Showing posts with label ப்ளாக்கர் | திருட்டு | பதிவுகள். Show all posts
Showing posts with label ப்ளாக்கர் | திருட்டு | பதிவுகள். Show all posts

Tuesday, January 5, 2010

இணையமும், பதிவுத் திருட்டுக்களும் - 2 (முற்றும்)



திருடப்பட்ட படைப்புகளை நீக்க விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்து, உங்கள் முகத்தின் முன் கொக்கரித்தால் என்ன செய்வது?. பிண்ணனியில் ஒரு கொள்கை விளக்கப் பாடலை ஒலிக்க விட்டுக்கொண்டு ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன வகையான ஆதாரங்கள், அவற்றை எப்படித் திரட்டுவது என்பது குறித்து விரிவாக இப்பகுதியில் காண்போம்.

இணையத்தில் ஒரு படைப்பின் உரிமையை யார் முதலில் வெளியிடுகிறார்கள் என்பதை வைத்துத் தான் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே உங்கள் படைப்பு வெளியிடப்பட்ட நேரம், திருடப்பட்டப் பதிவு வெளியிடப்பட்ட நேரம், உரல்கள், நீங்கள் வேண்டுகோள் வைத்த மின்னஞ்சல், அதற்கு கிடைத்த பதில் என்று உங்கள் படைப்பே முதலில் வெளியானது என்பதற்குச் சான்றாக எதெல்லாம் கையில் சிக்குகிறதோ அவற்றையெல்லாம் தொகுக்கவும். தேவைப்பட்டால் திரைக்காட்சியைப் பதிவு செய்து கொள்வது நலம் (screenshot).

இப்பொழுது ஆதாரங்கள் தயார். அடுத்து என்ன செய்வது ?. கொஞ்சம் கொஞ்சமாக பணிய வைக்க வேண்டும் என்று நிதானமாக யோசிப்போர், முதலில் திரட்டிகள், திருடப்பட்ட படைப்பைக் கொண்டிருக்கும் தளத்தினை விளம்பரம் செய்யும் தளங்களின் நிர்வாகிகளுக்கு ஆதாரங்களை அனுப்பி, தங்கள் செயல்பாட்டிலிருந்து திருடும் தளத்தினை நிறுத்தி வைக்க வேண்டுகோள் வைக்கலாம். இது போன்ற வேண்டுகோளுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். எனவே நம்பிக்கையோடு இருக்கவும். இதன் பிறகு குற்றவாளி தன்னிலையிலிருந்து இறங்கிவர வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இவர்களும் கூட்டுக் களவாணியாக இருந்தால் நேரே சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக வேண்டியது தான் கடைசி கட்டம்.

சுப்ரீம் கோர்ட் என்பது நாம் குற்றம் சாட்டும் பதிவினை இணையத்தில் வெளியிடத் தளம் வழங்கியிருக்கும் நிறுவனங்கள். உதா. ப்ளாக்கர் பதிவுகளாக இருந்தால் கூகுளுக்கு புகார் அனுப்பலாம். கூகுள் நிறுவனத்தில் யாரையும் தெரியாது எனக் கவலைப்படாமல் கீழே இருக்கும் சுட்டிக்குச் சென்று உங்கள் புகாரைத் தட்டுங்கள், திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்.





மேற்படி நிறுவனங்களின் நடவடிக்கைகள் கொஞ்சம் கடுமையாக இருக்கும்,குற்றம் செய்யும் தளங்களைத் தங்கள் தேடுபொறிகளில் தடை செய்வார்கள் அல்லது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு நிரூபணமானால் பதிவுத் தளமே மொத்தமாக முடக்கப்படும், நீதி நிலைநிறுத்தப்படும், பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் துடைக்கப்படும்.

நீதி கிடைத்தவுடன், 'அப்பாடா' என்று அசந்து விடாதீர்கள். மீண்டும் வேறெங்கும் திருடப்பட்டிருக்கிறதா என்று தேடத் துவங்குங்கள், ஏனெனில் இணையம் அசருவதேயில்லை. ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கில் ctrl+c, ctrl+v தட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன். படைப்புகள் பரவிக் கொண்டேயிருக்கின்றன வேறு வேறு பெயர்களில்.

மேற்படி காரியங்களனைத்தையும் செய்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அசாத்திய பொறுமை தேவை என்பதையும், பொறுமையுடன் உங்கள் படைப்பின் பெருமையைக் காக்க வாழ்த்துக்களையும் கூறி இத்தொடர் நிறைவடைகிறது. பின்னூட்டங்கள் மூலமும், வேறுவகையிலும் ஊக்கமளித்த அனைவருக்கும் சுடுதண்ணி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.


