Sunday, February 28, 2010

இணையதள முகவரிகளுக்குப் பின்னால் - 1

உலாவியில் ஒரு இணையத்தளத்தின் முகவரியைத் தட்டிவிட்டதும், அத்தளத்தின் பக்கங்கள் கணினித்திரையை நிரப்பும் அந்த நொடியில் தொழில்நுட்பங்கள் நடத்தும் அதிரடித் திருப்பங்கள் மற்றும் சண்டைக்காட்சிகள் நிறைந்த ஈஸ்ட்மென் வண்ண திரைக்காவியத்தைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

இணையதள முகவரி என்பது பயனாளர்களின் வசதிக்காக மட்டுமே. உலாவியில் உள்ளிட்ட பிறகு, அது வலையிணைப்பு முகவர் எண்களாக (IP address) மாற்றப்பட்டே அதன் பக்கங்கள் பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட செல்பேசிகளின் தொலைபேசிப் புத்தகம் (phone books) போல, எண்களை நினைவில் நிறுத்தும் சிரமத்தை தவிர்த்துக் கொடுக்கும் எளிய வழிமுறை. இவ்விடத்தில் வலையிணைப்பு முகவர் எண்களின் கட்டமைப்பை நினைவில் கொள்க (xxx.xxx.xxx.xxx). மிக எளிதாகத் தோன்றினாலும், இதற்குப்பின் எவ்வளவு தொழிநுட்ப வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன, எத்தனை பேரின் மெனக்கெடல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே இப்பதிவு. நாம் செல்லும் தளத்தின் முகவர் எண் என்பது தளத்தின் வழங்கியைக் குறிக்கும் (web server), அவற்றை எப்படித் தெரிந்து கொள்வது?. அதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நமக்கு நாமே திட்டத்தின் படி start->run->cmd என்ற இடத்திற்கு சென்று ping என்ற கட்டளையுடன் தளத்தின் முகவரியை உள்ளிடவும். (பார்க்க படம்).


இரண்டு, பாரம்பரிய வழக்கப்படி நமது விருப்பத்தை நிறைவு செய்யும் பொருட்டு தளங்களின் முகவர் எண்ணைக் கண்டுபிடிக்கும் வசதியை ஏராளமான தளங்கள் இலவசமாக அளிக்கின்றன. சமயத்தில் முகவர் எண்ணுடன் அதன் இருப்பிடத்தையும் சேர்த்து வழங்குவது கூடுதல் சிறப்பு. உ.தா. http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php . மூன்று, தளத்தை நடத்துபவரை தொடர்பு கொண்டு கேட்பதன் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதால் முயற்சித்துப் பார்க்கலாம் :).இணையம் என்னும் கடலில் கோடிக்கணக்கான தளங்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய இணையத்தளங்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. பல நூறு பெயர்கள் செயலிழக்கின்றன. இவற்றுக்கான முகவர் எண்களை யார் பராமரிக்கிறார்கள், எப்படி பழையன கழிதலையும், புதியன புகுதலையும் அவற்றிற்கேற்ப பிரதிபலிக்கிறார்கள் என்ற ஆச்சர்யம் தோன்றுவது இயல்பே.


இணைய தள முகவரிகளைப் பதிவு செய்பவர்கள் (domain name registrars), இணைய தள முகவரிகளையும் அவற்றுக்கான முகவர் எண்களை நிர்வகிக்கும் இணையத் தகவல் மையங்கள் (network information centers - nic), இணைய முகவரிகளையும், அவற்றுக்கான முகவர் எண்களையும் சேமித்து வைத்து தேவைக்கேற்ப பயனளார்களுக்கு இணைய பக்கங்களை வழங்கத் துணை புரியும் இணைய முகவரி வழங்கிகள் (domain name system servers - dns servers), மைய வழங்கிகள் மற்றும் இவையனைத்தையும் கட்டி மேய்க்கும் ICANN (internet corporation for assigned names and numbers) இவர்களனைவரின் கூட்டு முயற்சியில் தான் நாம் முதுகுக்கு ஏதுவான நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வசதியாக உலாவியில் முகவரியைக் கொடுத்து விட்டு இணையப் பக்கங்களைப் பெறுகிறோம்.

மேற்சொன்ன குழுவினர்களின் தலையாய வேலையே, நாள்தோறும் புத்தம் புதிதாக மலரும் இணையத்தளங்கள் மற்றும் அவற்றின் முகவர் எண்களை உலகமெங்கும் உள்ள இணைய முகவரி வழங்கிகளுக்குப் பரப்புவதும் (dns propogation), ஒரு பெயரில் ஒன்றிற்கு மேற்பட்ட இணையதள முகவரிகள் பதியப்படாமல் பார்த்துக் கொள்வதும் தான். இரண்டில் ஒன்று சொதப்பினாலும் மொத்தமும் அலங்கோலமாக வாய்ப்புகள் அதிகம். ஒரு புதிய இணையதளம் ஆரம்பித்து அது உலகம் முழுவதும் பார்வைக்குக் கிடைக்க அதிக பட்சம் மூன்று நாட்களாகலாம் :). அது பார்வையிடப்படும் பயனாளரின் இணைப்பில் உள்ள் இணைய முகவரி வழங்கிகளின் செயல்பாட்டைப் பொருத்தது.

இப்பிரிவினர் அனைவரும் ஒரு வரையறுக்கப்பட்ட வலையமைப்பில் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கின்றனர்?, அவர்தம் செயல்பாடுகள் என்னென்ன?, நாம் வலையிணைப்புப் பெறும் நிறுவனங்களின் பங்கு என்ன? இணையதள முகவரியின் வகைகள் என்ன?, போன்ற பல என்ன, என்னக்களைப் பற்றி அடுத்த பகுதியில்...

Wednesday, February 17, 2010

இணையக்கோட்டை முரட்டு ரவுடிகள்

கல்லூரிக்காலங்களில் வேடிக்கைக்காக இரவு நேரத்தில் மின்சாரத்தடையின் போதோ அல்லது பட்டப்பகலில் போர்வை போத்தியோ பிறந்தநாள் கொண்டாடியிருப்பீர்கள். அதாவது யார் அடிக்கிறார்கள் என்றே தெரியாத வண்ணம் அடி வெளுக்கப்படும். வெளிச்சம் வந்ததும் பார்த்தால் எல்லோரும் அவரவர் இடத்தில் இருப்பார்கள். அப்படி இணையத்தின் பின்பக்கம் மறைந்து கொண்டு தாக்குபவர்கள் பற்றியும் அக்கலையின் நுட்பங்கள் பற்றியும் இப்பதிவில்.

