Monday, May 12, 2014

இணையம் வெல்வோம் - 16

சிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.
உலகமெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டுத் தலைவர்களை கவுண்டமணியும் காது பொத்தும் அளவிற்கு நாராசமாய் கிண்டலடித்தும், நாட்டின் நிலவரங்களையும் தெரியப்படுத்தும் மின்னஞ்சல்களை ஐரோப்பிய யூனியனில் இருக்கும் முக்கிய ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும் வேலை சிகர்துருக்கு வழங்கப்பட்டதிலிருந்து சிகர்துரின் முக்கியத்துவத்தினை நாம் அறிந்து கொள்ளலாம். ஜூலியனின் வயதுக்கு வந்த மற்ற ஆலோசர்களும், நண்பர்களும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமலா போய்விடும் என்று ‘நாந்தேன் அப்பவே சொன்னேன்ல’ சொல்வதற்குக் காத்திருந்தனர்.
விக்கிலீக்ஸ் சார்பாக சிகர்துர் உலகம் சுற்றிக் கொண்டிருந்த நேரம் ஜூலியன் லண்டன் சிறையிலிருந்து பிணையில் வெளியாகி, விக்கிலீக்ஸ் ஆர்வலரான கேப்டன் வேகன் ஸ்மித்திற்குச் சொந்தமான எல்லிங்ஹாம் ஹால் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து அரசியல் தஞ்சம் கேட்டு ஈக்வடர் நாட்டு தூதரகத்திற்கு செல்லும் காலம் வரையிலும் ஜூலியனை நெருக்கமாக அடிக்கடி சந்தித்த நபர்களில் சிகர்துரும் அடக்கம். இன்று வரையிலும் ஜூலியன் லண்டனிலுள்ள ஈக்வடர் நாட்டுத் தூதரகத்தில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே சந்தேகப்பிராணியான ஜூலியன் தன்னுடன் இருக்கும் அனைவரையும் வேவு பார்க்குமளவுக்கு மன அழுத்தத்தில் இருந்த நேரம், அவ்வாறு வேவு பார்க்கப்பட்டவர்களில் தங்கியிருந்த பண்ணை வீட்டின் சொந்தக்காரரான கேப்டன் வேகன் ஸ்மித்தும் ஒருவர். இப்படி வேவு பார்த்து தகவல்களைத் திரட்டி ஜூலியனுக்கு அனுப்பி வைப்பது சிகர்துரின் வேலைகளுல் ஒன்று. வேவு பார்ப்பதென்றால் சம்பந்தப்பட்ட நபர்களின் கணிணியிலிருக்கும் தகவல்களை மொத்தமாக சுருட்டி அவற்றை அலசி ஆராய்வது, தினசரி நடவடிக்கைகள், சந்திப்புகள் ஆகியவற்றை நுண்ணிய கண்காணிப்புக் கருவிகள் மூலம் பதிவு செய்வது போன்றவையாகும்.

ஜூலியனை மேலும், மேலும் சந்தோசப்படுத்த, தனது அதிகாரங்கள் அதிகரிப்பது ஒருவித போதையாகி, பெயர்பெற்ற ஹேக்கர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் விக்கிலீக்ஸ் வெளியிடுவதற்கான ஆவணங்களை சேகரிப்பதில் கொண்டு போய் விட்டது. காக்கர் (Gawker) வலைப்பதிவுத் தளத்தினை கட்டுடைத்து தங்கள் பெயரினைப் பெரிதும் பேச வைத்த நோசிஸ்(Gnosis) எனும் ஹேக்கர் குழுவிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட சிகர்துர், பின்னர் அவர்கள் மூலம் 16 வயதே ஆன பெண் கேலா(Kayla) மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த 30 வயது நபர் சாபு(Sabu) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. கேலாவின் மூலம் பல கோப்புகள் கிடைத்தது சிகர்துருக்கு. முக்கியமாக ஐஸ்லாந்து அமைச்சரக இணையத்தளங்கள் மற்றும் மின் நிறுவனமான லான்ட்ஸ்நெட் ஆகியவற்றின் தளங்கள் தகர்ப்பதும் கேலாவின் உதவியோடு சிகர்துர் நடத்தி முடித்தாலும், அதில் எதிர்பார்த்த கிளுகிளுப்பும், கிக்கும் சிகர்துருக்குக் கிடைக்கவில்லை.

சாபுவிடம் தொடர்பு கொண்டு தான் இன்னும் பெரிதாக எதிர்பார்ப்பதாகவும், அவற்றினை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடுவதற்கு ஆவண செய்வதாகவும் சிகர்துர் சொல்ல, சாபுவோ முதலில் சிகர்துருக்கு விக்கிலீக்ஸில் இருக்கும் தொடர்பினை உறுதிப்படுத்தாமல் எதுவும் செய்ய மறுக்க, நேரடியாக ஜூலியனுடன் பேசிய பிறகே சாபு உதவி செய்ய சம்மதித்தாக சிகர்துர் சொன்னாலும் என்ன நடந்தது என்பது சாபுவுக்கும், ஜுலியனுக்குமே வெளிச்சம். அதற்குப் பிறகு வரிசையாக நடந்தேறியது அதிரடி சம்பவங்கள்.

