்டர் மகளுக்காக வெல்லாம்..!)என இதுவும் அடிக்கடி நடப்பதுதான். ஆறு மாதங்களுக்கு முன்னால் தமாமில் சுமார் முப்பத்து எட்டு பேர் போர்டிங் பாஸ் வாங்கியவர்களுக்கு சென்னை விமானத்தில் சீட் இல்லை!!! காரணம் : சென்னையிலிருந்து வந்தது சிறிய விமானம்???
பல முறை பல நாட்கள் விமானிகள் திடீர் வேலை நிறுத்தம்... விமானத்தில் சில சமயம் எ/சி வேலை செய்யாமல் போய்விடுதல்... சரியான உபசரிப்பு இல்லாமை... வயதான ஏர் ஹோஸ்டஸ்(?) என்று எவ்வளவோ பேருக்கு ஏர் இந்தியாவின் மீது வெறுப்பு இருகிறது.

இவை எல்லா வற்றையும் சகித்துக்கொள்ளலாம்.... சொல்லப்போனால் இவை எல்லாமும் ஒன்றுமே இல்லை...

ஆனால்...

ஒன்றே ஒன்றை மட்டும் மன்னிக்கவே முடியாது...
அதை சகித்துக்கொள்ளவே முடியாது...
கை மீறி போய் விட்ட அதை... நீங்கள் சுட்டிக்காட்டி உள்ளீர்கள்.

அது அந்த விமானிகள் நினைத்தால் மட்டுமே முடியும்...

(தொடரும்...part 2)

THE UFO said...

(part-2 continues...)

விமானிகள் குடித்து விட்டு போதையில் விமானத்தை ஓட்டுவது... (???!!!)
கொடுமை...

அவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானிகள், 'இது சிறிய டேபிள் டாப் ரன்வே என்று தெரிந்தும்- பிரேக் கண்ரோல் கிடைக்காது என்று நன்கு அறிந்தும்' பாதி ரன்வேயில் இறக்குவார்களா?இரவாய் இருந்தால் பரவாயில்லை. விடியறகாலைதானே...

அக்டோபர் 21, 2009 அன்று மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு கிளம்பத் தயாராக இருந்த ஏர் இந்தியாவின் போயிங் 777-200. இந்த விமானம் மிகவும் மதிப்பு வாய்ந்த பெருமைக்குரிய விமானமாகக் கருதப்பட்டு வந்தது. காரணம் இதுவரை ஒருநாள் கூட இந்த விமானம் தாமதமாகக் கிளம்பியதே இல்லையாம்.(அட அதிசயமே!!!)

மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு எங்கும் நிற்காமல் செல்லும் 'நான் - ஸ்டாப்' விமானம் இது. 11 வெவ்வேறு 'டைம் ஸோன்'களை ஒரே மூச்சில் கடந்து செல்லும் இந்த விமானம், பயணிகளுக்காகக் கூட 5 நிமிடம் தாமதித்ததில்லையாம். இதனால் எப்போதும் இந்த விமானத்தில் இடம் பிடிக்க, இந்திய - வெளிநாட்டுப் பயணிகள் பெரிதும் விரும்புவார்களாம்.

ஆனால் முதல்முறையாக தனது விமானியால் தாமதத்துக்குள்ளாகியிருக்கிறது இந்த விமானம். இந்த குடிபோதை கமாண்டரின் பெயரை ஏர் இந்தியா வெளியிடவில்லை.

45 நிமிட தாமததுக்குப் பிறகு, அதிகாலை 1.30 மணிக்கு மாற்று விமானி ராமலிங்கம் வந்த பிறகு கிளம்பிச் சென்றதாம்.

இந்தியாவில் விமானிகள் குடித்துவிட்டு விமானத்துக்குள் ஏறக் கூடாது என்பது விதி. அதற்காகவே குடிபோதை அறியும் டெஸ்ட் வைக்கிறார்கள். (இதை பறப்பதற்கு முன்னர்தான் வைக்கிறார்கள். பறந்துவிட்டு வரும்போது வைப்பது கிடையாது இல்லையா? அதனால், பறக்கும் பொழுது குடிக்கிறார்கள்.) இந்த டெஸ்டில் முதல்முறை மாட்டுபவர்களை எச்சரித்துவிடும் ஏர் இந்தியா, மறுமுறை மாட்டினால் சஸ்பெண்ட் செய்கிறது.

ஆனால் கடுமையான தண்டனை என்று எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில் குடிபோதையில் பைலட்டுகள் தூங்கிவிட, மும்பையில் இறங்க வேண்டிய விமானம் பாகிஸ்தானின் கராச்சி வரை போய் திரும்பியதெல்லாம் நடந்திருக்கிறது.(?????!!!!!)

நல்லவேளை.. அத்துமீறி அவர்கள் வானில் பறந்ததால் சண்டாளர்கள் அவசரப்பட்டு நம் விமானத்தை சுடாமல் விட்டார்களே...

Sabarinathan Arthanari said...

நல்ல பதிவுங்க

நன்றி

சுடுதண்ணி said...

நன்றி முத்துலெட்சுமி :)

நன்றி பார்சா குமாரன் :)

//எவ்வளவுதான் விமான நிலையங்களை தொழில்நுட்பவசதி பெற்றதாக ஆக்கினாலும், விமானிகள் போதையின்றி தெளிவாக இருந்தால்தான் தொழில்நுட்பவசதிகள் அர்த்தம் உள்ளதாக அமையும்.//
கண்டிப்பாக...

