Thursday, November 25, 2010

Virtual Private Network : VPN என்றால் என்ன? - 2 (முற்றும்)


சென்ற பகுதியைப் படித்த அன்பர்களுக்கு VPN குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கிடைத்திருக்கும். இப்பகுதியில் ஒரு VPN எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதென்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.



முதலில் VPN எத்தனை விதம், அவற்றின் தன்மை ஆகியவைப் பற்றி. முதல் வகை PPTN (point to point tunneling network) முறையில் அமைக்கப்படுவது. இது ஆதி வகை. இவ்வகை VPN செயல்பாட்டிற்கு உங்கள் வலையமைப்பின் வழங்கியிலும், எங்கோ இருந்து உங்கள் வலையமைப்பினைத் தொடர்பு கொள்ளும் கணினியிலும் VPN Client எனப்படும் மென்பொருள் தேவை. உங்கள் தகவல் தொடர்பு அனைத்துமே இம்மென்பொருள் வழியாகத் தான் கையாளப்படும். அந்த மென்பொருள் தான், PPTP ( point to point tunneling protocol) வழிமுறையைப் பின்பற்றி உங்கள் தகவல்களை கட்டமைத்து (data packets) பின்பு அவற்றை Internet protocol வழிமுறையில் மீண்டும் ஒருமுறை கட்டமைத்து இணையத்தில் ஏற்றி விடுவது வரை அனைத்து வேலைகளையும் செய்யும் சகலகலாவல்லவன். மொத்தத்தில் உங்கள் கணினியின் மென்பொருளுக்கும், வழங்கியின் மென்பொருளுக்கும் ஒரு ரகசியப்பாதை இணையத்தில் அமைக்கப்படும் (tunneling). இதனைத் தவிர, வீட்டைப் பூட்டி விட்டு பலமுறை பூட்டைப் பிடித்து தொங்கிப் பார்க்கும் நபர்களின் வசதிக்காகவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும் சங்கேதக் குறியீட்டுக்கான முறைகள் (Encryption), Firewall ஆகியவையும் பயன்படுத்தப்படுவதுண்டு (பார்க்க படம்).


இரண்டாவது வகை site to site VPN. இது கிட்டத்தட்ட முதல் வகை மாதிரி என்றாலும் அது இல்லை :D. எப்படி?. முதல் வகையில் ஒரு பக்கம் மட்டுமே வழங்கி (server) வலையமைப்பு இருக்கும். site to site VPN முறையில் இரண்டு பக்கமும் வலையமைப்பு, வழங்கி, Firewall போன்ற கட்டமைப்புகள் இருக்கும். மேலும் PPTPக்குப் பதிலாக IPsec (Internet protocol security protocol) என்னும் வழிமுறையினைப் பயன்படுத்தி தகவல்கள் இணையத்தில் ஏற்றப்படும். இவ்வேலையினைச் செய்வதற்கென பலவகை சிறப்பு உபகரணங்கள்(firewall & routers) இருக்கின்றன. இவ்வகை VPNகள் இணைய இணைப்பில் உள்ள இரண்டு பெரும் வலையமைப்புக்கள் பாதுகாப்பானத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.



மூன்றாம் வகை 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்' வகை. அதாவது காசு போனா போகுது, நமக்குப் பாதுகாப்புத் தான் முக்கியம் என்று தம் பிடித்து நிற்பவர்களுக்கான வகை. point to point VPN, இது VPN மூலம் பிரத்யேக தொடர்பினை பேணும் முறை (leased line) பார்க்க படம். இதன் மூலம் உங்கள் பயன்பாட்டுக்கும் மட்டுமேயென தனியான வலைத்தொடர்பை இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் மூலம்(ISP) பெற்றுக் கொள்ளலாம். உங்கள் பணப்பை பத்திரம்.


