Tuesday, November 10, 2009

நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள் - 1


நீங்கள் ஓவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும், உங்கள் பயணத்தின் பாதுகாப்புக்காக தரையில் பல நூறு பேர் அதீத கவனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அன்றாட பணியில் ஒவ்வொரு நிமிடமும் கவனம் தப்பினால் மரணம் தான், இங்கு மரணம் என்பது பிரயாணிகளுக்கு. ஒவ்வொரு விமானத்தின் பாதுகாப்பான மேலெழும்புதலுக்கும், தரையிறங்குதலுக்கும் பின்னணியில் இவர்களின் உழைப்பிருக்கிறது. யார் அவர்கள், எப்படி இயங்குகிறார்கள், என்னென்ன கருவிகளை உபயோகிக்கிறார்கள், அவற்றின் தொழில்நுட்பம் முதலியவை குறித்து ஒரு பார்வை தான் இப்பதிவு.



முதலில் ரேடார் ( RADAR, Radio Detection And Ranging) தொழில்நுட்ப வல்லுநர்கள். வான் போக்குவரத்து நிலைமை மற்றும் மேககூட்டங்களின் அடர்த்தி குறித்து ரேடார் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள் உதவியுடன் நொடிக்கு நொடி ஒரு படம் போல் தருவித்து கொடுப்பவர்கள்.



அடுத்து அப்படத்தின் உதவியுடன் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள் வான்பரப்பில் எத்தனை விமானங்கள் ப்றந்து கொண்டிருக்கின்றன, எவையெல்லாம் தங்கள் வான்பரப்பைக் கடந்து வேறு இலக்குக்குப் பயணிக்கப் போகின்றன, எவையெல்லாம் தரையிறங்கப் போகின்றன, அவ்வாறு தரையிறங்கப் போகும் விமானங்களுக்கு ஓடுபாதையை ஒழுங்குபடுத்தி கொடுப்பது மற்றும் விமான நிலையத்தில் இருந்து வெளிக்கிளம்பும் விமானங்களுக்கு மேலெழும்பும் வண்ணம் அவர்களுக்கு ஓடுபாதை வழங்குவது என அனைத்து வேலைகளையும், நேரம் கடத்தாமல் செய்து முடிப்பவர்கள் 'வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்' (Air Traffic Control- ATC officers ).

விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறையாலோ, விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாலோ அல்லது சமீபத்தில் வாசிம் அக்ரமின் மனைவிக்கு விமானத்தில் பறக்கும் போது உடல்நிலைக் குறைவால் அவசர சிகிச்சைத் தேவைப்பட்டது போன்ற சூழ்நிலைகளிலோ விமானிகள் முதலில் தொடர்பு கொள்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தான். இது போன்ற அவசர கால சூழ்நிலைகளைத் தெரிவிப்பதற்கென்றே குறியீட்டு எண்கள் உள்ளன (emergency squawk code) விமானிகள் முதலில் இந்த குறியீட்டு எண்களைத் தெரிவித்ததுமே கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளைக் கையாள்வார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்கும் நிலப்பரப்பில் எல்லைகள் இருப்பது போல வான்பரப்பிலும் எல்லைகள் உண்டு. அவற்றுக்கு வரைபடங்களும் உண்டு, அதில் நிலவரைபடத்தில் உள்ளது போல ஓவ்வொரு இடங்களுக்கு பெயர்கள் உண்டு. பெரும்பாலும் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும் (Navigation Points), அந்த இடங்களை இணைக்கும் கோடுகள் தான் வான் வழிகள் (air routes). இந்த Navigation pointகளின் பெயர்களுக்கு நிலப்பரப்பில் இருக்கும் பெயர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இல்லாதிருக்கும், அவற்றைக் கடக்கும் விமானங்கள் இந்த கோடுகளிலேயே பயணிக்கும். உலக அளவில் இவற்றைக் கண்காணித்து நெறிப்படுத்தும் பணியினை மேற்கொள்ள International Air Transport Association (IATA) என்ற அமைப்பு உள்ளது. ஓவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள விமான நிலையங்களின் விபரங்கள் அவற்றின் குறியீட்டுப் பெயர்கள் (உ.தா. chennai - MAA) ம்ற்றும் தங்கள் வான்பரப்பின் வரைபடங்களை Navigation points & Air routes விபரங்களோடு IATA விடம் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியோடு அந்தந்த நாடுகளில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும்.


