Friday, May 30, 2014

இணையம் வெல்வோம் - 17

அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.
வந்த சுவடே தெரியாமல் சிகர்துர் கட்டுக்குலையாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்று முதல் எப்.பி.ஐ உடன் தினமும் நேரடித்தொடர்பில் இருந்தார் சிகர்துர். விக்கிலீக்ஸ் தளங்களில் நடைபெறும் விவாதங்கள், வெளியிடத்தயாராகும் கோப்புகள், சாபு மூலம் கொட்டும் தகவல்கள் அனைத்தும் சிகர்துர் மூலம் நேரலையில் அமெரிக்கா கண்டுகளித்துக் கொண்டிருந்தது.
சாபுவின் கைங்கர்யத்தில் கிடைத்த ஸ்ட்ரட்போர் தகவல்களையே தாளிக்க முடியாமல் இருந்த சிகர்துருக்கு சாபுவிடம் இருந்து சிரிய அரசாங்கத்தின் மின்னஞ்சல் வழங்கியிலிருந்து லவட்டப்பட்ட 96GB அளவிலான மின்னஞ்சல்கள் வந்து சேர்ந்தது. பின்னாளில் சிரியா கோப்புகள் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் அவை வெளியிடப்பட்டு உள்நாட்டு கலவரம் நடந்த அந்த நாட்களில் மேற்கத்திய நாடுகளும், அந்நாட்டு நிறுவனங்களும் போட்ட இரட்டை வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு சிகர்துர் மூலம் தகவல் சொல்லப்பட்டது. இப்படி அமெரிக்காவின் ஜேம்ஸ்பாண்டாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிகர்துருக்கு சங்கு ஒரு தொலைபேசி வடிவில் வந்தது. 

விக்கிலீக்ஸின் ஊடகத் தொடர்பாளரும், சிகர்துரை ஜூலியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவருமான கிறிஸ்டைன் இடமிருந்து வந்த அழைப்பின் மூலம் சிகர்துர் மேல் விக்கிலீக்ஸ் பணம் ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கையாடப்பட்டதாகக் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படப் போவதாக சொல்ல, தனக்கு இனி இங்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்து விக்கிலீக்ஸின் தொடர்பு எல்லைக்கு வெளியே சிகர்துர் என்ற சிட்டுக்குருவி சர்ரென்று பறந்தது.

ஜெரொமி ஹமன்ட்
தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அமெரிக்காவிற்குத் தெரிவித்து இனி தன்னால் தகவல்கள் தர இயலாது என்று சொன்ன சிகர்துர், வாஷிங்டன் வரவழைக்கப்பட்டு மூளையில் இருக்கும் மிச்சச் சொச்சத் தகவல்களும் சுத்தமாக சுரண்டி எடுக்கப்பட்டது. இம்முறை சிகர்துர் மூலம் விக்கிலீக்ஸ் உடன் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர்களும் கவனமாக பதிவு செய்து சக்கையாக அனைத்துத் தகவல்களையும் கறந்து ஐஸ்லாந்தில் துப்பப்பட்டார் சிகர்துர். அடுத்த சில நாட்களில் 2012 மார்ச் மாதம் வரிசையாகக் கைதுக் காட்சிகள் அரங்கேறின. லல்செக் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் சாபுவின் நெருங்கிய கூட்டாளியுமான ஜெரொமி ஹமன்ட் (Jeremy Hammond) அமெரிக்காவிலும், சிகர்துருடன் தொடர்பில் இருந்த கேலா இங்கிலாந்திலும் வைத்து கைது செய்யப்பட, அதன் பின் ஊடகங்களி வெளியான செய்திகளில் சிகர்துருக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. 

16 வயதே ஆன பெண்ணாக ஹேக்கிங் உலகில் அறியப்பட்ட கேலா உண்மையில் 25 வயது ஆண் ரயான் (Ryan Ackroyd) என்பதும், ஜெரோமி ஹமண்ட் குறித்துத் தகவல் கொடுத்தது சாபு தான் என்பதும், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே 2011 ஜூன் மாதம் சாபு அமெரிக்க உளவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆள்காட்டிக் கொடுக்க சம்மதித்த காரணத்தால் ரகசியமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டு ஹேக்கிங் உலகில் உலவ விடப்பட்ட உளவாளி என்பதும் தெரிய வந்த சிகர்துருக்குக் பேரரசின் திரைப்படம் பார்த்ததைப் போன்ற பாதிப்பில் கன்னாபின்னாவென தலைசுற்றிக் கிறங்கினாலும் அப்பொழுது தான் பல விஷயங்கள் தெளிவாகியது.

ரயான் 
ஒவ்வொரு முறையும் சிகர்துர் எப்.பி.ஐ இடம் சாபு குறித்தத் தகவல்கள் அளித்த போதும் மேற்கொண்டு அது குறித்த தகவல்களோ அல்லது கேள்விகளோ சிகர்துரிடம் கேட்கப்படவில்லை. அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளின் வரலாற்றில் மிகப்பெரியத் தகவல் கசிவு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் மற்றும் சிரியாவின் உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் இரட்டை வேடம் போட்ட அத்தனை பேரையும் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் ‘சிரியா கோப்புகள்’ ஆகிய இரண்டும் அமெரிக்க உளவு அமைப்புகளுக்குத் தெரிந்தே விக்கிலீக்ஸிற்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. தன் கோவணம் காற்றில் பறந்தாலும் ஜூலியனைக் கையும் களவுமாக நேரடியாக அமெரிக்க சட்டப்படி குற்றவாளியாக நடக்க வைத்து, சிறைபிடிக்க விரிக்கப்பட்ட வலைதான் இத்தனை நாடங்கங்களும், காட்சிகளும். குற்றத்தினை நடக்காமல் தடுக்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளே அவற்றை நடக்க வேடிக்கைப் பார்த்த விதம் அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், ஜூலியன் மேல் அமெரிக்க வைத்திருக்கும் குறியின் தீவிரத்தையும் புரியவைத்தது.
சாபுவிற்கு சற்றும் குறைவில்லாத ஹேக்கிங் நிபுணரும், தீவிர  இணையப் போராளியுமான ஜெரொமி ஹமன்ட், ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் வெளியீட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், சாபுவுடன் தொடர்பில் இருந்த கேலா/ரயான் 30 மாத சிறை தண்டனையும் அனுபவித்துக் கொண்டிருப்பது உபதகவல். அது வரை ஏகப்பட்ட சட்டச்சிக்கல்களைச் சந்தித்தாலும், சளைக்காமல் சமாளித்து லண்டனில் பிணையில் வெளிவந்திருந்த ஜூலியன் மேற்படி சம்பவங்களுக்குப் பின்னர் இதற்கு மேல் ரத்த பூமியில் உலவ முடியாது என்று முடிவு செய்து ஈக்வடர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கேட்டு குடியறியதில் இருந்து இவற்றின் பின்விளைவுகளால் ஜூலியன் தலைக்கு வரவிருந்த ஆபத்தினை உணரலாம்.  அன்று தூதரகத்தின் உள்நுழைந்த ஜூலியன் இன்றும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கையாடல் செய்ததாகச் சொல்லப்பட்ட பணம் ஜூலியனின் அனுமதியுடன் தன் கைச்செலவுக்கு எடுத்தது என்று சிகர்துரும், சிகர்துர் சொல்லும் அளவுக்கு ஜூலியனோ அல்லது விக்கிலீக்ஸ் நபர்கள் யாருமோ சிகர்துரை அளவுக்கு மீறி நம்பவில்லை என்று க்றிஸ்டைனும் முன்னுக்குப் பின் முரணாக சொன்னாலும், விக்கிலீக்ஸ் குறித்து சிகர்துர் தான் எப்.பி.ஐ இடம் போட்டுக் கொடுத்தது என்று ஜனவரி மாதம் 2013க்குப் பிறகு தான் ஜூலியனுக்கும், க்றிஸ்டைனுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதமானது, தகவல் உபயம் க்றிஸ்டைனின் நண்பரான ஐஸ்லாந்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்.

2012 மார்ச் மாதத்தின் கைதுச் சூறாவளிக்குப் பிறகு பல மர்ம மரணங்கள் இணைய உலகை உலுக்கத் தொடங்கின. அவர்கள் அனைவருமே ஒரு வகையில் இணைய சுதந்திரத்தில் பாதுகாப்பின் பெயரில் கைவைக்கும் அமெரிக்க அரசிற்கு எதிராகக் கொடிபிடித்தவர்கள். 

எப்.பி.ஐ , என்.எஸ்.ஏ மற்றும் சி.ஐ.ஏ அமைப்புகளின் கையில் அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் உடன் தொடர்புடையவர்களாக மாட்டியவர்கள் யார் யாரென்பது சம்பந்தப்பட்ட தலைகளுக்கே வெளிச்சம். சில வேளை யாரென்றே தெரியாமல் தங்கள் அடையாளங்களை மறைத்து செயல்பட்டவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அவ்வாறு மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பத்திரிக்கையாளர் மெக்கேல் ஹேஸ்டிங், நாம் முதன் முதலில் பார்த்த இணைய ஆரவலர் ஆரோன் ஸ்வார்ட்ஸ், உலகப்புகழ் பெற்ற ஹேக்கிங் மன்னன் பெர்னபி ஜக் ஆகியோர். இவர்கள் அனைவரின் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க உளவு அமைப்புகளால் விசாரணைக்கோ அல்லது கண்காணிப்பிற்கோ உள்ளாக்கப் பட்டவர்கள்.