சின்னக் குழந்தைகளைத் தாக்கினால் அது இணைய அச்சுறுத்தல் (cyber bullying) என்றும், மீசை முளைத்த குழந்தைகளைத் தாக்கினால் இணையத் தொந்திரவுகள் (cyber stalking/cyber harassment) என்றும் இதனை வகைப்படுத்தியிருக்கிறார்கள். சமூக வலைப்பின்னல்கள் பெருகிப்போய்விட்ட இணையத்தில் ஒரு தனி நபரைப் பற்றித் திரித்து எழுதி இணையத்தில் வலம் வரச்செய்வதென்பது சுடுதண்ணி வைப்பது போல் மிகமிக எளிது. இதை ஏன் செய்கிறார்கள்? தனிப்பட்ட வன்மம் அல்லது மனவியாதி இரண்டில் ஒன்றாக இருக்கலாம். இணைய உலகத்தில் கருத்து விவாதங்கள் பல தளங்களில் நடந்து கொண்டேயிருந்தாலும், கருத்துக்களைத் தாக்கி விவாதிக்காமல் கருத்துச் சொல்லும் நபரின் இனம், மொழி ஆகியவற்றைச் சாடித் தாங்கள் வெற்றி பெற்றதாகக் கருதும் அன்பர்களாலேயே இணைய ரவுடித்தனம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. நிஜ வாழ்வில் முகம் காட்டி மோதும் அளவுக்குக் கூட சில இணையத்தகராறுகள் செல்வதுண்டு.


இவற்றை எப்படிச் சமாளிப்பது?. உங்கள் நிஜவாழ்வின் அடையாளத் தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கொள்வதென்பது வேலியில் போவதை வேட்டிக்குள் விடும் அனுபவத்தைத் தர வல்லது. அனேக இணையத் தொந்திரவுகள் அடையாளத்திருட்டு(identity theft) மூலமே நடைபெறுகிறது. அதுபோக இணையத்தளங்களிலோ அல்லது பதிவுகளிலோ கருத்து மோதல்களில் பெரும் காலத்தை செலவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் கருத்தை ஒரே முறை பதிவு செய்வதோடு இணையத்தின் மூலம் நாம் செய்யும் சமூக சேவையினை முடித்துக் கொள்வது நன்று. கருத்துக்கு எதிர்வினை, எதிர்வினைக்கு எதிர்வினை என்பதெல்லாம் காலவிரயம் என்பது அனுபவசாலிகளின் கருத்து. இணையத்தில் பலதரப்பட்ட நபர்கள் வருவார்கள், இருதரப்பிலும் ஒரே மாதிரியான மனமுதிர்ச்சியையும், கருத்து விவாதம் செய்யும் பாங்கினையும் எதிர்பார்க்க முடியாதென்பதும் ஒரு காரணம்.


இந்தியாவின் முதல் இணையத் தொந்திரவு குற்றப்பதிவு தில்லியைச் சேர்ந்த திருமதி. ரித்து கொஹ்லி அவர்களால் பதிவு செய்யப்பட்டது. காரணம் அவரது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை வைத்து தினமும் ஒருவர் இணைய அரட்டையில் கும்மியடித்து வந்ததும், அதன் விளைவாக நேரங்கெட்ட நேரத்தில் ஏகப்பட்ட நபர்கள் திருமதி. ரித்து அவர்களின் வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்து 'வரலாமா' என்று கேட்க ஆரம்பித்ததும் தான். பின்னர் வழக்கம் போல வலையிணைப்பு முகவர் எண் (I.P) மூலம் குற்றவாளி கணடுபிடிக்கப்பட்டு முட்டிக்கு முட்டி பெயர்க்கப்பட்டாலும் இதன் மூலம் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து திருமதி. ரித்து கொஹ்லிக்கு மட்டுமே வெளிச்சம்.


தனிப்பட்ட நபர்களால் மட்டுமின்றி கூட்டம் சேர்ந்து கொண்டு ஒருவரைக் குறிவைத்து இணையத்தில் தொந்திரவு செய்வதும் இணையத்தின் மாமூல் வாழ்க்கையில் ஒரு பகுதியே. இவற்றைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ?. நிஜ வாழ்க்கையைப் பாதிக்காதவரை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய் விடுவதே சிறப்பு. கவன ஈர்ப்பைப் பெறுவதே குற்றவாளிகளின் முதல் நோக்கம். அது கிடைக்காத வருத்தத்தில் அவர்களாகவே மனநலக் காப்பகத்தில் சென்று சேர்ந்து கொள்வதின் வாய்ப்பதிகம். அப்படி தனிப்பட்ட முறையில் நீங்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். இணையத்தில் அனைவரது நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது. கால அவகாசங்கள் வேறுபடுமே ஒழிய, எவரும் தப்பிக்க முடியாது.



உங்கள் மற்றும் குடும்பத்தினர், குழந்தைகள் ஆகியோரின் படத்தினை வலைப்பக்கங்களிலோ, பதிவுகளிலோ பிரசுரிக்கும் முன் எதையும் தாங்கும் இதயம் இருப்பதை உறுதி செய்து கொள்வது நலம்.ஒரு தாய் தன் குழந்தையின் படத்தையே, 'ஆதரவற்ற குழந்தை, உதவி செய்யுங்கள்' என்ற கோரிக்கையுடன் மின்னஞ்சல்களில் பார்த்த சம்பவத்தை உலகம் கண்டிருக்கிறது. தொலைபேசி எண்கள், பழைய எண், புதிய எண் போன்ற நுணுக்கமான விவரங்களுடன் கூடிய வீட்டு முகவரி ஆகியவற்றை வலையேற்றுவதைத் தவிர்க்கவும். அதனினும் முக்கியமானது மற்றவர்களுடைய விவரங்களை அவர்களது அனுமதியின்றி பிரசுரிப்பது.கடந்த காலத்தில் இணையத் தொந்திரவினால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் த்ரிஷா, குஷ்பு, நயன் தாரா போன்ற அபலைகள் பலர் இருப்பதால் அரசு அவர்களுக்கென ஒரு நலவாரியம் அமைத்து, நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பிருந்தாலும், நோபல் பரிசு பெற்ற ஒரு தமிழரின் பிரத்யேக மின்னஞ்சலை இணையத்தில் வெளியிட்டு, 'வந்து குவியும் மின்னஞ்சல்களை அழித்து, அழித்து மணிக்கட்டு வலிக்கிது, அழுதுருவேன்..' என்று அவரை ஊடகத்தில் கதற விட்ட கதை ஒரு சமீபத்திய உதாரணம்.


இவ்வளவுக்குப் பிறகும், இணையத்தின் மூலம் தொந்திரவுகள் ஏற்படின் கீழ்கண்ட சுட்டியில் இருக்கும் பட்டியலில் உங்களுக்கு அருகே வசிக்கும் நண்பருக்கு பேசா அழைப்புக் கொடுத்து (missed call) விவரத்தைச் சொன்னால் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.


உங்களின் இணைய அனுபவம் என்றென்றும் இனிக்கும் அனுபவமாக இருக்க வாழ்த்துக் கூறி இப்பதிவு நிறைவடைகிறது.

