Showing posts with label அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல். Show all posts
Showing posts with label அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல். Show all posts

Friday, November 26, 2010

பணம் காய்க்கும் மரம் - ATM : ஒரு பார்வை

பொருளாதாரம் தேயும் சமயங்களில் விரக்தியில் அனேகம் பேர் சொல்லும் வசனம், ' பணம் என்ன மரத்துலயா காய்க்குது'. இதை எப்படியோ உளவுபார்க்கும் செயற்கைக்கோள்கள் மூலம் ஒட்டுக்கேட்ட வெள்ளைகாரன் கண்டுபிடிச்சது தான் ATM (Automatic Teller/Banking Machine) என்கிற தானியங்கி இயந்திரம். உண்மையில் இதைக் கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக இருந்து நெம்பி விட்டது காசு போட்டால் மிட்டாய் கொடுக்கும் இயந்திரங்கள். ATM என்றால் தூரத்தில் நின்று என்னவோ, ஏதோ என்று பார்த்து விட்டு நம்பிக்கையில்லாமல் நகர்ந்து சென்ற காலங்கள் மலையேறி, இன்று உபயோகிக்காதவர்கள் மிக மிகக் குறைவெனும் விதத்தில் மக்களின் நம்பிக்கையை காலத்தால் வென்ற சாதனை நாயகன்.



என்ன தான் இருந்தாலும் இதன் வெற்றியில், வாடிக்கையாளர்களைப் பல மணி நேரம் வரிசையில் நிற்க விட்டு வெறியேற்றி அனுப்பும் வங்கிகள் முக்கியப் பங்காற்றி, புதிய தொழில்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை செவ்வனே செய்து முடித்ததை நாம் மறுக்க முடியாது :). நேரே ATM சென்று அட்டையை உள்ளிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் அவசர யுகத்தில் அது எப்படி செயல்படுகிறது, எவ்வளவு தூரம் பாதுகாப்பானது, அதன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தான அறிமுகமே இப்பதிவு.



முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ATM என்பது ஒரு வெற்றுக் கணினி மட்டுமே (dumb system). உங்கள் அட்டையினை உள்வாங்கிக் கொண்டதும், அட்டையின் தகவல்களைப் படித்து, உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் அடங்கிய வலையமைப்பின் வழங்கியினைத் தொடர்பு கொண்டு உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் ஆகியவை சரிதானா என்று உறுதி செய்யும். பின்னர் நம் பணப்பறிமாற்றத்தினை உங்கள் வங்கிக்கணக்கின் பண இருப்பினை வைத்து உறுதி செய்து பணத்தினை வழங்கும். இந்த மொத்த நடவடிக்கைகளும் முடியும் வரை மட்டுமே உங்கள் அட்டை எண் மற்றும் உங்கள் கடவுச்சொல் தற்காலிகமாக ATM கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும். அதன்பின் அவை அழிக்கப்பட்டு விடும். பணத்தாள்களை வெளியிடும் போது அவற்றின் தடிமனை வைத்தே கணக்கிடப்படும், தடிமன் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவை தனியே ஒதுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பரமாரிப்பு மற்றும் பணத்தாள்களை வைப்பதற்காக வரும் அதிகாரிகள் அவ்வாறு ஒதுக்கப்பட்ட தாள்களை சேகரித்து மறுஆய்வுக்கு எடுத்துச் செல்வர்.



மின்னஞ்சல், கணினி மற்றும் இதர இணைய வசதிகளுக்கே கடவுச்சொலை அப்படி வை, இப்படி வை என்று ஏகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் கணினியுலகம், ஒருவரது வங்கிக்கணக்கினை கையாளும் ATM இயந்திரங்களுக்கு வெறும் நான்கு இலக்கங்கள் மட்டுமே வைத்திருப்பது ஏன் என்று யோசித்திருக்கிறீர்களா?. நான்கு இலக்கங்கள் பாதுகாப்பானைவையே அல்ல, மொத்தம் பத்தாயிரம் கடவுச்சொற்களே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களால் பாவிக்கப்படுகிறது. அதனால் தான் முதல் மூன்று முறை தவறான கடவுச்சொல்லை உள்ளிட்டால் உங்கள் வங்கிக்கணக்கு முடக்கப்படுகிறது. அப்படியும் முதல் மூன்று முறைக்குள்ளேயே உங்கள் கடவுச்சொல் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஒரு நாளைக்கு எடுக்கப்படும் பணத்திற்கென்று அளவுமுறை வைத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பணம் கொஞ்சம், கொஞ்சமாக மட்டும் நிதானமாகக் களவாடப்படும். அதற்குள் விழிப்படைந்து வங்கியில் முறையிட்டு பணத்தைக் காப்பாற்றிக் கொள்வது நம் திறமை.


ஒவ்வொரு வங்கியும் அவர்களுக்கென்று ஒரு ஆரம்பக் கடவுச்சொல் வைத்திருப்பார்கள் (0000, 1234), முதல் முறை உங்களிடம் அட்டை வழங்கப்படும் போது அந்த கடவுச்சொல் தான் இருக்கும், பின்பு நாம் அதனை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். அப்படி நாம் மாற்றும் எண்ணுக்கும், ஆரம்பக் கடவுச்சொல் எண்ணுக்கும் உள்ள வித்தியாசம் (offset value), உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ள வழங்கியில் சேமிக்கப்படும். ஒவ்வொரும் முறை நீங்கள் ATM உபயோகிக்கும் போதும் உங்கள் கடவுச்சொல் மற்றும் வங்கியின் ஆரம்பக் கடவுச்சொல் ஆகிய இரண்டும் இடையே உள்ள வித்தியாசம் தான் சரிபார்க்கப் படுகிறதே தவிர நேரடியாக உங்கள் கடவுச்சொல் சரிபார்க்கப்படுவதில்லை என்பது உபரித் தகவல். சர்வதேச தரக்கோட்ப்பாட்டின் படி 4 முதல் 12 இலக்கங்கள் வரை கடவுச்சொல்லாக பயன்படுத்தலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இருந்தாலும் இத்தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஷெப்பர்ட் பரன், தன் சோதனை முயற்சிகளின் போது தன் மனைவியின் உதவியினை நாடினார். ஷெப்பர்டின் மனைவியோ 'என்னால 4 தான் ஞாபகத்துல வச்சுக்க முடியும்' என்று வெட்டு ஒன்று துண்டு நான்காக சொல்லிவிட்டதால், வேறுவழியின்றி தலையாட்டிய ஷெப்பர்டின் சம்சார விசுவாசத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு இன்றும் நான்கு இலக்கங்களே பயன்படுத்தப்பட்டு வருகிறது. விதிவிலக்காக ஸ்விஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலக்கங்கள் கொண்ட கடவுச்சொற்கள் பயன்படுத்தப்படுவதாகக் கேள்வி. நீங்கள் அதுபோன்ற இடங்களில் இருந்து வாசிப்பவராக இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிச் சென்றால் சிறப்பு, சொல்லாமல் சென்றால் அதனினும் சிறப்பு :). மேலும் திரைகடலோடும் காலங்களில் நாணய மாற்றுக்கு ATM பயன்படுத்துவது லாபகரமானதென்றாலும் அதற்கு வங்கி உங்கள் மீது வி(மி)திக்கும் சேவைக் கட்டணத்தைப் பொறுத்துப் பயன்படுத்திக் கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறது.