இணையப்போரளிகளுடன் கண்ணாமூச்சி ஆடி, ஆடி அலுப்பில் இருந்த அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது சாபுவின் கைது. ஊரே வியந்து பார்க்கும் ஹேக்கிங் சாகசக்காரரான சாபு, கைதவறி தன் அடையாளத்தினை மறைக்காமல், தனது உண்மையான வலையமைப்பு எண்ணுடன் இணையத்தில் ஒரே ஒரு முறை இணைந்தது தான் மாட்டிகொண்டதற்கான காரணம். அத்தனை துல்லியமாக வைத்த குறி தப்பாமல் இணையத்தில் யாரையும் கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு சாபுவின் சம்பவம் சாட்சி. சிகர்துருக்கோ அல்லது சாபுவுக்கோ தாங்கள் அளித்த தகவல்கள் மூலம் நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை. இதில் தப்பியவர்கள் ஈக்வடர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த முன்னெச்சரிக்கைப் புலியான ஜூலியனும், ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் எட்வர் ஸ்நோடனும் மட்டுமே.

தொடர்வோம்…
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Monday, May 12, 2014

இணையம் வெல்வோம் - 16

சிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.
உலகமெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டுத் தலைவர்களை கவுண்டமணியும் காது பொத்தும் அளவிற்கு நாராசமாய் கிண்டலடித்தும், நாட்டின் நிலவரங்களையும் தெரியப்படுத்தும் மின்னஞ்சல்களை ஐரோப்பிய யூனியனில் இருக்கும் முக்கிய ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும் வேலை சிகர்துருக்கு வழங்கப்பட்டதிலிருந்து சிகர்துரின் முக்கியத்துவத்தினை நாம் அறிந்து கொள்ளலாம். ஜூலியனின் வயதுக்கு வந்த மற்ற ஆலோசர்களும், நண்பர்களும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமலா போய்விடும் என்று ‘நாந்தேன் அப்பவே சொன்னேன்ல’ சொல்வதற்குக் காத்திருந்தனர்.
விக்கிலீக்ஸ் சார்பாக சிகர்துர் உலகம் சுற்றிக் கொண்டிருந்த நேரம் ஜூலியன் லண்டன் சிறையிலிருந்து பிணையில் வெளியாகி, விக்கிலீக்ஸ் ஆர்வலரான கேப்டன் வேகன் ஸ்மித்திற்குச் சொந்தமான எல்லிங்ஹாம் ஹால் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து அரசியல் தஞ்சம் கேட்டு ஈக்வடர் நாட்டு தூதரகத்திற்கு செல்லும் காலம் வரையிலும் ஜூலியனை நெருக்கமாக அடிக்கடி சந்தித்த நபர்களில் சிகர்துரும் அடக்கம். இன்று வரையிலும் ஜூலியன் லண்டனிலுள்ள ஈக்வடர் நாட்டுத் தூதரகத்தில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே சந்தேகப்பிராணியான ஜூலியன் தன்னுடன் இருக்கும் அனைவரையும் வேவு பார்க்குமளவுக்கு மன அழுத்தத்தில் இருந்த நேரம், அவ்வாறு வேவு பார்க்கப்பட்டவர்களில் தங்கியிருந்த பண்ணை வீட்டின் சொந்தக்காரரான கேப்டன் வேகன் ஸ்மித்தும் ஒருவர். இப்படி வேவு பார்த்து தகவல்களைத் திரட்டி ஜூலியனுக்கு அனுப்பி வைப்பது சிகர்துரின் வேலைகளுல் ஒன்று. வேவு பார்ப்பதென்றால் சம்பந்தப்பட்ட நபர்களின் கணிணியிலிருக்கும் தகவல்களை மொத்தமாக சுருட்டி அவற்றை அலசி ஆராய்வது, தினசரி நடவடிக்கைகள், சந்திப்புகள் ஆகியவற்றை நுண்ணிய கண்காணிப்புக் கருவிகள் மூலம் பதிவு செய்வது போன்றவையாகும்.

ஜூலியனை மேலும், மேலும் சந்தோசப்படுத்த, தனது அதிகாரங்கள் அதிகரிப்பது ஒருவித போதையாகி, பெயர்பெற்ற ஹேக்கர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் விக்கிலீக்ஸ் வெளியிடுவதற்கான ஆவணங்களை சேகரிப்பதில் கொண்டு போய் விட்டது. காக்கர் (Gawker) வலைப்பதிவுத் தளத்தினை கட்டுடைத்து தங்கள் பெயரினைப் பெரிதும் பேச வைத்த நோசிஸ்(Gnosis) எனும் ஹேக்கர் குழுவிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட சிகர்துர், பின்னர் அவர்கள் மூலம் 16 வயதே ஆன பெண் கேலா(Kayla) மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த 30 வயது நபர் சாபு(Sabu) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. கேலாவின் மூலம் பல கோப்புகள் கிடைத்தது சிகர்துருக்கு. முக்கியமாக ஐஸ்லாந்து அமைச்சரக இணையத்தளங்கள் மற்றும் மின் நிறுவனமான லான்ட்ஸ்நெட் ஆகியவற்றின் தளங்கள் தகர்ப்பதும் கேலாவின் உதவியோடு சிகர்துர் நடத்தி முடித்தாலும், அதில் எதிர்பார்த்த கிளுகிளுப்பும், கிக்கும் சிகர்துருக்குக் கிடைக்கவில்லை.

சாபுவிடம் தொடர்பு கொண்டு தான் இன்னும் பெரிதாக எதிர்பார்ப்பதாகவும், அவற்றினை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடுவதற்கு ஆவண செய்வதாகவும் சிகர்துர் சொல்ல, சாபுவோ முதலில் சிகர்துருக்கு விக்கிலீக்ஸில் இருக்கும் தொடர்பினை உறுதிப்படுத்தாமல் எதுவும் செய்ய மறுக்க, நேரடியாக ஜூலியனுடன் பேசிய பிறகே சாபு உதவி செய்ய சம்மதித்தாக சிகர்துர் சொன்னாலும் என்ன நடந்தது என்பது சாபுவுக்கும், ஜுலியனுக்குமே வெளிச்சம். அதற்குப் பிறகு வரிசையாக நடந்தேறியது அதிரடி சம்பவங்கள்.

சாபு
ஹேக்கிங் கில்லாடியான சாபுவின் திறமை அனானிமஸ் உலகில் மிகப்பிரபலம். லல்செக் (lulzec) எனப்படும் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களின் ஒருவர். லல்செக்கின் அதிரடி அட்டகாசங்கள் மிகப்பிரசித்தம். இவர்களின் தாக்குதலுக்கு அமெரிக்காவின் சிஐஏ இணையத்தளம் கூட தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாபுவின் திறமைகளின் வீரியம் சிகர்துர் கேட்டு முடிக்கும் முன்பே தகவல்களை கொட்டும் வேகத்தில் தெரிந்தது, கேட்ட கோப்புகள் எந்த நிறுவனம் அல்லது அமைப்பிற்குச் சொந்தமாக இருந்தாலும் உடனே அவர்களின் வலையமைப்பிற்குள் புகுந்து சுருட்டி அள்ளிவந்து கொட்டுவதில் சாபு கில்லாடி. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கும் தனியார் நிறுவனங்களான ஸ்ட்ரட்போர் (stratfor), லக்ஹீட் மார்ட்டின் (lockheed martin) உள்ளிட்ட நிறுவனங்களின் மின்னஞ்சல்களின் தொகுப்புகள் சாபுவின் மூலம் சிகர்துருக்குக் கையளிக்கப்பட்டது. இவை பின்னாளில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்த போது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளின் செயல்படும் முறைகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட விதங்கள் என அனைத்தும் சந்தி சிரித்தன. பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்ப்ட்ட பின்லேடனின் உடலுக்கு உண்மையில் என்ன நடந்தது போன்ற தகவல்கள் இம்மின்னஞ்சல்கள் மூலம் வெளிவந்தன.
ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக இருந்தாலும், சாபுவின் மூலம் தகவல்கள் மளமளவென கொட்டத் தொடங்கியதும், அத்தகவல்களின் வீரியமும் சிகரிதுரின் நிலைமையை ஷகீலா படம் பார்த்த வயசுப்பையனைப் போலாக்கியது. சாமத்தில் கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன. நள்ளிரவில் எப்.பி.ஐ கதவை உடைத்துக் கொண்டு சிகர்துரை அள்ளிப் போவது போலான பீதியை உண்டாக்கும் பயங்கள் தோன்ற ஆரம்பித்தன சிகர்துருக்கு. உலகமெங்கும் பரவியிருக்கும் காக்கர், நோசிஸ், மற்றும் லல்செக் போன்ற சிறு குழுக்கள் சேர்ந்தது தான் அனானிமஸ் என்பதும் அவர்களின் சகவாசம் எத்தகைய சிக்கலில் கொண்டு விடும் என்பது சிகர்துருக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்த போது தான் எந்த அளவுக்கு எதில் புதைந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. அது போக மற்றுமொரு விஷயமும் சிகர்துர் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

அது கொலட்ரல் மர்டர் காணொளி மற்றும் தூதரக மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸிக்கு அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வழக்கினைச் சந்தித்து வரும் பிரட்லி மேனிங்கின் வழக்கினை நடத்துவதற்காக ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிரட்லி மேனிங் பாதுகாப்பு இயக்கத்திற்குப் பெருந்தொகை ஒன்றை நன்கொடையாகத் தருவதாக வாக்களித்திருந்த ஜூலியன் அதனை நிறைவேற்றவில்லை. அது குறித்த மனவருத்தமும் சிகர்துருக்கு ஜூலியனின் மீதிருந்த மதிப்பினை, நம்பகத்தன்மையைச் சிதைத்திருந்தது.