மேற்கூறிய அனைத்து விபரங்களையும் ஒன்றுபடுத்தி வான் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அடிப்படை ரேடார் மற்றும் வானில் உள்ள போக்குவரத்து நிலைகளைக் காட்சிப்படுத்தி தரும் சிறப்பு மென்பொருட்களைக் கொண்ட கணினிகளும் தான்.



சராசரியாக இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும். இவை விமான நிலையத்திற்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு கோபுரத்திற்கும் வெகு அருகில் நிறுவப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும்பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (வானூர்திகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது விமானங்களின் இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இத்தகவல்களனைத்தையும் ஒருங்கிணைத்துப் படமாகத் தருவது Operational Control Program எனப்படும் மென்பொருள். இந்த மென்பொருளில் குறிப்பிட்ட விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வான்பரப்பின் வரைபடம் (navigation points & air routes) , ஒடுபாதைகள், இடங்களின் பெயர்கள் ஆகியவை உள்ளிடப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தில் ரேடார் தரும் தகவல்களின் படி விமானங்கள் அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கில் பறந்து கொண்டிருப்பது போன்ற காட்சியினை அளிக்கும். இவற்றை மொத்தமாக பார்க்கும் காட்சி தான் மேலே உள்ள படம் (படத்தைக் க்ளிக்கி பெரிது படுத்திப் பார்த்தால் விமானங்களின் நகர்வுகளைக் காணலாம்).

ரேடார்கள் ஒவ்வொரு சுற்றிலும் எப்படி விமானங்களை ஏற்கனவே பார்த்த ஒன்றா இல்லை புதிதானதா என்று கண்டுகொள்கிறது, எப்படி விமானத்தின் அழைப்புக் குறியீடு போன்ற தகவல்களை அறிந்து கொள்கிறது?. கட்டுப்பாடு இல்லாத வான்பகுதியில் எப்படி விமானங்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றன? வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் , விமானிகளும் எவ்வாறு ஒரு புரிதலோடு தகவல் தகவல்தொடர்பு கொள்கிறார்கள் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

39 comments:

பூங்குன்றன்.வே said...

நானும் இப்போ பாக்தாத்(ஈராக்) ஏர்போர்ட்ல தான் வேலை பண்றேன்.சாதாரணமாக தெரியும் விமான பயணத்திற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருப்பது உண்மைதான்.உங்க கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு.
POONGUNDRAN2010.BLOGSPOT.COM

சுடுதண்ணி said...

உங்களைப்பற்றி அறிவதில் மிக்க மகிழ்ச்சி பூங்குன்றன்.

உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

அறிவிலி said...

டெக்னிகல் விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கலை உங்களுக்கு கை வந்திருக்கிறது. அடிச்சு ஆடுங்க.

முக்கியமாக டொரெண்ட் இடுகைகளை ரசித்தேன்.

சுடுதண்ணி said...

உங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க அறிவிலி..

தொடர்ந்து அடித்து ஆட முயற்சிக்கிறேன் :D.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு

சென்ஷி said...

நல்ல பதிவு நண்பரே...

Pushing Tin என்ற ஆங்கிலப்படத்தில் நாயகன் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலராக பணி புரிவான். அந்த நேரத்திய நெருக்கடிகளைப் பற்றி நன்றாக சினிமாப்படுத்தி இருப்பார்கள்.

தமிழில் எனக்குத் தெரிந்து பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் நாவலில் ஏர் டிராஃபிக் பணியைப் பற்றியும் எழுதியிருப்பார்.

சுடுதண்ணி said...

நன்றி ராதாகிருஷ்ணன் :)

சுடுதண்ணி said...

//Pushing Tin என்ற ஆங்கிலப்படத்தில் நாயகன் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலராக பணி புரிவான். அந்த நேரத்திய நெருக்கடிகளைப் பற்றி நன்றாக சினிமாப்படுத்தி இருப்பார்கள்.

தமிழில் எனக்குத் தெரிந்து பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் நாவலில் ஏர் டிராஃபிக் பணியைப் பற்றியும் எழுதியிருப்பார்.
//

நன்றி சென்ஷி.