நான்காம் வகை VPN வகையிn உச்சம். MPLS (multi protocol label switching) VPN, எனப்படும் இவ்வகை பயன்படுத்தும் MPLS வழிமுறையிலான தொடர்புமுறை மிக சக்திவாய்ந்தது, ஒரே நேரத்தில் பத்து மடங்குக்கும் அதிகமான பல்வேறு விதமான தகவல் தொடர்புகளை கையாளும் திறன் வாய்ந்த இத்தொழில்நுட்பம் Ipsilon, Cisco, IBM, and Toshiba ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு. இதன் மூலம் அதிவேகம் மற்றும் இலகுவாக கூடுதல் வலை மையங்களை உங்கள் VPN வலையமைப்பினுள் இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

ஒரு VPN வலையமைப்பினைக் கட்டியமைத்து நிர்வகிப்பதென்பது எளிதான விஷயமல்ல. முதல் காரணம் அதற்குத் தேவைப்படும் பல தளங்களில் செயல்படும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு. எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணையே புடுங்கிச் செல்லும் அசகாய சூரர்கள் நிறைந்த இணைய உலகத்தில் பாதுகாப்பு மிக அவசியம். காரணம் VPN கள் பெரும்பாலும் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி கணினிமயப்படுத்தப்பட்ட நாட்டின் அமைச்சகங்களும் கூட பயன்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் வழங்கியில் சேமித்து வைக்கும் தகவல்கள், பறிமாறப்படும் தகவல்கள் ஆகியவை பெரும்பாலும் மிக ரகசியமானவையாகவே இருக்கும்.


இப்படி ஏகப்பட்டத் தலைவலிகள் இருப்பதனால் இதற்கென பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களே சொந்தமாக வழங்கிகள் (data centers) வைத்து அவற்றின் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து உங்கள் நிறுவன வலையமைப்பிற்கு VPN மூலம் வழங்குவார்கள். அது போன்ற நிறுவனங்களிடம் தேவைப்படும் அனைத்து வகை தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிறப்பானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இருக்கும் அல்லது இருக்க வேண்டும் :). ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு சேவையினை வழங்கும் இவர்கள் தகவல் பாதுகாப்பிற்கான சிறப்பு ஒப்பந்தங்கள் மூலமே நிறுவனங்களுக்கான சேவையினை வழங்குவார்கள். இவ்வகைத் தொழில்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் என்றும் சிறப்பான காலம் உண்டு.

வெகுப் பரவலாகி வரும் VPN தொழில்நுட்பம், கணிணி மயமாக்கப்படும் அரசு அமைச்சகங்களுக்கான விருப்பத் தேர்வாக இருப்பதால், விரைவில் சாமன்யனுக்கும் கைக்கெட்டப்போகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அப்படி ஒரு கால கட்டத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாலுகா அலுவலகத்தில் நுழைந்து, PPTN, IP sec, Firewall, Encryption, Site to Site, MPLS என்று தொடர்ச்சியாக பல கேள்விகளைக் கேட்டுத் திணறடிப்பதற்கு இப்பதிவு உதவுமானால் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துக் கொண்டு சுடுதண்ணி விடைபெறுகிறது.


பி.கு: ஆறு மாதங்களாக கொதிக்காமல் இருந்தாலும், சுடுதண்ணியை மறக்காமல் நினைவில் வைத்து ஆதரவும், ஊக்கமும் தரும் அன்பர்களுக்கு நன்றி.. நன்றி... நன்றி..



20 comments:

சூர்யா ௧ண்ணன் said...

மிகவும் பயனுள்ள விரிவான இடுகை..எளிமையாக விளக்கியுள்ளீர்கள் அருமை! மிக்க நன்றி நண்பரே!

சுடுதண்ணி said...

மிக்க நன்றி சூர்யா. தொடர்ந்து வாங்க. தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது :)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான பதிவு....

puduvaisiva said...