ஆகஸ்ட் 23, 2011 அன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவின் தூக்கம் வராமல் மன அழுத்தத்தில் தவித்த சிகர்துர் ஒரு முடிவுக்கு வந்து ‘உங்களைச் சந்திக்க வேண்டும்’  என்ற தகவலுடன் மின்னஞ்சல் ஒன்றை ஐஸ்லாந்து தலைநகர் ரெஜவிக்கில் (Reykjavik) உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அனுப்ப, உடனே வந்து சந்திக்க அழைப்பு வருகிறது சிகர்துருக்கு.

காலம் எத்தனையோ புதிர்களை நமக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ், அவர்களுக்குக்கிடையே உள்ள தொடர்புகள், தகவல் பறிமாற்றங்கள், விக்கிலீக்ஸ் விவாதத்தளங்களில் பங்கு பெற்றவர்கள் என்று சகல விவரங்களும் தெரிந்த,  ஜூலியனிடம் நெருங்கிப் பழகிய சிகர்துர் அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று வாக்குமூலமளிக்க செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது அத்தகைய புதிர்களில் ஒன்று. சிகர்துர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அனானிமஸ்கள், விக்கிலீக்ஸிற்கு ஏற்பட்டப் பின்னடைவு, தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய மரணங்கள்…

தொடரும்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Thursday, April 17, 2014

மாயமான விமானம் - வரலாறு திரும்புகிறது?



கபில்தேவ் அணியினர் வாங்கி வந்த உலககோப்பையை இந்தியா கொண்டாடி முடித்திருந்த நேரம் 1983ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி நியுயார்க்கில் இருந்து தென்கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்டது அந்த விமானம், செல்லும் வழியில் அலாஸ்கா மாகாணத்தின் அங்க்கரெஜ் நகரத்தில் தரையிறங்கி செல்வதாகத் திட்டம். ஏகப்பட்ட மூட்டை முடிச்சுகளையும், 269 பயணிகளின் கனவுகளையும் சுமந்து கொண்டு விமானம் ஆகாயத்தில் கலந்தது. அலாஸ்காவில் சென்று தரையிறங்கும் வரை எல்லாமே திட்டமிட்டபடி நடந்தது. அலாஸ்காவில் இருந்து கிளம்பியதும் விமானிகள் தானியங்கிப் பொறி மூலம் விமானத்தினை செலுத்த ஆரம்பித்தனர். யதார்த்தமாக புவியிடங்காட்டி (GPS) குளறுபடியால் தவறு செய்ய, விமானம் பதார்த்தமாக சோவியத் யூனியனின் வான் எல்லைக்குள் நுழைந்தது. தாங்கள் இப்படி தடம் மாறிச் செல்வதை விமானிகள் உணரவேயில்லை.



தரைப்பகுதிகளை நாம் எப்படி வரைபடத்தில் ஒவ்வொரு இடத்திற்கும் பெயர் வைத்து எல்லைகளை நிர்ணயிக்கிறோமோ அதே போல வான்பரப்பிற்கும் வரைபடங்கள் உண்டு. அதில் சிக்கல் என்னவென்றால் வாகனங்களில் செல்லும் போது குழப்பமேற்பட்டால் வழியில் உள்ள தேநீர் கடையில் வழிகேட்டு சரியான் பாதையில் செல்வதென்பது இயலாதென்பதால், புவியிடங்காட்டியே துணை. உலகெங்கும் உள்ள் பயணிகள் விமானங்களுக்கெல்லாம் ஒரே வரைபடம் வழங்கப்படும், அதனை மேற்பார்வையிட்டுத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்து அனைவருக்கும் விநியோகிப்பது International Civil Aviatation Organization (ICAO) அமைப்பின் வேலை. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கு வாய்க்கால் வரப்புத் தகராறு உச்சத்தில் இருந்த நேரத்தில்,  தடம் மாறிய விமானம் சோவியத் வான் பகுதியில் நுழைந்த நேரம் வழக்கமாக அமெரிக்க விமானப்படை விமானங்கள் எல்லையில் உலாப்போகும் நேரம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் தனது ரேடார்கள் மூலம் பூதக்கண்ணாடி அணிந்து சல்லடை போடுவது வழக்கம்.



பதட்டமான காலத்தில் ராணுவ ரேடார் கண்காணிப்புப் பணியில் இருப்பவர்களின் மன அழுத்தம் சொல்லில் வடிக்க முடியாது. இப்படியான திக் திக் நேரத்தில் திடீரென எதிரி நாட்டுப் பகுதியில் இருந்து ஒரு விமானம் தங்கள் வான்பகுதியில் நுழைந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதனை சோவியத் போர் விமானம் செய்தது. தென் கொரியாவிற்குச் சொந்தமான KAL007 சுட்டு வீழ்த்தப்பட்டது. 269 பயணிகள் மற்றும் விமானி, விமானப் பணிக்குழு என அனைவரது உயிரும் கடலில் சங்கமித்துப் போனது. துயரத்திலும் துயரம், அதன் பின் நடந்த சம்பவங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் வீழ்ந்த கடல் பகுதி பயில்வான் நாடான சோவியத் என்பதால் தேடுதல் பணி அத்தனை சுலபமாக கைகூடவில்லை. சுமார் எட்டு நாட்கள் விமானத்திற்கு என்ன நடந்ததென்றே யாருக்கும் தெரியவில்லை. சோவியத்தும் சுட்டு வீழ்த்தி விட்டு கமுக்கமாக ‘என்ன காந்தி செத்துட்டாரா’ கணக்காய் அனைவரையில் கடலில் காய விட்டது. எட்டு நாட்கள் உப்புக்காற்றில் கண்கள் காய்ந்து கிட்டத்தட்ட அனைவரும் சோர்ந்து போன நிலையில் இதற்கு மேல் சொல்லாவிட்டால் போர் மூளும் அபாயம் இருப்பதை உணர்ந்து சோவியத் அரசு அத்துமீறி வான் எல்லைக்குள் நுழைந்ததால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஆனால் விமானம் எங்கு சென்று விழுந்தது என்று தெரியவில்லை என்று சொல்லி, தேடுதல் பணிக்கு முழு ஒத்துழைப்புத் தருவதாக அறிவித்தது.



சோவியத் இப்படி அறிவித்ததும் அமெரிக்க அதிபர் ரீகன் இது அநியாயம், அப்பட்டமான படுகொலை என்று கொதித்தெழுந்தார். அமெரிக்கா இவ்விஷயத்தில் படு தீவிரமாக இருந்ததற்குக் காரணம் பெரும்பாலான பயணிகள் அமெரிக்க பிரஜைகள் என்பதும், பயணிகளில் ஒருவர் ஜார்ஜியா மாகணத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் என்பதும் தான். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சன் அவ்விமானத்தில் பயணம் செய்வதாக இருந்து பின்னர் பயணத்திட்டத்தை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடைசியில் எல்லாரும் சேர்ந்து விமானத்தினைத் தேடலாம் என்று சோவியத் சொல்ல, எந்தப் பகுதியில் தேடுவது என அமெரிக்கா கேட்க, தேவிப்பட்டணத்தில் விழுந்த விமானத்தை, கொட்டாம்பட்டியில் தேடுவோம் என்று கைகாட்டி அனைவருடனும் சேர்ந்து சோவியத்தும் தேடிய அட்டகாசமும் நடந்தேறியது. ஒன்றுமே கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதம் கழித்து ஏகப்பட்ட காலணிகளை மட்டும் சோவியத் அரசு இதுதான் எங்கள் தேடுதல் வேட்டையில் கிடைத்தது என்று ஒப்படைத்தது. இந்தக் காலணிகளும், ஜப்பானின் ஹொக்கடோ தீவினில் கரையொதுங்கிய மிகச்சில மனித உடல் பகுதிகளையும் தவிர எதுவும் இன்று வரை கிடைக்கவில்லை.

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் கழித்து சோவியத் சிதறுண்டு, போரிஸ் எல்சின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற காலத்தில் நல்லெண்ண நடவடிக்கையாக விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டத் தகவல் பதிவுகளை வெளியிட்டு விமானத்தின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலும், விமானத்தில் உயிர் தப்பிய பயணிகளை சோவியத் அரசு மீட்டெடுத்து தங்கள் ரகசிய முகாம்களில் வைத்திருந்தது என்ற கதையும் காற்றில் கலந்து இன்றும் பயணித்துக் கொண்டே இருக்கிறது.