Tuesday, February 16, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 2 (முற்றும்)

தனிப்பட்ட முறையில் குக்கீஸ்கள் உலாவியால் உருவாக்கப்படும் வெறும் எழுத்துக் கோப்புகளே, அவற்றால் உங்கள் கணினியில் தங்கி இருக்க முடியுமே ஒழிய எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியாது. குக்கீஸ் மூலம் வைரஸ் பரப்பப்படும், கோப்புகள் அழிக்கப்படும் என்பது, தங்களுக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக 'சின்ன புள்ளைங்க பாக்குப் போட்டா மாடு முட்டும்' என்று சொல்வதைப் போன்றது. குக்கீஸ்களில் என்ன சேமிக்கப்படுகிறது என்பது நாம் செல்லும் இணையத்தளங்கள் பின்பற்றும் முறையைப் பொருத்தது. குக்கீஸ்கள் மூலம் தகவல்கள் கைமாறுவதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்த பின்பு அனேக தளங்கள் வருகையாளருக்கானத் தனிக்குறியீட்டு எண்களை மட்டுமே குக்கீஸ்களில் சேமிக்கின்றன. அவற்றுக்கானப் பிறதகவல்கள் அவர்களின் இணைய வழங்கிகளில் பாதுகாப்பாகவே இருக்கின்றன. சில தளங்கள் அவற்றின் பக்கங்களை மூடியதுமே தங்கள் குக்கீஸ்களை செயலற்றதாக்கி விடும் (session cookies) முறையினையும் தேவைக்கேற்பப் பின்பற்றுகின்றன.
அவ்வாறு பாதுகாப்பாக வைப்பதும், வைக்காததும் தளங்களை வடிவமைப்பவர்களைப் பொருத்தது என்பதால் புதிதாக ஏதேனும் தளங்களுக்குச் செல்லும் போது மின்னஞ்சல் முகவரி,கடனட்டை விவரங்கள் போன்ற பிரத்யேகத் தகவல்களைத் தரும் சந்தர்ப்பத்தில், அந்தத் தளத்தின் குக்கீஸ்களைச் சென்று பார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. அப்படி பார்க்கும் போது அவற்றில் முக்கியத் தகவல்கள் இருப்பின் உடனே அந்த குக்கீஸ்களை நீக்கி விடுவது சாலச் சிறந்தது. அல்லது ஒரு தை அமாவசையன்று உங்கள் வங்கிக் கணக்கு பல்லிளிக்கவோ அல்லது உங்கள் முகவரிக்கு நொடிக்கொருமுறை வயாக்ரா விற்பனையாளர் மின்னஞ்சலில் திக் விஜயம் செய்யவோ வாய்ப்பதிகம். நம் கணினியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குக்கீஸ்களை கீழ்காணும் இடங்களுக்குச் சென்று கண்டு மகிழவும்.

Internet Explorer: Tools -> Internet options -> Browsing History -> Settings -> View Files

Firefox: Tools -> Options -> Privacy -> Select 'Use custom settings for history' -> Show cookies

Google Chrome: Tools -> Options -> Under the hood -> Show cookies and website permissions

ஒரு தளத்தின் குக்கீஸ்களை மற்ற தளங்கள் படிக்க முடியாத போது எதற்காக இப்படி சிரமப்பட வேண்டும், கால விரயம் என்று கவலைப் படுபவர்கள் தொடர்ந்து படிக்கவும் :).
இணையப் பக்கங்களில் பலவிதமான விளம்பரப் பட்டைகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த குக்கீஸ்களுக்குள் புகுந்து விளையாடுவது இந்த விளம்பரப் பட்டைகள் (ad banners) தான். எப்படி?. இந்த விளம்பரப் பட்டைகள் இரண்டு வகை. ஒன்று நீங்கள் செல்லும் இணையத்தளம் தங்கள் சொந்த வழங்கியிலிருந்து தருவது (first party ads), இரண்டு வேறு ஒருவருக்குச் சொந்தமான வழங்கியில் இருந்து தருவது (third party ads). இதில் இரண்டாவது தான் கொஞ்சம் பிரச்சினைக்குரியது. ஏன்?. உதாரணத்திற்கு நாம் இரண்டு வெவ்வேறு இணைய தளத்திற்கு செல்கிறோம், இரண்டிலும் ஒரே மூன்றாம் நபரிடம் (same third party ads) இருந்து விளம்பரங்களைத் தரும் பட்சத்தில் அந்த மூன்றாம் நபர் இரண்டு இடத்திலும் நம் நடவடிக்கைகளைத் தங்கள் குக்கீஸ்களில் பதிவு செய்து கொள்ள முடியும். அதன் மூலம் மீண்டும் நாம் செல்லும் போது நம் கடந்த கால நடவடிக்கைகளுக்குச் சம்பந்தமான விளம்பரங்கள் நம்மைப் பார்த்து கண்ணடிக்க வைத்து மகிழ்வார்கள். இணையத்தில் உலவுவது இருட்டுக்குள் உலவுவது போலத்தான், விளம்பரங்கள் வழங்கும் அந்த மூன்றாம் தரப்பு மூலம் தகவல் திருட்டு நடக்க வாய்ப்பிருப்பதால் கவனமாக, பாதுகாப்பாகச் செல்ல பரிந்துரைக்கபடுகிறது.

விளம்பர நிறுவனங்களுக்கு அடுத்து குக்கீஸ்களை விவகாரமான முறையில் பயன்படுத்துபவர்கள் தேடு பொறி நிறுவனங்கள். தேடுபொறியில் நாம் தேடும் குறிச்சொற்கள் அனைத்துமே பதிவு செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஊரிலிருந்து, இந்த இணைப்பிலிருந்து ஒருத்தர் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு 'நமிதா' படங்களைத் தேடினார் என்பது மாதிரியான தகவல்களை விரிவாக, தெளிவாக, அழகாக தங்கள் வழங்கியில் பதிவு செய்து அதற்கான குறியீட்டு எண் நம் கணினியிலேயே விதைக்கப்படும். அடுத்த முறை ''நந்தா' என்று குறிச்சொல்லைத் தேடும் பொருட்டு செல்லும் போது 'did you mean நமிதா?' என்று கேட்டால் சலனப்பட்டுவிடாமல் நந்தாவையே தேடவும்.