Saturday, January 2, 2010

இணையமும், பதிவுத் திருட்டுக்களும் - 1


இப்பதிவை எழுதும் எண்ணத்தை விதைத்த நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

பதிவுகள் எந்த வகையினைச் சார்ந்ததாக இருந்தாலும் அதற்கென ஒரு உழைப்புத் தேவைப்படுகிறது, அந்த உழைப்பு தான், தங்கள் பதிவுகள் திருடப்படும்போது துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம் என நம்மைத் துள்ள வைக்கிறது. பரந்து விரிந்த இந்த இணைய உலகில் திருடுவதைத் தடுக்க முடியவே முடியாது. 'ஐயகோ, என் பதிவுகளை அல்லது என் படைப்புகளைத் திருடிவிட்டான்' என்று குமுறுவது கிட்டத்தட்ட கத்திப்பாரா மேம்பாலத்தின் மேல் ஏறி நின்று நிர்வாணமாய் குளித்துவிட்டு, 'பார்த்துட்டான், பார்த்துட்டான்' என்று கதறுவதற்கு ஒப்பானது. இணையத்தில் உங்கள் படைப்புகளை வெளியிட்ட மறுகணமே அது உங்களுக்குச் சொந்தமில்லை. அவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம், மறுவாரம் உங்கள் மின்னஞ்சலுக்கே 'என்னமா எழுதிருக்கான்யா..' என்று அங்கலாய்த்து பார்வேர்ட் வரலாம். எதையும் தாங்கும் இதயத்துடன் இருப்பது மனதுக்கும், உடலுக்கு நலம்.

அதெல்லாம் முடியாது, 'நான் இணையத்திலும் எழுதுவேன், திருட்டையும் தடுக்கனும்' என்று ஒற்றைக்காலில் அடம்பிடிப்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். பதிவுத் திருட்டு இரண்டு வகைப்படும் ஒன்று ஒரு சில மனங்கவர்ந்த இடுகைகளை மட்டும் அள்ளுவது (content theft) அல்லது மொத்தமாக முழுப் பதிவினையும் சுருட்டுவது (site hijacking). திருட்டைத் தடுக்க வழியே இல்லையா?. சில நிரல்கள் மூலம் ctrl c, mouse right click ஆகியவற்றை உங்கள் பதிவைப் பார்வையிடும் போது செயலிழக்க வைக்கலாம், ஆனால் கெட்டிக்காரத் திருடனுக்கு அதெல்லாம் தூசு. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பதிவுகளை உரிய அனுமதியில்லாமலோ அல்லது தளத்தின் உரல் கொடுக்காமலோ பயன்படுத்தக் கூடாது என்று ஒரு அறிவிப்புப் பலகையினை வைக்கலாம்.

இப்படி வெறும் அறிவிப்பு வைப்பதற்கு மாற்றாக சில காப்புரிமை சேவை வழங்கும் தளங்கள் உள்ளன. (உதா. www.creativecommons.org, www.copyscape.com, www.www.myfreecopyright.com). அது போன்ற தளங்களில் உங்கள் வசதிற்கேற்ப காப்புரிமை விதிமுறைகளைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொண்டு, அவற்றின் காப்புரிமைப் படத்தினை உங்கள் பதிவில் வெளியிட்டு, தளத்தின் வருகையாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இது போன்ற சேவைகள் ஒரு குறைந்தபட்ச பாதுகாப்புக்கு மட்டுமே. ஒரு வேளைத் திருட்டு நடந்தால், படைப்பின் மீதான உங்கள் உரிமையை நிலைநாட்ட ஒரு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, திருட்டு நடந்தால் யார் பிராது கொடுப்பார்கள்?. நண்பர்கள் வலையில் உலாவும் போது பார்த்துவிட்டு வந்து சொல்லலாம் இல்லையென்றால் நாமாகக் கண்டுபிடித்தாலோ அல்லது அதுவாக கண்ணில்பட்டாலோ தான் உண்டு. www.copyscape.com போன்ற தளங்கள் மூலமும் முயற்சி செய்து பார்க்கலாம்.ஒருவழியாக எங்கேயோ, யாரோ உங்கள் பதிவைத் திருடிவிட்டதைக் கண்டுபிடித்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே அதிரடி சாகசங்களைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.

இந்த இடத்தில் தான் பொறுமையாக, அமைதியாக இருக்க வேண்டும். முதலில் பொதுவில் இது குறித்து திருடன், திருடன் என்று சொல்வதைத் தவிர்ப்பது பிரச்சனை மேலும் சிக்கலாவதைத் தடுக்கவும், திருடன் உஷாராகி மறுகணமே திருடப்பட்டப் பதிவை நீக்கிவிட்டு நாம் அவனில்லை என்று நம்மை அம்பேலாக்குவதைத் தடுக்கவும் உதவும். அனேக இணையப் பயனாளர்களுக்கு இவ்வாறு படைப்புகளை வெட்டி, ஒட்டுவது தவறு என்ற விழிப்புணர்வு இருப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

யார் உங்கள் பதிவினைத் தங்களுடையது போன்று வெளியிட்டு இருக்கிறார்களோ அவருடைய தொடர்பு விவரங்களை அறிந்து கொண்டு ஒரு மின்னஞ்சல் மூலம் மிக அமைதியாக சொல்லலாம். பெருவாரியான பதிவுத்திருட்டு சம்பவங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பதன் மூலமே தீர்க்கப்பட்டுவிடுகின்றன. அப்படியும் அடங்க மறுக்கும் அஞ்சாநெஞ்சர்களை என்ன செய்வது?. அது குறித்து அடுத்த பகுதியில்....