தொழில்நுட்ப விவரங்களையும் தாண்டி சில பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவது சாலவும் நன்று. உங்கள் வங்கி அட்டையின் பின்பக்கத்திலேயே மிகத் தெளிவாக, அழகான கையெழுத்தில் கடவுச் சொல்லை எழுதி வைப்பது, ATM இயந்திரத்தின் அருகே சென்று நின்று கொண்டு, வில்லங்கமானவர்கள் தாக்குவதற்கு வசதியாக தலை முழுவதையும் உங்கள் பர்ஸுக்குள் நுழைத்து அட்டையைத் தேடி கொண்டிருப்பது, விளக்கு வெளிச்சம் அதிகமில்லாத ATM இயந்திரத்தைப் பயன்படுத்துவது போன்றவை 'தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட தானைத் தலைவன்' என்று எல்லாராலும் அன்போடு அழைக்கப்பட ஏதுவாயிருக்கச் செய்யும் செயல்கள். போலி அட்டைகள் உருவாக்குவதில் நாம் இளம் விஞ்ஞானிகள் நூறு ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிப்பதால், அடிக்கடி ATMல் புழங்கும் அன்பர்கள், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை உங்கள் வங்கிக் கணக்கின் பணப்பறிமாற்றத் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலதிக பாதுகாப்பு அறிவுரைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்து கொள்ளும் வாசர்களுக்கு சிறப்புப் பாராட்டுக்கள் அதிரடிப் பரிசாக வழங்கப்படும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு இப்பதிவு நிறைவடைகிறது.



அடுத்த முறை ATM இயந்திரத்தின் அருகில் சென்றதும் சுடுதண்ணி நினைவுக்கு வந்தால் உடனே தொடர்பு கொண்டு, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் :). நன்றி.

Thursday, November 25, 2010

Virtual Private Network : VPN என்றால் என்ன? - 2 (முற்றும்)


சென்ற பகுதியைப் படித்த அன்பர்களுக்கு VPN குறித்து ஓரளவுக்கு அறிமுகம் கிடைத்திருக்கும். இப்பகுதியில் ஒரு VPN எவ்வாறு கட்டமைக்கப்படுகிறதென்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.



முதலில் VPN எத்தனை விதம், அவற்றின் தன்மை ஆகியவைப் பற்றி. முதல் வகை PPTN (point to point tunneling network) முறையில் அமைக்கப்படுவது. இது ஆதி வகை. இவ்வகை VPN செயல்பாட்டிற்கு உங்கள் வலையமைப்பின் வழங்கியிலும், எங்கோ இருந்து உங்கள் வலையமைப்பினைத் தொடர்பு கொள்ளும் கணினியிலும் VPN Client எனப்படும் மென்பொருள் தேவை. உங்கள் தகவல் தொடர்பு அனைத்துமே இம்மென்பொருள் வழியாகத் தான் கையாளப்படும். அந்த மென்பொருள் தான், PPTP ( point to point tunneling protocol) வழிமுறையைப் பின்பற்றி உங்கள் தகவல்களை கட்டமைத்து (data packets) பின்பு அவற்றை Internet protocol வழிமுறையில் மீண்டும் ஒருமுறை கட்டமைத்து இணையத்தில் ஏற்றி விடுவது வரை அனைத்து வேலைகளையும் செய்யும் சகலகலாவல்லவன். மொத்தத்தில் உங்கள் கணினியின் மென்பொருளுக்கும், வழங்கியின் மென்பொருளுக்கும் ஒரு ரகசியப்பாதை இணையத்தில் அமைக்கப்படும் (tunneling). இதனைத் தவிர, வீட்டைப் பூட்டி விட்டு பலமுறை பூட்டைப் பிடித்து தொங்கிப் பார்க்கும் நபர்களின் வசதிக்காகவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும் சங்கேதக் குறியீட்டுக்கான முறைகள் (Encryption), Firewall ஆகியவையும் பயன்படுத்தப்படுவதுண்டு (பார்க்க படம்).


இரண்டாவது வகை site to site VPN. இது கிட்டத்தட்ட முதல் வகை மாதிரி என்றாலும் அது இல்லை :D. எப்படி?. முதல் வகையில் ஒரு பக்கம் மட்டுமே வழங்கி (server) வலையமைப்பு இருக்கும். site to site VPN முறையில் இரண்டு பக்கமும் வலையமைப்பு, வழங்கி, Firewall போன்ற கட்டமைப்புகள் இருக்கும். மேலும் PPTPக்குப் பதிலாக IPsec (Internet protocol security protocol) என்னும் வழிமுறையினைப் பயன்படுத்தி தகவல்கள் இணையத்தில் ஏற்றப்படும். இவ்வேலையினைச் செய்வதற்கென பலவகை சிறப்பு உபகரணங்கள்(firewall & routers) இருக்கின்றன. இவ்வகை VPNகள் இணைய இணைப்பில் உள்ள இரண்டு பெரும் வலையமைப்புக்கள் பாதுகாப்பானத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.



மூன்றாம் வகை 'எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர்' வகை. அதாவது காசு போனா போகுது, நமக்குப் பாதுகாப்புத் தான் முக்கியம் என்று தம் பிடித்து நிற்பவர்களுக்கான வகை. point to point VPN, இது VPN மூலம் பிரத்யேக தொடர்பினை பேணும் முறை (leased line) பார்க்க படம். இதன் மூலம் உங்கள் பயன்பாட்டுக்கும் மட்டுமேயென தனியான வலைத்தொடர்பை இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்களின் மூலம்(ISP) பெற்றுக் கொள்ளலாம். உங்கள் பணப்பை பத்திரம்.


நான்காம் வகை VPN வகையிn உச்சம். MPLS (multi protocol label switching) VPN, எனப்படும் இவ்வகை பயன்படுத்தும் MPLS வழிமுறையிலான தொடர்புமுறை மிக சக்திவாய்ந்தது, ஒரே நேரத்தில் பத்து மடங்குக்கும் அதிகமான பல்வேறு விதமான தகவல் தொடர்புகளை கையாளும் திறன் வாய்ந்த இத்தொழில்நுட்பம் Ipsilon, Cisco, IBM, and Toshiba ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு. இதன் மூலம் அதிவேகம் மற்றும் இலகுவாக கூடுதல் வலை மையங்களை உங்கள் VPN வலையமைப்பினுள் இணைத்துக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.

ஒரு VPN வலையமைப்பினைக் கட்டியமைத்து நிர்வகிப்பதென்பது எளிதான விஷயமல்ல. முதல் காரணம் அதற்குத் தேவைப்படும் பல தளங்களில் செயல்படும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்பு. எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணையே புடுங்கிச் செல்லும் அசகாய சூரர்கள் நிறைந்த இணைய உலகத்தில் பாதுகாப்பு மிக அவசியம். காரணம் VPN கள் பெரும்பாலும் மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி கணினிமயப்படுத்தப்பட்ட நாட்டின் அமைச்சகங்களும் கூட பயன்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் வழங்கியில் சேமித்து வைக்கும் தகவல்கள், பறிமாறப்படும் தகவல்கள் ஆகியவை பெரும்பாலும் மிக ரகசியமானவையாகவே இருக்கும்.


இப்படி ஏகப்பட்டத் தலைவலிகள் இருப்பதனால் இதற்கென பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களே சொந்தமாக வழங்கிகள் (data centers) வைத்து அவற்றின் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து உங்கள் நிறுவன வலையமைப்பிற்கு VPN மூலம் வழங்குவார்கள். அது போன்ற நிறுவனங்களிடம் தேவைப்படும் அனைத்து வகை தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சிறப்பானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இருக்கும் அல்லது இருக்க வேண்டும் :). ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு சேவையினை வழங்கும் இவர்கள் தகவல் பாதுகாப்பிற்கான சிறப்பு ஒப்பந்தங்கள் மூலமே நிறுவனங்களுக்கான சேவையினை வழங்குவார்கள். இவ்வகைத் தொழில்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் என்றும் சிறப்பான காலம் உண்டு.