ஓரளவுக்கு குக்கீஸ்கள் குறித்து புரியும்படி விளக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இதுவரை படித்த பின் இணையத்தின் சகல திசைகளிலும் குக்கீஸ்களால் உங்களை யாரோ பார்த்துக் கொண்டே இருப்பது போல் தோன்றினால், அது வெறும் மனப்பிராந்தி என்று ஒதுக்கித்தள்ளாதிருக்கவும். குக்கீஸ்களுக்கு நாமே கடிவாளம் போடலாம். பின்வரும் முறைகளைப் பின்பற்றி உங்கள் உலாவியின் வசதிக்கேற்ப, நம்பத்தகுந்த தளங்களுக்கு மட்டும் குக்கீஸ்களை பதிந்து கொள்ள அனுமதிக்கலாம் அல்லது ஒவ்வொரு முறையும் உங்கள் அனுமதி பெற்று பதியுமாறும் செய்து கொள்ளலாம். உலாவியில் ஒட்டுமொத்தமாக குக்கீஸ்களை செயலாற்ற விடாமல் செய்ய முடியும், இருந்தாலும் பல தளங்கள் குக்கீஸ்கள் இன்றி செயல்பட முடியாது என்று அடம்பிடிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

Internet explorer : Tools -> Internet Options -> Privacy -> Advanced

Firefox: Tools -> Options -> Privacy -> Select 'Use custom settings for history'

Google Chrome: Tools -> Options -> Under the hood -> Cookie settings

மேலே சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்றால் குக்கீஸ்களைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகளைக் காணலாம். அவற்றும் உங்கள் தேவைக்கேற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். நாம் திறக்கும் இணையத்தளங்கள் மட்டுமே குக்கீஸ்கள் பதிவு செய்து கொள்ள முடிவது போலவும், வேறு மூன்றாம் தரப்புத் தளங்களுக்கு அனுமதியளிக்காமலும் பார்த்துக் கொள்வது சிறப்பு என தெரிவிப்பதுடன் இத்தொடர் நிறைவடைகிறது.







Thursday, February 11, 2010

இணையத்தின் சுவாரஸ்யங்கள் : குக்கீஸ் - 1

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விருந்தினர் பதிவேடு என்று ஒன்று வைத்திருப்பார்கள். அங்கு வருகைதரும் முக்கியஸ்தர்கள் அதில் இங்கு வந்ததில் பெருமை, இந்த இடம் அருமை, பார்த்ததும் புல்லரித்தது, உடம்பெங்கும் வியர்த்தது என்று எதையாவது எழுதி கையெழுத்திட்டு தங்கள் பெயர்களைப் பதிந்து செல்வார்கள். கிட்டத்தட்ட அப்படி ஒரு பதிவுக்குறிப்பை நீங்கள் செல்லும் இணையத்தளங்கள் உங்கள் நெற்றியிலேயே ஒற்றிவிட்டு அழகு பார்க்கும் விசயம் தான் இந்த குக்கீஸ். அவை குறித்து இப்பதிவில் காண்போம்.

இணையதள வழங்கிகள் (web servers) உங்கள் உலாவியின் மூலம் உங்கள் கணினியில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து வைக்கும் சிறு அளவிலான எழுத்துக் கோப்புகளே குக்கீஸ்கள். இந்த கோப்புகளில் என்ன இருக்கும்?. நீங்கள் இணையத்தளத்திற்கு வருகை தந்த நேரம், படித்த பக்கங்கள், செலவிட்ட நேரம் போன்ற விவரங்கள் இருக்கும்.லொ மொண்டலி இணையத்தின் பயன்பாட்டுக்கு படைத்த சிறப்பான பயன்பாடுகளில் இதுவும் ஒன்று. இணைய வர்த்தகத்திற்காக கண்டுபிடிக்கப் பட்டாலும், பின்னாளில் வருகையாளர்களின் தன்மைக்கேற்ப வலைப்பக்கங்களை மாற்றியமைத்து வழங்குவதற்கும் மற்றும் இணைய விளம்பர உலகத்திற்கும் குக்கீஸ் இன்றியமையாததாகிப் போனது.

லொ மொண்டலி

வர்த்தகத் தளங்களில் வாங்கும் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது கொள்கலன் (purchase cart) ஒன்று இருக்கும், நீங்கள் பொருட்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு நிலையையும் பதிவு செய்து அந்த கொள்கலனுக்கு வழங்குவதற்காகவே குக்கீஸ்கள் படைக்கப்பட்டாலும், வழக்கம் போல மற்ற பயன்களால் தான் குக்கீஸ்கள் புகழ்பெற்றன. பல இணையத்தளங்கள் தங்கள் வருகையாளர்களே பிரத்யேகமாக தேவையானத் தகவல்களை முதல் பக்கத்தில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதியை வழங்குகின்றன உ.தா. yahoo, google. அவற்றுக்கு உதவுவதும் குக்கீஸ்களே. உங்கள் தேர்வுகளை தளங்களின் வழங்கிகளில் சேமித்து விட்டு அதற்கென்ற ஒரு தனிக்குறியீட்டு எண்ணை உங்கள் கணினியில் பதிந்து விடுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். மீண்டும் அடுத்த முறை நீங்கள் அந்த தளத்திற்கு செல்லும் போது உலாவியின் மூலம் உங்கள் குக்கீஸில் இருக்கும் தனிக்குறியீட்டு எண்ணைப் படிக்கும். அந்தக் குறியீட்டு எண்ணுக்குண்டான, வழங்கியில் சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களைத் தொகுத்து வழங்கப்படும். இதில் உலாவியின் பங்கு மிகமிக முக்கியமானது, ஏன்?. ஒரு இணையத்தளத்தின் குக்கீஸ்களை மற்றொரு இணையத்தளம் படிக்க முடியாது. அப்படி படிக்க விடாமல் தடுத்து சரியான தளங்களிடம் மட்டுமே குக்கீஸ்களின் தகவல்கள் சேர்வதை உறுதிப்படுத்துவது உலாவிகளே.

இப்படி எல்லாம் இன்பமயமாக இருந்த தருணத்தில் இணைய விளம்பர நிறுவனங்கள் குக்கீஸ்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததும் தான் உலகம் நிமிர்ந்து கவனிக்கத் துவங்கியது. விளம்பரங்களை உங்கள் இணைய நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து வழங்கும் முறை மிகப் புகழ்பெற்றது. உதாரணத்திற்கு விளம்பரப் பட்டைகள் நிறைந்த தளங்களுக்குச் செல்லும் போது உங்களின் இருப்பிடம் சம்பந்தமான விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அல்லது நீங்கள் அதிகமாக இணையதளங்கள் வடிவமைப்புப் பற்றியப் பக்கங்களைப் படிப்பவராக இருந்தால் 'குறைந்த விலையில் இணைய வழங்கிகள், ஒன்று வாங்கினால் ஒரு சிக் ஷாம்பூ பாக்கெட் இலவசம்' போன்ற விளம்பரங்கள் காணக் கிடைக்கலாம்.
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அது போன்ற பக்கங்களை மாறுபட்ட பயனாளர்கள் இருவரின் கணினிகளில் திறந்து பார்த்தால் இருவருக்கு வெவ்வேறு விளம்பரங்கள் வழங்கப்படுவதைக் காணலாம். நீங்கள் எவற்றையெல்லாம் படிக்கிறீர்கள், எந்தப் பக்கங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் ஆகியத் தகவல்கள் குக்கீஸ்கள் மூலம் படிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் விளம்பரங்கள் வழங்குவது வெகுவிமரிசையாக நடைபெற ஆரம்பித்தது. இது பயனாளர்களின் தனியுரிமைக்கும், ரகசியத்தன்மைக்கும் எதிரானது என்று பலர் கூவினாலும், அதனைத் தவிர்ப்பதோ அல்லது ஏற்றுக் கொள்வதோ உலாவியின் மூலம் பயனாளர்கள் தீர்மானிக்க முடியும் என்பதால் எதுவும் எடுபடவில்லை. ஆயினும் இவ்வாறான கண்காணிக்கும் குக்கீஸ்களை தவிர்க்கும் முறைகள் பற்றி அனேக பயனாளர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு இணையத்தளத்தின் குக்கீஸ்களை மற்றவைப் படிக்க முடியாத போது எப்படி பயனாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன?, குக்கீஸ்களை எப்படி தேவைக்கேற்பக் கட்டுப்படுத்துவது?, குக்கீஸ்கள் மூலம் வைரஸ் சாத்தியமா, போன்றவை குறித்து அடுத்தப் பகுதியில்.