முதலில் பாதை மாறி, பின்னர் மலாக்கா ஜலசந்தியில் சமீபத்தில் மாயமான மலேசிய விமானத்தின் சம்பவத்தில், விமானத்தின் தொலைத்தொடர்பு கருவிகள் எதுவும் செயல்பாட்டில் இல்லாமல் பறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.  இவ்வாறு தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைகளுக்கு செவிமடுக்காமல் பறக்கும் பொருள்களனைத்தும் ரேடார் மூலம் கண்காணிப்பில் இருப்பவர்களின் கண்களுக்கு ஏவுகணைகளாகவோ, அல்லது பிரச்சினைக்குரிய/ராணுவ  நடவடிக்கையில் ஈடுபடும் விமானமாகவோ தான் தெரியும். அவ்வாறு கருதப்படும் பட்சத்தில் கண்காணிப்பில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு மேலே சொன்ன சம்பவம் ஒரு உதாரணம். மலேசிய விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்களாக இருந்தாலும், மலாக்கா ஜலசந்தியில் நாம் கூட ஒரு கட்டுமரத்தில் போய் தேடுதல் வேட்டையில் கலந்து கொள்ளுமளவுக்கு வெளிப்படையாக தேடுதல் நடப்பதாலும் சீனாவால் இதற்கு மேல் எந்த அழுத்தமும் கொடுப்பதற்கு இல்லை. ஒரு வேளை ராணுவ நடவடிக்கைகள் மூலம் மலேசிய விமானம் மாயமாகி இருந்தால் அதைப் பற்றிய எந்தவொரு தகவலோ  அல்லது விமானத்தின் சிறு தகடோ கூட என்றைக்கும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்பதே உண்மை. விமானம் மாயமான மலாக்கா ஜலசந்தி தொடர்ந்து இந்தியக் கண்காணிப்பில் உள்ள கடல்பகுதி என்பதும், மலாக்கா ஜலசந்தியில் தன் ஆதிக்கத்தினை நிலைநிறுத்த சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு கடந்த சில ஆண்டுகளில் பெரும் ராணுவ முதலீடு இந்திய இராணுவத்தால் செய்யப்பட்டுள்ளதென்பதும், அந்தமான் தீவினில் பெரும் விமானப்படைத்தளமும், வான்பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டிருப்பதும், சுமார் 5000 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைத் தளங்களும் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.




பொதுவாக விமான விபத்துகளில் விமானி மரணமடைந்தால், பெரும்பாலும் அவரையே விபத்துக்குக் காரணமாக நேர்ந்து விடப்படுவது வழக்கம். காரணம் விமானங்களை, அதன் இலத்திரனியல் உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளின் அசுர பலம். இந்த பலத்தோடு அரசு அதிகாரத்தின் உச்சமான இராணுவமும் சேர்ந்தால் எதுவும் மறைக்கப்படவும், மறக்கடிக்கப்படவும் சாத்தியம். அதுவரை ஊடகங்கள் விமானி சிறு வயதில் பள்ளிக்கூடத்திலேயே பக்கத்தில் இருக்கும் பையனைக் கிள்ளித் துன்புறுத்திய தீவிரவாதி, அவர் கடத்தியிருக்கலாம் என்பது போன்ற மரண மொக்கைகளைச் சகித்து, வரப்போகும் தேர்தலோடு இதனைத் தலைமுழுகி வேறு ஏதாவதொரு பரபரப்புச் செய்தியில் மூழ்கிப் போவோம்.

Thursday, April 10, 2014

இணையம் வெல்வோம் - 15

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட திமுகவினரைப்போல் வாயெல்லாம் பல்லாக மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த அனானிமஸ் குழுவினர் மற்றும் இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும் சாமானியர்களின் வாழ்க்கையிலும், வாயிலும் மண்ணை அள்ளிப் போட்டது அமெரிக்க அரசு.
இணையத்தில் குறியீட்டு முறைப்படி தகவல் பறிமாற்றம் செய்தாலும் அவற்றை சேமித்து அதன் குறியீட்டு முறையினைக் கட்டுடைத்துத் தகவல்களைப் படிப்பதை குற்றமற்ற ஒன்றாக மாற்றும் வண்ணம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. குறியீட்டுமுறையின் வீரியம் அதிகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் உதவியை நாடுவது, ஒரு குறிப்பிட்ட பயனாளர் கணக்கின் கடந்தகால பதிவுகள் அனைத்தையும் அந்நிறுவனங்களின் மூலம் பெறுவதற்கான அதிகாரங்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கைவரப்பெற்றது.
இது போன்ற வேண்டுகோள்களுக்கெல்லாம் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிந்து போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. மீசை மடங்காத, விரைப்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலையே இழுத்து மூடிய சம்பவங்களும் நடந்தன. இது கிட்டத்தட்ட நூறு வீடுகள் இருக்கும் ஒரு ஊரில், ஒரு திருடனின் வீட்டைக் கண்டுபிடிப்பதற்காக அத்தனை வீட்டினையும் முன் அனுமதியின்றி, யாருக்கும் தெரியாமல் உட்புகுந்து வேவு பார்க்கலாம் என்பது போன்ற ஒரே நேரத்தில் பகீர் மற்றும் கிளுகிளுப்பு இரண்டும் கலந்த ஒரு விஷயம்.
அது மட்டுமின்றி அமெரிக்க உளவு அமைப்புகள் அனானிமஸ் ஆதரவாளர்கள்/ஆர்வலர்கள் போர்வையில் அவர்களின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், இணையத்தில் தங்கள் அடையாளத்தினை மறைத்துக் கொள்ள விரும்புவர்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் TOR வலையமைப்பிலும் பங்கேற்பாளர்களாக உருமாறி தங்கள் கணிணிகள் மூலம் பயணிக்கும் தகவல்களைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தார்கள். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கணிணி/இணைய வல்லுநர்கள் மத்தியில் பலத் துயரச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.
அச்சம்பவங்கள் அனைத்தும் அனானிமஸ் தொடர்பானவை என்பதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதும் பொதுவில் வைக்கப்படவில்லையென்றாலும், அவற்றின் மூலம் அனானிமஸ் அல்லது அமெரிக்க அரசுக்கு எதிராக இணையத்தில் அடையாளங்களை மறைப்பது மற்றும் ஊடகங்களின் தணிக்கை முறை ஆகியவற்றுக்கெதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
அமெரிக்க அரசு இத்தனை பிரயத்தனப்பட்டாலும் அவர்களுக்கு கைகொடுத்ததென்னவோ எதிரிகளைக் கவிழ்க்க பயன்படும் தொன்றுதொட்ட பாரம்பரிய வழக்கமான காட்டிக்கொடுக்க உள்ளிருக்கும் ஆட்களை வளைக்கும் தந்திரம்  தான். இணையத்தில் மாயமான்களாய் வலம்வரும் அனானிமஸ் அன்பர்களை அவ்வாறு வளைத்த வரலாறு அதிரிபுதிரி திருப்பங்கள் திருப்பங்கள் நிறைந்த மசாலாத் திரைப்படங்களை மிஞ்சிய ஒன்று. அக்கதையினைப் பார்ப்போம்.
முதலில் சட்டமாற்றங்கள் மூலம் இணையக்குற்றங்கள் மிகப்பெரும் தேசத்துரோக வழக்குகளைப் போல கையாளப்பட்டது. சிறு குற்றங்களுக்குக் கூட பல்லாண்டு சிறைத்தண்டனை, கட்டவே முடியாத அபராதத் தொகை போன்ற அஸ்திரங்கள் ஏவப்பட்டன. அனானிமஸ் அன்பர்கள் முகமூடி மாயாஜாலக்காரர்களாக இருந்தாலும் பெரும்பான்மையனோர் மிக இளம் வயதினர், அதிமுக்கிய இணையப் பாதுகாப்புத் துறைகளின் பதவிகளை அலங்கரித்தவர்களாகவோ அல்லது அதனை எதிர்நோக்கியவர்களாக இருந்தனர்.
அமெரிக்க அரசின் கடும் தண்டனைகளும், வழக்கில் சிக்கி விட்டால் தங்கள் எதிர்காலம் சாகும்வரை சின்னாபின்னப்படுத்தப்படும் என்பது அவர்களிடையே ஒரு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதில் நாம் முதலில் சந்திக்கப் போகும் நபர் ‘சிக்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 20 வயதாகும் சிகர்துர் தொர்டர்சன். மேலே படத்தில் புத்தம் புதிய பால் டின்னைப் போல புசுபுசுவென விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் உடன் காட்சியளிக்கும் சிறுவன் தான் சிகர்துர். இந்தப் பொடிப்பயல் எப்படி ஜூலியனுடன் என்று உங்கள் மனதில் தோன்றும் அதே கேள்வியும் ஆச்சர்யமும் அனைவருக்கும் தோன்றியது. ஜூலியனுனிருந்தவர்கள் அனைவருமே சின்னஞ்சிறுசு, அறியாத வயசு என்று ஜூலியனை கடுமையாக எச்சரித்தனர். விதி வீதியில் விளையாடியது, ஜூலியன் கேட்கவில்லை.
ஜூலியன் சிகர்துர் மேல் வைத்த நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது.  ஐஸ்லாந்தைச் சேர்ந்த சிகர்துர்,  ஜூலியனைப் போலவே தனிமை நிறைந்த சிறுவனாக வளர்ந்ததும், தன் 12 வயதிலேயே கணிணிகள் மேல் காதல் கொண்டு ஒரு இணையத்தளத்தினை ஹேக் செயத்ததும், 14 வயதில் குடும்பத்துடன் விமானப்பயணம் மேற்கொள்கையில், ஐஸ்லாந்தின் முக்கிய நிதி நிறுவனமான ‘மைல்ஸ்டோன்’னின் முக்கியஸ்தரான தன் சக பயணியின் மடிக்கணிணியினை சரி செய்து கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்திலேயே வேலை கிடைக்கப்பெற்றதும் சிகர்துரின் திறமையைச் சொல்லும். சிகர்துரின் வீரியம் புரியாமல் மைல்ஸ்டோன் நிறுவனம் கொடுத்த வேலை அவர்களின் வலையமைப்பில் சிதறிக்கிடக்கும் அதிமுக்கிய ஆவணங்களைத் தேடிப்பிடித்து அவற்றை முற்றாக அழிப்பது.
சாக்லேட் சாப்பிடும் வயதாக இருந்தாலும், இந்த வேலைக்கு இவ்வளவு காசா என்ற கேள்வி சிகர்துருக்கும் இருந்து வந்தது. தான் அழிக்க வேண்டிய ஆவணங்களை பிரதி எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து அவற்றைப் படிக்க ஆரம்பித்ததும் சிகர்துருக்கு அந்நிறுவனத்தின் பெரிய தலைகள் ஈடுபட்டுள்ள மோசடிகளும், அதில் ஐஸ்லாந்து அரசியல்வாதிகளின் தொடர்பும் புரியவந்தது. இது நடந்த வருடம் 2009, கடும் பொருளாதார நெருக்கடியில் ஐஸ்லாந்து தத்தளித்த நேரம். சிறுவயது முதலே ‘ஏதாவது செய்யனும் பாஸ்’ என்று ஆசை கொண்டிருந்த சிகர்துருக்கு இது அரிய சந்தர்ப்பமாகத் தோன்றியது.
தன் அடையாளத்தினை தெரியப்படுத்தாமல் சுமார் 600 gb அளவிலான கோப்புகளை முக்கிய ஊடகங்களுக்கு சிகர்துர் மூலம் பந்தி வைக்கப்பட்டு, மைல்ஸ்டோன் நிறுவனத்தின் மானம் அடுத்த நாள் தலைப்புச் செய்தியில் சந்தி சிரித்தது. அதுவரை சிறப்பாக அனைத்தையும் கடந்து வந்த சிகர்துர் சந்தித்த முதல் துரோகம் தன் வகுப்புத் தோழன் தன்னைக் காட்டிக் கொடுத்தது தான். மைல்ஸ்டோன் கோப்புகளை பகிரங்கப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, வழக்கும் தொடுக்கப்பட்டது, வாழ்க்கையே வெறுத்துப் போன சிகர்துருக்கு தெரிந்த ஒரு விடிவெள்ளி ஐஸ்லாந்து ஊடகத்தில் பழக்கமான கிறிஸ்டைன்.
இந்த கிறிஸ்டைன் வேறு யாருமல்ல, விக்கிலீக்ஸின் அதிகாரப்பூர்வ ஊடகத்தொடர்பாளர். அந்த காலகட்டத்தல் அப்பொழுது தான் விக்கிலீக்ஸ் சிறிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்த நேரம், சிகர்துர் பகிரங்கப்படுத்திய கோப்புகள் ஐஸ்லாந்தில் புயலைக்கிளப்பியதைக் கண்ட கிறிஸ்டைன், அகில உலகத்தையும் உறைய வைத்த ‘colateral murder’ காணொளியினை வெளியிடும் பணிகளுக்காக ஐஸ்லாந்தில் மையம் கொண்டிருந்த ஜூலியன் அசான்ஞ்சிடம் சிகர்துரை அறிமுகப்படுத்திய அந்த கணம் ஜூலியனுக்கு ஏழரை ஆரம்பித்தது.
தன்னைப் போலவே சிறுபிராயத்தினை கொண்டிருந்ததும், தன் சொந்த மகனின் வயதினை ஒத்திருந்த சிகர்துரிடம் அடுத்த சிலமணி நேரங்களின் தனியே அமர்ந்து சூப் சாப்பிடுமளவுக்கு மனதால் நெருங்கியிருந்தார் ஜூலியன். அடுத்த சில வாரங்களில் ஜூலியனின் நம்பிக்கைகுரிய உள்வட்டத்தில் சிகர்துருக்கு இடமளிக்கப்பட்டது. நினைத்த நேரத்தில் ஜூலியன் தொடர்பு கொள்ள குறியீட்டுமுறைப்படுத்தப்பட்ட கைப்பேசி வழங்கப்பட்டது, ‘colateral murder’ காணொளியின் தயாரிப்புப் பணியிலும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது சிகர்துருக்கு. முதலில் penguinX என்றும், பின்னர் ‘Q’ என்றும் புனைப்பெயரால் சிகர்துரை அனைவரும் அழைக்க ஆரம்பித்திருந்தனர்.
தொடர்து பலபேரும் ஜூலியனிடம், சிகர்துருக்குக் கூடி வரும் முக்கியத்துவத்தினை எச்சரித்தையும் மீறி விக்கிலீக்ஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ விவாதத்தளங்களை(chatroom/forum) நிர்வாகம் செய்யும் பொறுப்பு சிகர்துருக்கு வழங்கப்பட்டது. கேட்க சாதாரணமாக இருந்தாலும் இது நடந்த பொழுது ஸ்வீடனில் ஆடிய கபடி ஆட்டத்திற்காக இன்டர்போல் ஜூலியனைத் தேடிய நேரம், collateral murder காணொளியின் வெளியீட்டுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத்துறை தன் கழுகுக் கண்களை ஜூலியனின் மேல் அழுந்தப் பதித்திருந்த நேரம். விக்கிலீக்ஸின் விவாதத்தளங்களுக்கு வருபவர்கள் அமெரிக்க உளவாளிகளாகக் கூட இருக்கலாம், ஒவ்வொருவரையும் எடை போட்டு அனுமதிக்க வேண்டிய பெரும் பொறுப்பு சிகர்துரின் பிஞ்சுக்கைகளில் வரப்போகும் விபரீதங்களை அறியாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