ஆர்வமூட்டும் தகவல்கள். விரைவில் pushing tin திரைப்படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன். பயணிகள் கவனிக்கவும் வாய்ப்பமையும் போது தவறாமல் படிக்கிறேன். தகவல்களுக்கு மிக்க நன்றி. :)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுவாரசியமான பதிவு.எனக்கு விமானமெனில் பிரியம் அதிகம். அறிய ஆவல்
விமானமென்றல்ல; புகையிரதம்;கப்பல் கூட நமக்குத் தெரியாத பலர் பங்களிப்பிலே செம்மையாக இயங்குகிறது. பிரான்சின் அதிவேக தொடர்வண்டி TGV , ஒரு சாரதியினுடனே இயங்குகிறது. அதன் இயந்திரக் கட்டுப்பாட்டுச் சக்கரத்தை அதன் சாரதி ஒவ்வொரு 58 செக்கனுக்கு ஒரு தடவை உயர்த்தி
விட்டு மீள வைக்கவேண்டும். அப்படிச் செய்தாலே வண்டி தொடர்ந்து ஓடும். இல்லாவிடில் இயந்திரம்
நின்று வண்டி தானாக வேகம் குறைந்து நின்றுவிடும். ஏன் இந்த ஏற்பாடெனில், சாரதி மயக்கமடைந்தால்
;மாரடைப்பால் தாக்கினால் விபத்தைத் தடுக்க; வண்டியை நிறுத்த; ஒரு சாரதியே உள்ளதால் இவ்வேற்பாடு செய்துள்ளார்கள்.
இப்படி பல விடயங்கள்...தெரியாமலே நாம் பயணம் செய்கிறோம்.

சுடுதண்ணி said...

வியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி யோகன், TGV குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் தகவல்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

அகல்விளக்கு said...

ஆகா.... சகலகலாவல்லவனா நீங்க...

கலக்குங்க தல.

இது மாதரி மேட்டர்ஸ் தெரிஞ்சுக்க நானும் ஆர்வமா இருக்கேன்.

முல்லைப்பிளவான் said...

நல்ல ஆக்கம். நல்ல தகவல்களை படித்து அறிந்து கொண்டேம். உங்களின் எழுத்து நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி;

சுடுதண்ணி said...

// அகல்விளக்கு //

அடாது மழை பெய்தாலும் விடாது ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி நண்பா.

சுடுதண்ணி said...

ஊக்கத்திற்கு மிக்க நன்றி முல்லைப் பிளவான் :). தொடர்ந்து வருகை தாருங்கள்.

நிகழ்காலத்தில்... said...

நல்லதொரு இடுகையை வழங்கி இருக்கிறீர்கள்,

பிண்ணனியில் இருப்பவர்களை முன்னிலைப்படுத்தி
இடுகையிட்டதற்கு நன்றிகள் பல..

சுடுதண்ணி said...

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..வாழ்க வளமுடன் :)

mraja1961 said...

Super Suduthannee !!!

Maharaja

சுடுதண்ணி said...

மிக்க நன்றி மஹாராஜா :)

ragasiya snehithan said...

சுவராஸ்யமான தகவல்கள். நல்ல பதிவு

சுடுதண்ணி said...

மிக்க நன்றி சிநேகிதன் :).

வாக்களித்த அந்த நாலு பேருக்கு நன்றிகள் பல :))

ப்ரியமுடன் வசந்த் said...

சும்மா சொல்லலை

சூப்பர்

அருமையான விசயங்கள்

தெரியாமலே இருந்தவை தெரிந்து கொண்டேன்

சுடுதண்ணி said...

உங்கள் வருகையும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, நன்றி வசந்த் :)

பினாத்தல் சுரேஷ் said...

இதுபோன்ற பதிவுகள் பெருகட்டும்.

நன்றி சுடுதண்ணி.

பாலகுமார் said...

இரு வாரங்களுக்கு முன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. அங்கே AAI அதிகாரிகள் விவரித்ததை அச்சு பிசகாமல் நீங்களும் பதிந்துள்ளீர்கள்.

பிரம்மிப்பூட்டும் தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.

தராசு said...