அனைவருக்கும் சுடுதண்ணியின் காதலர் தின வாழ்த்துக்கள் :).

Thursday, January 21, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் -3 (முற்றும்)


வெறும் ரேடார்களை மட்டும் நம்பி இருக்கும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்கள், ஏவுகணைகள் தொடுவானப் பகுதியைத் தாண்டிய பின்னரே தாக்குதலைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப் பட்ட மையங்கள் வெவ்வேறு பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட ரேடார்களை நிறுவி அனைத்தையும் ஒரு வலையமைப்பில் ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படும். இதன் மூலம் தவறான எச்சரிக்கைகளை ஒரே நேரத்தில் அனைத்து ரேடார்களையும் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரே நேரத்தில்அனைத்துத் தகவல்களும் தவறானதாக இருந்தால், அது சரியான தகவலாகிவிடும் :D.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஏவுகணைகளின் பயணிக்கும் தூரம் மற்றும் வேகத்தின் காரணத்தினால் ரேடார்கள் கொடுக்கும் தகவல்கள் சுதாரித்துக் கொள்ள மிகக் குறைந்த கால அவகாசத்தையே கொடுக்கிறது. இதனைச் சமாளிக்கத்தான் செயற்கைக்கோள்கள் மூலமாக பூமியைக் கண்காணிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் எந்நேரமும் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்துடன் தொடர்பில் இருக்கும். 'பாதுகாப்புப் பணிகளுக்கு இப்பொழுது நாங்கள் செலுத்தியிருக்கும் செயற்கைக்கோள் மிகவும் உபயோகமாக இருக்கும்' என்று சொல்லப்படுபவற்றில் அனேகம் இந்த வேலையைத் தான் செய்கின்றன. இந்த செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையின் கீழ் பூமியில் எந்த இடத்தில் பெரிதாக வெடிவெடித்து ஒளிப்பிழம்பு தோன்றினாலும் முன்னெச்சரிக்கைத் தகவல் மையத்திற்கு தெரிவிக்கும்.போகி தினத்தன்று நம்மூரில் இருந்து கூட ஏகப்பட்ட எச்சரிக்கைத்தகவல்கள் செல்ல வாய்ப்புண்டு :D. ஏவுகணைகள் ஏவப்படும் போது தோன்றும் மிகப்பெரும் ஒளிப்பிழம்பின் மூலம், ' அது வந்துட்டு இருக்கு.. எல்லாரும் ஓடுங்க..' என்று கூவுவது இந்த செயற்கைக்கோள்கள் தான்.

இதன் காரணமாகத் தான் ஏவுகணைச் சோதனைகள் நடத்தும் நாடுகள் வெளிப்படையாக இந்த நாள், இந்த நேரத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டு செய்கிறார்கள். அறிவிக்காமல் சோதனை செய்யும் பட்சத்தில், 'நம்ம வீட்டுக்கு வெடி வச்சிட்டாங்க' என்று எதிரிகள் பதிலடி தாக்குதலில் குமுறி விட வாய்ப்பிருக்கிறது. மேலும் ரகசியமாக செய்யப்படும் அணுகுண்டுச் சோதனைகளும் இத்தகைய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து தப்பும் பொருட்டே பூமி அல்லது கடலுக்குள் அடியில் வெளிச்சம் வராமல் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு இந்தியாவின் போக்ரான் சோதனை ஓர் உதாரணம்.

ஆண்ட்ரோபோவ்

தவறுவது மனித இயல்பு என்பதைப் போல எத்தனை தான் கவனமாக வடிவமைக்கப்பட்டாலும் தொழில்நுட்பங்கள் சமயத்தில் தவறுவது உண்டு. அதற்கு செயற்கைக்கோள்களும் தப்புவதில்லை. உதாரணத்திற்கு 1983ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா புதிய தொழில்நுட்பத்துடன் செயற்கைக்கோள் உதவியுடன் புதிய வான் பாதுகாப்பு மையத்தினை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தது. அப்போது அமெரிக்காவுடனான பனிப்போர் உச்சத்திலிருந்த நேரம். எந்த நொடியும் இரண்டு பக்கங்களுமே போருக்குத் தயாராக இருந்தன, ஆயிரணக்கான அணுகுண்டுகளுடன். அப்போதைய சோவியத் தலைவர் ஆண்ட்ரோபோவ் (andropov) ஒரு சுடுதண்ணி :), அதுவும் அமெரிக்கா என்று காதில் சொன்னாலே உடனடி கொதிநிலைக்கும் வரும் திறனை கைவரப்பெற்றவர்.

புதுமனைவிக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போல, மிகச் சிறந்த, நம்பகமான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து புதிய முன்னெச்சரிக்கை மையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அதில் ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவும் (lt. col. stanislov petrov) அடக்கம். 1983ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று நள்ளிரவில் முன்னெச்சரிக்கை மையத்தில் பணியிலிருந்தார் பெட்ரொவ். அமெரிக்காவிலிருந்து சியோலுக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் விமானத்தை, ரஷ்யாவின் வான்பகுதியில் அத்துமீறி நுழைந்து வேவு பார்த்ததாக 269 பேர்களுடன் சுட்டு வீழ்த்தி, அமெரிக்காவை வெறியேற்றிய சம்பவம் நடந்து மூன்று வாரங்களே ஆகியிருந்தது. பனிப்போரின் உஷ்ணம் வரலாற்றில் அதிகமாக இருந்த தருணங்கள். இரண்டு நாடுகளுமே மொத்த அணுஆயுதங்களுடன், போர் மூண்டால் இரண்டு பேருமே அழியும் வண்ணம் (Mutual Assured Destruction - MAD) தயார் நிலையில் இருந்தன. இரண்டு பேருமே அழிந்து போவோம் என்ற பயமே, கடைசி வரை நேரடிப் போர் நிகழாமல் காத்ததென்பது உபதகவல். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பணியிலிருந்த பெட்ரோவுக்கு வந்தது சோதனை. மொத்த எச்சரிக்கை மையமும் ஏவுகணைத் ஏவப்பட்டு விட்டது என்ற எச்சரிக்கை அலற ஆரம்பித்தது. திரையில் ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாகக் காட்டியது. திகைத்துப் போன பெட்ரோவ் என்ன செய்வது என்று யோசித்து முடிப்பதற்குள்ளேயே அடுத்தடுத்து புதிய எச்சரிக்கை ஒலிகள் அலறியது. கணினிக்குள் எட்டிப் பார்த்தால் ஒன்று, இரண்டு, மூன்று என்று அடுத்தடுத்து கூடிக்கொண்டே போய் மொத்தம் ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் காண்பித்தது. பெட்ரோவின் பணி இத்தகவலை மேலதிகாரிகளிடம் தெரிவித்து பதில் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வதே. ஆனால் பெட்ரோவ் அது தவறான எச்சரிக்கை என்று எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து விட்டார். ஏன்?.

