Sunday, December 5, 2010

உலகத்தைத் துகிலுரிக்கும் இணையம் : விக்கிலீக்ஸ் மர்மங்கள் - 5


எந்த ஒரு நாட்டுக்கும் மிக முக்கியமான, பிரதான, தலையாய, உயிர்நாடியான இப்படி பலவகையிலும் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் அதன் பாதுகாப்புத் துறை. அவற்றின் ஆவணங்களை அப்படியே விருந்து வைப்பதென்பது கொதிக்கும் எண்ணெயில் தண்ணீர் தெளித்து விளையாடுவதை போல கிளுகிளுப்பானது. அதிலும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை உலகிலேயே சக்திவாய்ந்தது மட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் மிக முன்னோடி என்று பலராலும் வாய்பிளந்து பார்க்கப்படும் ஒரு துறை. அமெரிக்காவிற்கு இது மானப் பிரச்சினை என்பதால் தன் முழுவேகத்துடன் விக்கிலீக்ஸ் நோக்கிப் பாய்ந்தது. இதே போன்ற வெளியீடுகளுக்கு இந்தியா போன்ற நாடுகள் ஆளாகியிருந்தால் 'நீ என்னத்த பெரிசா பண்ணிட்ட, போன வருசம் அவன் எப்படி அடிச்சான் தெரியுமா, போன வாரம் கூட எத்தன பேரு.. ' என்று கமுக்கமாகிப் போயிருக்கும் என்பதற்கு சில தினங்களுக்கு முன் இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் இந்திய சி.பி.ஐ இணையத்தளம் பாகிஸ்தான் பங்காளிகளால் ஹேக் செய்யப்பட்டது ஒரு உதாரணம்.



ஜூலியனுக்குத் தான் செய்யப் போகும் காரியத்தின் வீரியம் நன்கு புரிந்தே இருந்தது. அமெரிக்காவிற்கு எதிரான தனது ஆப்கான் போர்க் குறிப்பு வெளியீடுகளுக்கு முன் ஒருமுறைக்குப் பலமுறை விக்கிலீக்ஸ் தளத்தின் பலத்தை, சட்டரீதியானப் பாதுகாப்பினைப் பரிசோதித்து உறுதி செய்து கொண்டே களமிறங்கினார். கேக் சாப்பிடும் போது சுற்றிலும் கடித்து சாப்பிட்டு விட்டு பின்பு கடைசியாக நடுவிலுள்ள செர்ரிப் பழத்திற்கு பாய்வதைப் போல, ஜூலியன் தேர்ந்தெடுத்த நாடுகள் சோமாலியா, கென்யா, ஸ்விஸ், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்காவின் தேவாலயக் குழுமம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சாரா பாலின் ;) தொடங்கி அமெரிக்காவின் ஈராக் இராணுவ நடவடிக்கைகள் வரை ஒத்திகை பார்த்து விட்டே ஆப்கன் போர்க் குறிப்புகள் வெளியிடப்பட்டன.


ஜூலியனின் வாழ்க்கை குறித்துக் கேள்விப் படும் போது தொழில்நுட்ப கில்லாடியே, அசகாய சூரனே, உலகத்தையே அதிர வைக்கும் இணைய இடியே, உண்மையின் உறைவிடமே என்று வைரமுத்து, வாலி வகைக் கவிதைகள் எழுதத் தோன்றினாலும் ஜூலியனின் வாழ்க்கை மிக கடினமானது, மன அழுத்தம் நிறைந்தது. ஜூலியனுக்கென்று சொந்த வாழ்க்கை ஏதுமில்லை. எந்த விமான நிலையத்தையும் ஒரு சாதாரணப் பயணியாகக் கடந்ததில்லை, ஒவ்வொரு முறையும் பலமணி நேரச் சோதனையும், அவரது மடிக்கணினி முழுதும் பிரதியெடுக்கப்படுதலையும் தவிர்க்க முடிந்ததில்லை. ஜூலியன் சாதரணமாக தொலைபேசியில் பேசுவது கூட மிக மெல்லிய குரலில், சுற்றி யாரும் இருக்கிறார்களா என்று எச்சரிக்கையுடன் பேசுவது போல மிகுந்த இடைவெளி விட்டு, மிகக் குறைந்த வார்த்தைகளைப் பய்னபடுத்தியே பேசுவது வழக்கம். இது வரை யாருமே ஜூலியனை, ஒருமுறைத் தொடர்பு கொண்ட எண்ணில் மறுமுறை தொடர்பு கொண்டதில்லை. எவற்றையெல்லாம் மாற்றாவிட்டால், மாட்டிக் கொள்வோம் என்பது ஜூலியனுக்கு அத்துப்படி.