வெகுப் பரவலாகி வரும் VPN தொழில்நுட்பம், கணிணி மயமாக்கப்படும் அரசு அமைச்சகங்களுக்கான விருப்பத் தேர்வாக இருப்பதால், விரைவில் சாமன்யனுக்கும் கைக்கெட்டப்போகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அப்படி ஒரு கால கட்டத்தில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாலுகா அலுவலகத்தில் நுழைந்து, PPTN, IP sec, Firewall, Encryption, Site to Site, MPLS என்று தொடர்ச்சியாக பல கேள்விகளைக் கேட்டுத் திணறடிப்பதற்கு இப்பதிவு உதவுமானால் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துக் கொண்டு சுடுதண்ணி விடைபெறுகிறது.


பி.கு: ஆறு மாதங்களாக கொதிக்காமல் இருந்தாலும், சுடுதண்ணியை மறக்காமல் நினைவில் வைத்து ஆதரவும், ஊக்கமும் தரும் அன்பர்களுக்கு நன்றி.. நன்றி... நன்றி..



Wednesday, November 24, 2010

Virtual Private Network : VPN என்றால் என்ன? - 1


' Virtual Private Network என்பது எல்லாருக்கும் கேட்கிற மாதிரி ரகசியமாப் பேசுறது' என்று சொன்னால் கமலஹாசன் பேட்டி போல் ஆகிவிடும் என்பதால், சற்றே எளிமையாக, புரியும் படியாக VPN குறித்து இப்பதிவில் காண்போம்.

VPN சாமானியர்களுக்கு இன்னும் வசப்படவில்லையெனினும், நாளுக்கு நாள் ஊழல் தொகை பெருக்கத்துக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இருக்கும் போட்டியை வைத்துப் பார்க்கும் போது விரைவில் ரகசியமாய் டாஸ்மாக்கில் யாருக்கும் தெரியாமல் VPN மூலம் சரக்கு கொள்முதல் செய்து கொள்ளும் வசதி இலவசம் என்று தேர்தல் அறிக்கை வர வாய்ப்பிருக்கும் காரணத்தால், VPN என்று கேட்டவுடன் ஆச்சர்யப்பட்டு விடாமல் எகிறி அடிக்கும் வசதியை அளிக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையே இப்பதிவு.


VPN பற்றி விளக்கிச் சொல்ல உதாரணத்திற்கு ரொம்ப தூரம் போக வேண்டியதில்லை. கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் புதுமணத்தம்பதியர் எல்லாருக்கும் நடுவில் சங்கேதமாய் சில வார்த்தைகளில் பேசிக் கொள்வது தான் இத்தொழில்நுட்பத்தின் அடிப்படை விஞ்ஞானம். பொதுவில் கேட்பதற்கு சாதரணமாய்ப் பேசிக் கொள்வது போல் இருந்தாலும், பேசுபவருக்கும் - கேட்பவருக்கும் இடையில் அதற்கான புரிதலில் மின்சாரம் பொறி பறக்கும். இந்த விஷயத்தைத் தான், நம் தமில் பேசும் தொலைக்காட்சிகளில் ஏதாவது சில மொக்கைப் பாடல்களைத் திரும்பத் திரும்ப ஓட விட்டு, திரைக்கு அடியில் நேயர்களின் குறுந்தகவல்களை ஓட விடும் அளவுக்கு வளர்த்திருக்கிறார்கள். Hi kutti, I luv u, Good night - Neo" என்று குறுந்தகவல் ஒடினாலும் யார்,யாருக்கு கொடுக்கும் தகவல் என்பது அந்த குட்டிக்கும், நியொவுக்குமே வெளிச்சம். இப்படி 152 நாடுகளில் பார்க்கப்படும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் முழுமையான ரகசியாமாய் நம் கண் முன்னே எப்படி தகவல்கள் பறக்கின்றனவோ அதே போல் உலகமே கூடிக் கும்மியடிக்கும் இணையத்தினைப் பயன்படுத்தி ரகசியமாய், பிரத்யேகமாய்த் தொடர்பு கொள்வதே VPN தொழில்நுட்பம்.


வலையமைப்பில் தொடர்பு கொள்வதற்கு பல நூறு வரைமுறைகள் உள்ளன (Protocols), அவை தகவல் தொடர்புமுறைகளை நெறிப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் பாதுகாப்பினையும் வழங்குகின்றன. அதுபோல் VPN செயல்பாட்டிற்கென பல பிரத்யேக வழிமுறைகள் உள்ளன, அவை மூலம் தகவல் அனுப்புபவரிடத்திலும், பெறுபவரிடத்திலும் தகவல்கள் அவர்களுக்கும் புரியும் வண்ணம் மாற்றி வழங்கப்படும். இவற்றுக்கென சிறப்பு உபகரணங்களும் உள்ளன.


அதெல்லாம் சரி, இ்தன் மூலம் யாருக்கு என்ன பயன்? எவருக்கு உதவுகிறது என்று போர்க்குரல் எழுப்பும் அன்பர்கள் சிறப்பானக் கைதட்டல்களை பெற்றுக் கொண்டு தொடர்ந்து படிக்கவும். இன்றைய பொருளாதார தாராளமயமாக்கலில் மொத்த பூமிப் பந்தும், கூகுளுக்குள் அட்ங்கிப் போனது போல், எல்லைகளின்றி தொழில் வளர்க்கும் பெரும் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிபவர்கள் உலகின் எந்த மூலையாக இருந்தாலும், உடனுக்குடன் ரகசியமாக தங்கள் நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதற்கும், மென்பொருள் வல்லுநர்கள் வீட்டிலிருந்த படியே வெட்டி முறிப்பதற்கும், மிகச்சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்கள் கணக்குப் பறிமாற்றத்திற்கும் கூட VPN தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றன.

VPN வருவதற்கு முன்னர் மேற்கூறியவையெல்லாம் நடக்காமல் இருக்கவில்லை. பிரத்யேக தொலைதொடர்பு முறையில் (leased line) நடந்தன, இருந்தாலும் அதற்கான செலவு மிக மிக அதிகம். இன்று VPN மூலம் சில்லறைச் செலவில் ஆலிவர் ரோட்டில் இருந்து கொண்டே மத்திய கிழக்கில் உள்ள etisalat நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய முடியும் :D, ரகசியமாக, பாதுகாப்பாக.

சாதாரணமாக இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் போது சங்கேதக் குறிப்பு முறையில் (encryption) பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ள முடியும், இருந்தாலும் VPN எவ்வகையில் முக்கியத்துவம் பெறுகிறது, இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு, VPN தொழில் வாய்ப்புகள், ஆகியவை குறித்து அடுத்த பகுதியில் தொடரும்.

Monday, April 12, 2010

வடமில்லா வலையமைப்பு (WiFi) - ஒரு பார்வை : 4 (முற்றும்)



விளம்பர இடைவேளைக்கு பிறகு வடமில்லா வலையமைப்பின் பாதுகாப்பு விவரங்கள் தொடர்கின்றன.