சாபு
ஹேக்கிங் கில்லாடியான சாபுவின் திறமை அனானிமஸ் உலகில் மிகப்பிரபலம். லல்செக் (lulzec) எனப்படும் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களின் ஒருவர். லல்செக்கின் அதிரடி அட்டகாசங்கள் மிகப்பிரசித்தம். இவர்களின் தாக்குதலுக்கு அமெரிக்காவின் சிஐஏ இணையத்தளம் கூட தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாபுவின் திறமைகளின் வீரியம் சிகர்துர் கேட்டு முடிக்கும் முன்பே தகவல்களை கொட்டும் வேகத்தில் தெரிந்தது, கேட்ட கோப்புகள் எந்த நிறுவனம் அல்லது அமைப்பிற்குச் சொந்தமாக இருந்தாலும் உடனே அவர்களின் வலையமைப்பிற்குள் புகுந்து சுருட்டி அள்ளிவந்து கொட்டுவதில் சாபு கில்லாடி. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கும் தனியார் நிறுவனங்களான ஸ்ட்ரட்போர் (stratfor), லக்ஹீட் மார்ட்டின் (lockheed martin) உள்ளிட்ட நிறுவனங்களின் மின்னஞ்சல்களின் தொகுப்புகள் சாபுவின் மூலம் சிகர்துருக்குக் கையளிக்கப்பட்டது. இவை பின்னாளில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்த போது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளின் செயல்படும் முறைகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட விதங்கள் என அனைத்தும் சந்தி சிரித்தன. பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்ப்ட்ட பின்லேடனின் உடலுக்கு உண்மையில் என்ன நடந்தது போன்ற தகவல்கள் இம்மின்னஞ்சல்கள் மூலம் வெளிவந்தன.
ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக இருந்தாலும், சாபுவின் மூலம் தகவல்கள் மளமளவென கொட்டத் தொடங்கியதும், அத்தகவல்களின் வீரியமும் சிகரிதுரின் நிலைமையை ஷகீலா படம் பார்த்த வயசுப்பையனைப் போலாக்கியது. சாமத்தில் கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன. நள்ளிரவில் எப்.பி.ஐ கதவை உடைத்துக் கொண்டு சிகர்துரை அள்ளிப் போவது போலான பீதியை உண்டாக்கும் பயங்கள் தோன்ற ஆரம்பித்தன சிகர்துருக்கு. உலகமெங்கும் பரவியிருக்கும் காக்கர், நோசிஸ், மற்றும் லல்செக் போன்ற சிறு குழுக்கள் சேர்ந்தது தான் அனானிமஸ் என்பதும் அவர்களின் சகவாசம் எத்தகைய சிக்கலில் கொண்டு விடும் என்பது சிகர்துருக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்த போது தான் எந்த அளவுக்கு எதில் புதைந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. அது போக மற்றுமொரு விஷயமும் சிகர்துர் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அது கொலட்ரல் மர்டர் காணொளி மற்றும் தூதரக மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸிக்கு அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வழக்கினைச் சந்தித்து வரும் பிரட்லி மேனிங்கின் வழக்கினை நடத்துவதற்காக ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிரட்லி மேனிங் பாதுகாப்பு இயக்கத்திற்குப் பெருந்தொகை ஒன்றை நன்கொடையாகத் தருவதாக வாக்களித்திருந்த ஜூலியன் அதனை நிறைவேற்றவில்லை. அது குறித்த மனவருத்தமும் சிகர்துருக்கு ஜூலியனின் மீதிருந்த மதிப்பினை, நம்பகத்தன்மையைச் சிதைத்திருந்தது.

ஆகஸ்ட் 23, 2011 அன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவின் தூக்கம் வராமல் மன அழுத்தத்தில் தவித்த சிகர்துர் ஒரு முடிவுக்கு வந்து ‘உங்களைச் சந்திக்க வேண்டும்’  என்ற தகவலுடன் மின்னஞ்சல் ஒன்றை ஐஸ்லாந்து தலைநகர் ரெஜவிக்கில் (Reykjavik) உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அனுப்ப, உடனே வந்து சந்திக்க அழைப்பு வருகிறது சிகர்துருக்கு.

காலம் எத்தனையோ புதிர்களை நமக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ், அவர்களுக்குக்கிடையே உள்ள தொடர்புகள், தகவல் பறிமாற்றங்கள், விக்கிலீக்ஸ் விவாதத்தளங்களில் பங்கு பெற்றவர்கள் என்று சகல விவரங்களும் தெரிந்த,  ஜூலியனிடம் நெருங்கிப் பழகிய சிகர்துர் அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று வாக்குமூலமளிக்க செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது அத்தகைய புதிர்களில் ஒன்று. சிகர்துர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அனானிமஸ்கள், விக்கிலீக்ஸிற்கு ஏற்பட்டப் பின்னடைவு, தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய மரணங்கள்…

தொடரும்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

5 comments:

வடுவூர் குமார் said...

ஊப்! தலையை சுத்துது. பிரச்சனையின் பின்புலம் தெரிந்தவர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்.

Anonymous said...

Great Article.

Is this 100% true or, some little assumption also there?

Anonymous said...
This comment has been removed by the author.
சுடுதண்ணி said...

வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.

True story. வருகைக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ Alien

Thomas Ruban said...

பல சுவாரஸ்யமான புதிய தகவல்கலுடன் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது. சிகர்துர் இப்போது என்ன ஆனார்?
தொடர்க்கு நன்றி சார்..