முதல் பரிட்சார்த்த முயற்சியாக சோமாலியாவின் இஸ்லாமியத் தலைவர் ஒருவர், தனது அரசியல் எதிரிகளை களையெடுப்பதற்கு நம்பிக்கையான விவசாயக் கூலிகள் வேண்டி எழுதியக் கடிதம் வெளியிடப்பட்ட போது அது உண்மையா, பொய்யா என்ற விவாதமே மேலோங்கி நின்றது. சோமலியாவின் பதிலோ, மெளனம் சம்மதம் :). இதுவே பின்னாட்களில் தனது வெளியீடுகளோடு பெரிய பத்திரிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கான காரணம். ஊழலில் நமக்கே சவால் விடும் அளவுக்கு முன்னோடியான கென்ய அரசாங்கத்தின் ஊழல் தகவல்களை அம்பலப்படுத்துவதற்காக கென்யாவின், நைரோபியில் வாசம் செய்து கொண்டிருந்த ஜூலியன் ஒரு அதிரடியான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிட்டது. ஊழல் ஆவணங்கள் வெளியிடப்பட்ட மிகச்சரியாக ஒருவாரத்தில் ஜூலியன் தங்கியிருந்த ஒரு ரகசிய வீட்டில், நள்ளிரவு நேரத்தில் ஆறு பேர் கொண்ட ஆயுதக் குழு ஒன்று தீபாவளி கொண்டாட முயற்சி செய்த போது, கென்யாவின் தரத்தை எடைபோட்டு ஜூலியனின் பாதுகாப்புக்காக முன்பே ஏற்பாடு செய்திருந்த ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் துரத்தி விட்டனர். அன்றிரவுக்குப் பிறகு யாரும் ஜூலியனைக் கென்யாவில் பார்க்கவில்லை.

அடுத்து ஐஸ்லாந்து, ஸ்விட்சர்லாந்து நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற வங்கிகளின் முறைகேடுகள், முறையற்ற நிதி கையாடல்கள் ஆகியவை வெளியிடப்பட்டன. ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் குய்யோ, முறையோவென தங்கள் வேட்டியை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கூப்பாடு போட்டன. ஸ்விஸ் வங்கி அமெரிக்காவிலுள்ள கோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விக்கிலீக்ஸ் தளத்தின் அமெரிக்க வழங்கிகளைச் செயலிழக்கச் செய்தது. ஒரு தளத்திற்கு வழங்கியென்பது ஒரே நேரத்தில் எத்தனை வேண்டுமானாலும் மாற்று ஏற்பாடாக செய்து வைக்கலாம். உலகமெங்கும் இணைய வல்லுநர்களை ஆரவலர்களாகக் கொண்டிருந்த விக்கிலீக்ஸ் தளத்திற்கு கண்ணசைவில் அடுத்தடுத்த வழங்கிகள் தயாரான நிலையிலிருக்குமென்பதால் ஜூலியன் இதையெல்லாம் சட்டைச் செய்யவில்லை. இணையக் கோப்புகள் வழங்கிகள்(file servers), இணைய முகவரி வழங்கிகள்(dns servers) குறித்தும், அவை செயல்படுவிதம் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் இங்கே செல்லவும் :).

இப்படி அமைதியாக, மிகப் பொறுமையாகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்த ஜூலியனையும் சீண்டிப் பார்த்து, சீற வைத்த சம்பவங்களும் நடந்தது.. அடுத்த பகுதியில்.



"சன்ஷைன் பிரஸ் (sunshine press) குழுமம் என்பது எங்களது வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர்களால் சேர்ந்தமைக்கப்பட்ட தளம். விக்கிலீக்ஸ் என்பது நாங்கள் செயல்படும் களம்." - ஜூலியன்

29 comments:

ரெண்டு said...

ரொம்ப அருமைங்க....தமிழில் இவ்வளவு தெளிவா சொல்ல முடியுமா அதுவும் வேகம் குறையாமல்...
தினமும் ஒரு பகுதி போடுங்க. இவரு ஏன் இந்தியா வரக்கூடாது. நம்ம Spectrum ஊழல் பத்தி இவருகிட்ட எதாவது தேறுமா....?

துமிழ் said...

interesting friend.waiting for next part

TAMIL said...

thanks

Philosophy Prabhakaran said...

தமிழ்மணம் TOP 20 யில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்;...

மாணவன் said...

தெளிவாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் அருமை,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

thankyou. superb. please continue ur work.
thanks a lot. i watch everyday ur blog. i subscribe google reader ur blog

முத்துலெட்சுமி/muthuletchumi said...

philosophy prabhakaran said...
தமிழ்மணம் TOP 20 யில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்;...

//
உண்மைங்க.. வாழ்த்துக்கள். நன்றி.

Thomas Ruban said...
This comment has been removed by the author.
Thomas Ruban said...

மிக அருமை,ONE MAN ARMY யாக செயல்படும் ஜூலியன்க்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி சார்.

Anonymous said...