Wireless Encryption / சங்கேதக் குறியீட்டு முறைகள்:

தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் wireless அல்லது WiFi என்ற பகுதிக்குச் சென்றால் வலையமைப்பின் தொடர்பு முறைக்கு என்னென்ன சங்கேதக் குறியீட்டு முறைகளைப் பின்பற்றுவது (encryption methods) போன்ற விவரங்கள் இருக்கும். இம்முறைகளில் WEP (wireless encryption protocol) மற்றும் WPA/WPA2 (WiFi Protected Access) என்று இரண்டு உண்டு. WEP முறைக்கு WEAK encryption protocol என்ற பெயரும் உண்டு. WEP சற்றுப் பழைய கஞ்சி தான் என்றாலும், வலையமைப்பு விஷயங்கள் தெரிந்தவருக்கு WEP முறையை உடைப்பதற்கு 60 நொடிகள் போதும் :D. இன்றைய தேதிக்கு WPA முறையே சிறந்தது. WPA பயன்படுத்துவதற்கு உங்கள் இயங்குதளத்தில் (operating system) அதற்கான கோப்புகள் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் இங்கே சென்று தறவிறக்கம் செய்து கொள்ளலாம்.


முதலில் WEP எப்படி செயல்படுகிறது?. பறிமாறிக் கொள்ளும் தகவல்களைச் சங்கேதக் குறியீடுகளாக மாற்றுவதற்கான குறிச்சொல்லை (encryption key) வழங்கிவிட்டால், அதற்கேற்ப தகவல்கள் மாற்றப்பட்டு அனுப்பப்படும். அந்த குறிச்சொல்லை வடமில்லா வலையமைப்பிற்கான தொடர்புப் புள்ளி மற்றும் பயன்படுத்தும் கணினி என இரண்டு பக்கமும் உள்ளிட்டால் மட்டுமே தொடர்பு சாத்தியப்படும் என்பது நினைவில் கொள்ளவும். ஒரு குறிச்சொல்லை வைத்துக் கொண்டு காலம் முழுக்க தகவல் பறிமாறிக்கொள்வது ஆபத்தானது. மொழி தெரியாத ஊரில் என்ன பேசுகிறார்கள் என்பது ஆரம்பத்தில் புரியாவிட்டாலும் சில காலம் கழித்து நாம் அந்த மொழியைக் கற்றுக் கொள்வதைப் போல, உங்கள் வலையமைப்பினை தொடர்ந்து நோட்டம் விட்டால் அக்குறிச்சொல்லைக் கண்டுபிடிப்பது எளிது. இதுவே WEP பெரிதும் நம்பப்படாமல் போனதற்கான காரணம்.

WEP/WPA ஆகியவற்றுக்கு உங்கள் கணினியைத் தயார்ப்படுத்துவதற்கு control panel-> network connections -> wireless network -> properties என்ற இடத்திற்குச் சென்று WEP/WPA தேவையானதைத் தேர்வு செய்து குறிச்சொற்களை இடவும் (பார்க்க படம்) . இக்குறிச்சொற்களும், தொடர்புப்புள்ளியின் குறிச்சொற்களும் ஒன்றாக இருப்பது அவசியம்.

அடுத்து WPA/WPA2. இதில் முதன்முதலில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள மட்டுமே நாம் வழங்கும் குறிச்சொல் (pre shared key) பயன்படுத்தப்படும். அதன் பின் குறிப்பிட்டக் கால இடைவெளியில் குறிச்சொல் தானாகவே மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் இத்தொடர்பு முறையை உடைப்பது மிகமிக கடினம். இதனை செயல்படுத்துவதற்கு உங்கள் தொடர்புப் புள்ளியில் இதற்கான மென்பொருள் பக்கத்துக்குச் சென்று WPA என்பதனைத் தேர்வு செய்து, PSK என்ற இடத்தில் குறிச்சொல்லை வழங்கி பின்னர் group key interval/Rekey interval என்ற இடத்தில் எத்தனை நொடிகளுக்கு ஒருமுறை உங்கள் குறிச்சொல் மாற்றப்பட வேண்டும் என்பதனையும் உள்ளிட்டு சேமித்து விட்டால் உங்கள் பாதுகாப்பான வடமில்லா வலையமைப்புத் தயார்.

SSID (Service Set Identifier)/சேவைப்பெயர் :

SSID என்பது உங்கள் தொடர்புப் புள்ளியின் சேவைக்கான பெயர். அந்த பெயரிலே தான் உங்கள் தொடர்பு புள்ளி காற்றிலே பரப்பப்படும். வடமில்லா வலையமைப்பு உபகரணங்களின் சேவைப்பெயர்களாக பெரும்பாலும் தயாரிப்பாளர்களின் பெயரையே சேமித்து வைத்திருப்பார்கள் (ஒரு வெளம்பரம்ம்ம்). அதனை முதல் வேலையாக மாற்றிவிடுவது இனிது. அதனினும் இனிது உங்கள் SSID broadcasting என்ற தேர்வைச் செயலிழக்க செய்து விடுவது. உங்களின் சேவைப்பெயர் உங்களுக்கு மட்டுமே தெரிந்தால் போதுமானது.

MAC address filtering:

MAC (media access control) address என்பது அனைத்து வலையமைப்பு உபகரணங்களிலும் அதனைப் பெற்றெடுத்தத் தயாரிப்பாளர்கள் வைக்கும் பெயர். உங்களின் கணினி, வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளி ஆகிய அனைத்துக்கும் இந்தப் பெயர் இருக்கும். தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் Wireless Management/ MAC Filter ஆகியவற்றிற்கானப் பக்கத்துக்குச் சென்று எந்தெந்த பெயர்களை(MAC address) மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உள்ளிட்டால், அவற்றைத் தவிர வேறு யாரும் உங்கள் வலையமைப்பில் நுழைய முடியாது. இந்த முறை பாதுகாப்புக்கானப் பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் கணினியின் MAC address தெரிந்து கொள்ள, start->cmd -> run என்ற இடத்திற்குச் சென்று ipconfig/all என்று உள்ளிட்டால், வரும் பல தகவல்களில் physical address என்ற ஒன்றும் இருக்கும். அதுவே உங்கள் கணினியின் MAC address.

இடத்தேர்வு:

உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்புப் புள்ளியை, குஷ்டமாக இருந்தாலும் வீட்டின் நடுவே வைப்பது நல்லது. ஜன்னலரோமோ வாசல் பக்கமோ வைப்பது வில்லங்கத்தை விருந்துக்கழைப்பதற்கு ஒப்பானது. கட்டிடங்களுக்குள் வடமில்லா வலையமைப்பின் பயணிக்க முடிந்த தூரம் சுமார் 30 மீட்டர்கள் என்பதால், அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்து கொள்வது சிறப்பு.

பாதுகாப்பு வழிமுறைகள் கொஞ்சம் கிர்ர்ரடிக்க வைத்தாலும், வீடுகளில் இணைய இணைப்பினைப் பகிர்வதற்கு வடமில்லா வலையமைப்பு மிகவும் விரும்பப்படும் காரணம், அதன் வசதி மற்றும் வலையமைப்பினைச் செயல்படுத்துதலின் எளிமைத் தன்மை. மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த அலைக்கற்றை குறித்தான முடிவுகள், ஆரம்பத்தில் சோர்ந்து விடாமல் கூடி வாழ முற்பட்ட உபகரணத் தயாரிப்பாளர்கள், spread spectrum முறையை உலகுக்களித்தத் தானைத் தலைவி ஹெடி லமர் என எல்லாரும் சேர்ந்த அளித்த ஊட்டச்சத்தின் விளைவே இன்று வடமில்லா வலையமைப்பு பிரம்மாண்டமாய் பரவலாகியிருக்கிறது. சில நகரங்களே கூட ஒட்டுமொத்தமாக வடமில்லா வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து, நகராட்சியால் இணையச் சேவை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (WiFi City, Municipal WiFi). இந்தியாவில் புனே நகரத்தில் கூட நகரம் முழுமைக்குமான வடமில்லா வலையமைப்பு வழங்குவதற்கானத் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. புனே வாசிகள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.