தொடரும்.
www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Wednesday, November 20, 2013

இணையம் வெல்வோம்-14

அமெரிக்காவின் வரலாற்றை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை 2001 செப்டம்பர் 11க்கு முன், பின் என நளைய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் படிக்குமளவுக்கு தலைகீழாய் புரட்டிப் போட்டது இரட்டைக் கோபுரத் தாக்குதல் அல்லது நிகழ்ச்சி.
கம்யூனிச நாடுகளின் மேல் மேற்குலக மேதாவிகள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு அங்கு தனிமனித சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது. ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த கிழக்கு ஜெர்மனியில் இத்தகைய கண்காணிப்புகள் மிகப்பிரபலம். இப்படி ஊர் உலகமெல்லாம் அரசு இயந்திரங்கள் நடத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்த அமெரிக்க மக்கள் தங்களுக்கே அது போன்ற நிலை வருமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு தேசியப் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டுத் தங்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்தால் கூட “God Bless America” என்று மயிர்க்கூச்செரியக் கூவுமளவிற்கு அனைவரும் அரண்டு போயிருந்தார்கள். ஊடகங்களும் அதனை நியாயப்படுத்தின. 


ஆனால் அமெரிக்க அரசின் கண்காணிப்பின் நீள, அகலம் எட்வர்ட் ஸ்நோடன் ஊடகங்களின் அவிழ்த்து விடும் வரை யாருக்கும் உறுதியாய்த் தெரிந்திருக்கவில்லை. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்காவில் கல்யாணத்தின் முதல் பந்தியில் சாப்பாடு பறிமாறும் வேகத்திற்கு இணையாக தேசியப்பாதுகாப்பினை பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று தான் FISA (Foreign Intelligence Surveillance Act) எனப்படும் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள். அதன் மூலம் எந்த நீதிமன்ற ஆணையுமின்றி அரசு சந்தேகப்படும் எந்த ஒரு நபரின் தொலைத்தொடர்புகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து அலசி ஆராயலாம் என்பது தான். இங்கு தொலைத்தொடர்பு என்பது இணையம், தொலைபேசி மற்றும் செல்பேசி என சகல இலத்திரனியல் சாதனங்கள் மூலம் ஏற்படுத்தபடும் தகவல் தொடர்புகள் என்பதனை நினைவில் கொள்ளவும். இந்த அசுர பலத்தின் வீச்சினையும், வீரியத்தினையும் சட்டென்று பலருக்குப் புரிபடுவதில்லை. இணையம் எப்படி செயல்படுகிறதென்பதின் சூட்சுமம் அறிந்தவர்களுக்கு இதில் உள்ள ஆபத்தும், ஆழமும் புரிந்திருந்தது.
மொட்டைக்குத் திருப்பதி போல, இணைய வழங்கிகளுக்கு அமெரிக்கா. உலகத்திலிருக்கும் முக்கால்வாசி இணைய வழங்கிகள் அங்கு தான் இருக்கிறது. தேசிய அளவின் இணையப்போக்குவரத்தினைக் கண்காணிப்பதன் மூலம் உசிலம்பட்டியில் இருந்து உங்கள் செல்பேசியின் ‘வாட்ஸ் அப்’ பில் யார், யாரிடம் மரியாதையுடம் பேசுகிறீர்கள், அல்வா கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என்பதெல்லாம் கூட கண்காணிக்க முடியும்.