அருமையான தகவல்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

சுடுதண்ணி said...

வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ சுரேஷ்

நன்றி பாலகுமார், மிக்க மிகிழ்ச்சி :)

ஊக்கத்துக்கு நன்றி தராசு. தொடர்ந்து வாருங்கள் :)

சுடுதண்ணி said...

வாக்களித்த அனைவருக்கு (5 பேருக்கு) நன்றி நன்றி :D.

கடைக்குட்டி said...

இந்த கட்டுரையின் நோக்கமே நன்று,...

சுடுதண்ணி said...

நன்றி கடைக்குட்டி :)

ராஜ நடராஜன் said...

அருமையான தகவல் மற்றும் பின்னூட்டக் குறிப்புகள்.நன்றி.

ராஜ நடராஜன் said...

சொல்ல மறந்த மற்றுமொன்று....அசத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கம்.

சுடுதண்ணி said...

மிக்க நன்றி ராஜ நடராஜன் :)

குமரன் (Kumaran) said...

மிக எளிமையாக எழுதப்படும் உங்கள் இடுகைகள் அறிவியல் தமிழுக்கு நல்லதொரு பங்கினை அளிக்கின்றன. வாழ்த்துகள்.

சுடுதண்ணி said...

மிக்க நன்றி குமரன். உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சுடுதண்ணி,
நல்ல பதிவும் செய்திகளும்..தொடருங்கள்..

மணிப்பக்கம் said...

nice!

சுடுதண்ணி said...

ஊக்கத்துக்கு மிக்க நன்றி அறிவன் :).

மிக்க நன்றி மணிப்பக்கம். தொடர்ந்து வாருங்கள் :).

ஜோதிஜி said...

எழுத்தாளர் சுஜாதா இந்தப் பணியில் இருந்தவர். பாலகுமாரன் கூட மேலே சொன்னபடி பயணிகள் கவனிக்கவும் என்று எழுதியவர். ஆனால் இந்த இடுகையின் சாரத்தை விட உங்களுடன் பகிர்ந்து கொண்டவர்களின் கருத்துக்களை பார்த்தீர்களா? ஏங்கிக்கொண்டுருக்கிறார்கள் என்று அர்த்தம்.

யோகன் பாரிஸ். உபயோகித்து உள்ள வார்த்தைகளைப் பார்த்தீர்களா? நீங்களும் நானும் தேடி நிதம் தின்று என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கென்றே தமிழர்களுக்கென்றே தங்களை அர்ப்பணித்தவர்கள்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள்.
குருமாவை மூடிவைத்து விட்டு, ஆட்டுக்கால் சூப்பை ஒரே உறிஞ்சாக உறிஞ்சவிட்டு நாளை முதல் அடுத்த 19 வரைக்கும் குறைந்த பட்சம் 19 நட்சத்திர இடுகைகளை எதிர்பார்க்கின்றேன்.

வார்த்தைகளில் கவனம் தேவை. பயந்கொள்ளலாகது பாப்பா?

ஒவ்வொருத்தரும் கதறனும். எப்பூடி இப்பிடீன்னு?

ஜோதிஜி said...

அதெல்லாம் சரி, ஏர் இந்தியாவில் மட்டும் தக்கனூண்டு பாட்டிலில் உற்சாக பானம் கொடுத்தார்களே எங்கிருந்து அந்த பாட்டில் வடிவமைப்பு கண்டு பிடித்து இருப்பார்கள். 11 வருடங்களுக்கு முன் அதை கையில் வாங்கிய போது மூத்திர டெஸ்டுக்கு கொடுக்கும் பாட்டில் தான் நிணைவுக்கு வருகிறது.

இவர்கள் கவனமாய் கீழே. அங்கே நம்மாளுக சிங்கப்பூருக்கு முதன் முதலாக செல்லும் போது கரடுமுரடான கருத்த மணி மணியான மனிதர்கள் செய்யும் அக்கிரம அலும்பல்களை பார்த்து இருக்கிறீர்களா?

ஓசி என்றதும் உவ்வேவேவே என்று வாந்தியாகி போதி ஞானம் பெற்று சாய்ந்தவர்கள் பலபேர்கள்.

இப்போது நினைத்தாலும் சிரிப்பூபூ