30 முதல் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரை பயணிக்கும் வடமில்லா வலையமைப்பு 50 கிலோமீட்டர் பயணித்தால் எப்படி இருக்கும்? வேகத்தில் 54 Mbps இல் இருந்து 1024 Mbps ஆக அசுரவேகமெடுத்தால் எப்படி இருக்கும் போன்ற யோசனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்து வடமில்லா வலையமைப்பினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வந்திருக்கும் தொழில்நுட்பங்கள் தான் WiMedia (802.15.3) மற்றும் WiMax (802.16). இன்னும் பரவலாகாத இத்தொழில்நுட்பங்கள் விரைவில் நம் வீதிகளில் வலம் வரும் நாள் தூரமில்லை. அது போன்ற ஒரு நாளில் WiMedia மற்றும் WiMax பற்றிய பகிர்வுகளுடன் சந்திக்க சுடுதண்ணி காத்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு, இத்தொடர் நிறைவடைகிறது.

தொடர்ந்து பின்னூட்டங்கள், வாக்குகள் என ஊக்கமளித்த நண்பர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கும் நன்றிகள் :).

பி.கு: பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தான் செயல்விளக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்புக்கேற்ப மாறுபடும் என்பதால் பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது. அவற்றைச் செயல்படுத்துவதில் சிரமங்கள் இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் உபகரணத்தின் விவரங்களோடு தெரிவித்தால் உதவி செய்ய முயற்சிக்கச் சுடுதண்ணி தயாராக உள்ளது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வடமில்லா வலையமைப்பு (WiFi) - ஒரு பார்வை : 3

தமிழக மீனவர்கள் கடைசியாக எப்பொழுது சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டார்கள் என்பதே நினைவில் இல்லாத போது, இரண்டு வருடங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் குண்டுகள் வெடித்து பலர் பலியானது நிச்சயம் மறந்திருக்கும். அச்சம்பவத்தின் சிறப்பு என்னெவென்றால் குண்டுவெடிப்பு நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு இந்த மாதிரி, இந்த இடத்தில், இப்படி வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என்று காவல்துறைக்கு தீவிரவாதிகளால் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதை மேலதிகாரிகள் பார்வைக்குக் கொண்டு செல்லும் முன்பே தொலைக்காட்சிகள் விளம்பரக் கொண்டாட்டங்களோடு அகமதாபாத்திலிருந்து நேரடி வர்ணனைகளைத் தொடங்கி விட்டிருந்தன.

கென்னத்

குண்டுவெடிப்பு விசாரணைக்கு அந்த மின்னஞ்சல் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்டது. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குண்டுதுளைக்காத சட்டைக்குப் பலியான ஹேமந்த் கர்க்கரே தலைமையில் மின்னஞ்சலின் பூர்வீகம் தேடத்துவங்கப்பட்டது. தேடலின் பாதை முடிந்த இடம் மும்பையில் தங்கியிருந்த கென்னத் என்றொரு அமெரிக்கரின் வீடு. மின்னஞ்சலில் தொடக்கப்புள்ளியான இணைய இணைப்பு முகவர் எண்ணிற்குரியவர் அவர். பல நாட்கள் குடைந்தெடுத்ததில் கென்னத் ADSL router மூலம் வடமில்லா வலையமைப்பில் இணையத்தைப் பாவித்து வந்ததையும், அதைக் காற்றோட்டமாக எந்தப் பாதுகாப்பும் இன்றி திறந்து வைத்திருந்ததையும் தவிர வேறெந்த தவறும் செய்யவில்லை என்று தெரியவந்தது. பின் எப்படி? மடிக்கணினியை மடியில் வைத்து, தங்கள் மடியைக் காருக்குள் வைத்து மும்பைத் தெருக்களில் இணைய இணைப்பைத் திறந்து வைத்திருக்கும் அன்பரைத் தேடியலைந்த குற்றவாளிகளுக்குச் சிக்கிய இரை தான் கென்னத். ரோட்டோரமாக சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தி மின்னஞ்சல் அனுப்பி மறைந்திருக்கிறார்கள்.


இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் வடமில்லா வலையமைப்பைப் பாவிப்பவரா, உங்கள் வலையமைப்பு சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் கொக்கி போட்டு ஆப்பு வைக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறதா?. இல்லையென்றால் உடனே சரிசெய்து விடுவது அவசியம். கென்னத் என்ற நபருக்கு நேர்ந்தது யாருக்கும் வரலாம், கென்னத்தின் பெயர் வேறு மாதிரி இருந்திருப்பின் விசாரணையின் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம்.

உங்கள் வடமில்லா வலையமைப்பு பரிபூரணமாக பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், வலையமைப்பினை பிற நபர்கள் யாராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளாமல் இருத்தல் நலம். அப்படியே தவிர்க்கவியலாமல் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்தால், வேலை முடிந்த மறுநிமிடம் வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை மாற்றுவது பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் வடமில்லா வலையமைப்பில் ஒருவர் இணைந்து விட்டால், உங்கள் தொடர்புப்புள்ளியில் நடைபெறும் 'அனைத்து' தகவல் பறிமாற்றங்களையும் (HTTPS பக்கங்களைத் தவிர்த்து) கண்குளிரக் காணலாம். இதற்கென பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் இரைந்து கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் கூகுளாடவும். பயிற்சிக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்துங்கள், பக்கத்து வீட்டு தொடர்புப் புள்ளியை எட்டிப் பார்ப்பது குற்றம் என்பதை நினைவில் கொள்ளவும் :).

வடமில்லா வலையமைப்பின் பாதுகாப்புக்கு என்னென்ன செய்ய வேண்டும்?. முதலில் வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளியினை எப்படி அணுகுவது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்?. தொடர்புப்புள்ளியின் உள்-வலையமைப்பு எண்ணை (LAN-IP address), உலாவியில் உள்ளிட்டால், தொடர்புப் புள்ளியின் மென்பொருள் பக்கங்களைக் காணலாம். ஒரு வேளை உள்-வலையமைப்பு எண் தெரியாவிட்டால் start->run->cmd என்ற இடத்திற்குச் சென்று ipconfig என்று உள்ளிடவும். அதில் default gateway என்று குறிப்பிடப்பட்டிருக்கும் உள்-வலையமைப்பு எண் தான் உங்கள் வடமில்லா வலையமைப்பிற்கானத் தொடர்புப் புள்ளியினுடையது.

இந்த பக்கங்கள் ஒவ்வொரு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கேற்ப மாறுபடும். எனவே தேடிக் கண்டுபிடிக்கவும். சிரமங்கள் இருப்பின் உங்கள் வடமில்லா வலையமைப்பு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் என்ன வகை (manufacturer and model details)ஆகிய விவரங்களுடன் கூகுளிடம் சரணடையவும். பின்வரும் விவரங்களை உங்கள் தொடர்புப்புள்ளியின் மென்பொருள் பக்கங்களில் உள்ளிட்டு விட்டால் அதிகபட்ச பாதுகாப்புக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது ;).

password/கடவுச்சொல்:


முதலில் உங்கள் வடமில்லா வலையமைப்பின் தொடர்பு புள்ளியினைத் தொடர்பு கொண்டு வலையமைப்பில் இணைவதற்கானக் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். தயாரிப்பாளர்கள் பயனாளர் பெயராக 'admin/administrator' மற்றும் கடவுச்சொல்லாக 'admin/password' ஆகியவற்றை உள்ளிட்டே விற்பனை செய்வார்கள். அதை மாற்றாமல் அப்படியே பத்திரமாக வைத்திருந்தால் அதிகபட்சம் இரண்டே முயற்சிகளில் உங்கள் வலையமைப்பு புள்ளிக்கு நுழைய முடியும். என்வே கடவுச்சொல்லை கடினமான ஒன்றாக மாற்றுவது சாலச்சிறந்தது. சிறிய எழுத்துக்கள், பெரிய எழுத்துக்கள் மற்றும் எண்கள் (combination of lowercase, uppercase and numbers) இவற்றின் கலவையாக இருத்தல் சிறப்பு.