இங்கு கண்காணிப்பதென்பது உங்கள் இணைய நடவடிக்கைகளை எப்போதும் ஒருவர் தோளோடு தோளாய் நின்று கண்காணிக்கிறார் என்பதல்ல. இங்கு சகலமும் சேமிக்கப்படுகிறது. சகலமும் என்றால் ச..க..ல..மு...ம். உங்கள் கணிணி எத்தனை மணிக்கு இணைகிறது, வலையமைப்பு எண், உங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனம், வேலை நேரத்தில் பேஸ்புக் போவது முதல், சினிமா கிசுகிசு படித்துக் கொண்டே VOIP மூலம் தொலைத்தொடர்பில் இருப்பது வரை அத்தனையும். சேமிக்கப்படும் தகவல்களனைத்தையும் அரைத்துச் சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொடுக்க SIEM போன்ற வலைப்பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் பாஸ்டன் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ‘pressure cooker bombs’ என்று தெரிந்த பிறகு கூகுளில் Pressure Cooker Bombs என்று தேடியவர்கள் வீடுகளுக்கு அமெரிக்கப் போலீசார் விருந்துக்குச் சென்ற சம்பவங்களின் மூலம் இணையக் கண்காணிப்பின் ஆழத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள கனமாகப் பரிந்துரைக்கப் படுகிறது. முதலாவது அமெரிக்க இணைய வழங்கிகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமானது அல்ல. அவற்றில் இருக்கும் இணையத்தளங்களை உலகம் முழுவதிலும் உள்ள பயனாளர்கள் வருகை தருகிறார்கள். நீங்களும், நானும், உலகமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள், இராணுவப்பாதுகாப்பு மற்றும் அணு உலை மைய அலுவலகங்கள் இப்படி அனைத்தும். இவையனைத்தையும் ஒரு தனி நாடு கண்காணிக்க முடியுமென்பது மிக அபாயகரமானது. இதன் மூலம் குறிப்பிட்ட எந்த தனி நபரையும் குறிவைத்துத் தகவல்கள் சேமிக்க முடியும், மேலும் உங்கள் இணையப்பழக்க வழக்கங்களை வைத்து உங்கள் கணிணியில் நிரல்களை நிறுவி நீங்கள் இணையத்தில் இணைப்பில் இல்லாத  போதும் என்னென்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியும். இரண்டாவது விஷயம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட இணையத்தில் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பது மூலம் மனிதர்களைத் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்பதாகத் தரம்பிரிக்க முடியும்.

உதாரணத்திற்கு உங்கள் உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கிய விவரங்கள், பிடித்த/பிடிக்காத விஷயங்கள், அரசியல் சார்பு, குடும்பம், நட்பு, தொடுப்பு இப்படி அனைத்தும். இப்படி ஒரு தனி நபரை இணைய நடவடிக்கைகள் மூலம் தரம்பிரித்தலை அமெரிக்கா தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ஆரம்பித்து வைத்தாலும், இணையமும் ஒரு காலத்தில் போர்க்காலங்களில் இராணுவப் பயன்பாட்டுக்கென கண்டுபிடித்து இன்று கொத்தமல்லி சட்னி வைக்கக் கூட இணையத்தினைப் பயன்படுத்தும் அளவுக்கு அதன் வளர்ச்சியினைப் பார்க்கிறோம்.


 அதே போல் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் எதிரில் இருக்கும் நபரின் முகத்தினைப் படம் பிடித்து, அடையாளம் கண்டு, அவரைப் பற்றிய சகல விவரங்களையும் அவருடைய இணைய நடவடிக்கைகளை வைத்துப் பட்டியலிடக் கூடிய சக்தியுடன் இலத்திரனியல் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும்.

அது போன்ற கால கட்டங்களில் எந்த ஒரு மனிதனும் தங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்/நண்பர்கள் மத்தியில் மட்டுமே தங்கள் முகத்தினையோ அல்லது தங்கள் அடையாளப்படுத்தியோ கொள்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் மானாட மயிலாட பார்த்து விட்டு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சென்றால் உள் நுழைந்ததும் எச்சரிக்கை ஒலி அடிக்கச் செய்யுமளவிற்கு வளரப் போகும் விஷயம் தான் இந்த இணையக் கண்காணிப்பு (Project PRISM).


இவற்றையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறது என்று உலகிற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டு இதன் ஆபத்தினை பற்றி எடுத்துரைத்த எட்வர்ட் ஸ்நோடனை அரசாங்கத்துடன் வெள்ளைக் காக்கை மேய்க்கும் பெரும் ஊடகங்கள் உளவாளி, மோசடிக்காரன் என்று ஆர்ப்பரித்து அடங்கின.

ஸ்நோடன் குறித்து விரிவாக, தனியாகப் பார்ப்போம். எல்லாம் சரி இதன் மூலம் அனானிமஸ் அன்பர்களுக்கு வந்த பிரச்சினைகள் என்ன, அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், மேலும் மைக்ரொசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் குறியீட்டு முறையை (encrpytion) எப்படி அமெரிக்க அரசாங்கள் கட்டுடைத்து அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் பலம் பெற்றது போன்ற விவரங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.


தொடர்வோம்.

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Wednesday, November 13, 2013

இணையம் வெல்வோம்-13

DDoS (Distributed Denial of Service) Attack என்பது வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களிடையே மிகப்பிரசித்தம். இணையத்தில் கடைவிரித்திருக்கும் பிரபல நிறுவனங்கள், வங்கிகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு கடமையாற்றும் வலைப் பாதுகாப்பு நிபுணர்கள் சந்திக்கும் கேள்விகளில் தவிர்க்க முடியாத ஒன்று DDoS தாக்குதலைச் சமாளிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறீர்கள் என்பது தான்.
DDoS தாக்குதல் என்றால் என்ன, எதற்காக அனானிமஸ் குழுவினர் அதனை தங்களின் கடைசி ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள், எப்படி போவோர், வருவோரை எல்லாம் இத்தாக்குதலில் இணைய வைக்க முடியும் என்பது  குறித்துப் பார்ப்போம். வலையமைப்பினைக் கட்டமைக்கும் போது எப்படி முக்கியமான தகவல்கள் அடங்கிய வழங்கிகளை, நிறுவனத்தில் பணியாற்றும் அன்பர்கள் மட்டுமே பயன்படுத்தும் உள் வலையமைப்புக்களை மூடி வைக்கிறோமோ அதைப் போலவே சில விஷயங்களை இணையத்தில் திறந்து வைப்பது தவிர்க்க முடியாதது.

உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் இணையத்தளத்தினை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தில் பந்தி வைத்துத்தான் ஆக வேண்டும், அது போன்ற வழங்கிகள் அவற்றின் பயன்பாட்டுக்கேற்ற தகவல் பறிமாற்ற முறைகளின் படி வரும் வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கத் தான் வேண்டும். 

உங்கள் உலாவியில் ஒரு இணையத்தளத்திற்கு செல்லும் போது, அதன் வழங்கி http/https வழிமுறையில் வைக்கபடும் வேண்டுகோள்களுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தான் அதன் முகப்புப் பக்கங்கள் உங்கள் கணிணித் திரையில் காட்சியளிக்கின்றன. இதில் வேண்டுகோள்கள் போயஸ் கார்டனிலிருந்து வந்தாலும், கோபாலபுரத்திலிருந்து வந்தாலும், கேட்பது சமையல் குறிப்பாக இருந்தாலும், சமந்தாவின் படமாக இருந்தாலும் எந்த பாரபட்சமுமின்றி பதிலளிப்பது தான் இணைய தள வழங்கிகளின் வேலை. இந்த ஒரே காரணத்திற்காகத் தான் DDoS தாக்குதல் பெரும்பாலும் வழங்கிகளை முடக்கிப் போடுகின்றன. DDoS தாக்குதல் என்பது மிக எளிதான் ஒரு விஷயம். பெரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ரோட்டோரப் புரோட்டாக் கடைகளின் சாப்பிடும் புரோட்டாவைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் கவனித்துச் சாப்பிடும் அனைவரும் வியந்து போவது,  ஒரே நேரத்தில் பறிமாறும் பணியாளர்கள் பலர் சொல்லும் ஆர்டர்களையும் திரும்பிக் கூட பார்க்காமல் தலையை மட்டும் அசைத்து ஆமோதித்து ஆர்டர் கொடுத்த அதே வரிசையில் முட்டைப் புரோட்டாக்களையும், ஆம்லேட்டுக்களையும் விளாசித்து தள்ளும் புரோட்டா மாஸ்டரின் திறமையைப் பார்த்துத் தான். கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் சத்தமாக ரெண்டு புரோட்டா, நாலு ஆப் பாயில் என்று கூவிப் பார்த்திருக்கிறீர்களா?. கூடுதலாக ஒரு குரல் கேட்டதும், மாஸ்டர் மண்டை காய்ந்து போய்,  கடைசியாக சொன்ன ஆர்டர்கள் அனைத்தையும் சரிப் பார்த்த பின்பே தன் பணியைத் தொடர்வார்.

அவரால் குறிப்பிட்ட நபர்கள் கொடுக்கும் ஆர்டர்களை மட்டுமே சமாளிக்க முடியும், அதற்கு மேல் என்றால் எழுதி வைத்து சமாளிக்கவோ அல்லது குளறுபடிகள், தாமதத்தோடு தான் அவர் தன் பணியைச் செய்ய முடியும்.

இதில் புரோட்டா மாஸ்டர் தான்  நிறுவனங்களின் வழங்கிகள், பறிமாறும் பணியாளர்கள் தான் உண்மையாக வழங்கியின் பயன்பாட்டாளர்கள், கூட சேர்ந்து குரலெழுப்பி கலகம் விளைவிக்கும் கண்மணிகள் தான் DDoS தாக்குதல் தொடுப்பவர்கள். DDoS தாக்குதலுக்குத் தேவையான முக்கிய அம்சங்கள் ஒவ்வொரு நொடிக்கும் பல லட்சங்கள் வேண்டுகோள்களை சமர்ப்பிப்பதும், தாக்குதல் தொடுக்கும் கணிணிகள் வெவ்வேறு நாடுகளில்/இடங்களில் (வெவ்வேறு வலையமைப்பு எண்கள் தேவை) இருப்பதுவும் ஆகும்.