//இந்தியாவிலேயே...சென்னை விமான நிலையத்தில்தான் அந்த இரண்டுவகை ரெடாரும் உள்ளதா? அட..! மேய்யாலுமேவா?//

'தமிழகத்தில் உள்ளவற்றுள்', சுட்டிக்காட்டியமைக்கு நன்றி :).

அருமையானக் கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி UFO. மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் :). தொடர்ந்து வாங்க.

Mohanraj said...

மிக‌வும் நல்ல தகவல்கள்,மிக்க‌ நன்றி.

துளசி கோபால் said...

சுடுதண்ணி,

நீங்க எந்தத் துறையில் இருக்கீங்கன்னு என்னைக் கேட்டுக்கிட்டே இருக்கார் கோபால். அவருக்கு உங்க ரெண்டு இடுகையின் சுட்டியையும் அனுப்பி இருந்தேன்.

சுடுதண்ணி said...

மிக்க நன்றி மோகன்ராஜ் :) தொடர்ந்து வாங்க.

உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி துளசி கோபால். சில விவரங்களை பொதுவில் வைப்பதில் விருப்பமில்லை. மின்னஞ்சலில் (mannan8796@gmail.com) தொடர்பு கொண்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன் :)

//சுடுதண்ணி பெயரில் மட்டும் தான் டீச்சர். ஆனால் குளிர்ந்த நீர். பேச்சில் செயலில் வாழ்க்கையில் பழக்கத்தில்.

டீச்சர் ஒரு வருடத்தில் நான் பார்த்தவரைக்கும் எந்த பின்னோட்டத்திலும் இந்த " லயிப்பு" பார்க்கவில்லை.

காரணம் எளிமையான தமிழ்.

உண்மையிலேயே அரசன் தானே?
//

உங்கள் அன்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி ஜோதிஜி :). சில காரணங்களுக்காக சில வரிகளை நீக்கிவிட்டேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

ஜோதிஜி said...

ஆர்வகோளாறு? சரிதான்.

ரேவதி சீனிவாசன் said...

neenga inga iruka vendiya aale illa....very interesting post....na ipa india la iruken....adhan time kidaikala........unga aarvathuku nandri.....

சுடுதண்ணி said...

நன்றி ஜோதிஜி :).

மிக்க நன்றி ரேவதி சீனிவாசன். தொடர்ந்து வாங்க :D

Rithu`s Dad said...

அன்புள்ள சுடுதன்னிக்கு..
வணக்கங்களுடனும் வாழ்த்துக்களுடனும். இன்று தான் முதல் முறை இந்த தளத்திற்க்கு வந்தேன்.. அருமை, ஏன் இத்துனை நாள் பார்க்கவில்லை என்று வருத்தமே..

உங்கள் பதிவுகளை கானும் பொழுது உங்களுக்கும் என்போல் வானூர்தி,ராக்கெட், பறக்கும் விசயங்களில் ஆர்வம் என்று நினைக்கிறேன்.. ( நான் தேடித்தேடி படிப்பதோடு சரி)..
உங்களுடன் நண்பராய் இனைவதற்க்கு ஆயத்தமாயுள்ளேன்.. உங்கள் ஈ மெயில் முகவரி தெரிவிக்கவும். உங்களைப்பற்றியும் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்..
எனது ஈ மெயில்
ragumuthu@gmail.com


நன்றி

Rithu`s Dad said...

விமான பயனத்தில் மிக முக்கியமானதே “ டெக் ஆப் & லேண்டிங் “ தான். எவ்வளவு அனுபவமுள்ள பைலட் என்றாலும் மிக கவனமாக கையாளுவது இந்த இரு விசயங்களும் தான்.

பைலட் போதையிலும் மதுவிலும் விமானம் ஓட்டுவது எனக்கு தெரிந்து 90% இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். Pilots are the highly medically checked and verified professionals.

Also most of the airports (international) are now with the instrument landing system (2nd radar) and the Main radars are compulsory. Also the each International airports are classified with RATINGS from IATA and accordingly they allow aircrafts to operate in those airports.

Our domestic routes are not so crowded and i think most of the domestic airports are on the MAIN RADAR of the NEAREST INTERNATIONAL METRO AIRPORTS.. !!

ஒன்று சேர் said...

வாழ்த்துக்கள் தோழருக்கு-

தங்கள் இடுகை மூலம் விமானத்துறையைப்பற்றி பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடரட்டும் உமது எழுத்துப்பணி
எனது மின்னஞ்சல் முகவரி cgn.hrpc@gmail.com, cgn1961@in.com

தோழமையுடன் - சித்திரகுப்தன்

Karthick Chidambaram said...

மிக தாமதமாக உங்கள் பதிவுக்கு வருகிறேன். அருமையான வரிகள்.
ஆமாம் விமானிகள் தூங்கும் நேரம் மிக குறைவு என்று கூட கேள்வி.
மண் அழுத்தம், தூக்கமின்மை இது எல்லாம் இவர்களுக்கு இருக்கவே கூடாது. ஆனால் இருக்கு,
ஏன்தான் நம்ம உயிரோட அப்புறம் அவுங்க உயிரோடையும் விளையாடுறாங்களோ ?