- பாதுகாப்பு விவரங்கள் தொடரும்....

பி.கு.: வடமில்லா வலையமைப்பு என்ற சரியான பதத்தைச் சுட்டிக்காட்டிய நண்பர்கள் கதிர்=ரே மற்றும் ராம்ஜி யாஹூ இருவருக்கும் நன்றிகள் :)

வடமில்லா வலையமைப்பு (WiFi) - ஒரு பார்வை : 2


ஆரம்பத்தில் 2 Mbps வேகத்தில் தவழ ஆரம்பித்த வடமில்லா வலையமைப்பு இன்று 54 Mbps வேகத்தில் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வேகத்திற்குத் தகுந்த மாற்றங்களை தொடர்பு வழிமுறையான 802.11 பிரதிபலிக்கத் தவறவில்லை. ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னும் 802.11a,802.11b,802.11g மற்றும் 802.11n வழிமுறைகளின் பெயர்களும் மாற்றம் பெற்றன. ஒவ்வொரு வழிமுறையின் செயல்விவரங்கள் கீழே.

802.11a - 5GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11b - 2.4GHz அலைவரிசை - 11 Mbps வேகம்
802.11g - 2.4GHz அலைவரிசை - 54Mbps வேகம்
802.11n(draft) - 2.4GHz அலைவரிசை - 100 Mbps வேகம்

வேகத்திற்கேற்ப விலை. இவற்றுள் 802.11a 5GHzல் செயல்படும் திறன் கொண்டதால் விலை அதிகம் மற்றும் பயணிக்கும் தூரம் குறைவு. 2.4GHzல் செயல்படும் இதரவகைகள் அதே அலைக்கற்றையை பயன்படுத்தும் microwave oven, chordless telephone மற்றும் bluetooth உபகரணங்களால் தொல்லையைக் கொடுத்தாலும் அவற்றின் வேகத்திற்கு அடக்கமான விலையில் கிடைக்கும். 802.11b மற்றும் 802.11g பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். 802.11n சந்தைக்குப் புதிது, இன்னும் அனைத்து இடங்களுக்கும் சென்றடையவில்லை.

மேற்சொன்ன விவரங்களை மனப்பாடம் செய்து கொண்டு , அடுத்த முறை கடைக்குச் சென்று வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் வாங்கும் போது அவற்றின் வழிமுறை வகைகளைப் (802.11a,b,g,n) பற்றிய கேள்விகளைஅள்ளி விட்டு கடைக்காரரை அரள விடப்போகும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் :). அவ்வாறு கேள்விகள் கேட்கும் போது சுற்றியிருக்கும் அனைவரும் உங்களைப் பார்க்கும் பார்வையின் போதையே தனி, அனுபவித்துப் பார்க்கவும் :D.

அடுத்து என்னென்ன உபகரணங்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவற்றின் பயன் ஆகியவை குறித்து. இப்பொழுது வெளிவரும் அனேக செல்பேசிகள்/மடிக்கணினிகளில் வடமில்லா வலையமைப்பு வசதியோடே வருகின்றன. எனவே அவற்றைப் பயன்படுத்தும் எண்ணமிருந்தால் வாங்கும் போது இத்தொழில்நுட்பம் குறித்தான விவரங்களைப் பார்த்து வாங்குதல் சிறப்பு. தனி உபகரணங்கள் விவரங்கள் கீழே.




மேலே உள்ளவை வடமில்லா வலையமைப்புப் பொருத்திகள் (wireless adaptors). தடமில்லா வலையமைப்பு வசதியில்லாத மடிக்கணினியோ அல்லது மேசைக் கணினியோ வைத்திருப்பவர்கள் இவற்றை பொருத்தினால் அவ்வசதியைப் பெறலாம். அவற்றின் தோற்றமும், பொருத்தும் வழிமுறையும் பீதியளிப்பதாகக் கருதுபவர்களுக்கு USB பொருத்திகளும் கிடைக்கின்றன.



ADSL routers மற்றும் wireless routers இவையிரண்டும் வலையமைப்புக் கருவிகள். உங்கள் இணைய இணைப்பு மற்றும் வலையமைப்பு இரண்டையும் சமாளிக்க வல்ல ADSL routers மற்றும் வலையமைப்பு வசதிக்கான wireless routers ஆகியவையும் இரண்டும் கண்னெனத்தகும்.


வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி (wireless access point) என்பது வலையமைப்பு தடத்தினை (802.3), வடமில்லாதவையாக மாற்ற வல்லது (converts 802.3 to 802.11). உங்கள் கணினிக்கு வரும் வலையமைப்பு வடத்தினை இதில் பொருத்தினால் அந்த இடத்திலிருந்து வடமில்லா வலையமைப்புக்கான அலைகளைப் பரப்பும்.


வடமில்லா வலையமைப்புத் தொடர்புப் புள்ளி என்பது access point/router எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவை செயல்படும் வழிமுறையும், உங்கள் கணினியில் இருக்கும் பொருத்தியின் (wireless adaptor) செயல்பாட்டு வழிமுறையும் ஒத்ததாக இருந்தால் அதிகபட்ச வலைத்தொடர்பு வேகத்தினைப் பெற்று மகிழலாம். உதாரணத்திற்கு 802.11g வழியில் செயல்படும் தொடர்புப் புள்ளியில், 802.11b வழியில் செயலபடும் பொருத்தியைக் கொண்ட கணினியினை இணைத்தால் 802.11bக்கு உரிய வேகத்தினையே அனுபவிக்கலாம். உபகரணங்கள் வாங்கும் போது இதனையும் கருத்தில் கொள்ளவும்.

இன்று அனேக அகலப்பட்டை இணைய இணைப்புகள் ADSL routers மூலமாக வழங்கப்படுகின்றன. உங்கள் வீட்டில் இருந்தால், எழுந்து சென்று பார்த்து விட்டு, பிறகு தொடர்ந்து படிக்கவும். பெரும்பாலான பயனாளர்கள் இவ்வசதி குறித்து போதிய விழிப்புணர்வின்றியே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இணைய இணைப்பு வழங்குநர்களும் இது குறித்த விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு முறையாகத் தெரிவிப்பதாகத் தோன்றவில்லை. வாடிக்கையாளர்களுக்குப் பாடம் நடத்துவது அவர்கள் வேலையில்லையென்றாலும், பயனாளர் என்ற முறையில் அறிந்து கொள்வது நம் கடமை. அதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு. பாதுகாப்பற்ற வடமில்லா வலையமைப்பின் மூலம் வரும் ஆபத்துகள் பலவிதம். முக்கியத் தீவிரவாதி என்றோ, இவர் தான் வெடிகுண்டு முருகேசன் என்றோ, ஒரு நாள் அதிகாலை, சுபவேளை மாமாக்கள் ஓலையோடு வரக்கூட வாய்ப்பிருக்கிறது. எப்படி? அதைத் தவிர்க்கும் முறைகள், இத்தொழில்நுட்பத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து அடுத்த பகுதியில்.