இதனைச் செயல்படுத்துவதற்கு நிரல் எழுதும் பயில்வானாகவோ அல்லது இணையத்தில் பரவிக்கிடக்கும் எண்ணற்ற நிரல்களில் சத்தான ஒன்றைத் தேர்வு செய்து தங்கள் கணிணியில் அதனை செயல்படுத்த வைக்கும் திராணியுள்ள விஜயகாந்த்தாகவோ இருக்க வேண்டும்.  தாக்கப்படும் பெரும் நிறுவனங்களின் வழங்கிகள் செயலிழந்து போனால் உடனே ஊடகங்களில் பரபரப்பாக மானம் கப்பலேற்றப்படும். அதனால் தான் உலகமெங்கும் கிளைகள் பரப்பியிருக்கும் அனானிமஸ் DDoS தாக்குதலை தங்கள் கடைசி ஆயுதமாக பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தனர். 

வலைப்பாதுகாப்புக்கென பணத்தை வாரியிறைக்கும் இன்றைய காலகட்டத்தில் சகல அதிகாரங்கள் படைத்த அரசு இயந்திரங்களையும், அவற்றை மறைமுகமாக இயக்கும் அல்லது அவற்றால் மறைமுகமாக இயக்கப்படும் பெருநிறுவனங்களின் இணைய வழங்கிகளை இந்த நாள், இந்த நேரம் தாக்கப் போகிறோம் என்று சொல்லி அடிப்பது விளையாட்டுக் காரியமில்லை. இன்றைய இணைய வழங்கிகளின் செயல்திறனை மீறிய தகவல் போக்குவரத்தை உருவாக்கித் திணறடிப்பதற்கென்றே சிறப்பு நிரல்களை எழுதி சமூக வலைத்தளங்களில் சரியாக முகூர்த்த நேரத்தில் உலவ விடுவது அனானிமஸ்களின் வழக்கம்.

அவ்வாறு வெளியிடப்படும் உரல்களை க்ளிக்கிய தருணம் நிரல்கள் உங்கள் கணிணி அல்லது செல்பேசியில் தரவிறக்கம் செய்யப்பட்டு செயல்பட ஆரம்பித்து விடும். சட்டத்தின் படி உங்கள் உங்கள் கணிணி அல்லது செல்பேசி தீங்கு விளைவிக்கும் நிரல்களால் பாதிக்கப்பட்டு தாக்குதலில் பங்கு கொள்வதால் நீதிமன்றத்தில் ஒரு வண்டு முருகனை வைத்துக் கூட உங்களால் எந்த பாதிப்பும் இன்றி வெளியில் வந்து வந்து விட முடியும்.

ஆச்சர்யமாக DDoS தாக்குதல்கள் சில நேரங்களில் இயல்பாக நடைபெறுவதுண்டு. உதாரணத்திற்கு நம்மூரில் பெட்டிக்கடை இணையத்தளங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடும் போது ஒவ்வொரு மாணவனின் ஒட்டு மொத்த சுற்றமும், நட்பும் தனித்தனியாக இணையத்தளத்திற்குப் படையெடுக்கும் பொழுது நீங்கள் உணர்ந்திருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கர் முதல் இரட்டைச்சதமடித்த பொழுது புகழ்பெற்ற கிரிக்கெட் இணையத்தளமான www.cricinfo.com தளத்திற்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலை மிகத்துல்லியமாக தடுத்து நிறுத்த எந்த வழிமுறையும் இல்லை. அப்படியே தடுத்து நிறுத்தினாலும் அதில் உண்மையான பயனாளர்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எப்படிப் பார்த்தாலும் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வெற்றியே.

இத்தாக்குதல் முறையைப் பயன்படுத்தி அனானிமஸ் எண்ணற்ற இணையத்தளங்களை முடக்கியிருக்கின்றன அவற்றில் முக்கியமானவை மற்றும் ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையத்தளங்கள்.

இத்தாகுதல் முறையில் போதுமான நபர்கள் இல்லை என்று கூறி  தங்கள் தோல்வியினை அனானிமஸ் குழுவினர் ஒத்துக்கொண்டு ஒதுங்கிய இணையத்தளம் www.amazon.com. மேலே குறிப்பிடப்பட்டத் தாக்குதல்கள் அனைத்தும் விக்கிலீக்ஸ்க்கிற்கு ஆதரவாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல்கள் நடைபெறும் போது வலைப்பாதுகாப்பு நிபுணர்களின் பணியிடமும் ( Security Operations Center), தாக்குதலை நடத்தும் நபர்களுக்கும் நடக்கும் உரையாடல்களும், தாக்குதலுக்குள்ளாகும் வழங்கிகளின் நிலைமாறுதல்களும் ஒரு போர்க்களத்திற்கு சற்றும் குறைவில்லாத பரபரப்போடு இருக்கும். இரு குழுக்களும் வழங்கிகளை முடக்கவும், காப்பாற்றவும் படும்பாடு சொல்லி மாளாது. மிகச்சமீபமாக இத்தகைய சைபர் யுத்தங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளன.
எதிர்காலத்தில் ஆயுதங்கள் ஏந்தி போருக்குச் செல்வது மறைந்து, ஒரு நாட்டின் அரசு வலையமைப்புக்களை கட்டுடைத்து, கையகப்படுத்தி போரில் வென்று வசப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் ஈரானின் அணு உலை வலையமைப்புக் கணிணிகளில் தகவல் திரட்டும் நிரல்களை நிறுவி நடத்தப்பட்ட தாக்குதல் வலைப்பாதுகாப்பு உலகில் மிகப்பிரசித்தம். நடத்தியது யார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றாலும், சான்றுடன் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இன்றையத் தேதியில் ரகசியமாக இத்தகைய சைபர் யுத்தங்களுக்கு எல்லா நாடுகளும் தங்கள் சத்துக்கு ஏற்றவாறு தயார் படுத்திக் கொண்டிருந்தாலும், முன்னணியில் இருப்பது நமது பக்கத்து வீட்டுக்காரரான சைனா என்பது உபரித்தகவல். 

தங்களின் தொழில்நுட்ப பலத்தினையும், சட்ட திட்டங்களிம் ஓட்டைகளையும் வைத்து கபடி ஆடிக்கொண்டிருந்த அனானிமஸ் குழுவினரை அடக்குதென்பது அமெரிக்க அரசிற்கு பெரும் சவாலாக இருந்தது. இணையத்தின் மாயத்திரைகளுக்குப் பின்னால் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கண்கட்டி வித்தை காட்டி வந்த இவர்களுக்கென்றே ஒரு சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அத்திட்டம் பல அனானிமஸ் அன்பர்களை வெளியுலகிற்கு இழுத்து வந்தது. அத்திட்டம் என்ன?..

தொடர்வோம்…

www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.