இப்படி எல்லா தொழில் நுட்ப வசதிகளும் அரசு செய்து கொடுத்தாலும் அப்பவும் டோட்டாவை அப் டேட் செய்து தரமாட்டங்க நம்ப சூர புலிகள். பொது மக்கள் தகவல் கேட்டா சர்வர் கோளாறு நாளைக்கு வாங்கனு ரொம்ப கூலா சொல்லுவாங்க. அப்ப லஞ்சம் கொடுத்து பாருங்க சர்வர் என்ன என்ன சர்வலோக தகவலும் தறுவாங்க. :-)

நன்றி சுடுதண்ணி அண்ணே

எஸ்.கே said...

VPN பற்றி தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்! ரொம்ப விரிவா நல்லா எழுதி இருக்கீங்க! மிக்க நன்றி!

Marimuthu Udhayakumar said...

உங்கள் VPN பற்றிய விளக்கங்கள் மிகவும் பயனுள்ளத்க விளங்கிற்று !!!!!

நன்றிகள் தோழரே !!!!!!!!1

சுடுதண்ணி said...

சிரிப்பு வந்தாலும், சிரிப்பு மறையும் போது வேதனையும் படர்கிறது சிவா... ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

மிக்க மகிழ்ச்சி எஸ்.கே, தொடர்ந்து வாங்க..

மிக்க நன்றி உதயகுமார், தொடர்ந்து வாங்க..

அகல்விளக்கு said...

ரொம்ப விளக்கமான இடுகை நண்பா...

VPN பற்றி நிறைய அறிந்து கொண்டேன்....

பகிர்வுக்கு நன்றி நண்பா.... :-)

Unknown said...

god bless you
thank you. useful information.
i have lot of doubt about internet. may you help me? i am tamilan.

Unknown said...

நன்றி பகிர்வுக்கு..தெளிவான விளக்கம் எளிய முறையில்..

அன்பரசன் said...

நல்ல பகிர்வு.

மைக் முனுசாமி said...

உங்க பக்கத்துக்கு வந்து வந்து பாத்து போரடிச்சி போச்சி ஒரு பதிவும் போடலைன்னு. இப்பதான் மனசு சந்தோஷமா இருக்கு. ஏதாவது ஒரு பதிவு போட்டுகிட்டே இருங்க சார்...

Balakumar Vijayaraman said...

அருமையான, எளிமையான விளக்கம். மிக்க நன்றி.

நண்பர்களுக்கும் சொல்கிறேன்.

ஜோதிஜி said...

நான் போட்ட முந்தைய பின்னோட்டம் வரவில்லையோ?

சுடுதண்ணி said...

மிக்க நன்றி @ உலவு :)

மகிழ்ச்சி நண்பா @ அகல்விளக்கு :)

மிக்க நன்றி சுல்தான். நிச்சயமாக, தொடர்பு கொள்ளுங்கள்.

ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நந்தா :)

மிக்க நன்றி @அன்பரசன்.

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி முனுசாமி. இனி தொடர்ச்சியாக எழுத முயற்சிக்கிறேன் :).

ஊக்கத்துக்கு மிக்க நன்றி @ பாலகுமார்.

வரலையே... @ ஜோதிஜி :)

vasu said...

பதிவு மிகவும் அருமையாக உள்ளது.... நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவிட ஆரம்பித்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி...

Ravichandran Somu said...

எளிமையாக, அட்டகாசமான எழுத்து நடையில் விளக்கி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்!

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி வாசு, ரவிச்சந்திரன். தொடர்ந்து வாங்க :)

S.Lankeswaran said...

எளிமையாக விரிவாக விளக்கியதற்கு மிக்க நன்றிகள்.

Guru said...

அருமை...
முதல் முறை உங்கள் பதிவுலகில் பிரவேசிக்கிறேன்...
எளிமையான நடையில் இயல்பான உதாரணங்களுடன் ஓர் தேர்ந்த ஆசிரியனை போன்ற உங்கள் நடை பாராட்டுதலுக்குறியது.
நிறைய எழுதுங்கள்... நிறைவாய் பயில்கிறோம்.
நன்றி