விக்கிலீக்ஸ் பற்றிய தொழில்நுட்ப பதிவாக மட்டும் இல்லாமல், அரசியல் பின்னணிகளோடு ஜூலியனின் பின்புலத்தை தாங்கள் பதிவு செய்யும் விதம் அருமை, வாழ்த்துகள்

sivakumar said...

மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துகள்............

http://thavaru.blogspot.com/ said...

நடை மிக எளிமை தொடருங்கள் வாழ்த்துகள்.....

Unknown said...

பதிவு அருமை...

தமிழ்மணம் TOP 20 யில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்;...

சைவகொத்துப்பரோட்டா said...

//தொழில்நுட்ப கில்லாடியே, அசகாய சூரனே, உலகத்தையே அதிர வைக்கும் இணைய இடியே,//

மதிப்பிற்குரிய
சுடுதண்ணிக்கும் இந்த பட்டங்கள் பொருந்தும் :))

mm said...

மிகவும் அற்புதமான / பயனுள்ள தகவல்களை எங்களுக்கு தருவதற்கு மிக்க நன்றி. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். (அப்துல் ரஹ்மான் - துபாய்)

Unknown said...

HATS OFF.. "மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் அதுவும் தமிழில் விளக்கமாக உங்களது உழைப்புக்கு எனது வந்தனங்கள். நன்றி

ஆர்வா said...

மிக நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. தொடருங்கள் நண்பா..

calmmen said...

really great work
very gud , keep it up
gud luck

very interseting

அகல்விளக்கு said...

அரிய தகவல்கள் நண்பா...

சலிக்கவே சலிக்காத எழுத்துநடையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...

தொடருங்கள்...

சிநேகிதன் அக்பர் said...

பயனுள்ள தகவல்களை அறியச்செய்வதற்கு நன்றி.

Unknown said...

தமிழில் தகவல்!மிகவும் அருமை,தொடர வாழ்த்துக்கள்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சுடுதண்ணி,
ஒவ்வொரு பகுதியும் சுவாரசியத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விறு விறு தொடர்... ஏதாவது சஞ்சிகையில் எழுதினால் அது பிச்சுக்கிட்டு விற்பனையாகும்..

Santhosh said...

நல்ல தொடர்.. good work.. தொடருங்க..

ஜோதிஜி said...

முதல் சந்தோஷம் வெகு ஜன பதிவுலகத்தில் கொண்டு சேர்த்த அத்தனை வாசிப்பாளர்களுக்கும்.

அடுத்த சந்தோஷம் குறும்புக்கார ரதியைப்போல குறும்பன் ஒன்று கிடைத்தமைக்கு.

அப்புறம் நீங்க சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இவரை விட அப்பனுக்கு அப்பனெல்லாம் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நல்ல திறமைசாலிகள் புத்திசாலிகள் இருக்கிறார்கள்.

ஒரு சின்ன உதாரணத்தை சொல்லியே ஆகவேண்டும். ஒரு ஓவர்லாக் டைலர். விதிக் கொடுமையால் டைலராக மாறி கூட்டத்தோடு கும்மி தட்டிக் கொண்டுருக்கிறார். அவரின் உண்மையான ஆர்வம் எலெக்ட்ரானிக்ஸ். ஒரு கை பேசி மற்றும் சில எனக்கு பெயர் சொல்லத் தெரியாத உபயோகப்படாத சாமான்களை வைத்து கூழ் ஊத்தும் போது கத்த விடுவார்களே அதே டெசிபல் கணக்கில் ஒரு அலைபேசி எப்எம் பாடலை அலற வைத்து ஆச்சரியப்படுத்தினார்.

நிறுவனத்தில் அவருக்குப் பெயர் கிறுக்கன். மேலும் இங்க படித்த புத்திசாலிகள் எப்போதும் சொல்லும் தராக மந்திரம்.

நமக்கு எதுக்குப்பா வம்பு.

DR said...

ஒவ்வொரு பதிவும் மிக சிறப்பாகவும் செழுமையாகவும் செல்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...

சாமக்கோடங்கி said...

அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. மனம் பதைக்கிறது. ஆனால் எது நடந்தாலும் அனைத்து நாடுகளும் நின்று வெடிக்கப் பார்த்துக் கொண்டு தான் இருக்கப் போகின்றன.. வாழ்க ஜனநாயகம்.

surimountain said...

படிக்கப் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. வல்லரசுகளும், சர்வாதிகார நாடுகளும் செய்யும் அடாவடித்தனங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி - சூரி

Unknown said...

நண்பரே இந்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உலக நடைமுறை உண்மையை உணர்த்துங்கள் திரு நரேந்திர மோடியிடம் நேரடியாக பேச வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன் இந்தியனாக அல்ல மனிதனாக உதவி செய்ய வேண்டும் இந்தியாவிற்கு