Sunday, April 11, 2010

வடமில்லா வலையமைப்பு (WiFi) - ஒரு பார்வை : 1


மார்க்கொனி (இடது), முசொலினி (வலது)

மாப்பிள்ளைத் தோழனாக பெனிட்டோ முசொலினி தோள் கொடுத்து நிற்க, இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இத்தாலியின் மார்க்கொனி விதைத்த விதை தந்த பல கனிகளில் ஒன்று வடமில்லா வலையமைப்பு (WiFi - Wireless Fidelity). இந்த தொழில்நுட்பம் பரவலாகி விட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட இணையம் கலந்திருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொழிநுட்பப் பரிச்சயம் இல்லாத எவரும் எளிதில் உபயோகப்படுத்திக் கொள்ள ஏதுவான வகையில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்கள் கிடைக்கின்றன.


விமான நிலையத்திலிருந்து, முரட்டு விலைக்கு தேநீர் விற்கும் கடைகள் வரை எங்கெங்கும் WiFi மயம். ஏறத்தாழ உலகத்தில் மொத்தம் மூன்று லட்சத்திற்குமதிகமான வடமில்லா வலையமைப்பு மையங்கள் (WiFi Hot spots) இருப்பதாக புள்ளிவிவரங்கள் கோலம் போடுகின்றன. மிகக்குறுகிய காலத்தில் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்திருக்கும் இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது, அவற்றை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது, அவற்றில் மறைந்திருக்கும் அபாயங்கள் ஆகியவை குறித்து இத்தொடரில் காண்போம்.

மைக்கெல் மார்கஸ்

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு அமைச்சர், பல்லாயிரம் கோடி அல்வா, வீட்டு முற்றத்துக்குள் பனித்து, இனித்து ஊத்தி மூடப்பட்ட கதைகள் போன்ற எந்த மசாலாவும் இன்றி 1985ஆம் ஆண்டு அமெரிக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைதொடர்பு தவிர்த்து மின்காந்த அலைகளைப் பய்னபடுத்தும் உபகரணங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த, (உ.தா. Microwave Ovens) சில அலைக்கற்றைகளை (900MHz, 2.4GHz, 5.8GHz spectrum :D) பொதுப்பயன்பாட்டுக்கு வழங்கியது. எவரும், எவ்வித முன்னனுமதியின்றி புகுந்து விளையாடிக் கொள்ளலாம் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் பின்னணியிலிருந்தவர் மைக்கேல் மார்கஸ். மைக்கெல் மார்கஸ் பரிந்துரைத்த இம்முடிவால் தொலைதொடர்புத் தொழிலும், தொழில்நுட்பமும் பல பரிமாணங்களைத் தாண்டியிருக்கிறது.


சும்மா கிடைக்கும் அலைக்கற்றைகளை ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பலனாக சந்தையில் அறிமுகமான பல தொழில்நுட்பங்களில் வடமில்லா வலையமைப்பும் (WiFi) ஒன்று. ஆரம்பத்தில் வடமில்லா வலையமைப்பு உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் போட்டி போட்டு, முறுக்கிக் கொண்டு, தங்கள் வழி தனி வழி என்று பிரத்யேக வலையமைப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தினர் (network protocols). விளைவு ஒரு நிறுவனத்தின் உபகரணம் மற்றொரு நிறுவனத்தின் உபகரணத்தோடு தொடர்பு கொள்ள இயலாமல் போனது. இக்காரணத்தால் பொதுமக்களை இத்தொழில்நுட்பம் பெரிதாக ஈர்க்கவில்லை, மாறாக ஒரு சலிப்புணர்வையே ஏற்படுத்தியது. தொழில் மந்தமானதால் மனைமுடைந்து சரக்கடிக்க வந்த இடத்தில், முதலாளிகள் கூட்டுச் சேர்ந்தனர், அனைவருக்கும் பொதுவான ஒரு வலைத்தொடர்பு வழிமுறையை உருவாக்கி அதனைப் பின்பற்றும் வகையில் அவரவர் தங்கள் உபகரணங்களத் தயாரித்து சந்தைப் படுத்துவதென முடிவு செய்தனர்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தக்க பொதுவான வழிமுறைகளை வடிவமைக்கும் பொறுப்பு IEEE (Institute of Electrical and Electronics Engineers) வசம் 1988ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் பலமுறை விவாதித்து, சண்டை சச்சரவுகளை அடக்கிக் கட்டப்பஞ்சாயத்துகள் பல செய்யப்பட்டு 1997ல் 802.11 என்ற வடமில்லா வலையமைப்புக்கென பிரத்யேகமான, பொதுவான தொடர்பு வழிமுறை வெளியிடப்பட்டது. இதன் பின்னர் தான் WiFiன் பிரம்மாண்டம் சாமன்யர்களின் வரவேற்பறை வரை ஆக்கிரமித்த அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன.


ஒரே அலைக்கற்றைகளை பல உபகரணங்கள் (WiFi, Microwave ovens) பயன்படுத்தும் போது எவ்வாறு தகவல்கள் சேதாரமில்லாமல் பயணிக்கின்றன என்ற சந்தேகம் இதுவரை எழாத அன்பர்கள் முகத்தை கழுவிவிட்டு மீண்டும் துவக்கத்திலிருந்து படிக்கவும் :). இந்தச் சிக்கலைத் தவிர்க்க இரண்டு விதமான தீர்வுகள் கையாளப்படுகின்றன. ஒன்று குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அல்லது தகவல் பறிமாற்றம் பாதிக்கப்படும்போதோ தொடர்பு அலைவரிசையை மாற்றித் தருவது (frequency-hopping spread spectrum), மற்றொன்று ஒரே நேரத்தில் பல அலைவரிசைகளில் கலந்து கட்டி தகவல்களை அனுப்பவது (direct sequence spread spectrum). ஒன்றுக்கு மேற்பட்ட உபகரணங்களில் மின்காந்த அலைத்தொடர்புகள் மோதிக்கொள்ளும் போது(signal interference), அதனைச் சமாளிக்க மேற்சொன்ன இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. உங்கள் செல்பேசியில் அழைப்பு வரும் போது அருகிலிருக்கு தொலைக்காட்சிப்பெட்டியோ அல்லது வானொலிப் பெட்டியோ சீற்றம் கொள்வது ஒரு உதாரணம்.

ஹெடி லமர்

கருப்பு வெள்ளை காலத்து ஹாலிவுட் நமிதாவும், பொறியாளருமான ஹெடி லமர், முக்கியத்துவம் வாய்ந்த spread spectrum தொழில்நுட்பத்தை தன் பக்கத்து வீட்டு நண்பருடன் ஆராய்ச்சி செய்து (தொழில்நுட்பத்தை :D), கண்டுபிடித்ததின் மூலம் கூடுதல் கவர்ச்சி சேர்த்து வடமில்லா வலையமைப்பின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது :D.

பி.கு: ஹெடி லமர் ரசிகர்கள் விருப்பத்தினைப் பின்னூட்டத்தில் தெரிவித்தால் தனிப்பதிவு போடப்படும் என்பதை ஜொள்ளிக் கொள்வதில் சுடுதண்ணி பெருமகிழ்ச்சியடைகிறது.

- தொடரும்...

Thursday, March 11, 2010

மனிதம் தேடும் இணையம் : CAPTCHA - 1

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் செந்தில், சரளா ஜோடியைப் பார்த்து சிவாஜி, பத்மினி என்று காசு கொடுத்து சொல்லவைப்பது போல் ஒரு காட்சி வரும். கவுண்டமணியிடம் மாட்டிக்கொண்டு, 'உனக்கேண்டா இந்த வேலை' என்று கேட்டதும் செந்தில் சொல்லும் பதில் 'ஒரு வெளம்பரம்ம்ம்'. இணையத்தின் வளர்ச்சியில் மிகுந்த சவாலுக்குள்ளான விஷயங்கள் இரண்டு. ஒன்று பாதுகாப்பு மற்றொன்று விளம்பரத்தொல்லைகளைச் சமாளிப்பது.