சமபலம் பொருந்திய ஒரு நாட்டுடன் அணுஆயுதப் போர் தொடங்க எந்த புத்திசாலியும் வெறும் ஐந்து ஏவுகணைகள் மட்டும் அனுப்பி வைப்பான் என்று பெட்ரோவுக்குத் தோன்றவில்லை. அவர் எதிர்பார்த்தது நூற்றுக்கணக்கில். மேலும் அந்த வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் முற்றிலும் புதிய தொழில்நுட்பம், அதனால் அதன் நம்பகத்தன்மையின்பால் ஏற்பட்ட சந்தேகம். உண்மையிலேயே ஏவுகணைப் புறப்பட்டதாக இருந்தால், எச்சரிக்கைக்குப் பிறகு சில நிமிடங்களில் தொடுவானப் பகுதியைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனாலும் மற்ற ரேடார்கள் எந்த கூச்சலும் போடாமல் அமைதியாக இருந்தன. இவையனைத்துமே பெட்ரோவ் தவறான எச்சரிக்கை என்று முடிவு செய்து கமுக்கமாகிவிட்டதற்குக் காரணம். அந்த கணம் பெட்ரோவ் அம்முடிவை எடுக்காமலிருந்தால் மூன்றாவது உலகப்போர் தொடங்கியிருக்கும். அணுகுண்டுகளால் அனேக நாடுகள் குளியலாடியிருக்கும். காரணம் அந்த சூழ்நிலையில் போருக்குத் தயாராக இருந்தது மற்றும் ஆண்ட்ரோபோவின் மனநிலை, சட்டதிட்டங்கள் படி பதிலடி குறித்து முடிவெடுக்க அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரம், செய்தி கிடைத்த பிறகு 2 நிமிடங்கள் மட்டுமே.

ஸ்டானிஸ்லோவ் பெட்ரோவ்

பின்னாளில் இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காததால் கடும் ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பெட்ரோவ், மனமுடைந்து இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். விசாரணையில் சூரியனின் ஒளிக்கற்றைகள் அடர்த்தியான மேகக்கூட்டங்களால் பிரதிபலிக்கப்பட்டதில் செயற்கைக்கோளின் கண்கள் கூசிப்போன விஷயம் தெரியவந்தது. 1990 களில் பெட்ரோவின் மேலதிகாரி ஓய்வு பெற்ற பின், பாரம்பரிய வழக்கப்படி தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்ட பின்னரே வெளியுலகிற்கு இச்சம்பவம் தெரிந்தது. பெட்ரோவை அமெரிக்காவும், ஐரோப்பாவும் கொண்டாடின. ரஷ்யாவுக்குத் தன் தொழிநுட்பத் தவறுகள் குறித்து வெளிக்காட்டிக் கொள்ள முடியாத மானப்பிரச்சினை, முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபையில் விருதளித்து கவுரவிக்கப் பட்டார் பெட்ரோவ். வரலாற்றில் மிகப்பெரிய அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம் தள்ளாடிய தருணமாக இச்சம்பவம் நினைவுகூறப்படுகிறது.

தொழில்நுட்பத் தவறுகளால் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து இருந்தாலும், வான் பாதுகாப்பு மையத்தில் இருக்கும் பிரச்சினைகள், பணிபுரிபவர்களின் வேலைப் பளு மற்றும் மன அழுத்தம் குறித்த புரிதலுக்காகவே இப்பகிர்வு. வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையங்களை அமைப்பதென்பது தொழில்நுட்பத்துக்கு மட்டுமன்றி, பணப்பைக்குமே கொஞ்சம் சவாலான விஷயம் தான். சட்டைப்பையில் காசில்லை என்றாலும் கடன் வாங்கியாவது பந்தா காட்டும் மைனர்களைப் போல, மக்களுக்கு சாப்பிட ரொட்டியில்லையென்றாலும் நான்கு நாடுகளுடன் முறுக்கிக் கொண்டு 'நானும் ரவுடி தான்' என்று பாதுகாப்புக்கு பொருளாதாரத்தை வாரியிறைப்பது மட்டும் என்றும் மாறாமல் தொடர்கிறது என்ற தகவலுடன் இத்தொடர் நிறைவடைகிறது.

பின்னூட்டங்களாலும், வாக்குகளாலும் ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சுடுதண்ணி விடைபெறுகிறது.



Wednesday, January 20, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 2


சாலையில் நிற்கும் போது அதிவேகமாக ஒரு வாகனம் கடந்தாலே சட்டை படபடக்கும், நெஞ்சு திடுதிடுக்கும், தூசி வாரியடிக்கும். சுமார் மணிக்கு 150000 மைல் வேகத்தில் ஒரு ஏவுகணை உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் எப்படி இருக்கும்?. அந்த நேரத்தில் செயல்படுவதா, வியர்வையைத் துடைப்பதா என்று யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடும்.

வான் பாதுகாப்புப் பணியில் உள்ள சவாலே, தாக்குதலின் அதிவேகம் தான். அதிவேக கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் 5000 முதல் 10000 கிலோ மீட்டர் வரை 15000 மைல் வேகத்தில் ஆயிரம் கிலோ எடையுடன் பயணிக்கும் அசுரபலம் பெற்றது. கிட்டத்தட்ட பூமிப்பந்தின் சரிபாதியை ஒரு மணிக்குள், ஒலியை விட ஐந்து ம்டங்கு அதிகான வேகத்தில் கடக்கும் ஒரு வஸ்துவைச் சமாளிப்பது தான் குறிக்கோள். ஒரு நாடு ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடித்தவுடன் அதன் திறன்களை, பெருமைகளை முரசறிவிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு கிலியேற்படுத்ததான் இந்த ஏற்பாடு. இவ்வாறு அறிவித்தவுடன் அதன் எதிரி நாடுகள் உடனே ஒரு காகிதம், எழுதுகோலோடு சம்மணமிட்டு வீட்டுப்பாடம் செய்யும் குழந்தையைப் போல கணக்குப் போட ஆரம்பிப்பார்கள். என்ன கணக்கு?. அந்த ஏவுகணையால் நம் நாட்டில் இருக்கும் முக்கியமான இடங்களில் அடிவாங்க எவ்வளவு நேரமாகும் என்று தான்.