Thursday, November 7, 2013

இணையம் வெல்வோம்-12


இணையத்தில் வம்பிழுப்பதற்கும், அடாவடி செய்வதற்கும், கைவசம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுவதற்கும் , உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இணையத்தில் பதிவு செய்யப்படும் அத்தனையும் கல்வெட்டில் பொறித்தாற் போல பல தலைமுறைக்கும் உங்கள் பெயர் சொல்லும்.
உலகில் ஒவ்வொரு வலையமைப்பும் கட்டமைக்கப்படும் பொழுது அதற்குத் தேவையான அத்தனை பாதுகாப்பு வசதிகளையும் கவனத்தில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இத்தனை கவனமாக உருவாக்கப்படும் வலையமைப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் கம்பிக்குப் பின்னால் ஒன்றாம் வாய்ப்பாடு படிக்க வைக்கக் கூடிய கடும் சட்டதிட்டங்கள் உள்ள கால கட்டத்தில் அரசுகளையும், மிகப்பெரிய நிறுவனங்களையும் எதிர்த்து இணையத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்வது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல, கரணம் தப்பினால் மரணம் தான். ஆனால் அதை சிரமமே இல்லாமல் போகிற போக்கில் வெற்றிகரமாக சுவடே இல்லாமல் சர்வசாதாரணமாக நடத்திக் காட்டும் கில்லாடிகள் தான் அனானிமஸ்.
முதலில் அவர்கள் எப்படி தங்கள் அடையாளங்களை மறைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம். இணையப்போராளிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள் யாரும் பொழுது போகாமல் சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர், நடிகைகளின் கிசுகிசுக்களை பதிவதையோ அல்லது தங்களின் அபிமான அரசியல்வாதிகளுக்கு சொம்பு தூக்குவதையே கடமையாக ஆற்றும் நபர்களோ அல்ல.
இவர்கள் அனைவரும் வலைப்பாதுகாப்புப் பற்றியும், வலையமைப்பின் கட்டமைப்பு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்களாகவோ மற்றும் கனத்த சம்பளத்துடன் கூடிய வேலையில் இருப்பவர்களாகவோ இருப்பவர்கள். இணையத்தில் உங்கள் அடையாளத்தினை மறைக்க பல வழியிருக்கிறது. இணையம் என்பது ஒவ்வொரு மனிதனின் தனியுரிமை, அதில் தான் விரும்பினால் மட்டுமே தன் அடையாளத்தினை வெளிப்படுத்திக் கொள்ளலாம், இப்படி பாதுகாப்பினைக் காரணமாகச் சொல்லி மக்களை இணையத்தில் வேவு பார்ப்பது படுபாதகம் என்று குரல் கொடுக்கும் பல லாபநோக்கற்ற நிறுவனங்கள் வலைத்தளங்களை இயக்கி வருகின்றன. அவற்றின் ஆர்வலர்கள் அதற்கெனெ TOR போன்ற சிறப்பு மென்பொருட்களைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருவது குறித்து சினிமா நூற்றாண்டு விழாவில் யார் எந்த வரிசையில் உட்கார்ந்து அவமானப்பட்டார்கள் என்று தேடிப்படித்து கவலைப்படும் நம்மில் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உதாரணத்திற்கு TOR உலாவியில் குறிப்பிட்ட முறையில் உலாவினால் உங்களை இணையத்தில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது, மேலும் உங்களின் இருப்பிடத்தினை இணையத்தில் வெளிச்சம் போட்டுக்காட்டும் வலையமைப்பு எண்ணை நீங்கள் விரும்பும் நாட்டைச் சேர்ந்ததாக மாற்றிக் கொள்வதும் சாத்தியம். இது போன்ற சித்து விளையாட்டுக்கள் மூலமே அனானிமஸ் தங்கள் அடையாளத்தினை மறைத்துச் செயல்படுகிறார்கள்.
அப்படிப்பட்ட திறமையானவர்கள் அனானிமஸ் குழுமத்திற்காக களமாட வருவது அத்தனை எளிதல்ல அப்படியே வந்தாலும் பல நாட்டு அரசுகளோடும், அரசு இயந்திரங்களை தங்கள் மீசையைப் போல தங்கள் நோக்கத்திற்கு வளைக்கும் செல்வாக்கு மிக்க நிறுவங்களோடும் மோதும் பொழுது எண்ணிக்கை மிகச் சொற்பமே. நாம் இதுவரைத் தெரிந்து கொண்ட அனைத்து வலையமைப்புப் பாதுகாப்பு யுக்திகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது சிலக்குறிப்பிட்ட வலைத்தாக்குதல் முறைகளுக்கு எண்ணிக்கையும், சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளின் வலையமைப்பு எண்களும் அவசியம். இத்தனை சிக்கல்கள், அடையாளம் தெரிந்து விட்டால் வேலை பறிபோய், தீவிரவாதியாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சமூகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டு வாழ்நாள் முழுதையும் சிறைக்குள் கும்மியடிக்க வேண்டிய அபாயம் இவையனைத்தையும் சமாளிக்கும் விதத்தில் தான் இவர்கள் தாக்குதல் திட்ட மிடப்படும்.
வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களின் சவால்களில் வலையமைப்பு தாக்குதல் முறைகளை ஆய்வு செய்து அவற்றின் தாக்குதல் முறைகளை வகைப்படுத்தி அதற்கேற்ப வலைப்பாதுகாப்பு அரண்களைக் கட்டமைப்பதும் ஒன்று. அவ்வாறு இதுவரை நடந்துள்ள அனானிமஸ் தாக்குதல்களை அலசி,
துவைத்துக் காயப்போட்டதன் மூலம் கண்டறிந்த விவரங்களைத் தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம். ஒவ்வொரு அனானிமஸ் தாக்குதலுக்கும் உண்டான காலப்பகுதி நான்கு முதல் ஐந்து வாரங்கள். முதல் வாரம் தனி நபரோ அல்லது சிறு குழுவோ தங்கள் பார்வையில் மக்களுக்கு அநீதி நிகழ்வதற்குக் காரணமாகக் கருதும் அரசாங்கத்தினையோ அல்லது நிறுவனத்தினையோ சாதரணமாக சமூக வலைத்தளங்களில் முன்மொழிவார்கள்.
இது அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாறுபடும். அணுசக்தி உலைகளின் கதிர்வீச்சின் உண்மை அளவினைக் குறைத்து ஊடகங்கள் துணையுடன், யாருக்கும் எந்த பாதிப்பும் உண்டாகாது என்று புழுகும் அரசாகவோஅல்லது மக்களின் வரிப்பணத்தில் இராணுவப் படையெடுப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதற்காக கொள்ளைக் காசு வாங்கும் குத்தகை நிறுவனங்களாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்தில் தவறான தகவல்களைத் தரும் சராசரி அரசியல்வாதியாகவோ இருக்கலாம்.
இவ்வாறு முன்மொழியப்படும் இலக்குகள் முதலில் தீவிர அனானிமஸ் செயல்பாட்டார்களால் வழிமொழியப்பட வேண்டும். இத்தகவல் பறிமாற்றங்கள் அனைத்தும் திரைமறைவிலேயே நடக்கும். இவர்கள் யாருக்கும் மற்றவர்கள் ஒருவரையும் தெரியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஒவ்வொருவருக்கும் ஒரு புனைப்பெயர் மட்டுமே பகிர்ந்துகொள்ளாப்படும் அதுவும் மாற்றப்பட்டுக்கொண்டெ இருக்கும். இந்த சிறு குழு ஒரு மனதாக இலக்கினைத் தீர்மானித்ததும் அவரவர் விருப்பப்பட்ட தாக்குதல் முறைகளைக் கையாண்டு தேவையானத் தகவல்களைத் திரட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரத்தில் செயல்பட ஆரம்பிப்பார்கள்.
இத்தாக்குதல்களின் நோக்கம் இலக்கில் இருக்கும் வலையமைப்பினைக் கட்டுடைத்து அவற்றின் பயனாளர் பெயர்கள், கடவுச்சொற்கள், அவர்கள் செய்யும் தவற்றினை அம்பலப்படுத்தும் கோப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதே ஆகும். சில சமயங்களில் பழம் நழுவி, பாலில் விழுந்து பின் வாயிலும் விழுந்த கதையாக இலக்காகக் கருதப்படும் வலையமைப்பிற்குள் இருக்கும் பயனாளர்களே அனானிமஸ் ஆர்வலர்களாக மாறி தாங்களே முன்வந்து தகவல்களை தந்துதவுவதும் நடப்பதுண்டு. இத்தாக்குதல்கள் பெரும்பாலும் வலையமைப்பில் இணையத்தின் மூலம் எட்டக்கூடிய வழங்கிகளின் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைத் தங்கள் வசம் கட்டுப்பாடில் கொண்டு வருவது, மின்னஞ்சல் மூலம் தவறான உரல்களை அளித்து பயனாளர்கள் அவற்றைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் தகவல்களை கவர்வது (phishing) போன்றவை உள்ளடங்கும்.
இந்த இரண்டு வாரங்கள் தான் வலைப்பாதுகாப்பு வல்லுநர்களுக்கும், அனானிமஸ் குழுமத்திற்கும் நடக்கும் கடும் மல்யுத்தம். ஒரு வலையமைப்பின் பாதுகாப்புத் தரம் இந்த இரண்டு வாரத்தில் பல்லிளித்து விடும். இத்தாக்குதல்களனைத்தும் எங்கிருந்து நடத்தப்படுகிறது, யாரால் நடத்தப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ பிரிந்து சென்று நடத்தும் இத்தாக்குதல்கள் வெற்றியடையும் பட்சத்தில் இலக்கில் இருந்து உருவப்பட்ட கோப்புகள், இதர தகவல்கள் அனைத்து பறிமாறிக் கொள்ளப்பட்டு வெளியுலகிற்கு விக்கிலீக்ஸ் மூலமோ அல்லது வேறு இணையத்தளங்களிம் மூலமோ அம்பலத்தில் ஏற்றப்படும்.
ஒருவேளை அனைத்தும் தோல்வியில் முடிந்தால், அடுத்த கட்ட ஆட்டம் தான் DDOS (Distributed Denial of Service) எனப்படும் தாக்குதல் முறை. இது தான் கடைசி ஆயுதம். இதன் மூலம் எந்த தகவல் இழப்பினையும் ஏற்படுத்து முடியாத போதும், இலக்கின் இணைய வழங்கிகள் அனைத்தையும் சிறிது நேரத்திற்கு செயலிழக்க செய்வதன் மூலம் இணையத்தில் இலக்கின் இருப்பினை இல்லாமல் செய்து அவமானப்படுத்துவதே நோக்கம்.
இந்த கட்டத்தினை அடைந்தால் இரண்டு விஷயங்களை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒன்று இலக்காக நிர்ணயிக்கப்பட்ட வலையமைப்பின் பாதுகாப்புத் திறன் சிறப்பு, அவற்றினை செயல்படுத்தும் பாதுகாப்பு வல்லுநர்களின் அயராத உழைப்பு, மூன்று அனைத்து ஊடகங்களின் கவனத்தினைக் கவரும் வகையில் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் ஆகியவற்றில் DDOS தாக்குதல் குறித்து பகிரங்கமாக நாள், நட்சத்திரம், மூகூர்த்த நேரம் ஆகியவை அறிவிக்கப்படும் .இத்தாக்குதலுக்கெனெ எழுதப்பட்ட நிரல்கள் தயார் நிலையில் இருக்கும். இத்தாக்குதலுக்கு பங்கேற்பார்களின் எண்ணிக்கை மிக முக்கியமென்பதால் இந்த ஏற்பாடு. நீங்கள் உசிலம்பட்டியில் இருந்து கொண்டு இணையத்தில் எகிப்து புரட்சியாள்ர்கள் படித்து கண்கள் சிவந்து, கன்னம் துடித்து உணர்ச்சிவசப்பட்டால் கூட உங்களால் இத்தாக்குதலில் பங்கேற்ற முடியும்.  எப்படி?. 

தொடர்வோம்…..


www.4tamilmedia.com தளத்தின் வாராந்திர சிறப்புத் தொடருக்காக சுடுதண்ணி எழுதியதிலிருந்து.