SPAM என்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்கவிலும், ஐரோப்பாவிலும் திகட்டத்திகட்ட சந்தைப்படுத்தியதின் மனரீதியான பாதிப்பே, பின்னாளில் அளவுக்கு மீறித் தொல்லைதரும் விளம்பரங்களையோ அல்லது தகவல்களையோ இணையத்தில் கண்டால் SPAM என்று அலறி ஓடக் காரணமாகி, பின்னர் அதுவே பெயராகவும் ஆகிப்போனது. இதைப்போல் சரித்திரத்தில் பெயர் பெற விரும்பும் அன்பர்கள் சொந்தமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்கி, இலவச இணைப்பாக ஒரு திரைப்படத்தையும் வாங்கி, அதன் விளம்பரத்தைப் போட்டு மக்களைக் கதற விடலாம். அர்ப்பணிப்புடன் 10 அல்லது 15 வருடங்கள் இதனைச் செய்தால் எண்ணம் ஈடேர சாத்தியமுண்டு :). இன்றைய தேதியில் SPAM என்பதைத் தமிழ்ப்படுத்தச் சொன்னால் 'சன் பிக்சர்ஸ்' அல்லது 'கலாநிதி மாறன்' நல்ல தேர்வு :D.

SPAM செய்பவர்களுக்குத் தங்கள் எழுத்துக்களை மின்னஞ்சல்கள், ப்ளாக்கர், வேர்ட்ப்ரஸ் பதிவுகள் மற்றும் எங்கெல்லாம் இலவசமாக கல்லா கட்ட முடியுமோ அங்கெல்லாம் சரமாரியாக கிளைகளைப் பரப்பிக் கடைபரப்புவதே தொழில் தர்மம். ஒரு கட்டத்தில் இவர்கள் பயனாளர் கணக்குகளை தானியங்கி நிரல்கள் மூலம் (bots) குவிக்க ஆரம்பித்ததும் இணைய நிறுவனங்கள் திணறிப்போயின. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மூலமே நிம்மதியாக உட்கார விடாமல் செய்யும் :) சவால்கள் தான், சவால்களைச் சந்திக்கும் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் தீர்வு :D. பல்லாயிரக்கணக்கான உண்மைப் பயனாளிகளின் கூட்ட நெருக்கடியில் கலந்து கரைந்து விடும் இவர்களைத் தடுப்பதற்காக என்ன செய்யலாம் என்று பல தரப்புகளில் ஆய்வுகள் நடந்த போது, இஸ்ரேலைச் சேர்ந்த மொனி நோர் என்பவர் இணையத்தளங்கள் தங்கள் வருகையாளர் ஒரு மனிதனா அல்லது தானியங்கி நிரலா என்பதை அறிவதற்கான வழிமுறைகளையும், சாத்தியக்கூறுகளையும் ஆய்வுக்குறிப்பாக வெளியிட்டார்.

கிருஷ்ணா பரத்

செய்திகளை முந்தித்தருவதில் தினத்தந்தி போல், இணையத்தில் புதுமைகளை முந்தி தருவதுடன், இலவசமாகவும் தந்து நம் நெஞ்சில் நீங்கா இடம்பெற்றிருக்கும் கூகுள் நிறுவனத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டு 1997ம் ஆண்டு முதல் முறையாக CAPTCHA (Completely Automated PublicTuring test to tell Computers and Humans Apart) அறிமுகப்படுத்தப்பட்டது. அக்குழுவில் பலபேர் இருந்தாலும் சென்னை ஐ.ஐ.டியில் படித்த கிருஷ்ணா பரத்தும் (கூகுள் செய்திகள் பிரிவினைக் கொண்டு வந்தவர்) ஒருவர் என்பதை இங்கு விளக்குப் போட்டுக் காண்பிப்பதில் சுடுதண்ணி பெருமிதம் கொள்கிறது. இதனைப் படித்தவுடன் கைதட்டி, விசிலடித்து ஆட்டோகிராப் வாங்க விரும்பும் அன்பர்கள் பெங்களூர் கூகுள் அலுவலகத்தின் தலைவர் அறைக்கதவைத் தட்டவும் :).

பல தளங்களில் புதிய கணக்குத் திறக்கும் போதோ அல்லது உங்கள் பயனாளர் கணக்கினுள் நுழையும் போதோ, நம்மை கணினித்திரையில் முகத்தைத் தேய வைக்குமளவுக்கு உற்றுப் பார்க்க வைக்கும் காரணி CAPTCHA. சிலரின் சேட்டைகளுக்காக இன்று உலகமே குஷ்டப்படுகிறது என்றாலும், எல்லாம் பயனளார்களின் நன்மை கருதியே என்பதால் கசப்பாக இருந்தாலும் மருந்தாக நினைத்து இணைய உலகம் CAPTCHAவை சகித்துக்கொள்ளப் பழகிவிட்டது. CAPTCHA என்பது பால்வாடிப் புத்தகங்களில் இருக்கும் படம் பார்த்து கதை சொல்லும் முறைதான். படங்கள் எழுத்துக்களாகவோ, காட்சிகளாகவோ, புதிர்களாகவோ இருக்கும். தங்களின் தொழில் முடங்கிப்போவதைப் பொறுக்காத SPAM தொழிலதிபர்கள் படங்களில் இருக்கும் எழுத்துக்களைக் கிரகிக்கும் OCR (optical character recognition) தொழில்நுட்பத்தைப் பங்காளியாகச் சேர்த்துக் கொண்டு CAPTCHAக்களை உடைக்க ஆரம்பித்ததின் விளைவுகள் தான் நமது கண்களைச் சுழுக்கெடுத்து, கடுப்பேற்றி சமயத்தில் இணையப்பக்கங்களையே மூடி விட்டுப் போகுமளவுக்கு வளைந்து, நெளிந்து காட்சி தரும் CAPTCHAக்கள்.



இருதரப்பினருக்கும் போட்டி முத்திப் போனதின் விளைவே மேலே காணும் CAPTHCAக்கள். இப்போட்டியில் மனிதர்களேத் தடுமாறிப்போகும் அளவுக்கு எழுத்துக்கள் நெளிந்து போனது, OCR எம்மாத்திரம். OCR தொழில்நுட்பம் சறுக்க ஆரம்பித்ததின் காரணமாக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வைத்து CAPTCHAக்களை உள்ளிட்டு பயனளார் கணக்கை ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கித் தரும் நிறுவனங்கள் பல முளைத்தன. இணையம் அதன் போக்கில் உருவாக்கித் தரும் தொழில் வாய்ப்புகள் மிக சுவராசியமானவை, அவற்றுள் இதுவும் ஒன்று.

CAPTCHA உள்ளிட்டுத் தரும் நிறுவனங்களின் விளம்பரங்கள்

நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 மில்லியன் CAPTHCAக்கள் மக்களால் இணையத்தில் உள்ளிடப்படுகின்றன. ஒரு CAPTCHA சில நொடிகள் எடுத்துக் கொண்டாலும் பல லட்சம் மணி நேரம் தினந்தோறும் CAPTCHA க்களால் மனிதர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. நேரம் கிடைத்தால் சரக்கடிக்கவோ, சினிமாவுக்கோ அல்லது தொலைக்காட்சியில் மூழ்கிப்போகவோ வசதியில்லாத கூட்டம் ஒன்று CAPTCHAக்களால் வீணாகிப் போகும் பல லட்சம் மணி நேர மனித உழைப்பை எப்படி பயனுள்ளதாக மாற்றுவது என்று யோசிக்கத் தொடங்கியது. அதன் விளைவுகள் மற்றும் சில சுவாரஸ்யமான CAPTCHAக்கள் ஆகியவைப் பற்றி அடுத்த பகுதியில்.