ஒரு உதாரணக் கணக்கு. இஸ்லாமாபாத்திலிருந்து மும்பைக்கு எப்படி கணக்கிடுவார்கள் என்று பார்ப்போம். முதலில் இரண்டு நகரங்களின் அகலாங்கு, நெட்டாங்கு (latitude & longitude) விவரங்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும். இஸ்லாமாபாத் (33.6° N 73.1° E), மும்பை (18°55'N, 72°50'E). இந்த இரண்டு அகலாங்கு, நெட்டாங்குகளுக்கிடையே உள்ள தூரத்தினைக் கணக்கிட ஒரு சூத்திரம் (formula) இருக்கிறதென்றாலும், உற்றுப்பார்த்தால் தலைவலிக்கும் வாய்ப்பிருப்பதால் மக்கள் நலன் கருதி தவிர்க்கப்படுகிறது. தெரிந்து கொள்ள விருப்பம் மற்றும் துணிந்த மனமுள்ள அன்பர்கள் பின்னூட்டத்தில் தெரிக்கவும். இதற்கென்று கணினியில் நிரல் எழுதி வைத்திருப்பார்கள். உ.தா. http://www.nhc.noaa.gov/gccalc.shtml

மேலுள்ள சுட்டியின் பக்கத்திற்கு சென்று அகலாங்கு நெட்டாங்கு விவரங்களை அளித்தால் தூரத்தைக் கணக்கிடலாம். நாம் தேர்ந்தெடுத்த நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 851 வான்மைல்கள் (nautical miles). நிமிடத்திற்கு 140 வான்மைல்கள் பயணிக்கும் பாகிஸ்தானின் ஷாகின் வகை ஏவுகணைகளைக் கணக்கில் கொண்டால் 6 அல்லது 7 நிமிடங்களில் பத்திரமாக மும்பையில் தரையிறங்க வாய்ப்புகள் அதிகம். புள்ளிவிவரங்களின் படி பாகிஸ்தானிடம் பலவகை ஏவுகணைகள் இருந்தாலும், விமர்சகர்கள் பார்வையில் அவர்களிடம் உள்ளது இரண்டே வகைதான் என்பது கிளைக்கதை. ஒன்று சைனா பொங்கல் சீராகக் கொடுத்தது மற்றது வடகொரியாவில் தலைத்தீபாவளிக்கு வாங்கியது.

இவ்வாறு ஏவுகணைகள் அனுப்பும் போது எதிர்-ஏவுகணைகள் மூலம் வானிலேயே வானவேடிக்கை நிகழ்த்தப்படும் வாய்ப்பிருப்பதால் எப்போதுமே இவை சிங்கம் போல் தனித்து வந்து ஆபத்தில் மாட்டிக் கொள்வதில்லை. கூட்டமாக அனுப்பப்படுவதே வழக்கம். அதில் ஒன்று அல்லது இரண்டைத் தவிர மற்றதெல்லாம் புஸ்வாணமாக இருக்கும். இவற்றுக்கிடையே உள்ள வித்தியாசங்களை உணர்ந்து குறிபார்த்து அடிக்கும் கடமை வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையத்தின் பொறுப்பு. எப்படி கண்டுப்பிடிக்கிறார்கள்?. புஸ்வாண ஏவுகணைகள் (decoys) காற்று வெளியில் பயணிக்கும் போது உண்மையான ஏவுகணைகளை விட விரைவில் வெப்பம் குறைந்து விடும். அதனால் ரேடார் வானலைகளின் பிரதிபலிப்பில் ஏற்படும் வித்தியாசங்களை வைத்து புஸ்வாணங்களைத் தவிர்த்துவிட்டு எதிர் தாக்குதல் நடக்கும்.

இத்தனை பிரயத்தனப்பட்டு வான்பரப்புப் பாதுகாக்கப் பட்டாலும், நாடு முழுமைக்குமான பாதுகாப்பு இதுவரை எந்த நாட்டுக்கும் இல்லை. அமெரிக்கா மட்டும் அதற்கானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தாக்குதல் நடக்கும் சமயத்தில் அத்தனைத் தொழில்நுட்பங்களும் துருப்பிடித்து விடாமல் சரியாக செயல்பட வேண்டியது அதிமுக்கியம். அதற்காக இந்தியா போன்ற கைப்புள்ளைகள் அவ்வப்போது போர்ப்பயிற்சியிலும், அமெரிக்கா போன்ற மைனர் குஞ்சுகள் அவ்வப்போது தீவிரவாதம் அடக்கி, அமைதி பரப்பும் காரணம் காட்டி நேரடியாகப் போரிலும் ஈடுபடுவது வழக்கம் :).

வான் பாதுகாப்பு மையங்களுக்கும் சில குறைகள் உள்ளன. அரிதாக சில சமயங்களில் சூரியனோ, சந்திரனோ சரியாக ரேடாரின் நேர்க்கோட்டில் வரும்போது, மேகக்கூட்டங்களும் இருந்து அதிகமான ஒளியை ரேடாரை நோக்கி செலுத்தும் வண்ணம் சந்தர்ப்பங்கள் நேரலாம் (false alarm). இங்கு பணியில் இருப்போர் எச்சரிக்கைத் தகவல் கிடைத்ததும், வகுப்பில் தூங்குபவனை எழுப்பிய மறுவினாடி சிலிர்த்துக் கொண்டு வாத்தியாரைக் கவனிப்பது போல், உடனே பதில் தாக்குதலுக்குத் தயாராகி விடக் கூடாது. எச்சரிக்கைத் தகவல் உண்மை தானா, அல்லது பிழையான எச்சரிக்கையா என்றெல்லாம் ஆராய்ந்து விட்டே அடுத்த கட்டத்திற்குப் போக வேண்டும்.

இவ்வாறு பிழையான எச்சரிக்கையினை எவ்வாறு தவிர்க்கிறார்கள்?, இந்த பிழையான எச்சரிக்கை எவ்வளவு ஆபத்தானது ஆகியவை குறித்து விரிவாக இறுதிப் பகுதியில் காண்போம்.

Tuesday, January 19, 2010

வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் - 1


மனதுக்கு இதமாக இரவு நேரங்களில் மொட்டை மாடியில் விண்மீன்களும், நிலாச்சோறும் ரசித்திருப்பீர்கள். பகலில் 'நீலவான ஓடையிலோ' அல்லது 'வானம் எனக்கு போதிமரமோ' முணுமுணுத்துக் கொண்டு மேகங்களை வெறித்திருப்பீர்கள். இது போன்ற சுகமான விஷயங்களை மறந்து 24 மணி நேரமும் ஆபத்தை எதிர்பார்த்து ஒரு கூட்டம் கொட்டாவி விடக் கூட மறந்து வானத்தைப் பார்த்து கொண்டிருக்கிறது, ஒவ்வொரு நாட்டிலும். அவர்கள் யார்?, பயன்படுத்தும் தொழிநுட்பம் என்ன? அதில் உள்ள சவால்கள் குறித்து ஒரு பார்வை.

வான் பாதுகாப்பு என்பது ரேடார் தொழில்நுட்பம் அறிமுகமாகும் வரை வாடகை மிதிவண்டியில் ஊர்சுற்றுவதைப் போல போர் விமானங்களில் பறந்து திரிவது மூலமாகவே நடைபெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விமானத்தாக்குதல்கள் தந்த அனுபவத்தினாலும், தனது ஏவுகணைத் தொழில்நுட்பங்களால் தூக்கத்தைக் கெடுத்த ஜெர்மனியாலும் ரேடார் தொழில்நுட்பம் துரிதமாக மேம்படுத்தப்பட்டது. வான் பாதுகாப்புக்குப் பயன்படுத்தப்படும் ரேடார்கள் தேடுவது அதிவேகமாக பயணிக்கும் ஆபத்தான ஏவுகணைகளை. ஏவுகணைகள் என்பது ராக்கெட் தொழிநுட்பத்தின் மூலம் வெடிகுண்டுகளை குறிப்பட்ட இடத்தை நோக்கி ஏவி விடுவது. செயற்கைக்கோள் ஏவப்படும் ராக்கெட்டுகளுக்கும் இதற்கும் மிகச்சில வித்தியாசங்கள் மட்டுமே. முன்னது புவியீர்ப்பு விசையை தாண்டிச் செல்லும் (escape velocity), பின்னது செல்லாது. அந்த வெடிகுண்டுகள் என்பது பச்சைச் சணலில் சுற்றிய மான் மார்க் பட்டாசுகள் முதல் ஆயிரம் கிலோ உள்ள நிஜ அணுகுண்டாகவும் இருக்கலாம். ஏவுகணைகள் தாங்கிச் செல்லும் எடை, பயணிக்கும் தூரம், வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பலவகைப் படும். அவற்றுள் மிகவும் சக்தி வாய்ந்தது தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBM - Inter continental Ballistic Missile).

இந்த வகை ஏவுகணைகள் தொடுவானப் பகுதியிலிருந்து (horizon) மேலுழும்பிய பிறகு தான் ரேடார் கண்களுக்குத் தட்டுப்படும். அதன் பிறகு நமக்குக் கொடுக்கப்படும் நேரம் 8 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே. அதற்குள் தாக்குதல் நடக்கும் நாட்டிற்குப் பதில் தாக்குதல் நடத்துவதும், அதனை முறியடிக்கும் எதிர்-ஏவுகணைகளை ஏவுவதும் அல்லது கண்ணை இறுக்கி மூடிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் சொல்லுவதும் நேயர் விருப்பம். மேற்கண்ட சமாச்சாரங்கள் நடக்கும் இடம் தான் வான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மையம் (air defense early warning system). முன்னெச்சரிக்கை மையத்தில் 24 மணி நேரமும் ரேடார் வல்லுநர்கள், கட்டுப்பாடு அறை அதிகாரிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலையில் இருப்பார்கள். ரேடார் மூலம் பெறப்படும் வானலைகளைக் காட்சிப் படுத்தும் கணினிகளும், உயர் அலைவரிசை ரேடியோக்களும், நாட்டின் தலைவரோ அல்லது ராணுவத் தளபதியோ எவருக்கு தாக்குதல் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறதோ அவருக்கு ஒரு நேரடி இணைப்புக் கொண்ட தொலைபேசியும், மற்ற விமானப்படை மையங்களுக்கு தொடர்புகொள்ளும் வசதிகளும் இருக்கும். பணக்கார நாடுகள் அல்லது எதிரிகள் அதிகமுள்ள நாடுகள் (உ.தா. அமெரிக்கா) ரேடார்களோடு செயற்கைக்கோள்கள் மூலம் மொத்த பூமியையும் எங்காவது வெடி வைக்கிறார்களா என்று உற்றுப் பார்த்து கொண்டிருப்பார்கள்.

இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும்.இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (போர் விமானங்கள்/ஏவுகணைகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது, இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இவற்றை ஒருங்கிணைத்துக் காட்சிப்படுத்தித் தருவது கணினிகள் மற்றும் மென்பொருட்களின் வேலை.

சரி, ஏவுகணை வருகிறது என்ன செய்வது?. எதிர்-ஏவுகணை (anti ballistic missile) தொழில்நுட்பம் கைவசம் இருந்தால் (உதா. பேட்ரியாட், பிரித்வி) அவற்றை உபயோகப்படுத்தலாம். இந்தத் தொழில்நுட்பம் கைவரப்பெற்ற நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், சைனா, இந்தியா) உலகில் ஐந்து மட்டுமே. மற்றவர்கள் வசதிக்கேற்ப விலைக்கு வாங்கி வைத்துக் கொள்வதுண்டு. தாக்க வரும் ஏவுகணையின் அகலாங்கு, நெட்டாங்கு கிடைத்தவுடன், எதிர்-ஏவுகணை ஏவுதளங்களின் அகலாங்கு நெட்டாங்கு மூலம் இரண்டுக்கும் இடையேயான தொலைவு வான்மைல்களில் (nautical miles) கணக்கிடப்பட்டு அவற்றின் பயணப்பாதையில் குறுக்கிடுவதற்கேற்ப எதிர்-ஏவுகணைகள் ஏவப்படவேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, மேற்படி வேலைகள் அனைத்தையும் மிகச் சொற்ப நிமிடங்களில் செய்து முடித்தாக வேண்டும். இத்தகைய தாக்குதலுக்கு இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒன்று தாக்கப்பட்டதற்குப் பின் பதில் தாக்குதல் நடத்துவது அல்லது முன்னெச்சரிக்கைத் தகவல் கிடைத்தவும் தாக்கத் தொடங்குவது (launch on warning and launch on attack).

அணுஆயுதங்கள் இருக்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் முன்னெச்சரிக்கை தகவல் மையங்கள் மிகமிக விழிப்புடன் இருக்கும். அவற்றுக்கு இடையே தாக்குதல் மூண்டால் எதிரியின் ஏவுகணை நம் வீட்டில் இறங்கும் முன் நமது ஏவுகணைப் புறப்படும் வண்ணம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும். நாமில்லா விட்டால் எதிரியும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் இந்த ஏற்பாடு (Mutual Assured Destruction - MAD).

எந்தெந்த நாடுகளுக்கு இந்த முன்னெச்சரிக்கைத் தகவல் மையம் தேவைப்படுகிறது?. கூடவே கிரிக்கெட் விளையாடிக் கொண்டு முக்கிய நகரங்களுக்குள் உல்லாச படகுச் சவாரியில் ஆயுததாரிகளை அனுப்பி வைக்கும் அண்டை நாடுகள் ஏவுகணைத் தொழில்நுட்பத்தோடு இருந்தால் அவசியம் தேவை. அவர்கள் அணுஆயுத பலம் பெற்றிருப்பின் கூடுதல் சிறப்பு. இவ்வளவு வசதிகளும் செய்து கண்காணித்தாலும், வான்பகுதி உண்மையாகவே பாதுகாப்பாக இருக்கிறதா ?. இந்த தொழில்நுட்ப வசதிகளின் நம்பகத்தன்மை என்ன? இவை குறித்து அடுத்த பகுதியில்.